புத்தரின் புன்னகை
கொஞ்ச நாளைக்கு முன்பு
புத்தரின் சிலை
ஒன்றைத் தந்துவிட்டு
நிறைய விஷயங்களைப்
பேசிப்போன ஒருவன்
சட்டென்று நிறம் மாறி
பச்சோந்தியாகிப் போனான்
இவன், பச்சோந்தியாய்
நிறம்மாறியது தெரியாமல்
இன்னும் புத்தர் கண்களை மூடியபடி
சிரித்துக் கொண்டிருக்கிறார்
என் வீட்டின் வரவேற்பறையில்…
அங்கே
வைக்கப்பிடிக்காமல்
மாற்றிய தருணத்தில்
புத்தரின் சிலை
கீழே உடைந்து வீடெங்கும்
பீங்கான் சில்லுகள்..
பீங்கான் சில்லுகளுக்கு
இடையே உடையாமல் இருக்கும் புத்தரின் புன்னகையை மட்டும்
எனக்கான கவிதையாய்
மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
2
எல்லாருடைய
சமூக ஊடக கணக்குகளிலும்
ஒரு சாதிச்சங்க குழு இருக்கிறது.
பத்தாம் வகுப்பு படித்தவர்களின் குழு
ஒன்றும் இருக்கிறது.
பணி செய்யும் இடங்களில்
நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்
சில குழுக்கள் உள்ளன.
உணவு உண்பதற்கு என்று ஒரு குழு உள்ளது.
இருவருக்கு என்று கூட குழு உள்ளது.
தண்ணியடிக்கும் குழு தவறாமல் உள்ளது.
பலர் இருக்கும் குழுக்களில் ஓரிருவர் மட்டும்தான் உயிர்ப்புடன் உள்ளனர்.
குழுவைத் தொடங்கியவர் பெரும்பாலும்
குழுவில் இருப்பதே இல்லை.
அட்மின்களின் அட்டூழியத்தைப் பொறுத்துக் கொள்வோர் மட்டுமே குழுவில் நீடிக்கின்றனர்.
பள்ளிக்குழுக்களில் பாதிப்பேர் அடையாளம் தெரியாமல் போய் விடுகின்றனர்.
காலை மாலை வணக்கம் சொல்வதை
பிறந்த நாள் திருமண நாள் வாழ்த்து சொல்வதை
யாரேனும் ஒருவர் எப்போதும் ஆரம்பித்து வைக்கிறார்.
நல்ல ஸ்டேட்டஸ் மெசேஜ் வைத்தால் பார்வார்டு செய்யேன்…
என குழுவில் ஒருவர் கேட்டு விடுகிறார்.
பிடிக்கவில்லை என்றாலும்,
விலைவாசியைப் போல குறையாமல் கூடிக்கொண்டே இருக்கிறது குழுக்களின் எண்ணிக்கை.
ச. பாரதி பிரகாஷ்,
சின்னத் தடாகம்,
கோயமுத்தூர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.