samakaala sutrusuzhal savaalgal webseries -31 written by prof.ram manohar தொடர் 31: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்
samakaala sutrusuzhal savaalgal webseries -31 written by prof.ram manohar தொடர் 31: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 31: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

         மாநகர நீராதாரங்கள் இழப்பு! மீள இயலா

          இயற்கை இடர் பாடுகளுக்கு அழைப்பு!!!

மழைக்காலம் துவங்குகிறது! ஒவ்வொரு ஆண்டும் எப்போதும் போல் அலுவலர்களுக்கு  முன்னெச்சரிக்கைக் கூட்டம், தயார் நிலையில் தடுப்பு,மீட்பு பாதுகாப்பு பணிகள்  எல்லாம் சரியாக செல்லும் என்பது உண்மைதான்! எனினும் எப்போதோ செய்துவிட்ட தவறுகள், நகரங்களிலும், மாநகரங்களிலும் தீடிர் மழை வெள்ளம் வருவது பற்றிய வரலாற்றுத் தகவல்கள், நம் மக்களில் பெரும்பாலானோர் அறியவில்லை. வெள்ள நீர் வடிகால்களான, ஏரி, குளங்கள், ஓடை, கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் மறைந்து போய்விட்டன. திட்டமிடாத நகர மயம், மக்கள் தொகை பெருக்கம்,போன்ற காரணிகள், இந்தியாவில் கட்டிடக் காடுகள் உருவாக வாய்ப்பு அதிகம் ஆகிவிட்டது. ஆனாலும் பாரம்பரிய முறையில் நீர் தேக்கங்கள் ஆக ஏரி, அணை, குளங்கள், போன்றவை, நிலத்தடி நீர் பெருக, வெள்ள வடிகால் ஆக இருந்து வந்த நிலை நம் சமுதாயம் மறந்துபோய் விட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளது!.

நம் இந்திய நாடு, வெவ்வேறு வகையான புவி அமைப்பு, மண் வளம் பெற்ற நிலையில், எண்ணிலடங்கா, நீராதாரங்கள் கொண்டு, அவற்றின் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கருதி பராமரிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக நகரங்களில் நீர் நிலைகள் மக்களின் நேரடி வாழ்வில் பங்கு பெற்றிருந்தன என்பதை மறுக்க இயலாது. போபால், கொல்லம், டெல்லி ஆகிய நகரங்களில் ஏரிகள் முதன்மை நீர் வளம் உள்ள பகுதிகளாகும். உதய்ப்பூர் போன்ற வறண்ட, பாலை நிலங்களில், அருவி நீரமைப்புகள், நீர் பாதுகாப்புக்கு உதவி செய்தன. பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளம் வந்த போது, அசாம், கௌஹாத்தி பகுதிகளில், தீபா பீல், சோலா பீல் என்ற இரு ஈர நிலைகள், ஏரிகள் அந்த வெள்ள நீர் ஏற்று, தாங்கும் சூழல்களாய் அமைந்தன. அவை இல்லாவிட்டால் வெள்ள பாதிப்புகள் அங்கு கடுமையாக ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. இதே போல், சத்திஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் நகரில் உள்ள ஏரிகள் 1000ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்டவை.

அவை மழை நீர் சேகரிப்பு தளமாக, வெள்ள நீர் ஒழுங்கு படுத்தும்  அமைப்பாக செயல்படுகிறது. இமாலய ஈர நிலப்பகுதி, ஆசியாவில் 10 மிகப்பெரிய ஆறுகள் தோன்றுமிடமாக இருப்பது மிக மகிழ்ச்சியே!மேலும் நீர் ஆதாரங்கள், கழிவு நீர் பராமரிப்பு மையமாகவும் செயல்படுகிறது. கிழக்குக் கொல்கத்தா பகுதி நீர் நிலைகள், ஒவ்வொரு நாளும் 600 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து,20000 குடும்பங்கள் அங்கு பணிகளில் ஈடுபட்டு வருவது முக்கியம் ஆகும். குறிப்பாக நீர் உயிரின வளர்ப்பு, வேளாண்மை பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் நீர் ஆதாரங்கள் மிக முக்கியத்துவம்  கொண்டவை.

ஏனெனில் அவை, அங்கு ஒரு நுண்தட்ப வெப்ப நிலை சூழலை உருவாக்கி, நகர அமைப்புகளில் மனமகிழ் பூங்கா, நிலத்தடி நீர் மேம்பட, நீர் தரம், உயிரின வேறுபாடு சிறப்பு பெற உதவுகிறது என்றால் மிகையாகாது. இவை சிறு குளிர் தீவுகளாக, நகரின் அதிக வெப்பத் தினை குறைக்கின்றன. வட இந்தியாவில் “சாத் “எனும் விழா, தமிழ் நாட்டில், ஆடி பெருக்கு போன்ற விழாக்கள், நீர்நிலைகளுடன் தொடர்பு கொண்டு நம் பாரம்பரிய கலாசாரம் இயற்கை பாதுகாத்தல் நோக்கத்தினை கொண்டு அமைந்துள்ளதாகும்.கேரளா மாநிலத்தில், கழிமுக சுற்றுலா மூலம் ஆண்டு தோறும் 0.3 மில்லியன் பயணிகள் வருகை மற்றும் 6000 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்தியா உலகின் 2% நிலப்பகுதி பெற்று இருப்பினும் 4%அளவில் நன்னீர் ஆதாரங்கள் பெற்று விளங்குகிறது.இவற்றின் மூலம் 1126 பில்லியன் கன மீட்டர் நீர்(BCM) பயன்படுத்தி, அதில் 257.16 BCM சேமிக்க இயலும். ஆனாலும் பல பிரச்சினைகள், நகர நீர் ஆதாரங்கள் சந்திக்கின்றன. அதனால் அவற்றின் அளவு, தரம் குறைவது வருந்துதற்குரிய நிலை ஆகும்.

குறிப்பாக,அத்துமீறிய ஆக்கிரமிப்பு, திடக் கழிவு மேலாண்மை செயல்பாட்டில் அக்கறையின்மை, நீர்நிலை அழிவு, மக்கள் தொகை பெருக்கம், திட்டமிடாத நகர மயமாக்கம், கழிவு நீர் கால்வாய் அழிதல், போன்ற காரணங்கள் நீர் வள ஆதாரங்கள், அழிய, குறைய, மறைந்து போக வழிகள் ஆகும். தேசிய பசுமை தீர்ப்பாயம் 60%கழிவு நீர், நன்னீர் ஏரி, குளம், ஆறுகளில் தவறாக மாற்றிவிடப்படுகிறது. சிறு மழை பெய்தால் கூட சென்னை, ஹைதராபாத், மும்பை, சண்டிகர், போன்ற நகரங்களில் வெள்ளமாக பாதிப்புகளை உருவாக்குகிறது. ஜம்மு&காஷ்மிர் பகுதியில் உலர் ஏரியின் 70% பகுதியில் அத்துமீறி விவசாயம் மேற்கொண்டு  நீர் ஆதாரம் முக்கியத்துவம் குறைந்து விட்டது. டெல்லி மாநகரத்தில் யமுனை ஆற்றின் தொடர்புடைய குளங்கள் முற்றிலும் மறைந்து விட்டது. 1970-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நகரங்களில், ஒவ்வொரு கிலோமீட்டர் பகுதியிலும் ஆண்டு தோறும் கட்டிடங்கள் உருவாகி 25% நீர் ஆதாரங்கள் அழிந்துவிட்ட தகவலை தென் கிழக்கு ஆசிய பன்னாட்டு ஈர நில ஆய்வு நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒன்றிய நீர் வள ஆற்றல் அமைச்சகம், நம் நாடு முழுவதும் 37000 நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. இதில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தில் 15301 எண்ணிக்கையிலும், தமிழ் நாடு இரண்டாம் இடத்தில் 8366 நீர் நிலைகள் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் தனது “கிணறு காணவில்லை “என்று கூறுவதை ரசித்த நம்மில் பலரும் இதே போல் வளர்ச்சி என்ற பெயரில் பல குளங்கள், ஏரிகள் அழிக்கப்பட்டு விட்டதால் ஏற்படும் அபாயம் பற்றி அறிய இயலாது. அசாம் மாநிலம் கௌகாத்தி டிப்போர் ஏரி  குப்பை மேடாகிவிட்டது. கொல்கத்தா நகரில் இருந்த 8700 நீர் நிலைகள் தற்போது இல்லை. ஹைதராபாத் நகரில் இருந்த 2857 நீர் நிலைகளில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டன. சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட 650 நீர் ஆதாரங்கள், சமீபத்தில் 30 ஆக கணக்கெடுப்பு செய்யப்பட்டு இருப்பது வேதனைக்குரிய ஒன்று.

கர்நாடகா மாநிலத் தலைநகரம் பெங்களூரு  இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநகரம் ஆகும்.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இங்கு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மோசமானது.1998 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட மழை அளவுகளில் செப்டம்பர் 2022ல் மட்டும் மிக அதிகமாக 131.6மில்லி மீட்டர் என குறிக்கப்படுள்ள செய்தி  அதிர்ச்சி ஆகும். ஏப்ரல் முதல் நவம்பர் வரை தொடர்ந்து 8 மாதங்கள் 700மி. மீ -1200மி. மீ மழை நகரத்தில் பொழிந்துள்ளது. அதனால் பெங்களூரு நகரம் குறிப்பாக வட்ட சாலை மிக அதிகமாக வெள்ளத்தில் மூழ்கி பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தியது.800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஊர் 225 ச. கி. மீ மட்டும் முக்கிய பகுதியில் உள்ளது. ஆனால் 575. ச. கி. மீ இணைக்கப்பட்ட புதிய நகர பகுதிகள் ஆகும். அழகு பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெங்களூரு, விரிஷ்பவதி, கொரமங்கல, ஹெப்பால் போன்ற இடங்களில் நீர் வெளியேறும் பகுதியாக இருந்து வந்தது. ஆனால் பல்வேறு மென்பொருள் தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதி, உருவாகிய நிலையில் புவி பரப்பு மாறிவிட்டது.

பெங்களூரு இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் (INDIAN INSTITUTE OF SCIENCE )வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி 1973-2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்த அழகு பெங்களூரு நகரம் 1028% பெரிதாக ஆகிவிட்டது. மேலும் 88% தாவர அடர்வு குறைந்து கட்டிட பகுதி 94%(2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி )அதிகம் ஆகிய நிலை மிகவும் பிரச்சனை ஆகும்.1800 ஆம் ஆண்டுகளில் இங்கு காணப்பட்ட 1452 நீர் ஆதாரங்கள்,1940 ஆம் ஆண்டு 260 ஆக எண்ணிக்கை குறைந்து  தற்போது 65 ஏரிகள் மட்டும் உள்ளது. மக்கள் தொகை, திட்டமிடாத நகர மயமாக்கம், வெள்ள நீர் ஏற்கும் பல நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து  அரசு, தனியார் கட்டிடங்கள், பொது அலுவலகம், வணிக வளாகம், குடியிருப்பு போன்றவற்றை நெடுங்காலமாகவே நம் நாட்டில் வளர்ச்சி என்ற நிலையில் நாம் இயற்கை அழிவு செய்து வருவதை நாம் அனைவரும் உணரவில்லை. இந்தியா முழுவதும் 2030 ஆம் ஆண்டில் 80% பல்வேறு நகரங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதால், உள்ளூர் நீர் நிலைகள் பாதுகாப்பு பற்றி நாம் சிந்தித்து திட்டமிடாவிட்டால், பெரும் வெள்ள, இயற்கை இடர் பாடுகளை  நம் மக்கள் சந்தித்து பாதிப்புகள் அடையபோவது தவிர்க்க இயலாது.

பாரம்பரிய நீர் நிலைகள் அழிக்கப்பட்டு  அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மட்டும் தான் மனித வாழ்வின் மேம்பாடு என்று தவறாக எண்ணிய நிலையில் இந்த பிரச்சனை நம் சம கால சுற்றுச்சூழல் சவால் ஆகும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *