1
சில்லரையை
நீட்டி
ஆசிர்வாதம்
கேட்கிறாள் சிறுமி
ஆசிர்வாதத்தை நீட்டி
சூரையாடப்பட்ட
தன் காட்டைத் திரும்ப கேட்கிறது
கோவில் யானை
2
யெப்பா
இன்னைக்கு
யெங்களுக்கு பள்ளிக்கூடம்பா …
காசு இருந்தா
ஐந்து ரூபாய் கொடம்பா
பேனா வாங்கணும் …
பீடி வாங்க வச்சியிருந்த
பத்து ரூபாயில்
ஐந்து ரூபாயைக் கொடுத்து
இந்தா பேனா வாங்கிக்கோ
நல்லா படி சாமி யென்று
தன் மகளின் தலையை
கோதி விட்டவாறு ??
கோதி விட்டபின்
அவள் நடந்து
போகிற பாதையை
உற்று பார்த்தவாறு நிற்கும்
அப்பாவின் கண்ணிலிருந்து
ஊற்றெடுக்கிற கண்ணீரில்
தளும்பியபடி தட்டுப்படும்…
“நல்லா படி
சாமியென்று அவ்வப்போது
உச்சரித்த தன்
அம்மாவின்
பழைய நினைவின் தழும்புகள் ,
3
அப்பாவுக்குப் பிடிக்குமென்று
அரை கிலோ மாதுளமும்
ஒரு கிலோ ஆப்பிளும்
கால் கிலோ திராட்சையும்
ஒரு சீப்பு வாழைப்பழத்தையும்
வாங்கிக்கொண்டு
வீடு வந்து சேர
வாசலில் கிடத்தப்பட்டிருந்த
அம்மாவுக்கு நீ
எதுவுமே வாங்கிட்டு வரலையா
யென்று அப்பா கேட்க
இல்லையென்று
நானும் அழுக
அப்பாவும் அழுக
கிடத்தப்பட்டிருந்த
அம்மாவும் அழுக
அக்கொடுர கனவிலிருந்து துடித்தெழுந்து
கண்களை விரிக்கிறேன்
என் படுக்கறையிலிருந்து
வாசல் வழியாக
வெளியேறி படர்ந்து
உலர்ந்து கொண்டிருக்கிறது
கண்ணீரின் ஆறு
4
அலைகளை
வரைந்து
கொண்டிருக்கும்
குழந்தைகளின்
அந்த பிஞ்சு கைகளுக்குள் தான்
ததும்பித் ததும்பி
கரை சேர்கிறது ஒரு பெரிய கடல் ,

