எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய "காட்சி மொழியின் மாட்சிக்கு விருது" கட்டுரை | சாகித்திய அகாதமி விருது: ச.தமிழ்ச்செல்வன் - www.bookday.in

சாகித்திய அகாதமி விருது: ச.தமிழ்ச்செல்வன் | காட்சி மொழியின் மாட்சிக்கு விருது – எஸ்.வி.வேணுகோபாலன்

சாகித்திய அகாதமி விருது: ச.தமிழ்ச்செல்வன்

காட்சி மொழியின் மாட்சிக்கு விருது

எஸ்.வி.வேணுகோபாலன்

மேஜர் ஜெய்பால் சிங்கின் ‘நாடு அழைத்தது’ புத்தகத்தை மேற்கோள் காட்டி, இதற்குமேல் அஞ்சல் துறை பணியில் நீடிப்பதில்லை, ஜெய்பால் சிங்குக்குக் கேட்டதுபோலவே எனக்கும் ஒரு குரல் கேட்டுவிட்டது என்று விருப்ப ஓய்வில் மத்திய அரசுப் பணியிலிருந்து வெளியேறிய அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார் ச.தமிழ்ச்செல்வன்.

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு வந்தவர்தான் இவரும்.  நாடு அழைக்கும் குரல் என்பது சமூகத்தின் குரல்.  இன்னும் குறிப்பாக, ஒடுக்கப்பட்டோரின் குரல்.  சாதி, இன, மத ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, பாலின ஒடுக்குமுறைக்கு ஆட்படுவோரது குரலும் எனக்குக் கேட்கிறது, ஒடுக்குமுறைக்கு எதிரானது என் எழுத்து, சிந்தனை, நடவடிக்கைகள் என்று செயல்படுபவராக விளங்குகிறார் தமிழ்ச்செல்வன்.

‘முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்பது இலக்கிய ஆய்வு அல்லது விமர்சன எழுத்து மட்டுமல்ல, பல்வேறு படைப்பாளிகளின் காலச் சூழல், அவர்தம் எழுத்து பிரதிபலிக்கும் வர்க்கக் கண்ணோட்டம், சமூகப் பார்வை போன்றவற்றின் தடத்தையும் அடையாளப்படுத்தி இருக்கும் ஓர் அரிய பணியாகும்.  அதைச் சரியாக மதிப்பிட்டு விருது வழங்கும் சாகித்திய அகாதமியும், அதனாலேயே, தானும் பாராட்டுக்கு உரியதாகிறது!

சக படைப்பாளியைக் கொண்டாடும் பாங்கு 

1988 ஜனவரி என்று நினைவு.  இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் (தமிழ்நாடு) சங்க ஐந்தாவது மாநாட்டுக் கலை நிகழ்ச்சிகளில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி என்ற மகத்தான பாடகரை தமிழ்ச்செல்வன் தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  அவரைக் கடைசிக் காலம்வரை தற்காத்து அரவணைத்துக் கொண்டாடி வந்தவரும் அவரே.  அந்த மேடையில் நிகழ்த்தப்பட்ட ‘பத்து ரூபாய்’, ‘மாப்பிள்ளைக் கடை’ உள்ளிட்ட நாடகங்களில் தானும் சிறப்பாக நடித்திருந்தார் தமிழ்ச்செல்வன்.  எந்த மேற்பூச்சும் இன்றி பார்வையாளரைக் காந்தம் போல் ஈர்க்கும் அவரது படைப்பூக்க மொழி உள்ளத்தில் ஒட்டியது.

அடுத்தவர் எழுத்தையும் கொண்டாடும் ஓர் எழுத்தாளராக எப்போதும் இயங்குவது அவருக்கு ஒலிக்கும் சமூகத்தின் அழைப்பு தான். மிக அதிக   புத்தகங்களுக்கு முன்னுரை எழுதித் தந்தோர் வரிசையில் அநேகமாக முதலிடத்தில் இருப்பார் தமிழ்ச்செல்வன்.  யாரது வேண்டுகோளையும் எளிதில் மறுப்பதில்லை.  முழுதாக வாசிக்காது முன்னுரை எழுதுவதில்லை.  இது தமிழின் வியக்கத்தக்க அடையாளம்.

இப்போது அகாதமி விருது கிடைக்கப்பெற்று இருக்கும் அவரது விரிவான எழுத்து, ஐம்பதுக்கு மேற்பட்ட முன்னோடி எழுத்தாளர்களது சுமார் மூவாயிரம் சிறுகதைகளை இந்த ஆய்வுக்காகவே முழுக்க வாசித்துத் தான் அந்தந்த எழுத்தாளர்களைக் குறித்த கட்டுரைகளை அவர் எழுதி முடித்தது ஆகும்.  படைப்பாளியைக் குறித்தும் தேடித்தேடி வாசித்து, கேட்டு அறிந்து அப்படியான அரிய விவரங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பது தான் இந்தத் தொகுப்பின் சிறப்பம்சம்.

எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய "காட்சி மொழியின் மாட்சிக்கு விருது" கட்டுரை | சாகித்திய அகாதமி விருது: ச.தமிழ்ச்செல்வன் - www.bookday.in

நேர்த்தியான கதை சொல்லி 

காட்சி மொழியாகவே இருக்கும் தமிழ்ச்செல்வன் பேச்சு என்பதை அவரது உரையைக் கேட்கும் யாரும் சட்டென்று உணர்ந்துவிட முடியும். மு.சுயம்புலிங்கத்தின் சிறுகதை ஒன்றில் நரிக்குறவர் ஒருவர் தனக்குப் போக்கு காட்டி இங்குமங்கும் பறந்து போய்க் கொண்டே இருக்கும் குருவியை அடிக்க கவணோடு துரத்துவதை, அந்தத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் ஒரு திரைக்காட்சியைப் போல் விவரித்தார் தமிழ்ச்செல்வன்.  அவரது இந்தக் காட்சி மொழி அவரது கட்டுரைகளிலும் பளீர் என்று தெறிக்கும்.  சாகித்திய அகாதமி விருது நம் காலத்தின் நேர்த்தியான கதைசொல்லிக்கான  அங்கீகாரம்.

பாலின சமத்துவத்தை நாடகத்தில், காவியத்தில், பேச்சில் அல்ல, ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே தனது வாழ்க்கை முறையாகவே கொண்டிருப்பவராகத் திகழ்கிறார் தமிழ்ச்செல்வன்.    ஒரு முறை தாங்கள் குடியிருந்த பகுதியில் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் இவருடைய இணையரிடம் வந்து, ‘என்னது இது,  வீட்டு ஆம்பிள வாசல் பெருக்கித் தெளிச்சுக் கோலம் போட்டா எப்படி இது அடுக்கும்…’என்று கேட்கிற அளவுக்குப் போய்விட்டதாம்.  ஆனாலும், தான் வெளியூர்ப் பயணங்கள் அற்று வீட்டில் இருக்க நேரும் எல்லா நாளிலும் சமையல் தனது வேலை, வீட்டுப் பணிகள் தனது பொறுப்பு என்று எப்போதோ  இயல்பாக்கிக்கொண்டேன் என்றார் அவர்.  பல மொழிகளைக் கற்று அறிந்தவராக இருந்ததாலே தான், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று மகாகவி பாரதியால் எழுத முடிந்தது.  குடும்ப ஜனநாயகத்தைத் தான் கடைப்பிடிப்பதால் தான், தமிழ்ச்செல்வனால், ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்று எழுத முடிந்தது.

தடம் பதித்த படைப்பாளி 

தமிழ்ச் சிறுகதையின் தடங்களைப் பதிவு செய்யும் தனது எழுத்தாக்கத்தில், இடது சாரி அல்ல தான் என்றாலும் நாஞ்சில் நாடன் தான், மராத்தி விவசாயி தற்கொலை குறித்த முக்கியமான சிறுகதையை இங்கே வழங்கியவர் என்று பதிவு செய்திருப்பார் தமிழ்ச்செல்வன்.  1999 ஜூலை 23 அன்று நெல்லையில் அதிகார வர்க்கத்தின் அராஜகத்தால் தாமிரபரணி நீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர் போராட்டத்தை ஒட்டிய அன்றைய நிகழ்வை நெகிழ வைக்கும் அற்புதமான சிறுகதையாக (‘சொல்ல வருவது’} வடித்தவர் தமிழ்ச்செல்வன் தான். ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர் நடராஜனின் கல்வித் தேடல் குறித்த ‘பதிமூணில் ஒண்ணு’, தமிழ்ச் சிறுகதைகள் வரிசையில் அபாரமான ஒன்றாக இடம் பெற வேண்டியது.  ‘தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும்’ படைப்பாளி என்று தமிழக முதல்வர் தனது பாராட்டுச்  செய்தியில் குறிப்பிட்டிருப்பது எத்தனை பொருத்தமானது!

‘இடையிலாடும் ஊஞ்சல்’ என்ற தொடரில் வாராவாரம் சமூக பிரச்சனைகள் மீதான இலக்கிய பிரதிபலிப்பாக எழுதி வந்த தமிழ்ச்செல்வன், ‘400 சொற்களுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம்,  சர்க்கஸ் விளையாட்டில் ஒரு யானையை சிறிய ஸ்டூல் மீது ஏறி நிற்க வைக்கும் வேலையைப்  போன்றது’ என்று அந்தத் தொகுப்பு வெளியீட்டில் குறிப்பிட்டார். பீஷ்ம சஹானி அவர்களது புகழ் பெற்ற ‘தமஸ்’ புதினத்தை கோவிந்த் நிகலானி (பாஜக கொடுத்த இடர்ப்பாடுகளை மீறி) தொடராக தொலைக்காட்சியில் வழங்கியது பற்றிய பிரசுரம் ஒன்றில், வரலாற்றை மக்கள் மறந்துவிடுவது இயல்பு, மோசமான நிகழ்வுகள் மீண்டும் நடந்துவிடாதபடி சமூகத்தை வழிநடத்த அந்த வரலாறுகளை நினைவுபடுத்துவது அவசியம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.  தமிழ்ச்செல்வனின் கட்டுரைகள் இதமான வரலாறுகளையும், பதட்டமான வரலாறுகளையும் தக்க விதத்தில் வாசகருக்குக் கடத்திக் கொண்டே இருக்கும் எழுத்துகளாகும்.

செக்கச் சிவந்த அடையாளம் 

‘இருளும் ஒளியும்’, தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கத்தைக் குறித்த அசாத்திய வரலாற்றுத் தடமாகும். ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத்’  கட்டுரை தொகுப்பு, ஒரு தொழிற்சங்க இலக்கியம். அசாத்திய உழைப்பைச் செலுத்தி அண்மையில் அவர் வழங்கி இருக்கும் ‘திருப்பி அடித்த வரலாறு’ நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திற்கு எதிரான எண்ணற்ற போராளிகளின் உரிமை முழக்கத்தின் செக்கச் சிவந்த அடையாளமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

விழுப்புண் படாத நாள் எல்லாம் வாழ்நாள் அல்ல என்று குறளாசான் வருணிக்கும் போர் வீரனைப் போலவே, வாசிக்காத நாள் அற்று வாசிப்பின் இன்பத்தோடு வாழ்க்கையை முன்னெடுப்பவர்களில் ஒருவராக விளங்குகிறார் ச.தமிழ்ச்செல்வன்.  இளம் படைப்பாளிகள் தங்களது நூலை ஆர்வத்தோடு கொண்டு நீட்டுகையில் அதை வாசித்து அணிந்துரை அளிப்பதை இயக்கப் பணியாகவே இயல்பாக்கிக் கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன், தனது சொந்த படைப்பைக் காட்டிலும் வேறு பல படைப்பாளிகளின் எழுத்தைக் கொண்டாடுவதையே காமுற்றிருக்கும் கற்றறிந்தோராகத் திகழ்வது இயக்கத்தின் பெருமிதம்.

அறிவிப்புக்கு முன் தடுக்கப்பட்டு அதனாலேயே பண்பாட்டுத் தளத்திலும் குறுக்கிடும் ஆதிக்க சக்திகள் குறித்த
விவாதத்திற்குமான களமாக அமைந்து இப்போது தவிர்க்க முடியாமல் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ள சூழலில், சாகித்திய அகாதமியின் விருது இன்னும் கூடுதல் பரிமாணத்தோடு தமிழ்ச்செல்வனை வந்தடைகிறது, தமிழ்ச் சமூகத்தை வந்தடைகிறது.   ஒரு பெரும் கொண்டாட்டத்திற்கு உரியது.

நன்றி: தீக்கதிர்: மார்ச் 20, 2026

📚 எழுதியவர்:

எஸ்.வி.வேணுகோபாலன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *