அனீஸ் பாத்திமா எழுதிய "ருகையா" சிறுகதை | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

அனீஸ் பாத்திமா எழுதிய “ருகையா” சிறுகதை

“ருகையா” சிறுகதை

அழகான பேரன் பேத்திகள் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்த ருகையா சட்டென்று ஏதோ ஞாபகம்வர கண்களை அகல விரித்து நினைவலைகளின் உள்ளே ஆழ்ந்தாள்

ருகையாவிற்கு கணவனில்லை.

மூன்று வயதில் தன் தாய் இறந்து விட தன் அப்பா,அண்ணன்கள் பொறுப்பில் இருந்தவள்.

தன் பதினைந்து வயதில் தன் அப்பாவும் இறந்துவிட அவசரம் அவசரமாக ஒரு கிராமத்தில் உள்ள முப்பது வயது ரமீஸ் என்ற மணமகனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள்.

திருமணமான பத்து மாதத்தில் ஒரு ஆண்குழந்தைக்கு தாயானாள், உடனே தனிக்குடித்தனம் வைக்கப்பட்டாள், மறுவருடமே இன்னொரு ஆண்குழந்தைக்குத் தாயானாள்

தன் இரண்டாவது குழந்தை பிறந்த இருபது நாளில் கணவன் ரமீஸிற்கு பக்கவாதத்தால் ஒரு கையும் ஒருகாலும் வரவில்லை கொஞ்சநாள் அனுதாபப் பட்ட சொந்தபந்தங்கள் அவள் இரண்டு பிள்ளைகளையும் கணவரையும் வைத்துக்கொண்டு உணவுக்காக கஷ்டப்படுவதையோ அந்தக் கணவன் சந்தேகப்பட்டுப் பேசும் சுடும் வார்த்தைகளையோ அறிந்திருக்வில்லை

இதற்கிடையில், தன் கணவன் ரமீஸிற்கு வைத்தியத்திற்காக எங்கெங்கோ அழைத்துக் கொண்டு திரிந்தாள். செலவுக்காகத் தான் கடைசியாக வைத்திருந்த பொட்டுப் பொடித் தங்கங்கள், கால் கொலுசு அனைத்தையும் விற்றுத் தீர்த்தாள்.

போகும் இடங்களில் உணவு விடுதிகளில் பாத்திரம் தேய்த்து அங்கே கொடுக்கும் உணவை தன் பிள்ளைகள் கணவனுக்குத் கொடுத்து தானும் பசியமர்ந்தாள் அவள் முயற்சி யாவும் பயனற்றுப்போனது.

கல்யாணமாகி நான்கு வருடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்து விதவை என்ற பட்டம் பெற்றாள். தன் இளமை பல ஆண்களின் கண்களை உறுத்துவதைக்கண்டு இதுவரை யாரிடமும் உதவிகேட்காத அவள் தன் மாமனார் வீட்டிற்கே
போவதென முடிவெடுத்தாள்.

மாமனார் வீட்டில் நுழைந்தவுடன், ‘இங்கு எதுக்குமா வந்திருக்க பேசாம உங்க அண்ணன்கள் வீட்டிற்கு போ அதுதான் உனக்கு நல்லது’ என்றார் மாமனார் ரஷீத்..

“இல்லைங்க மாமா, கொஞ்சநாள் நான் இங்கே இருக்கிறேன் குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்தவுடன் நான் தனியாப் போகிறேன்” என்று கண்ணீர் சிந்தினாள் ருகையா

“இல்லம்மா உன் கொழுந்தனார்கள் நாத்தனாரெல்லாம் இருக்காங்க அவங்களை நான் பார்க்கணும் அதோட உன்னையும் பிள்ளைகளையும் நான் எப்படி பார்க்கமுடியும்?” என்றார் ரஷீத்

“நான் ஏதாவது வேலைக்குப்போறேன் மாமா” என்றாள் ருகையா

ரஷீத் குறுக்கிட்டு, ” இல்லை அது இந்த வீட்டோட வழக்கமில்லை நான் ஊரில் கௌரவமாக வாழ்பவன். பிறகு எனக்கு மரியாதை இருக்காது” என்றார்.

வேறு வழி தெரியாமல் அண்ணன்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் ருகையா

ஒருவழியாக காலம் ஓடியது. தன் மூத்தமகனிற்கு ஐந்துவயது இரண்டாவது மகனிற்கு நான்கு வயது.

பிள்ளைகள் தஙகள் பிள்ளைகளோடு போட்டிபோடுகிறார்கள், சண்டைபிடிக்கிறார்கள் என ருகையாவை தனி வீட்டில் வைத்து ஆளுக்குக் கொஞ்சம் செலவிற்கு ரூபாய் கொடுக்கலாம் என்று அண்ணியர்கள் முறையிடவே அதுபோல் ருகையா தனியாக வைக்கப்பட்டாள். அது அவர்களின் இன்னுமொரு சொந்த வீடு.

பிறகு வீடு பங்குபிரிக்கத் திட்டமிடப்பட்டது. இப்போது ஒன்றாய் இருந்த அண்ணியார்கள் தங்கள் பங்குகளை வாங்கிக் கொண்டு தனித்தனியாய் இருக்க முடிவெடுத்தனர் ருகையாவிற்கும் மூன்றில் ஒரு பங்கு கிடைக்கும்.
.
ஆனால் ருகையாவை நாம் தானே பார்க்கவேண்டும் பங்கு கொடுக்காமல் ஆளுக்கு ஒரு மாதம் வைத்துக்கொள்ளலாம் என்று ருகையாவிடம் கேட்காமலேயே முடிவெடுக்கப்பட்டது.

அவளுக்கு தன் பிள்ளைகளுக்கு வயிறார உணவு கிடைப்பதே போதுமென்றிருந்தது. அவர்களுக்கு இசைந்தவளாக அமைதியாக இருந்துவிட்டாள் ருகையா.

இப்போது மாமனார் ரஷீத் திடீர் விஜயமாக பிள்ளைகளுக்கு திண்பண்டம் வாங்கிக்கொண்டு வந்து ருகையாவை தனியாகச்
சந்தித்தார்.

“என்னம்மா எப்படியிருக்கீங்க, நீங்க கஷ்டப்படக் கூடாதுன்னுதான் இங்கே அனுப்பிவைத்தேன் நீங்க நல்லாயிருக்கீங்களா? வீட்டைப் பங்கு பாகம் பிரிக்கிறாங்களாமே உனக்கு சேரவேண்டிய பங்கை வாங்கிட்டு நம்ம வீட்டுக்கே போகலாம்மா” என்றார் மாமனார் ரஷீத்.

“மாமா அது வந்து……பங்கு பிரிச்சிட்டாங்க அவங்க எங்களைப் பார்த்துக்கொள்வதாக சொல்லியிருக்காங்க” என்று தலைகுனிந்தவாறே மெதுவான குரலில் சொன்னாள் ருகையா.

“ருகையா..உனக்கென்ன அறிவில்லையா? இரண்டு குழந்தைகள் இருப்பதை நீ மறநதுட்டயா? யாராவது தனக்கு வரும் பங்கை வேணாம்னு சொல்வார்களா? என்னம்மா நீ …”என வசைமழை பொழிந்தார்.

ருகையா பயந்தவளாக தன்னைக் கட்டிப் பிடித்திருந்த இரு பிள்ளைகளைத் தடவியவளாக தலைகுனிந்து அழுது கொண்டிருந்தாள்.

மாமனார் இன்னும் உரத்த குரலில், “நான் உங்க அண்ணனுங்க கிட்ட என்னான்னு கேட்குறேன் வா” என்றார்.

“வேண்டாம் மாமா என் பிள்ளைகள் வளரும்வரை நான் இப்படியே இருந்துவிடுகிறேன் அவர்கள் வளர்ந்தபின்னே
என்னை அவர்கள் என்னைப் பார்துக்கொள்வார்கள்” என்றாள் ருகையா

ரஷீத் இன்னும் கோபமானார்.

“நீ வேண்டுமானால் இங்கு இரு என் சந்ததி இப்படி இருக்கவிடமாட்டேன்” என்று தன் இருபேரன்களைக் கூட்டிச்செல்வதாய்ச் சொன்னார்.

ருகையாஅழுது அடம்பிடித்தும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போனார் ரஷீத்.

பிள்ளைகள் தஙகள் தாய் ஞாபகத்தில் சரியாகச் சாப்பிடவில்லை தூங்கவில்லை. ருகையாவின் நிலைமை அதைவிட மோசமாய் இருந்தது.

இப்படியே காலம் ஓடியது..

ருகையாவிற்கு ஒரு தனியார் மார்க்க விடுதியில் அங்கே உள்ள மாணவிகளைக் கவனிக்கும் பொறுப்பாளர் வேலை கிடைத்தது அங்கேயே தங்கிவிட்டாள்.

தாத்தா வீட்டில் பிள்ளைகள் தன் தாயைப் பற்றி தவறாகப் போதித்து வளர்க்கப்பட்டார்கள்.

ருகையாவின் மூத்தமகனை 17 வயதில் காலம் காற்றடித்தாற்போல் அவளின் அண்ணன் மகனிடமே வியாபாரம் பழக கொண்டுவந்து சேர்த்தது. அவன் அங்கே உள்ள சிலர்களால் தன் தாயின் நிலைபற்றி அவள் பட்ட சிரமங்கள் பற்றியும் அறிந்துகொண்டான்.

கொஞ்சநாளில் வாடகைவீடு பிடித்து அம்மாவை அழைத்து வைத்துக்கொண்டான். இதனால் தாத்தா வீட்டினரால் அவனும் வெறுக்கப்பட்டான்.

ருகையாவின் சின்னமகன் தன் அண்ணன் மூலமாக தன்தாயைப்பற்றித் தெரிந்து கொண்டாலும் கொஞ்சம் வீம்புக்காரனாய்
இருந்தான்.

தோழர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்லும்போது ஒருவிபத்தில் அவன் இறந்துவிட்டான். அதற்காக வழக்குப் போட்டதில் அவனுக்காக நாற்பது இலட்சம் ரூபாய் கிடைத்தது.

தாத்தா வீட்டில் எவ்வளவு முயன்றும் அவனுடைய தாயின் கையெழுத்து மட்டுமே செல்லுபடியானது

வந்த பணத்தை தாத்தா வீட்டினருக்கும் பிரித்துக் கொடுத்து தன் மூத்த மகனிற்கும் திருமணம் செய்துகொடுத்தாள்.

இன்று தன் பேரக்குழந்தைகளுடன் பொழுதை கழித்துக் கொண்டே பழைய நினைவுகளால் அகன்றிருந்த தன் கண்களைச் சிமிட்டி நிகழ்வுக்கு வந்து பெருமூச்சு விட்டபடி தன் பேரக்குழந்தைகளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

*********

எழுதியவர்:-

✍🏻 அனீஸ் பாத்திமா

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *