கோவிட் 19 என்ற கரோனா கடந்த இரண்டாண்டுகளாக உலகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கான இறப்புகள், ஊரடங்கு என நாம் முன்பின் பார்த்தறியாதவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கான சிறுகுறு தொழில்கள் மூடப்பட்டதையும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து குழந்தை குட்டிகளுடன் தமது ஊரை நோக்கி நடந்ததையும் பார்த்தோம். ஆனால் இதே சமயத்தில், உலக அளவிலும், இந்திய அளவிலும் பெருமுதலாளிகள் தமது செல்வத்தை பலமடங்கு அதிகரித்துக் கொண்டதை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அது மட்டுமின்றி, இந்திய அரசு இந்த ஊரடங்கு காலத்தையும், தொழிலாளர்கள் எதிர்க்க முடியாதபடி இருக்கும் நிலையையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் விரோத, தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி வேகவேகமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
இந்தப் போக்கு எதோ இப்போது இருக்கும் அரசுக்குத்தான் சொந்தம் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால் இது தொடங்கப்பட்ட ஆண்டு 1991. 1991, ஏப்ரல் 5 அன்று காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தப் பேரழிவுக்கு வித்திட்டவர் முன்னாள் பிரதமரும், அப்போதைய நிதியமைச்சருமான ’பேரறிஞர்’, பொருளாதார நிபுணர் திரு.மன்மோகன்சிங். அப்போதே இந்தப் பேரழிவைக் கணித்த தொழிற்சங்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன. 29, நவம்பர் 1991இல் தொடங்கி இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக 18 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. பல கோடித் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 1991இல் இந்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு யானையைக் கட்டவிழ்த்து விடுவது போல் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த யானை இப்போது மதம் பிடித்து மக்களையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது. மாவுத்தர்களான முதலாளிகள் பெரும்பயன் பெற்று வருகிறார்கள். இந்தக் கொள்கையை ஐ.மு.கூ 1 அரசு தவிர மற்ற அரசுகள் தொடர்ந்து அமல்படுத்தின. ஐ.மு.கூ 1 அரசில் 62 இடதுசாரி மக்களவை உறுப்பினர்கள் இருந்ததால் அந்த அரசால் இதனைக் கடுமையாக அமல்படுத்த முடியவில்லை. அவ்வளவுதான்.
சரி, இந்தக் கொள்கைகள் இவ்வளவு மோசமானவை என்பது இந்தப் பேரறிஞர்களுக்குத் தெரியாதா என்றால், தெரியும். ஆனால் அவர்கள் அதுதான் முன்னேற்றம் என்று முழுமையாக நம்புகிறார்கள். தொழிலாளர்களுக்கு எப்படி மார்க்சியம் இருக்கிறதோ, அப்படியே இவர்களுக்கு முதலாளித்துவம் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சாதாரணமான நம்மைப் போன்றவர்களால் இந்தக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முடியுமா என்றால், முடியும் என்று கூறி எளிய முறையில் விளக்கி இப்போது சிந்தன் புக்ஸ் வெளியிட்டிருக்கும் கோவிட் 19 – நெருக்கடியும், சூறையாடலும் நிரூபிக்கிறது. அந்தப் புத்தகத்தை நான் இங்கு அறிமுகம் செய்கிறேன்.
இந்தப் புத்தகம் ஒரு ஆய்வுப் புத்தகம். ஆனால் ஒரு ஆய்வுப் புத்தகம் போலல்லாமல், எளிய முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதுதான் அதன் சிறப்பு. ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளது அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக் குழு – Research Unit for political economy. எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில், எளிய தமிழில் தோழர் பிரவீன்ராஜ் மொழிபெயர்த்துள்ளார். ஆய்வுக்குழுவுக்கும், பிரவீன்ராஜுக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிவிட்டு புத்தகத்துக்குள் செல்கிறேன்.
புத்தகம் எட்டு அத்தியாயங்களையும், மூன்று பிற்சேர்க்கைகளையும் கொண்டுள்ளது. கரோனாவானது, ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வந்த பொருளாதாரத்தை மேலும் எதிர்மறை நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த நிலையிலும், அதை மீட்க வழி செய்யாது, மேலும் வீழ்ச்சியடையும் கொள்கைகளை இந்திய அரசு ஆக்ரோஷமாக அமல்படுத்துகிறது. சரிவைச் சரி செய்யும் வழியை அது தேர்ந்தெடுக்கவில்லை. ஏன்? இந்த விஷயத்தில் அவர்களது ஒரு கூற்றை நினைவில் கொள்ளுங்கள். “முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுதல்” என்ற சொல்லை அவர்கள் அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆக, இந்தியாவின் நிலை அன்னிய முதலீட்டாளர்களைச் சார்ந்து வீழ்ந்து விட்டது. அது ஏன் என்ற விவரத்தை இந்த அத்தியாயம் விளக்குகிறது.
இரண்டாவது அத்தியாயம் பொருளாதார நெருக்கடி முன்பே எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. முக்கியத் துறைகளான விவசாயத்தையும், தொழிலையும் அழித்து சேவைத்துறை வளர்ந்துள்ளது. அதன் காரணம் என்ன என்பதெல்லாம் விளக்குகிறது இது. அடுத்த இயல் பொதுமுடக்கத்தின் தாக்கம். இந்த நிலையிலும் அரசு ஏன் மக்களுக்காகச் செலவழிக்க மறுக்கிறது, மாறாக பெருமுதலாளிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்கிறது என்பது அடுத்த இயல். அப்படியே செலவு செய்யவேண்டுமென நினைத்தாலும் அதனை ஏன் அன்னிய மூலதனம் தடுக்கிறது? உண்மையில் உள்ளூர் சந்தை வளர்ச்சியடைந்தால் அவர்களுக்கு நல்லதுதானே? இந்த முரண்பாட்டை விளக்குகிறது அடுத்த அத்தியாயம்.
இந்த கோவிட் நிலையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகள் எதிர்கொண்ட முறை, அமெரிக்க இதைப் பயன்படுத்தி சீனாவை அழிக்க முயல்வது போன்ற பல விவரங்கள் அடுத்த அத்தியாயம். உலகமே வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீன அதிபர் ஜின்சிங் சீனா அதிதீவீர வறுமையிலிருந்து விடுபட்டது என்று அறிவித்ததை இங்கு நினைவு கூர வேண்டும்.
அடுத்த கடைசி அத்தியாயத்தில் இந்தியப் பொருளாதாரமும், அதன் முன்னுள்ள பாதையும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் ஒரு வருடம் முன் செய்யப்பட்டவை என்பதால் அதிலுள்ள விவரங்கள் சற்றுப் பழையதாக இருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் பழையவை அல்ல. குறிப்பாகத் தொழிற்சங்கத்திலுள்ள தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, படித்து விவாதிக்க வேண்டிய விவரங்கள். இவை தெரிந்தால்தான் நாம் நமது எதிர்காலத் திட்டங்களை வகுக்க உதவிகரமாக இருக்கும். எனவே அனைத்துத் தொழிற்சங்கங்களும் இந்தப் புத்தகத்தை வாங்கவும், படித்து விவாதிக்கவும் அனைத்துத் தொண்டர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் மிகவும் தேவையான இந்தப் புத்தகத்தை வெளியிட்டு சிந்தன் புக்ஸ் ஒரு வரலாற்றுத் தேவையை நிறைவேற்றி உள்ளது. தோழர் மாதவுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த ஆய்வு மேற்கொண்டு புத்தகமாக வெளியிட்ட அரசியல் பொருளாதாராத்துக்கான ஆய்வுக்குழு ரூபேவுக்கும், தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் தோழர் பிரவீன்ராஜூக்கும் எனது வாழ்த்துக்கள்.
கி.ரமேஷ்
கோவிட் 19 – நெருக்கடியும் சூறையாடலும்
வெளியீடு – சிந்தன் புக்ஸ்
பக்கங்கள்: 354
விலை: 350/-
தொடர்புக்கு: 94451 23164
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.