மனு தர்மத்தை விமர்சிக்கும் சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி… தமிழில்: டி.எஸ்.சதாசிவம் | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

மனு தர்மத்தை விமர்சிக்கும் சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி… தமிழில்: டி.எஸ்.சதாசிவம் | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்

கதைச் சுருக்கம்….

துர்வாசபுரம் என்னும் ஊரில் ஒரு பார்ப்பன அக்ரஹாரம். இங்கு வாழ்பவர்கள் மாத்வ பிராமணர்கள் (ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றல்ல வேறுவேறு‌ என்னும் த்வைதக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாத்வர்கள்).

இவ்வூரில் எதிரெதிர் மனப்பாங்குடன் இருவர்.

ஒருவர்… பிரேணேஸாசாரியார்..

காசிக்குச் சென்று வேதங்களை ஐயமின்றி கற்றுத் தேர்ந்து சிரோன்மணி பட்டம் பெற்றவர். ஊரில் அனைத்து பார்ப்பனர்களும் மதிக்கும் மனிதர். வேத புரானங்களைப் பற்றி மக்களுக்கு எளிதாக விளக்குபவர். கற்பு நெறிதவறாதவர்.

மற்றொருவர் நாரணப்பா…

இவரும் மாத்வ பிராமணரே. ஆனால் பிராமணிய ஆசாரங்களை‌ கைவிட்டவர். கட்டிய மனைவியைப் பிரிந்து சந்தரி என்னும் ஒடுக்கப்பட்ட குலத்தைச் சேர்ந்தவரோடு திருமணம் செய்யாமலேயே அக்ரஹாரத்தில் சேர்ந்து வாழ்கிறார். முஸ்லீம்களை தன் நண்பர்களாகக் கொண்ட நாரணப்பா அவர்களுடன் சேர்ந்து அக்ரஹாரத்தில் வைத்து மாமிசம் உண்கிறார்கள், மது அருந்துகிறார். எல்லோரும் தெய்வ குத்தம் என்று நினைக்கும் கோயில் குளத்திலுள்ள மீனைப் பிடித்து உண்கிறார்.

இவ்வாறு பிராணேஸாசாரியார் ஒரு துருவமாக இருக்க எதிர்துருவமாக நாரணப்பா இருக்கிறார். நாரணப்பாவை நல்வழிப்படுத்துவதாக அவரின் தாய்க்கு சத்தியம் செய்துதந்த பிராணேஸசாரியார் நாரணப்பாவை திருத்தும் முயற்சிகளெல்லாம் வீணாக முடிகின்றது. எதிராக பிராணேஸசாரியார் தன் வழிக்கே வந்து ஆக வேண்டும் என சவால் விடுகிறார் நாரணப்பா. அக்ரஹாரத்தார் நாரணப்பாவை சாதி விலக்கம் செய்ய முயலும்போது நாரணப்பா தான் இசுலாமிய மதத்திற்கு மாறி அக்ரஹாரத்தில் வசிப்பேன் என்றதும் பார்ப்பனர்கள் ஏதும் செய்ய இயலாது விட்டுவிடுகின்றனர்.

எதிர்பாராத நாரணப்பாவின் மரணம்…

ஒருமுறைவெளியூருக்குச் சென்று திரும்பும் நாரணப்பாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு கூடவே வயிற்றுப்புறம் கட்டி ஏற்பட்டு திடீரென இறந்துவிடுகிறார். இதனை சந்தரி முதலில் பிராணேஸாசாரியாரிடம் சொல்ல, அவர் தெரு முழுக்க சொல்கிறார். அப்போதிலிருந்து அத்தெருவில் யாரும் சாப்பிடவில்லை‌.

