1
இதய கமலம்
============
மாதம்
மும்மாரி பெய்தபோதும்
வெயில்
சூட்டில் காய்ந்தபோதும்
தன்னிறத்தை
மாற்றிக்கொண்டேதேயில்லை
சந்திரனை
ராகு விழுங்குவதுபோல்
மெல்ல கிராமத்தை விழுங்கியது
நகரம்.
வானளவு நின்று
எல்லோர் கண்களையும்
உறுத்துகிறது.
யோசித்து யோசித்து
பெயர் சூட்டினாராம்
தாத்தா
இதயகமலமென்று.
அப்பாவின் பெருமிதம்
எனக்கு புன்னகையைத் தரும்.
புன்னகையை விற்றால்
புண்ணாக்கும் கிடைக்காதென
பெயரை மாற்றி
பலகையைத்
தொங்கவிட்ட மகன்
பிழை திருத்தம் பார்த்தான்.
“வீடு விற்பனைக்கு ”
2
பிழைப்பு
=========
கிடுகிடுவென ஏறி
கிடுகிடுவென கீழிறங்குவார்
அப்பா.
அவர் வந்தால் போதும்
அத்தனை மரங்களும்
தலைவிரித்தாடும்.
வலியில்லாமல் வெட்டி
உடையாமல் கீழிறக்கும் வித்தை
அவருக்கு மட்டுமே உரியது.
லாரி லாரியா ஏற்றிவிட்டு
வாங்கிய கூலியோடு
உறிஞ்சிக்குடிப்பார்
கடைசி இளநீரை.
வயசானாலும்
உடலென்னவோ திடகாத்திரம்தான்.
இப்போதும்
விறுவிறுவென மேலேறி
விறுவிறுவென கீழிறிங்குகிறார்
தோப்பழித்து
கட்டும் கல்லூரியில்
சித்தாள் வேலை கிடைத்த
மகிழ்ச்சியில்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.