எனக்குரிய இடம் எங்கே? – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல் : எனக்குரிய இடம் எங்கே?
ஆசிரியர்: ச.மாடசாமி
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன் – பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.130
கல்விச் சீர்திருத்தம்,கல்விக்கூட சுதந்திரம்,மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன.பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறையக் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும்,கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை.அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது!’
ஒரு வகுப்பறை யாருக்கு சொந்தம்…பேராசிரியருக்கா?மாணவனுக்கா?கல்விக்கூடத்தின் கதாநாயகனாக யார் இருக்க வேண்டும்?’எனக் கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறார் அவர்.
அய்யப்பராஜ் என்ற பேராசிரியரின் பார்வையில் ஒரு நாவல் போல விரியும் இந்த நூல்,தங்கள் பணியில் அக்கறையுள்ள அத்தனை ஆசிரியர்களுக்கும் வேதம்.
அதே சமயம் மாணவர்களுக்கும் தங்களைச் செதுக்கிக்கொள்ள இந்த நூல் வாய்ப்பு தருகிறது.கல்வியில் முழுமை பெற்று,வாழ்வில் தனக்குரிய இடத்தை தேடிக்கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது.
பாதைகளைத் தேர்ந்தெடுப்பவர்களை தாண்டி பாதைகளை உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள்.எல்லோருக்கும் சிந்தனையின் வாசலைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது’எனக்குரிய இடம் எங்கே?’
கற்றல் கற்பித்தல் சார்ந்த வெறும் தத்துவங்களை மட்டும் அடுக்கிக் கூறாமல், அவைகளை தன் அனுபவ அறிவோடு இணைத்து நாவல் வடிவில் உரிய நிகழ்வுகளோடு தந்திருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.
பேராசியருக்கும் மாணவருக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்பதைப் புரிதலுடன் விளக்கியிருக்கிறார் ஆசிரியர் திரு. மாடசாமி அவர்கள்.
வகுப்பறையை கவனிக்காமல் இருப்பதற்கான காரணம் மாணவனின் அலட்சியப் போக்கோ அல்லது அக்கறையின்மையோ அல்லது ஆணவப் போக்கோ அல்ல. அவனுடைய மன ரீதியிலான போராட்டமே. இதை அறிந்து கொள்ளாமல் அவனுடைய போராட்டத்திற்கான தீர்வைத் தராமல் அவனுக்கு கல்வி கற்பிக்க இயலாது என்பதை ஆணித்தரமாக விளக்கியுள்ளார்.
ஆசிரியர் தன் கருத்தை மாணவர்களிடம் திணிக்காமல், மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டு அவர்களைச் சிந்திக்கவும் சீர்திருத்தவும் வேண்டியதே இன்றைய தேவை என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
ஆசிரியர் தன் திறமைகளை நிரூபிக்கும் வண்ணம் கல்வி போதிப்பதை விட மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதை ஊக்குவித்து அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதே திரு. மாடசாமி அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள்.
தமிழ் மொழி சார்ந்த கற்றல்-கற்பிப்பதில் கடைபிடிக்க வேண்டிய சில புதிய முறைகளையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
வ.பெரியசாமி
‘புத்தக ஆர்வலன்’ , தன்னம்பிக்கை பேச்சாளர்,போட்டித்தேர்வு பயிற்சியாளர்,
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி
மேலும் இதுபோன்ற புத்தகங்களை வாங்க thamizhbook.com இணையதளம் தொடர்பு கொள்ளவும்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.