பிளேக் நோய் அறியாத துர்வாசபுரம்…

கர்நாடக நகரப் பகுதியில் எலி மூலம் பரவும் பிளேக் நோயால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அங்கு செல்லும் நாரணப்பா பிளேக் தொற்றுக்கு ஆளாகி முதல் பலியாகிறார். துர்வாசபுர எலிகள் அக்ரஹாரத்திலும், அருகிலுள்ள புலையர் குடிசைகளிலும் சென்று திடீரென மல்லாந்து விழுந்து இறந்து போகின்றன. அதை கொத்திப்போக கழுகுகள் ஊரை வட்டமிடுகின்றன. ஆனால் இதன் காரணம் பிளேக் என்று அறியாமல் உள்ளனர் பார்ப்பனர்கள்.

அடக்கம் செய்யப்படாமல் அழுகும் நாரணப்பாவின் உடலும் பரவும் பிளேக் நோயும்…

பிராமணியத்தை மதிக்காத நாரணப்பாவின் உடலை எந்த முறையில் அடக்கம் செய்வது என்பதில் பார்ப்பனர்களிடையே விவாதம் எழுகிறது.

நாரணப்பா பிராமணியத்தை கைவிட்டிருந்தாலும், பிராமணியம் நாரணப்பாவை கைவிடவில்லை. நாரணப்பா சாதி விலக்கமும் செய்யப்படவில்லை.

எல்லோரும் பிராணேஸாசாரியாரின் முடிவை எதிர்பார்த்திருக்க, அவரால் முடிவெடுக்க முடியாத நிலையில் இரண்டு நாளாக பிணம் அழுகத் தொடங்குகிறது.

பிணத்தை அழுக வைத்துக்கொண்டே, பார்ப்பனர்கள்,

* கைமரத்தில் உள்ள தனது மேல் அமைப்பை கேட்கிறார்கள். அங்கும் தெளிவில்லாமல்,
*அதற்கு மேல் உள்ள அமைப்பில் கேட்கிறார்கள்.

இதற்கிடையே நோய் தாக்கி மேலும் சில பார்ப்பனர்கள் இறந்து போகிறார்கள்.

நாரணப்பாவின் பிணம் அடக்கம் செய்யப்பட்டதாக?

பிளேக் நோய் தொற்று அவ்வூரில் ஆடிய கோரத்தாண்டவம் என்ன?

அறிந்து கொள்ள அவசியம் வாசியுங்களேன் சம்ஸ்காரா.

புத்தகத்தின் பின்னட்டை இவ்வாறு சொல்கிறது…

சம்ஸ்காரா | Buy Tamil & English Books Online | CommonFolks

இது ஒரு குறியீட்டு நாவல். இந்திய மரபார்ந்த சமூகத்தின் வீழ்ச்சியைப் பற்றி இந்நாவல் குறியீடாகக் பேசுகிறது. இதில் ஆதிக்க சாதியைச் சார்ந்த நாரணப்பா ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சந்தரியுடன் உறவு கொள்கிறான். இது சனாதன தர்மத்தின் படி சரியா என்ற கேள்வியை எழுப்பி, இந்நாவல் வர்ணசிரமத்தின் விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. தான் கைக்கொண்டிருக்கும் சனாதன தர்மத்தின் மேல் சிரத்தையையும் (ego) அதன் மீதே தான் கொள்ள நேரும் ஐயத்தையும் முன்வைத்துத் தனக்குள் குமுறும் பிராணேஸாசாரியார் என்கிற கதாபாத்திரத்தின் மனவோட்டமே இந்த நாவலின் சாரம். அதுவே இந்த நாவல் பேசும் அரசியல். சனாதன தர்மம் என்னும் அதிகாரத்தின் உரையாடலைக் கட்டவிழ்க்கும் முயற்சியில் இந்த நாவல் அடைந்திருக்கும் வெற்றியே இந்த நாவலை உலக இலக்கிய வரிசைக்கு உயர்த்துகிறது.

100% உண்மை இது..

சம்ஸ்காரா
கன்னட மூலம்: யு.ஆர்.அனந்தமூர்த்தி
தமிழில்: டி.எஸ்.சதாசிவம்.
அடையாளம் வெளியீடு
பக்கங்கள்.156
விலை160/-

நன்றி!

இவண்..

இராமமூர்த்தி நாகராஜன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *