அற்புத அலையாத்தி காடுகள்!
அபாய மீட்பு இயற்கை அமைப்புகள்!!
இயற்கை சீற்றம், புயல், ஆபத்துகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ள கடற்கரை பகுதியில் அலையாத்தி என்ற சதுப்பு நிலகாடுகள் ஒரு பாதுகாப்பு அரண் ஆக விளங்குகின்றது. சாதாரணமாக வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல காடுகளாக, உப்பங்கழி (ஆற்றின் நீர் கடலில் சேரும் முகத்துவாரம் ) பகுதியில் உருவாகின்றன.
பல்வேறு வகை நீர் வாழ் உயிரினங்களின் உற்பத்தி களம் என்று அழைக்கப்படும் இத்தகைய இயற்கை காடுகள் உலகில் கடந்த 50 ஆண்டுகளில் 50% குறைந்து விட்டதாக சமீபத்திய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலையாத்தி தாவரங்கள் “சுவாச வேர்கள்”
தன்மை கொண்டவை. இதில் உள்ள நியுமட்டோ போர்கள் என்ற நுண் துளை நீரில் இருந்து தாவரங்கள் சுவாசிக்க உதவி செய்கின்றன. அலையாத்தி தாவரங்கள் உப்பு தாங்கும் தன்மை கொண்டுள்ளன. மரங்களின் மேல் பகுதியிலிருந்து விதைகள் நீரில் விழுந்து வெவ்வேறு இடங்களுக்கு பரவி செல்கின்றன.சாறுள்ள தண்டு, நீண்ட வேர்கள் கொண்ட அரிய தாவரங்கள் உலகெங்கிலும் 80தாவர சிற்றினங்கள் கொண்டுள்ளது. இந்தியாவில் 3.4 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் 59 சிற்றினங்கள் கொண்டு அமைந்துள்ள நிலை நம் நாட்டில் பலரும் அறியாத தகவல் ஆகும்.
இந்த அரிய இயற்கை சூழலில் , வேறுபாட்ட வகை மீன்கள், நண்டு, மெல்லுடலிகள் போன்றவை இனப்பெருக்கம் செய்கின்றன. மரங்களின் கிளை, இடை வேர்கள் பாசி, கடற் பஞ்சு, சிப்பி, இறால்கள், மீன்கள் பாதுகாப்பு பகுதியாக அமைந்துள்ள சூழல் ஆகும். ஆலீவ் ரிட்லி ஆமை, சதுப்பு நில முதலை, வலசை நீர் பறவைகள் வாழிடம் ஆக அலையாத்தி காடுகள் உள்ளன. நம் நாட்டில் மேற்கு வங்காளத்தில், கங்கை, பிரம் மப்புத்திரா ஆற்று முகத்துவாரத்தில் சுந்தர வனம் ஒரிசாவில் மகா நதி, ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள், தமிழ் நாட்டில் உப்பனாறு, கொள்ளிடம், பாமினி, கோறையாறு ஆகிய ஆறுகள் கலக்குமிடங்கள் மற்றும் குஜராத், மும்பை கடற்கரை பகுதிகளில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன.
அரிய அலையாத்தி காடுகள், சமீப கால கடற்கரை வளர்ச்சி திட்டங்கள், கடல் அரிப்பு, அதிக வெள்ளநீர், நீர் உயிரின செயற்கை முறை வளர்ப்பு, மரம் வெட்டுதல், அதிக தொழிற்சாலை நீர் மாசு, முகத்துவார பகுதியில் நீர் வரத்து குறைவு, அலைகள் மாற்றம்,அந்நிய தாவர சிற்றின ஆக்கிரமிப்பு, குறிப்பாக சீமை கருவேலம், ஆகாய தாமரை, போன்ற தாவரங்கள்ஆகிய காரணிகளால் அழிந்து வருகின்றன. மக்கள் தொகை பெருக்கத்தால், சுற்றுலா வளர்ச்சி, வணிக ரீதியாக இக்காடுகளின் முக்கியத்துவம் பற்றி பொதுமக்கள் அறியவில்லை. 1911 ஆம் ஆண்டு காலத்தில், தமிழ் நாட்டில், முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்தி காடுகளின் மரங்கள் அவ்வப்பொழுது அரசின் அனுமதி பெற்று வெட்டப்பட்டன. பின்னர் அறிவியல் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், முழுமையாக வனத்துறை இந்த திட்டத்தை நிறுத்தியது. எனினும்,சட்ட பூர்வ மற்ற செயல்கள்மூலம் காடுகள் ஆக்கிரமிப்பு, மரம் வெட்டுதல், கால்நடை மேய்ச்சல் ஆகிய காரணங்கள்தான் இக்காடுகள் அழிவை நோக்கி செல்ல ஒரு வழியாக உள்ளது.
தமிழ் நாட்டில் மன்னார் வளைகுடா பகுதியில் மட்டுமே அவிசீனியா, புருகிரா, (2), செரியோப்ஸ், எக்ஸாகரியா, லூமினேட்ஸா, பெம்பிலீஸ்,ரைசொபோரா, (2)என ஒன்பது தாவர சிற்றினங்கள் காணப்படுகின்றன, என்பது நம் மாநில இயற்கை வளத்தின் சிறப்பு.மொத்தம் நம் மாநிலத்தில் 17 வகை அலையாத்தி தாவரங்கள் பிச்சாவரம், கோடிக்கரை, வேதாரண்யம்,சேது பாவா சத்திரம், மன்னார் வளை குடா அடர்ந்த அளவில் உள்ளன. இங்கு 11வகை பாலூட்டிகள்,178 சிற்றின பறவைகள்,125 வகைகள்,15 இறால் வகைகள் 39 ,சிற்றின நண்டு ஆகியவை ஆயிரக் கணக்கில் உள்ளன. இந்த சூழலில் உள்ள உள்ளூர் மக்கள் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதாரம் அலையாத்தி காடுகள் சார்ந்துள்ளதுஎனில் மிகையில்லை. எனினும் இங்கும் அதிக உப்பு அடர்வு,, குறைவான சத்து பொருட்கள், குறைவான நுண்னுயிர்சேர்க்கை, மண் படிவு காரணங்கள் அலையாத்தி காடுகள் பாதிக்க காரணம் ஆகும்.
அலையாத்தி காடுகள் 6749ச. கி. மீ அளவிற்கு, உலகத்தில் 4 வது பெரியதாக உள்ளது.. இதில் 2097 ச. கி. மீ பகுதி மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. சுந்தர வன காடுகள் பல்வேறு அரிய விலங்குகள், தாவரங்கள் கொண்டுள்ளது. இவற்றை நம்பி பல மக்கள் அங்கு கிராமங்களில் வசிக்கின்றனர்.2018 ஆம் ஆண்டு முதல் கோஸாபா தீவுகளில், புலிகளின் தாக்குதல் மூலம் கணவர் இழந்த 20 மகளிர் சுண்டரி என்ற அலையாத்தி தாவரங்கள் 5000 கன்றுகள் நாற்றங் கால் ஏற்படுத்தி தினமும் 3 கிலோமீட்டர் நடந்து சென்று பராமரிப்பு செய்வது ஆச்சரியம்! இயற்கை பாதுகாப்பில் தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்ட நிர்வாகம்,வனத்துறை, ஒம்கார், கவின்மிகு தஞ்சை இயக்கம், ரோட்டரி சங்கம், விவசாயிகள் சங்கம், உள்ளூர் மக்கள் உடன் இணைந்து 2022 ஆம் ஆண்டில் 16000 அலையாத்தி மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.
அரிய வகை இயற்கை அமைப்பு அலையாத்தி காடுகள் பாதுகாக்க ஐக்கிய நாடுகளின் 27வது (நவம்பர் 2022)பருவ கால மாநாடு, எகிப்து நாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது!அதன்படி நம் இந்தியாவில் ஒன்றிய அரசு MISHTI என்ற திட்டம் (MANGROVE INITIATIVES for SHORELINE HABITAT &TANGIBLE )சமீபத்தில் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் அலையாத்தி காடுகள் பாதுகாக்க ஒரு வழி உருவாகியுள்ளது. பொருளாதார நிலை மேம்பட, மீனவர்கள் வாழ்வாதாரம், கடற்கரை கரையோர மக்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு சூழல் காரணிகள் அடங்கிய அலையாத்தி காடுகள், மிக முக்கிய வளி மண்டல கார்பன்
உறிஞ்சு பகுதியாகும். எனவே இக்காடுகள் பற்றிய உண்மைகள் அறிந்து, வளர்ச்சி என்ற நிலையில் அழிக்காமல், பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியம் ஆகும். அரசு துறையும் இவற்றை பாதுகாப்பு மேற்கொள்ள முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்வது இன்றைய அத்தியாவசிய தேவை என்பதை புரிந்துகொண்டு செயல்படுவோம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.