கு.மணி எழுதிய "சாதீய முகங்கள்" சிறுகதை | Saathiya Mugangal Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை

கு.மணி எழுதிய “சாதீய முகங்கள்” சிறுகதை

அதிகாலை மூன்று மணி ஊரேஅமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

அம்மா!அம்மா கதவை திறங்கம்மா. தூக்கக் கலக்கத்திலிருந்த பவுனு யாரு… இந்த நேரத்துலே? நான்தாம்மா சுகந்தி உங்க பொண்ணு.

சுகந்தியா என்னடி இந்த நேரம் தனியாக வந்திருக்கே என்று கூறியபடி கதவை திறந்தாள்பவனு. பெட்டி படுக்கையுடன் சுகந்தி நின்று கொண்டிருந்தாள்.

என்னடி உடம்புக்கு ஏதாவது முடியலையா? இல்லம்மா. அது வந்து என்று நீட்டிப் பேசினாள். யாரோ ஒரு இளைஞன் அவள் பின்னாடி நின்று கொண்டிருந்தான்.

யாருடி அவன் உன் பின்னாடி நிற்கிறான். என்ன மன்னிச்சுடுமா இருவரும் சட்டென பவுனுவின் காலில் விழுந்தனர்.

பவுனுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னடி என்ன பண்ணிட்டுவந்திருங்கேங்க. முதல்லே வீட்டுக்குள்ள வாடி. பதற்றத்தில் இருந்த பவுனு இருவரையும் கையைப் பிடித்து வீட்டுக்குள்ளே இழுத்து விட்டு வீட்டைப் பூட்டினாள். இருவரும் திருதிருவென விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

சொல்லுடி என்ன ஆச்சு?

அம்மா இவர் பேரு பாண்டீஸ்வரன் எங்க கல்லூரியில் தான் படிக்கிறாரு. எனக்கு மூத்தவர். நாங்க இருவரும் ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினோம். நாட்கள் செல்லச் செல்ல அது காதலா மாறிடுச்சு. இது அவங்க வீட்டுக்கு தெரிந்து பெரிய பிரச்சனையா ஆயிடுச்சு. நாங்க பயந்து போய் இங்க வந்துட்டோம் என்று தழுதழுத்த குரலில் பேசினாள் சுகந்தி.

அடி பாதகத்தி என்னப் போலவே நீயும் செய்திட்டேயடி.

என்னம்மா சொல்றே?

இதுவரைக்கும் உனக்கு எது தெரியக்கூடாதுன்னு நினைச்சேனோ அதை இப்ப சொல்லும்படி ஆக்கிட்டேயே. நானும் 20 வருஷத்துக்கு முன்னாடி இதே காதல் வலையில் விழுந்தவள்தாண்டி.

உங்க அப்பா பூக்கட்டுற சாதியைச் சேர்ந்தவர். நம்ம ஊரு இது இல்லையடி குப்பாம்பட்டி. தினமும் உங்க அப்பா அந்த ஊருக்கு பூ விற்க வருவாரு.முதல்லே காசுக்கு எனக்கு பூ கொடுத்தவரு. என்ன விரும்புறதா சொன்னாரு. எங்களுக்குள்ள காதல் மலர்ந்தது. நித்தமும் உன்னை தலைநிறைய பூச்சூடிப் பாக்கணும்னு சொன்னாரு. பூ என்ன விலை விற்றாலும் இரண்டு முழம் பூவை எனக்கு கொடுப்பாரு . மல்லிகை பூவால் மலர்ந்ததடி எங்கள் காதல். பூப்போலவே அவருடைய மனசும் இருந்தது.

ஒருவரை ஒருவர் அவ்வளவு நேசித்தோம். சக்கம்பட்டியில் உள்ள ஒரு தறிக் கம்பெனியில் நான் வேலைபார்த்தேன். சக்கம்பட்டியிலும் குப்பாம்பட்டியிலும் ஒரே சாதிக்காரர்களாக இருந்தாலும் குப்பாம்பட்டி சாதியினரை கீழானவர்கள் என்று சக்கம்பட்டிக்காரர்கள் கருதுவார்கள்.

நித்தமும் மாலை வேலை முடிந்து ஊருக்கு திரும்பும் போது கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் உன் அப்பா என்னுடன் நடந்து வருவார். அது எனக்கு பாதுகாப்பாகத் தென்பட்டது.

பவுனு இப்படியே எத்தனை நாட்கள் தான் பழகுவது. நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று சட்டெனக் கேட்டார். என்னால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

வீட்டில் வயதான அம்மா மட்டும்தான் அவங்க கிட்ட வந்து பொண்ணு கேளுங்க.

அவரும் வந்து பெண் கேட்டார்.

நீ என்ன சாதியோ ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டா எங்க சாதிசனம் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திடும். வேண்டாம் தம்பி இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் . அம்மாச்சியின் சாதியக் குரல்.

உங்க அப்பா சண்முகம் கண்ணீர் விட்டு அழுதார். என்னால் பவுனை மறக்கவே முடியாது. அவள் இல்லாத வாழ்வை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தம்பி! இது சரிப்பட்டு வராது. மரியாதையா போயிடுங்க.உங்க பாட்டியின் அதட்டல். சண்முகம் எதுவும் சொல்லாமல் அழுதபடியே வெளியே வந்தார்.

மறுநாள் நான் வேலையை முடித்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தேன். பவுனு என்று செல்லமாக அழைத்தார். திரும்பிப் பார்த்தேன் அவர் கண்கள் குளமாகி கண்ணீர் தாரைதாரையாக வந்தது. என்னால் உன்னை மறக்க முடியாது என்னை நீ மறந்து விடுவாயா?

என்னால் அழுகையை அடக்க முடியவில்லை ஓடி சென்று அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். என்னை எங்கேயாவது கூட்டி சென்று கல்யாணம் செஞ்சுக்கங்கன்னு சொல்லியவாறு அழுது புலம்பித்தீர்த்தேன்.

பவுனு அழாதே!நாளைக்கு நம்ம கல்யாணம். ஏதாவது ஒரு கோயிலில் போய் உனக்கு தாலி கட்டுகிறேன். எனக்கென்று யாரும் கிடையாது.

கொண்டமாநாயக்கன்பட்டியில் ஒரு சிறிய மண் வீடு இருக்கு அங்க போய் நாம வாழ்க்கையை தொடங்குவோம். இவற்றை சொல்லி முடிப்பதற்குள் பவுனுவின் கண்களில் கண்ணீர் வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடியது.

அடியே! எங்களுக்கு கல்யாணமும் முடிஞ்சது. கல்யாணம் முடிஞ்ச கையோடு ஆசீர்வாதம் வாங்கலாம்னு உங்க அம்மாச்சியைப் பார்க்கப் போனோம். தொண்டை விக்கி விம்மி விம்மிஅழுதாள் பவுனு.

சாதி வெறி பிடித்த ஊரு. நல்லது, கெட்டது, கஷ்டம்னா ஒரு பயலும் வரமாட்டாங்க. ஆனால் நாங்கள் ஓடிப் போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம் சாதி விட்டு சாதி கல்யாணம் செய்ததால் ஊரே திரண்டு வந்து எங்களை என்ன செய்தார்கள் தெரியுமா ? தரையில் முட்டி முட்டி அழுதாள் பவுனு.

அடியே எங்க ரெண்டு பேரையும் மொட்டை அடிச்சு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேலேஏத்தி ஊர் முழுக்க சுற்றி வந்து செருப்பு, கம்பாலே மாத்தி மாத்தி அடிச்சாங்கடி.கதறி அழுதாள் பவுனு.

எங்களை ஊரரைவிட்டுக் தள்ளி வச்சுட்டாங்க. ஒரு வருஷம் தான் உங்க அப்பா கூட வாழ்க்கை உங்க அம்மாச்சியும் இதே வேதனையில் செத்துப் போயிடுச்சு.உங்க அப்பா இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாம நோய்வாய்ப்பட்டுச் செத்துப் போயிட்டாரு.

உன்னை வளர்த்து வாலிபம் ஆக்க நான் பட்டப்பாடு யாருக்கும் தெரியாது. பூ விற்கப்போனா முண்டச்சி கையாலே யார் பூ வாங்குவா? அதனால பூ விற்கப் போனா நெத்தியிலே பொட்டு வச்சுக்கிட்டு கையில வளைவி போட்டுக்கிட்டுத்தாண்டி போவேன். அதற்கு இந்த ஊரே என்னவெல்லாம் பேசும் தெரியுமா? இன்னும் இந்த சமுதாயத்தில் சாதிய முகங்கள் மாறவில்லையடி தேம்பித் தேம்பி அழுதாள் பவுனு.

உங்க பிள்ளையை நான் நல்லா பார்த்துக்கிடுவேன். நான் செத்தாலும் உங்க புள்ளைய விட்டுக் கொடுக்க மாட்டேன்.

நீ விட்டுக் கொடுக்கமாட்ட தம்பி! உங்க வீடு உங்க சாதிசனம் இதை ஏத்துக்கிடுமா?

பாண்டீஸ்வரன் மௌனமாக இருந்தான்.

வாழ்வோ சாவோ இங்க வந்துட்டீங்க.இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே சிலர் வீட்டின் கதவை உடைப்பது போன்ற சத்தம் கேட்டது.

அவர்களை சும்மா விடாதேங்கடா! வெட்டிச் சாயுங்கடா! ஒரே அலறல் சத்தம். ஊரே விழித்தது.பவுனு என்ன செய்வது என்று தெரியாமல் இங்க பாருங்க இதுக்கு ஒரே வழி கம்யூனிஸ்ட் ஆபீஸ் செல்வது தான். அவங்களால்தான் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்லியவாறு கொல்லைப் புறம்வழியாகத் தப்பி கம்யூனிஸ்ட் அலுவலகம் நோக்கி ஓடினர்.

பாண்டீஸ்வரனின் சொந்த பந்தங்கள் அவர்களைச் சும்மா விடுவதாக இல்லை உருட்டுக்கட்டையால் விரட்டி விரட்டி அடித்தனர். ஊரில் சில இளைஞர்கள் தடுக்கமுன்வந்தனர். அவர்களுக்கும் அடி விழுந்தது.

எப்படியோ தப்பி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல ஊரெங்கும் பரவியது. தாயைப்போல பிள்ளைன்னு சிலர் வசை பாடினார் சிலர் ஐயோ பாவம் என்று இறக்கப்பட்டனர். ஆனால் யாரும் உதவ முன் வரவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டது. காவல்துறைக்கு போன் செய்தார் ஒன்றிய செயலாளர் பரந்தாமன். மேலும் மாவட்ட செயலாளர்கள் முக்கியத் தோழர்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்கள். காவல்துறையின் முக்கிய அதிகாரிகளும் வந்தனர். கலவரக்கும்பலைத் தடியடிநடத்தி காவல்துறை கட்டுப்படுத்தியது அதற்குள் மேல் அதிகாரிகள் பவனு, சுகந்தி, பாண்டீஸ்வரனிடம் உண்மை நிலையை விசாரித்தனர். கட்சியின் சார்பிலும் அவர்கள் சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இங்க பாருங்க அவங்க ரெண்டு பேரும் பருவ வயதை அடைந்தவர்கள் இதில் தலையிட உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணி வைக்க நாங்க என்ன சொம்பப் பசங்களா? அந்தப் பொண்ணோட ஆத்தா ஒரு ஓடுகாலியாம். எங்க பையனை மரியாதையா விட்டுடுங்க கூட்டத்தில் ஒருவரின் வீர வசனம் .

டேய்! இவங்க கிட்ட என்னடா பேச்சு போய் அவனை அடிச்சுத் தூக்கி வாங்கடா நம்ம சாதி ரத்தம் அவங்க சாதியோட கலந்தா அதைவிட நமக்கு அவமானம் வேறு எதுவும் இல்லை சாதி வெறி பிடித்த ஒருவரின் கொக்கரிப்பு.

இங்க பாருங்கடா மரியாதையா கலைந்துபோயிடுங்க.அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆசைப்படுறாங்க. அவங்களை சேர்த்து வைக்க வேண்டியது சட்டத்தின் கடமை.இந்த காலத்தில் ஏன்டா இப்படி சாதி வெறிபிடித்து அலையுறேங்க.உங்க சாதிய முகம் மாறவே மாறாதா? மாவட்டச் செயலாளரின் பேச்சு.

யோவ்! வாயை மூடுயா. உங்களை மாதிரி கம்யூனிஸ்ட் கட்சி தான் சாதி மறுப்பு திருமணம் செய்ய அறைகூவல்விடுக்குது.வேறு யாராவது வாய தொறக்குறாங்களா எதிலேயா சாதி இல்லை. பிறந்ததிலிருந்து சாகுற வரைக்கும் சாதி அடையாளம் இருந்துகிட்டு தான் இருக்கு பள்ளிகூடத்திலே முதலில் கேட்கிறது ஜாதிதான்யா. கல்யாணம், தேர்தல், என் சுடுகாட்டுலே கூட சாதி இருக்கத்தான் செய்து இளைஞன் ஒருவனின் ஆவேசப் பேச்சு.

டேய்!பாண்டீஸ்வரா என் சொத்துலே ஒரு பைசாத் தரமாட்டேன் நீ நாசமா போயிடுவே பாண்டீஸ்வரன் தந்தையின் சாபம்.

மரியாதையா போயிடுங்க. இல்லே உங்க எல்லாரையும் வன்கொடுமைச் சட்டம், குண்டர் சட்டத்தில் தூக்கிஉள்ளே போட்டிடுவேன்.

நீங்க கல்யாணத்தை நடத்தி வையுங்க. அவங்க எப்படி வாழ்றாங்கன்னு பார்ப்போம். இவனை தூக்கி முதல்ல உள்ள போடுங்கப்பா காவல்துறை சார்பு ஆய்வாளரின் கோபக்கனல் அங்கிருந்து அவர்களை விரட்டி அடித்தது. வெறியுடன் வந்தகும்பல் வேனில் ஏறி புறப்பட்டு சென்றது..

ஒரு வழியாக பிரச்சனை முடிந்து கட்சி அலுவலகத்திலேயே திருமணம் குறிப்பாக சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தம்பி! காதலிச்சு கல்யாணம் செய்யுறது பெரிய விசயம் அல்ல. கடைசி வரை இருவரும் சேர்ந்து வாழணும். மணமக்கள் வாழ்க!என்ற கோஷம் எழுப்பப்பட்டது. பவுனு கண்ணீர் வடித்தவாறு ஆசீர்வாதம் செய்தாள். மணமக்கள் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினர். கட்சியின் சார்பிலும் காவல்துறை சார்பாகவும் ஒரு சிறிய தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது

சுகந்தியும் பாண்டீஸ்வரனும் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கினர். ஆனாலும் சில சாதிய முகங்கள் இன்று வரை நீங்கள் என்ன சாதி என்ற வினா எழுப்பியவாறே பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் உள்ளது. மனித ஜாதி என்பதை மறந்த இழிபிறவிகள்.

இவற்றையெல்லாம் மீறி இருவரும் எதிர்நீச்சல் அடிக்க கற்றுக் கொண்டு விட்டார்கள். மனித இனம் இருக்கும் வரை இந்த சாதிய முகங்கள் இருக்கத்தான் செய்யும். அது படித்தவர்களையும் விடுவதில்லை என்பதனை உணர்ந்து கொண்டனர்.

” நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்”
பாரதியையும் பெரியாரையும் தங்கள் மனதில் ஏற்றி நல்வாழ்வு தொடங்கினர்.

📚 எழுதியவர்:

கு.மணி
தெற்குப் புதுத்தெரு
சக்கம்பட்டி- 625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *