அலாரத்தை
முந்தி ஒலித்தது
அதிகாலை பறவைகளின் கீச்சொலி

உணவூட்டுகையில்
உணவைச் சிதறியது குழந்தை
வயிறு நிறைந்தது நாய்க்குட்டிக்கு

தனித்திருந்த பொழுது
நினைவலைகள் சுழன்றன
காற்றாடியின் துணையோடு

மறுக்கப்பட்ட மலர்கள்
தினமும் மலர்ந்தன
கைம்பெண்ணின் புடவையில்

ஆடும் நாற்காலிக்கு
ஆறுதலாயிருந்தது காற்று
தாத்தா இறந்த பிறகு

பேம்பர்ஸ் வாங்க
கடைக்குச் சென்றான் குழந்தையோடு
படுக்கையில் கிடக்கும் அம்மாவிற்காக

துணிகளை
உலர்த்திக் கொண்டிருந்தாள்
வானொலியில் மழை எச்சரிக்கை

கடிகார முள்ளின்
வேகத்தால்
தொண்டையில் சிக்கியது மீன்முள்

மூதாட்டி இரவின்
தனிமையைப் போக்கியது
முற்றத்தில் விழுந்த நிலா

அதிகாலை சிணுங்கியது
அப்பா வைத்த அலாரம்
அவரோ மூச்சற்றுக் கிடந்தார்

                        சு. இளவரசி.
 சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *