ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார்

ச. இராஜ்குமார் எழுதிய “பாஷோவின் கைத்தடி” (ஹைக்கூக்கள்) – ஒரு பார்வை – பொன். குமார்

பாஷோவின் கைத்தடி – ஹைக்கூக்கள் – ச. இராஜ்குமார் – ஒரு பார்வை

– பொன். குமார்

ஹைக்கூ என்றால் தமிழ்க் கவிஞர்களுக்கு பாஷோவின் நினைவு வரும். பாஷோவை வைத்தே பல ஹைக்கூக்கள் எழுதப்பட்டுள்ளன. தொகுப்புகளும் வந்துள்ளன.

அமைதியான குளத்தில்
இப்போதும் கூட
பாஷோவின் தவளை

என்பது கவிஞர் சிபியின் ஹைக்கூ.

பாஷோ பூஸா இஸன்
மூவரும் தனித்தனி இல்லை
இதோ நான் இருக்கிறேன் ஒரே ஹைக்கூவாக

என்று கவிஞர் பாரதி வசந்தன் ஒரு ஹைக்கூ எழுதினார். பாஷோவின் ஜென் கவிதைகள் என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை எழுதினார் எஸ். ராமகிருஷ்ணன். பாஷோவின் கடைசி ஹைக்கூ என்னும் ஒரு ஹைக்கூத் தொகுப்பை இருமொழிகளில் தந்துள்ளார் கவிஞர் கே. பாபுசசிதரன். கவிஞர் ச. இராஜ்குமார் பாஷோவின் கைத்தடி என்னும் ஹைக்கூத் தொகுப்பைத் தந்துள்ளார்.

உதிர்ந்த சருகுகள்
படபடக்கிறது
இளம் பறவையின் சிறகு

என்னும் படபடப்புடன் தொகுப்பைத் தொடங்கியுள்ளார் கவிஞர் ச. இராஜ்குமார். சிறகு போல் கற்பனையும் விரிகிறது. சருகு உதிர்ந்த அதிர்வால் ஏற்கனவே உதிர்ந்த இளம் பறவையின் சிறகு படபடக்கிறது என்கிறார். சருகை விட சிறகு மென்மையானது என்பதைக் குறிப்பிடுகிறார்.

புயல் வந்து ஓய்ந்த பின் பார்த்தால் வாழை மரங்கள் எல்லாம் ஒரு பக்கமாக சாய்ந்து கிடக்கும். பயிர்கள் சிலவும் ஒரு பக்கமாகவே சாய்ந்திருக்கும். பொதுவாக பார்ப்பவர்கள் புயல் அடித்து ஓய்ந்துள்ளது என்பர். ஆனால் கவிஞர்

புயல் சென்ற
திசையைக் காட்டுகின்றன
சரிந்த வாழை மரங்கள்

என புயலின் திசையைக் காட்டுகிறார். புயல் எந்த பக்கமாக வீசியது என்பதை வாழை மரங்கள் சாய்ந்துள்ளதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார். வழிகாட்டி மரங்கள் போல வாழை மரங்கள் உள்ளன என்கிறார்.

தொடர்வண்டிப் பயணம் ஓர் அனுபவம். தொடர் வண்டியில் தேநீரைப் பருகுவது மற்றோர் அனுபவம். சிந்தாமல் சிதறாமல் பருக முடியாது. தொடர் வண்டியில் பயணித்தல் தாலாட்டுவது போலிருக்கும்.

தொடர்வண்டிப் பயணம்
நெரிசலில் சிதறும்
தேநீருடன் வார்த்தைகள்

என்னும் ஹைக்கூவில் தேநீருடன் வார்த்தைகளும் சிதறும் என்கிறார். ஹைக்கூவில் வார்த்தைகள் சிதறாமல் உள்ளது. கவிஞரின் அனுபவம் தெரிகிறது.

அரவமற்ற இரவில் ஒரு சிறிய சப்தமும் கனமாக ஒலிக்கும். கதவை சாத்தினாலும் சத்தம் கேட்கவே செய்யும்.

நடுநிசி இரவு
யாரோ கதவை சாத்த
கசிகிறது நசுங்கிய ஓசை

என்னும் ஹைக்கூவில் கதவை சாத்த கசிகிறது ஓசை என வித்தியாசமாக தெரிவித்துள்ளார். ஓசை கசிந்தாலும் மெல்ல ஒலிக்கும் என்கிறார்.

இரவில் சாலைப் பயணம்
திணறடிக்கச் செய்கின்றன
வாகனங்களின் ஒளிசிதறல்கள்

என்னும் ஹைக்கூ காட்சியாக கண்முன் விரிகின்றன. இரவு நேரத்தில் பயணிக்கும் போது எதிரில் வரும் வாகனங்களின் ஒளி கண்ணை பறிக்கும். பாதையில் வாகனம் செலுத்த முடியாமல் திணறடிக்கும். ஒளிசிதறல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் விதைக்கப்பட்ட விதை முளைவிடும் போது பூமியில் ஒரு சிறு பிளவு ஏற்படும். இது இயற்கை.

துளிர்விடும் விதை
சிறு விரிசல் கண்டது
பூமி

என்னும் ஹைக்கூவில் மேற்படி நிகழ்வை இயல்பாகவே பதிவுச் செய்துள்ளார். வாசக நெஞ்சிலும் பதிவித்துள்ளார்.

நீரோடையில் கூழாங்கற்கள் காணப்படும். கூழாங்கற்கள் உருவானவையா உருவாக்கப்படுபவையா என்பது ஒரு கேள்விக்குறி.

நீரோடையில் சலசலப்பு
உருவம் பெறுகின்றன
கூழாங்கற்கள்

என்னும் ஹைக்கூவில் கூழாங்கற்களை நீரோட்டமே உருவாக்குகிறது என்கிறார். கல்லின் மீது நீர் பாய பாய கற்களில் ஒரு வழவழப்பு தன்மை உண்டாகும். சொற்களில் ஒரு வழவழப்பு தன்மை உண்டாகிறது என்று உணர்த்தியுள்ளார்.

சாரல் மழை
மெதுவாகக் கரைகிறது
கரையான் புற்று

என்னும் ஹைக்கூ வாசித்தவுடன் மனதும் மெல்ல கரைகிறது. கரையான் எத்தனை காலம் கஷ்ட பட்டு கட்டியிருக்கும். பெய்யும் சாரல் மழை மெல்ல கரைத்துக்கொண்டிருக்கிறது என்கிறார். சாரல் மழைக்கு கருணை இல்லையா..?

பனை மரம் மனிதருக்கு பலவகைகளில் பயன் தரும். நுனி முதல் அடி வரை பயன்படும். வெட்டினாலும் பயன் தராமல் இராது.

வெட்டிய பனைமரம்
உயர்ந்து நிற்கிறது
கோயிலில் கொடிமரமாக

என்னும் ஹைக்கூவில் வெட்டிய பின்னும் கொடிமரமாக நின்று கும்பிட வைக்கிறது என்கிறார். மரம் என்றால் வணக்கத்திற்குரியது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

உதிரும் கடைசி இலையின்
பயணத்தையும் தீர்மானிக்கிறது
காற்று

என்றொரு ஹைக்கூ. உதிர்ந்தாலும் காற்று இலையை விடுவதில்லை என்கிறார். இலையின் பயணத்தையும் காற்றே தீர்மானிக்கிறது என்று பயணத்தைத் தொடர்ந்துள்ளார். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்று திரு மந்திரத்தில் கூறப்பட்ட பழ மொழியை நினைவுப்படுத்துகிறது.

மழை பெய்து முடிந்தாலும் மலையின் ஒருபுறம் மழைநீர் வழிந்து கொண்டே இருக்கும். நீர் வடிவது நின்றாலும் நீர் வழிந்த தாரை இருக்கும். தடம் தெரியும். கவிஞர் இதை

உயர்ந்த மலைப்பாறை
நன்றாகத் தெரிகிறது
நீர் வழிந்த தடம்

என்னும் ஹைக்கூவாக்கியுள்ளார். நீர் வழிந்த தடம் நிரந்தரமாக இருக்கும். ஹைக்கூவும் நினைவில் நிற்கும்.

செடியைப் பிடுங்க
மெளனமாய் உதிர்கிறது
வேரிலிருந்து மண்

என்னும் ஹைக்கூ செடிக்கும் மண்ணுக்குமான உறவைப்பற்றி பேசுகிறது. பூமியிலிருந்து செடி பிடுங்கப்பட்டாலும் வேரிலிருந்து மண்ணை பிரிக்க முடியாது. மெளனமாய் உதிர்ந்தாலும் வேரில் மண் ஒட்டிக் கொண்டே இருக்கும்.

மீனை பிடிக்க கரை மீது காத்திருக்கும் கொக்கு. கொக்கிடம் இருந்து தப்பிக்க கடலின் ஆழம் வரை செல்கின்றன மீன்கள். கொக்கும் பசியாற வேண்டும். மீனும் உயிர்வாழ வேண்டும். கவிஞர்

இரைப் பிடிக்கும் கொக்கு
கடலின் ஆழத்தை அறிந்திருக்கின்றன
மீன்கள்

என்னும் ஹைக்கூவில் இரண்டுக்கும் இரங்கியுள்ளார். கடலின் ஆழத்தை அறிந்திருப்பதால்தான் மீன்கள் கொக்கிடம் இருந்து தப்பித்து வாழ்கின்றன. இருப்பினும் கொக்கிடம் சிக்கி இரையாகி விடுகின்றன சில மீன்கள்.

தேரடி வீதி
உடைந்த நடைவண்டியுடன்
நடைப்பயிலும் குழந்தை

என்பது நெகிழ்ச்சியானது. உடைந்த நடைவண்டியுடன் நடைப்பயின்றது என்னும் வரியை வாசித்தவுடன் மனம் உடைந்து விடுகிறது. நடைப்பயிலவும் ஒரு நல்ல வண்டி இல்லாத நிலையில் குழந்தைகள் வறுமையில் இருப்பது வருத்தமளிக்கிறது.

கொம்புகள் என்பது விலங்குகளுக்கு பாதுகாப்பானது. மாட்டுக்கும் கொம்பு உண்டு. மானுக்கும் கொம்பு உண்டு. மானுக்கு முளைக்கும் கொம்புகள் கிளை கிளையாய் வளரும். அது மானுக்கே ஆபத்தானது.

முள் காட்டில் மேயும் மான்
இடையூறாக இருக்கும்
வளைந்த பெரிய கொம்புகள்

என்கிறார். மேயும் போது முள்ளில் மாட்டிக்கொள்கிறது என்கிறார். மான்களே ஒன்றுக்கொன்று மாட்டிக் கொள்ளும் ஆபத்தும் உண்டு.

பறவைகள் மரத்தில் விளையும் பழங்களை தின்று வளர்கின்றன. எச்சங்களை இட்டு மரங்களையும் வளர்க்கின்றனர். பழங்களைத் தின்னவே பறவைகள் வருகிறது என்பது பொது புத்தி. ஆனால் கவிஞர்

பழங்களை உண்ண
வந்த பறவைகள்
கொத்திகொண்டிருக்கின்றன பூச்சிகளை

என்னும் ஹைக்கூவில் பறவைகள் பழங்களை மட்டும் தின்னவரவில்லை மரத்திலிருக்கும் பூச்சிகளையும் தின்ன வருகிறது என்கிறார்.

காடுகளை பாகம் பிரிக்கும் போது வரப்பில் இருக்கும் மரம் யாருக்கு என்று ஒரு கேள்வி எழும். அதனால் சிலவேளைகள் மரத்தை வெட்டிவிடுவார்கள். வெட்டப்படாமலும் விட்டு விடுவார்கள்.

பாகப்பிரிவினை
இருபுறமும் கிளை விரிக்கிறது
வரப்பில் வைத்த மரம்

என வரப்பில் மரம் இருந்தால் இருபுறமும் கிளை விரிக்கும் என்கிறார். மரம் பொதுவாக இருக்கும். மனிதர் பொதுவாக இல்லை என்றும் ஹைக்கூ உணர்த்துகிறது.

மதிய உணவு இடைவேளை
பள்ளி வளாகத்தில் கூடுகின்றன

என்று முதல் இரண்டு அடிகளில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். எவை கூடுகின்றன, ஏன் கூடுகின்றன என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காக்கைகள்

என மூன்றாமடியை எழுதி ஒரு காட்சியைக் காட்டுகிறார். உணவு வேளையில் மாணவர்கள் சாப்பிடும் போது உணவுகள் சிந்தும். சிதறும். அதை உண்பதற்காக காக்கைகள் கூடுகின்றன என்று கூறியுள்ளார்.

உதிக்கும் சூரியனை
ஒருகணம் மறைத்துச் செல்கிறது
கிழக்கே செல்லும் பறவை

என்பது ஓர் அருமையான ஹைக்கூ. ஒரு கணம் என்பதே கவிதையின் கனத்தைக் கூட்டுகிறது. ஒரு மின்னல் போல ஹைக்கூ மனத்தில் பாய்கிறது.

ச. இராஜ்குமார் ( Sa.Rajkumar) எழுதிய "பாஷோவின் கைத்தடி" (Bashovin Kaithadi Haiku Poems Collection) (ஹைக்கூக்கள்) - புத்தகம் ஒரு பார்வை

விறகு விற்றவள்
மாலையில் சுமந்து வருகிறாள்
மஞ்சள் வெயிலை

என்பதும் சிறப்பு. இதுவும் ஒரு ஹைக்கூ பார்வை.

உச்சி வெயில்
இடுப்பில் சுமக்கிறாள்
குடத்தில் சூரியன்

என்னும் பொன். குமாரின் ஹைக்கூவை நினைவுப்படுத்தியது.

ஆலமரத்தின் சிறப்பு அதன் விழுதுகள். விழுதுகள் கவிஞரின் கண்ணுக்கு கூந்தலாக தெரிவதால் கவிஞர் எழுதிய ஹைக்கூ

தலைவாரிப் பின்னி முடிக்க
கரங்கள் இல்லை
விழுதுகளுடன் ஆலமரம்

ஆலமரத்தை தலைவாரிப் பின்ன முடியுமா? பின்ன முடியும் அதற்கான கரங்கள் இல்லை என்கிறார்.

தவளை
தண்ணீருக்குள் தாவ
தடுமாறியது நிலா

என்பது கவிஞர் ராசி. பன்னீர்செல்வம் அவர்களின் ஹைக்கூ.

மீனின் சலசலப்பு
உறங்கவில்லை
குளத்தில் நிலா

என்பது கவிஞர் ச. இராஜ்குமார் அவர்களின் ஹைக்கூ. இராசி. பன்னீர்செல்வத்தின் தவளை இராஜ்குமாரின் மீனாகியுள்ளது.

தும்பி ஒரு சிறிய உயிர். சிறு ஜீவன். தும்பியைக் கையில் பிடித்தால் அது படபடக்கும். கவிஞர்

தும்பியை பிடிக்கும்
சிறுவனின் கைகள்
படபடக்கிறது இதயம்

என சிறுவனின் இதயத்தைக் குறிப்பிடுகிறார். தும்பிக்காக கவிஞர் இரக்கப்பட்டுள்ளார்.

கவிஞர் ச. இராஜ்குமாரின் ஹைக்கூ முயற்சி வித்தியாசமானது. வரவேற்பிற்குரியது. மென்மையானது. மனத்தை வருடக்கூடியது. இயற்கையைச் சார்ந்தே ஏராளமான ஹைக்கூக்கள் எழுதியுள்ளார். பூமிப் பரப்பில் கவிஞர் கண்ணுற்றதை எல்லாம் ஹைக்கூவாக்கியுள்ளார். காண்பவைகளைக் கூர்ந்து கவனிப்பவர் என்பதையை ஹைக்கூக்கள் காட்டுகின்றன. பாடுபொருள்களில் பழையதிருப்பினும் பாடிய விதம் கவிஞர் ச. இராஜ்குமாரை தனித்து காட்டுகின்றது. ஹைக்கூ உலகில் கவிஞருக்கு ஒரு தனி இடம் பாஷோவின் கைத்தடி பெற்றுத் தரும். ஹைக்கூவில் கவிஞர் நா. விச்வநாதனின் பார்வை வேறு. கவிஞர் மு. முருகேஷின் பார்வை வேறு. இருவரின் பார்வையும் இராஜ்குமார் மீது ஒரே மாதிரியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ச. இராஜ்குமார் ஒரு ஹைக்கூவாளர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஹைக்கூவிற்கு
ஊன்றுகோலாக உள்ளது
பாஷோவின் கைத்தடி.

நூலின் விபரம்:

நூல்: பாஷோவின் கைத்தடி
ஆசிரியர்: கவிஞர் ச. இராஜ்குமார்
வெளியீடு: செங்கனி பதிப்பகம்
புதுகை
9750858600

நூல் அறிமுகம் எழுதியவர்: 


பொன். குமார்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *