
எப்போதும்
கேட்டுக்கொண்டே இருந்தவனொருவன்
ஒருநாள் தான் கேட்பதை நிறுத்திக்கொண்டான்..
எப்போதும்
அழைப்பெடுத்துக்கொண்டே இருந்தவனொருவன்
ஒருநாள் தான் அழைப்பதை நிறுத்திக்கொண்டான்..
எப்போதும்
பின்தொடர்ந்து வருபவனொருவன்
ஒருநாள் தான் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டான்..
கேட்கும் கரங்கள்
ஒருநாள்
சலனமின்றி மறைந்து விடுகின்றன..
ஒலிக்கும் குரல்கள்
ஒருநாள்
சத்தமின்றி அடங்கி விடுகின்றன..
என்றும் இல்லாமல்
அன்றுதான்
உங்கள் இதயம்
கருணையின் மிகுதியால்
அவ்வளவு
கனிந்து விடுகின்றது..
அந்தோ
எப்போதும்
கண்ணீருடன் பிரார்த்தித்து கையேந்துமொருவன்
திடீரென ஒருநாள் தன் பிரார்த்தனைகளை
கைவிடுவதைக்கண்டு
திகைத்து நிற்கின்றான்
இறைவன்!!!
வேறு வேறு திரைகள்
வேறு வேறு பிம்பங்கள்
வேறு வேறு முகமூடிகள்..
என்றான
போதும்தான்
என்ன..?
துயரத்தின்
கனலில்
அவ்வளவு உக்கிரமாக எரிந்துக்கொண்டிருக்கின்றன
உள்ளிருக்கும்
முகங்கள்..
கருகி சாம்பலாகிடும்
முன்னே
காத்தருள வேண்டும்
கருணையின்
கரங்கள்!!!
–ரிஸ்கா முக்தார்–

