Sanganatham Speech by Comrade N. Sankaraiah at government employees seminar Collected By Sa. Veeramani



(தேச ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவுகுறித்து தோழர் என். சங்கரய்யா, 1991 ஏப்ரல் 20 அன்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலக் கருத்தரங்கில் ஆற்றிய சங்கநாதம்.)

தொகுப்பு: ச.வீரமணி

தோழர்களே, இன்றைய தினம் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இந்தக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் சார்பில் பெரிதும் பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

அரசு ஊழியர் சங்கம் போன்ற சங்கங்கள், தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக, தங்களுடைய சம்பளம், அகவிலைப்படி, போனஸ் போன்ற பிரச்சனைகளுக்காக பாடுபடுவதை மட்டுமே தங்களுடைய தொழிலாகக் கொண்டிருக்க வேண்டுமேயல்லாது, அதைவிட்டுவிட்டு மற்ற விஷயங்களிலே தலையிடுவது தேவையில்லை என்று ஒருசாரார் சொல்வார்கள்.

அவ்வாறு சொல்லக்கூடியவர்கள் யார்? உழைக்கக்கூடிய மக்களின் பிரதிநிதிகள் நாட்டினுடைய பொதுவான சமுதாய வாழ்விலே அதனுடைய முன்னேற்றத்திற்காகப் பாடுபடக் கூடாது என்று கருதக்கூடியவர்கள்தாம் அப்படிக் கூறுவார்கள். ஆனால், இந்தியாவினுடைய உழைப்பாளி மக்களின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இன்று தமிழ்நாட்டில் நாட்டினுடைய ஒற்றுமை, மதச்சார்பின்மை, அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவு ஆகிய தலைப்புகளின்கீழ் இந்தக் கருத்தரங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. ஏறத்தாழ ஆயிரம் பேர் பிரதிநிதிகளாக இந்தக் கருத்தரங்கத்திற்கு வந்திருக்கிறீர்கள். இங்கே கூறப்படும் முக்கியமான செய்திகளைக் கிரகித்துக்கொண்டு, உங்களின்மூலம் லட்சக்கணக்கான மக்கள் மத்தியிலே இந்த நல்ல ஜனநாயக முற்போக்கான கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருப்பதற்காக, நான் உங்களை மீண்டும் ஒருமுறைப் பாராட்டுவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவினுடைய விடுதலைப் போராட்டத்திலே பங்கெடுத்துக்கொண்ட ஓர் ஊழியன் என்ற முறையில், ஒருசில வார்த்தைகள் உங்கள்முன் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பது மிகவும் சிரமமான போராட்டமாக இருந்தது என்பதை, புதிய தலைமுறையினர் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1940ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டு காலம் பிரிட்டிஷாருடைய வெஞ்சிறைகளிலே வாடிய நம்முடைய தேசிய இயக்கத் தலைவர்கள், நாடு விடுதலை அடையுமா, நாங்கள் விடுதலை பெறுவோமா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமா என்பன போன்ற ஆழ்ந்த சந்தேகங்கள், சோகங்கள் மன வருத்தங்கள் எங்களுக்கு ஏற்பட்டதுண்டு.

1920ஆம் ஆண்டு தோன்றிய விடுதலை இயக்கமானது, வெகுஜன இயக்கமாக மாறுவதற்கு முன்பு, பற்பல சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டி வந்தது. அன்று பாரதி பாடிய முப்பது கோடி ஜனங்கள் (ஆனால் அந்த ஜனங்கள் இன்றைக்கு 80 கோடியாக உயர்ந்திருக்கிறது) மத்தியில் எத்தனை மதங்கள், எத்தனை எத்தனை ஜாதிகள், எத்தனை மொழிகள் இருக்கின்றனவோ, அவையனைத்தும் அன்றும் இருந்தன. எனவேதான், இந்த மக்களை எல்லாம் ஒன்றுபடுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒருமுனைப்படுத்தி பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு அகற்றுவதென்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. அந்தப் போராட்டத்திலே பல மொழி பேசக்கூடிய மக்களை ஒன்றிணைத்தோம். பல மதத்தைச் சார்ந்த மக்களை ஒன்றிணைத்தோம். அதனுடைய இறுதிக்கட்டம்தான் 1946இல் பம்பாயிலே இந்தியாவினுடைய கடற்படையைச் சேர்ந்த மாலுமிகள் வேலைநிறுத்தம் செய்து தங்களுடைய ஆயுதங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினுடைய போர்க்கப்பல்களுக்கு எதிராக அவர்கள் திருப்பிய நேரத்தில் பம்பாயிலிருந்த தொழிலாளி வர்க்கம் அன்றைக்கு மட்டும் 300 பேர்களைப் பலிகொடுத்து, அவர்களுக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி போராடியது.



இதே திருச்சியிலும், மதுரையிலும், சென்னையிலும், கோவையிலும், தமிழ்நாட்டினுடைய எல்லா இடங்களிலும் மாலுமிகளுடைய போராட்டத்தை ஆதரித்து நடைபெற்ற தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்களும், மிகப் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களும் இன்றைக்கும் என் கண்முன் வந்து கொண்டிருக்கின்றன.

அதைப்போலவே இந்திய தேசிய விடுதலைப்படையைச் சேர்ந்த தலைவர்களைப் பிரிட்டிஷ் அரசாங்கம் தில்லி செங்கோட்டையில் வைத்து, அவர்கள் தேசத் துரோகம் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டி, விசாரணை செய்தபோது, நாட்டிலே ஏற்பட்ட மகத்தான எழுச்சியானது அன்றைக்கு என்ன வடிவத்திலே இருந்தது என்று நினைத்துப் பார்க்கின்றேன்.

வெள்ளைக்கார ராணுவத்தினுடைய லாரிகள் பூராவும் கல்கத்தா நகரத்திலே நிறுத்தப்பட்டு, வெள்ளைக்கார சிப்பாய்கள் வெளியேற்றப்பட்டு, லாரிகள் கொழுத்தப்பட்டன.

இவற்றிலிருந்து நாட்டு மக்களுடைய நாடித்துடிப்பு எப்படியிருந்தது என்பதை ஏகாதிபத்தியம் தெரிந்துகொண்டது. இனிமேல் இந்திய நாட்டை தாங்கள் ஆள முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதன் விளைவாகத்தான், அவர்கள் சமரசத்திற்கு வந்தார்கள்.

அப்படிப் போராடிப் பெற்ற இந்தியாவினுடைய சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்து, வலுப்படுத்த வேண்டிய கடமை, நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. தொழிலாளியாக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், மத்தியதர ஊழியராக இருந்தாலும், மாநில அரசு ஊழியராக இருந்தாலும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்தை நாம் ஏற்கனவே அடைந்துவிட்டோம். ஆகவே, அது தானாகவே நீடித்து நிலைத்து நிற்கும் என்ற முறையில் நாம் கற்பனை செய்துகொள்ளக் கூடாது.

இன்றைக்கு நீங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுடைய சூழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள், மூன்றாம் உலக நாடுகள், புதியதாக விடுதலை அடைந்த உலக நாடுகள் மத்தியிலே அவர்கள் செய்துவரக்கூடிய சூழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள். சரித்திரத்தினுடைய சக்கரங்களைப் பின்னுக்கு யாரும் இழுத்துக்கொண்டு போக முடியாது என்று நாம் சாதாரணமாக சொல்வதுண்டு. ஆனால், அது இறுதியாக உண்மையாகலாம். இடையிலே அப்படி இழுத்துக்கொண்டு போவதற்கான முயற்சிகளும் நடைபெற்றன.

ஈராக் நாட்டில் குர்த் இன மக்கள் – தேசிய சிறுபான்மை மக்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலால் கலகம் செய்தனர். அந்தக் கலகத்தை அடக்குவதற்கு, நிலைமைகளைச் சமாளிப்பதற்கு, ஈராக் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால், அதையே காரணம் காட்டி, ஈராக் நாட்டுக்குள்ளே அமெரிக்கா, ஐக்கிய நாட்டு சபையினுடைய உத்தரவு எதுவும் இல்லாமல், தன்னுடைய துருப்புகளைக் கொண்டுபோய் இறக்குகிறது என்றால், அவர்கள் காஷ்மீரிலும், பஞ்சாபிலும் உள்ள இந்தத் தீவிரவாதிகளை எதிர்த்து இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது, அதன் காரணமாக காஷ்மீரைவிட்டும், பஞ்சாபை விட்டும் இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு அகதிகளாக செல்வார்களானால், அப்போது இதே அமெரிக்க ஏகாதிபத்தியம், அந்த அகதிகளைப் பாதுகாப்பதற்காக இந்தியாவிற்குள்ளே இராணுவ முகாம்களை அமைப்பேன் என்று சொல்வதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு காலத்திலே உலகத்தினுடைய பெரும் வல்லரசுகளாக பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்த்துக்கீசிய ஏகாதிபத்தியங்கள் விளங்கின. ஆனால், அவைகள் எல்லாம் தங்களுடைய காலனிகளை விட்டுவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற எமன் உலகத்தையே தன்னுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர பெரு முயற்சி செய்து வருவதை நாம் பார்க்க வேண்டும். ஆகவேதான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுடைய தாக்குதலிலிருந்து இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்பது என்பது இன்றைக்கு நமது தலைசிறந்த கடமையாகும்.

அந்தப் பின்னணியில் இந்தியாவில் நடைபெறக்கூடிய பிளவுவாத இயக்கத்தினை நாம் பார்க்க வேண்டும் என்று உங்களுடைய மேலான கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன்.

இப்போது எடுத்துக்கொள்வோம். இந்தியாவிலே பஞ்சாபிலும், காஷ்மீரிலும் மதத்தின் அடிப்படையில் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையை பிரிவினைவாதிகள் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், மதம் என்பது ஒரு தேசிய இனம் அல்ல. ஒன்றுபட்ட பாகிஸ்தான் ஏற்பட்டபோது, அதிலே பங்களா தேஷ் என்ற அந்தப் பகுதியும் முஸ்லீம் மக்கள் என்ற முறையிலே அன்று நாடு பிரிக்கப்பட்ட சமயத்தில் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது. ஆனால், என்ன ஏற்பட்டது? அங்கே பஞ்சாபைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள், பங்களா தேஷிலே ஆதிக்கம் செலுத்தி, பங்களா தேஷ் மொழியான வங்காள மொழியையும், வங்காள மொழி பேசக்கூடிய பங்களா தேஷ் மக்களையும் கடுமையாக ஒடுக்கியதன் விளைவாக, பாகிஸ்தான் என்பது மதத்தின் அடிப்படையிலே ஒரே நாடு என்று சொல்லப்பட்டாலும், ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே, மதம் என்பது ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சக்தி அல்ல, அதற்குப் பதிலாக தேசிய இனம் என்பது, மொழி என்பது அங்கே வரும்போது, அதில் பெரும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்பதன் விளைவாகத்தான் பங்களா தேஷில் விடுதலை இயக்கம் ஆரம்பித்து அது வெற்றிகரமாக முடிந்து பங்களா தேஷ் என்ற தனி நாடாகிவிட்டது. ஆகவே, மதம் என்பது நாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாக இருக்க முடியாது. அதே போன்று, இன்றைக்கு பாகிஸ்தானிலே ஒரு மாகாணம் சிந்து மாகாணம், இந்த சிந்து மாகாணத்திலே இருக்கக்கூடிய சிந்தியர்கள் தொன்றுதொட்டு நாகரிகம் படைத்தவர்கள். அவர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குரல்கள் எழும்புவதை நீங்கள் அறிவீர்கள். அதேபோல் பலுஜிஸ்தான் என்ற எல்லைப்புற மாகாணத்து நிலைமையும் இருக்கிறது.

ஈரானும், ஈராக்கும் ஒரே மதத்தைச் சேர்ந்த நாடுகள்தாம். ஆனாலும் எட்டு ஆண்டு காலமாக யுத்தம் நடைபெற்றதை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மதம் என்பது இன்று எல்லா பிரச்சினைகளையும் தூக்கி முழுங்கிவிட்டு, ஒன்றுபடுத்தக்கூடிய சக்தி என்பது உண்மையல்ல என்பதற்காகத்தான் இந்த உதாரணங்களையெல்லாம் நான் குறிப்பிட்டேன்.



ஆகவேதான் குறிப்பிடுகிறோம். பஞ்சாபிலே உள்ள மக்களை நாம் பஞ்சாபியர்கள் என்றுதான் பார்க்கிறோம். பஞ்சாபியர்கள் என்று பார்க்கிறபோது, அதிலே மதத்தால் சீக்கியர்கள் உண்டு, மதத்தால் இந்துக்கள் உண்டு, மதத்தால் கிறிஸ்துவர்கள் உண்டு, மற்ற மதங்களைப் பின்பற்றுகிறவர்களும் உண்டு. ஆனால் அவர்களுடைய மொழி பஞ்சாப் மொழி. அவர்களுடைய தேசிய இனம், பஞ்சாபி தேசிய இனம். சீக்கிய பிளவுவாதிகள் இந்த அடிப்படையிலே பார்க்காமல், சீக்கியர்கள் என்பது ஒரு தனி இனம் என்று கூறுகிறார்கள். எந்த ஒரு அரசியல் விஞ்ஞானமும் இவ்வாறு சொல்லவில்லை. உலகத்தினுடைய கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய இனமே தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையில் அல்ல.

இன்றைக்கு நீங்கள் பார்க்கலாம், சீக்கிய மதத்திலே இந்துக்களைத் திருமணம் செய்துகொள்வதும், இந்துக்கள் சீக்கியர்களைத் திருமணம் செய்துகொள்வதும் சர்வ சாதாரணம். ஒரே குடும்பத்திலே ஒருவர் இந்துவாகவும், ஒருவர் சீக்கியராகவும் இருப்பார். ஆனால், அவர்கள் மொழி பஞ்சாப் மொழி. அவ்வாறு ஒன்றாக வாழக் கூடியவர்கள் மத்தியிலே இன்றையதினம் சீக்கிய மதவெறியும், இந்து மத வெறியும் சேர்ந்து பிளவை ஏற்படுத்துகின்றன. சீக்கிய மதவெறியர்கள், பஞ்சாபியர்கள் என்ற தேசிய இனத்தை விட்டுவிட்டு சீக்கியர்கள் என்று மதத்தின் அடிப்படையிலே ஒரு நாடு வேண்டும், அதுதான் காலிஸ்தான் என்று கூறி பிரிவினை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு இந்து மத வெறியர்கள் எவ்வாறு துணை புரிகிறார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஒரு காலத்திலே சென்சஸ் கணக்கு எடுக்கப்பட்டபோது, பஞ்சாபிலே உள்ள இந்துக்கள் மொழியால் பஞ்சாபியர்கள், தேசிய இனத்தால் பஞ்சாபியர்கள். ஆனால், இந்த இந்து மதவெறியர்கள் என்ன செய்கிறார்கள், தெரியுமா? “நீ பஞ்சாபி மொழி பேசக்கூடியவன் என்று சொன்னால் அது சீக்கியர்களுக்கு உதவியாகப் போய்விடும். ஆகவே, நீ வேண்டுமென்றே உன்னுடைய தாய்மொழி பஞ்சாபியாக இருந்தாலும், இந்தி என்று சொல்” என்று சொல்லச் சொன்னார்கள்.

அனைத்துவிதமான சீக்கிய பிளவுவாதிகளையும் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து நீங்கள் இந்த காலிஸ்தான் கோரிக்கையைக் கைவிடுங்கள். பஞ்சாப் மக்கள் மத்தியில் காலிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த சமயத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஏகாதிபத்தியம் செயல்படுவதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறு மக்களை மதத்தின் அடிப்படையிலே பிளப்பது என்பது ஒருவகையான பிளவுவாதம். மற்றொரு வகையான பிளவுவாதம் அசாமில் கிளப்பப்படுகிறது.

அசாமிய தேசிய இனம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அசாமிய வளர்ச்சி குன்றிவிட்டது, ஆகவே அது இந்தியாவை விட்டு தனி நாடாகப் பிரிந்தாக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவில் உள்ள முற்போக்கு சக்திகள் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து ஆழமான விவாதங்கள் புரிந்தபோது நாம் ஒரு முடிவுக்கு வந்தோம். தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை தேவையில்லை என்று முடிவுக்கு வந்தோம்.

இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து மக்களும் ஒரு பலமான மத்திய சர்க்கார், பலமான மாநில சர்க்கார்கள் மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று கூறினோம். இன்றைக்கும்கூட தேசிய இனப் பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் லெனினை மேற்கோள் காட்டி, “சோவியத் யூனியனிலே எல்லா மாநிலங்களுக்கும் குடியரசுகளுக்கும் பிரிந்து போகக்கூடிய உரிமை லெனினால் பிரகடனப்படுத்தப்படவில்லையா? இன்றைக்குக் குடியரசுகளுக்குப் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது,” என்று கூறுகிறார்கள்.

அவர்கள் ரஷ்ய சரித்திரத்தை இந்தியாவிற்கு மாற்ற முயற்சிக்கிறார்கள். ரஷ்யாவிலே ரஷ்ய தேசிய இனம் என்ற ஒரு பெரும் வல்லரசு இனம் பல நூற்றாண்டுகளாக ரஷ்ய இனமல்லாத மற்ற இனங்களை ஆதிக்கம் செலுத்தி, அவர்களுடைய மொழிகளை அடக்கி அவர்களுக்குத் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தாமல் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காரணத்தினால், சோவியத் யூனியனில் தொழிலாளர் வர்க்க இயக்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சிறுபான்மை இன மக்கள் தொழிலாளி வர்க்க இயக்கத்திடம் நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும், இதேபோல் ரஷ்யப் பேரரசனுடைய இனம்தான் ஆட்சி நடத்துமா? எங்களைப் போன்ற சிறுசிறு தேசிய இனங்களுக்கு அங்கே சமத்துவம் கிடைக்குமா? என்று கேட்டார்கள். அப்போதுதான் தோழர் லெனின் சொன்னார்: “முதலாளி வர்க்கமும், நிலப்பிரபுக்களும் பங்கு கொண்ட ஜார் மன்னனின் ரஷ்யா என்பது மற்ற தேசிய இனங்களை ஒடுக்குகிற ஒரு சிறைக்கூடமாக திகழ்ந்தது. ஆனால் தொழிலாளர் வர்க்க ஆட்சி சோவியத் யூனியனிலே மலரும்போது ரஷ்யர்கள் அல்லாத மற்ற தேசிய இனங்களுக்கும் சமத்துவ உரிமை வழங்கப்படும் தோழர்களே” என்று கூறினார்.



“இன்றைக்கு தாஜிக்ஸ்தானிலுள்ள தொழிலாளர்களே, ஜார்ஜியனிலுள்ள தொழிலாளர்களே, அஜர்பைஜானிலே உள்ள தொழிலாளர்களே, நீங்கள் உறுதியாக நம்புங்கள், சோவியத் புரட்சி உங்களுடைய தேசிய இனங்களுக்கு தேசிய நிர்ணய உரிமை வழங்கும். உங்களுக்கு அந்த பயம் இருக்கிற காரணத்தினால் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து போகக்கூடிய அளவுக்கு தேசிய நிர்ணய உரிமை வழங்கப்படும். ஆனால் அந்த உரிமை வழங்கப்படுமே தவிர ரஷ்யாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் பிரிந்துபோகாமல் ஒன்றாகத்தான் வாழும்,” என்று கூறினார்.

ஆனால் இந்தியாவின் நிலைமை என்ன? இந்தியாவிலே 300 வருஷமாக ஆட்சி நடத்தியது எந்த ஒரு தனிப்பட்ட தேசிய இனத்தினுடைய நிலப்பிரபுக்களோ முதலாளிகளோ அல்ல. மாறாக, வெளிநாட்டு ஏகாதிபத்தியம்தான் இந்தியாவிலே ஆட்சி நடத்தியது. ஆகவே இந்தியாவிலே சகல தேசிய இனங்களும் யாரால் ஒடுக்கப்பட்டது? ரஷ்யப் பேரரசு போன்று ஒரு பேரரசால் ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தால் ஒடுக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் அனைத்து தேசிய இனங்களுமே அடக்கி ஆளப்பட்டன. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுமே அடக்கி ஆளப்பட்டன. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒன்றிணைந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிந்த பிறகு இந்தியாவிற்குள்ளேயே ஒன்றையொன்று அடக்கி ஆளக்கூடிய அளவுக்கு வரலாறு இல்லாத காரணத்தினால் புதிதாக விடுதலை அடைந்த நாட்டிலே அனைத்து தேசிய இனங்களும் ஒன்றிணைந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஆகவே, இந்தியாவிலே தேசிய இனங்கள் பிரிந்துபோகக்கூடிய உரிமை என்பது வரலாற்றுரீதியாக தேவைப்படவில்லை என்று நாம் முடிவெடுத்தோம். ஆகவேதான் அசாமிலே உள்ள பிளவுவாதிகளிடம் இந்தக் கோரிக்கையைக் கைவிடுங்கள் என்று கூறினோம்.

1962ஆம் ஆண்டிற்கு முன்னால் தமிழ்நாட்டிலும் கோஷம் இருந்தது, உங்களுக்குத் தெரியும். ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்ற கோஷம் இருந்தது. அப்போது ஒன்று சொல்லப்பட்டது, ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று சொல்லப்பட்டது. இது மக்களை எளிதாக ஈர்க்கக்கூடிய கோஷம்தான். அப்போது நாம் திராவிட இயக்கத்தினரிடம் வாதிட்டோம். வடக்கே போய் பாருங்கள் என்று சொன்னோம். தில்லிக்குப் பக்கத்திலே இருக்கிற லட்சக்கணக்கான குடிசைகளைப் போய் பாருங்கள் என்று சொன்னோம். பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களைப் போய்ப் பாருங்கள் என்று சொன்னோம். திராவிட இயக்கத்தினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பங்கு கொண்டு அந்த இடங்களையெல்லாம் சென்று பார்த்தபோது, அவை தமிழ்நாட்டைவிட பின்தங்கிய மாநிலங்களாக இருப்பதைப் பார்த்தார்கள். வாழ்க்கை அனுபவம் அவர்களுக்குக் கூறியது என்னவென்றால், சரித்திரரீதியாக இந்தியாவிலே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினுடைய ஆட்சியிலே, தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மூன்று என்பதைப் புரிந்து கொண்டார்கள். மராட்டியம், வங்காளம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள்தான் தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள். இதற்குப் பிரத்தியேகமான காரணம், இவை மூன்றும் துறைமுகப் பட்டினங்களாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குள் நுழைய ஆரம்பித்தபோது, பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய துறைமுகப்பட்டினங்கள் மூலமாகத்தான் நுழைந்தார்கள். ஆகவே, அவர்களுக்கு வேண்டிய தொழிற்சாலைகளையும் அந்த இடங்களிலே வளர்க்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் அங்கே ஏற்பட்டது. இன்றைக்கு இந்தியாவிலே தொழில் வளர்ச்சி ஏற்பட்ட மாநிலங்களில் முதல் மூன்று மாநிலங்களாக மராட்டியமும், வங்காளமும், தமிழ்நாடும்தான் விளங்குகிறது என்று சொன்னால் அது சரித்திரரீதியாக ஏற்பட்ட வளர்ச்சி.

தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியில் முன்னேற்றம் என்பது பல காரணங்களினால் பின்னுக்குப் போய் இருக்கிறது என்றாலும் கூட, இன்றைக்கும் கூட, இந்தியாவில் முதல் மூன்று தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதை நாம் திராவிட இயக்கத்தினரிடம் சொன்னோம். அவர்களும் அதைப் புரிந்துகொண்டு 1962ஆம் ஆண்டில், “திராவிட நாடு” என்ற கோஷத்தைக் கைவிட்டார்கள். கைவிட்டபிறகுதான், ‘மாநில சுய ஆட்சி’ என்ற கோஷம் அவர்களுக்கும் ஏற்புடையதாக அமைந்ததைப் பார்க்கிறோம். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மக்களுக்கும் இதையே நாம் கூற விரும்புகிறோம்.

இன்றைக்கு உலக சூழ்நிலையில் இந்தியா போன்ற ஒரு நாட்டிலிருந்து பிரிந்து சென்று சின்னஞ்சிறிய தேசிய இனங்களாக எந்த ஒரு வளர்ச்சியையும் ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே, நீங்கள் இந்தக் கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியாவிலே பலம் பொருந்திய மத்திய சர்க்காரையும், பலம் பொருந்திய மாநில சர்க்கார்களையும் ஏற்படுத்தக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்கிட அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் சேர்ந்து போராட முன்வாருங்கள் என்று நாம் கூறுகிறோம்.

இதுபோன்ற பிரிவினை இயக்கங்கள் வளர்ந்ததற்குக் காரணங்கள் என்ன? மத்தியிலே ஆட்சியிலே இருந்தவர்களுடைய பல குறுகிய எண்ணங்கள்தான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். இந்தியாவினுடைய பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுடைய ஆட்சியானது, பல மாநிலங்களிடையே வளர்ச்சியைக் கவனிக்காமல் புறக்கணித்தது. அது மட்டுமல்ல, அந்த மாநிலங்களில் தங்களுடைய கட்சி, அரசியல் ரீதியில் தோற்றுப்போனால் பஞ்சாபிலே அகாலிதளத்திடம் தோற்றுப் போனால், காஷ்மீரிலே பரூக் அப்துல்லாவிடம் தோற்றுப் போனால், அஸ்ஸாமிலே அஸ்ஸாம் கண பரிஷத்திடம் தோற்றுப் போனால், தமிழகத்திலே திராவிட இயக்கங்களிடம் தோற்றுப் போனால், மேற்கு வங்கத்திலே இடதுசாரி சக்திகளிடம் தோற்றுப்போனால், கேரளத்திலே இடதுசாரி-ஜனநாயக சக்திகளிடம் தோற்றுப்போனால், மத்தியிலுள்ள ஆட்சி என்ன செய்யும் தெரியுமா? உடனே மாற்றாந்தாய் மனப்பான்மையை இந்த மாநில அரசுகளிடம் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும். காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளைத் தேர்ந்தெடுத்த மாநிலங்களைப் புறக்கணிக்கும். அங்கெல்லாம் தொழில் வளர்ச்சியை அனுமதிப்பதில்லை. மத்திய சர்க்கார் சார்பிலே மாநிலங்களில் செய்ய வேண்டிய முதலீட்டின் தொகைகளைக் குறைக்கும். இதுபோன்ற காரியங்களை செய்த காரணத்தினால்தான் இத்தகைய பிரிவினைவாத எண்ணங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவைப்பற்றிக் கூற வேண்டும். இந்த 356ஆவது பிரிவை ஏறத்தாழ நூறு தடவைப் பயன்படுத்தி மாநிலங்களில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைத்ததனால் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சி, கோபம், இவை அனைத்தும் சேர்ந்துதான் இந்தப் பிரிவினைவாத எண்ணங்களைத் தோற்றுவித்தன என்பதை நாம் ஆராய்ச்சி செய்து, தெளிவாகப் பார்க்க முடியும்.

எனவேதான், இந்தியாவிலுள்ள அரசமைப்புச்சட்டத்திலே, மாநில சர்க்கார்களுக்குப் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும், பல்வேறு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்று நாம் கூறுகிறோம். அவ்வாறு கூறுகிறபோதுதான், இந்த அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவையும் நீக்க வேண்டும் என்று கூறுகிறோம்.



தமிழ்நாட்டில் நடந்த விஷயம் உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டிலே சொல்லப்படுவது என்ன? இலங்கை விடுதலைப் புலிகளினால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டு, அதை இந்த திமுக அரசாங்கம் சரியாக சமாளிக்கவில்லை என்று கூறி ‘டிஸ்மிஸ்’ செய்தார்கள்.

ஒரு மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும்போது, மாநிலத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய முழு சக்தியைப் பயன்படுத்தி, போட்டியிட்டு, அந்தப் போராட்டத்திலே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த ஒரு அரசாங்கத்தை, எந்த விளக்கமும் கேட்காமல் கலைத்தார்கள்.

தமிழ்நாட்டிலே அமைதியான சூழ்நிலை இல்லை என்றார்கள். நான்கு மாவட்டங்கள் விடுதலைப்புலிகளின் கைகளுக்குப் போய்விட்டன என்றார்கள். ஆனால் கட்சி கலைக்கப்பட்ட மறுநாளே தமிழ்நாடு தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. எவ்வளவு பெரிய பொய்யை சொல்லி ஆட்சியைக் கலைத்தார்கள்?

இவ்வாறு தமிழ்நாட்டிலே நான்கு தடவை அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்திருக்கிறார்கள். அவ்வாறு கலைக்கும்போது தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்குக் கோபம் வருமா, வராதா? இதேபோல் அஸ்ஸாமில் ஆட்சியைக் கலைத்தார்கள். அஸ்ஸாம் மக்களுக்குக் கோபம் வருமா, வராதா?

இவ்வாறு தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை மத்திய சர்க்கார்கள் கலைத்ததன் விளைவாக எதிர்மறையான போக்குகள் ஏற்பட்டன. பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின.

அரசமைப்புச்சட்டத்தில் மத்திய சர்க்கார் பட்டியல்கள் எவை எவை என்றும், மாநில சர்க்கார்களுடைய பட்டியல்கள் எவை எவை என்றும், இவை இரண்டுக்கும் பொதுவான பட்டியல்கள் (concurrent list) எவை எவை என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் பொதுவான பட்டியல்களில் உள்ள அனைத்து அதிகாரங்களும் மாநில சர்க்கார்களுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

அவ்வாறு செய்யப்படுமானால், மத்திய சர்க்கார் தனது முதலாவது பட்டியல்களின்கீழ் உள்ள விஷயங்களை மட்டும் கவனிக்கும். மாநில சர்க்கார்கள் மற்ற விஷயங்களைக் கவனிக்கும் என்ற நிலைமை ஏற்படும். அவ்வாறு நிலைமைகள் மாறும்போதுதான் மாநில சுய ஆட்சி நிலைமையைப் பலப்படுத்த முடியும், பாதுகாக்க முடியும். அப்படிப் பாதுகாக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டால் எந்தவொரு மாநிலத்திலும், இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டுமென்ற உணர்ச்சியோ, பிரிந்து செல்ல வேண்டிய அவசியமோ ஏற்படாது.

இந்தியாவில் உள்ள அரசமைப்புச்சட்டத்தில், மாநிலங்களுக்கு இடையிலான ஒரு கவுன்சிலை (Inter-state council) ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று இருந்தது. இதன் நோக்கம் என்னவென்றால், அதன் மூலம் மாநில சர்க்கார்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் இடையிலே ஒரு தாவா ஏற்படுமானால் அதை இந்த கவுன்சிலின் மூலம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் கடந்த 42 ஆண்டு காலமாக மத்திய சர்க்கார் அதைப் பயன்படுத்தவே இல்லை. ஏன் பயன்படுத்தவில்லை? அவ்வாறு பயன்படுத்தினால், மாநிலங்களுடன் சரிநிகர் சமமாக உட்கார்ந்து பேசினால், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டியது வரும். பிரச்சனைகளை விவாதிக்க வேண்டி வரும். இப்போதுள்ள அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதற்கு எதேச்சாதிகாரமாக நடந்து வந்த கட்சி தயாராக இல்லை. மேற்படி கவுன்சிலைக் கொண்டுவந்த பெருமை, தேசிய முன்னணி ஆட்சிக்குத்தான் உண்டு. மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை ஏற்படுத்தி அது இன்றைக்கு அமலில் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களே இதை வெகுவாகப் பாராட்டினார்கள்.

தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தபிறகுதான், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் சட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல் அமைச்சர்களே, இவ்வளவு மதிப்பு இதற்கு முன்பு எங்களுக்கு இருந்தது கிடையாது என்று சொன்னார்கள். அதைப் போலவே தேசிய ஒருமைப்பாடு கமிட்டி, தேசிய முன்னணி அரசாங்கம் வந்த பிறகு, புது மெருகுடன் விளங்கியது.

ஆகவேதான் நாம் கூறுகிறோம், இன்றைக்கு காஷ்மீரிலும் பஞ்சாப்பிலும் காலிஸ்தான் என்றோ, சுதந்திர காஷ்மீர் என்றோ சொல்வது இந்திய மக்களுக்கு விரோதமான கோரிக்கையாகும். அஸ்ஸாம் தீவிரவாதிகளுடைய கோரிக்கையும் நாட்டுக்கு விரோதமான கோரிக்கையாகும். இவை ஏகாதிபத்தியவாதிகள் கோரிக்கை. அதை எதிர்த்து இந்தியா பூராவும் உள்ள மக்களைத் திரட்டுவோம். அஸ்ஸாம் மாநில பிரிவினைவாதிகளுக்கு நாம் சொல்வோம், “அஸ்ஸாம் மாநிலத்தினுடைய தொழில் வளர்ச்சி, இந்திய மக்களின் துணையோடுதான், இந்திய மக்களின் ஆதரவோடுதான் பலத்தோடுதான் இந்திய மக்களின் சகோதர உணர்வோடுதான் வளர்த்தெடுக்க முடியுமே தவிர, தனிமையில் அல்ல,” என்பதைச் சொல்வோம். இப்படிப்பட்ட முறையில் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால், நாம் பிரிவினைவாதிகளைச் சமாளிக்க முடியும், பிரிவினைவாதத்திற்கு ஆளானவர்களையும் வென்றெடுக்க முடியும்.



அரசமைப்புச்சட்டத்தின் 356ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று முற்போக்குக் கட்சிகள் எல்லாம் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியும், அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்யக்கூடிய கட்சிகளும் சொல்லவில்லை. அவர்களால் சொல்லவும் முடியாது. எஜமானர்களிடம் அடிமைகள் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. இந்தியாவிலே மாநிலங்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் இடையிலே உறவுகள் வலுவடைய வேண்டும் என்றால், மாநில சர்க்கார்களில் ஜனநாயக முடிவு, மத்திய சர்க்காரால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றப்பட மாட்டாது, எந்தக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்கப்படமாட்டாது, மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய சர்க்கார் அவை எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு அனுமதிக்கப்படும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும். ஆகவேதான் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிற, அரசியல் சக்திகளைப் பலப்படுத்துவதன் மூலம் நாட்டிலே மாநில சுய ஆட்சியை நாம் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், மத்திய சர்க்காருக்கும் மாநில சர்க்கார்களுக்கும் இடையிலே சுமுகமான உறவுகள் ஏற்படுவதைப் பாதுகாப்போம், பிரிவினை ஏற்படாமல் பாதுகாப்போம், இவை அனைத்தும் 356ஆவது பிரிவை நீக்குவதில் அடங்கியிருக்கிறது. எனவே, இதை நாட்டினுடைய கோஷமாக, 80 கோடி மக்களின் கோஷமாக உருவாக்க வேண்டும்.

மறுபக்கத்திலே ஒன்றை நீங்கள் பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினர். அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு எதற்காக ஏற்பட்டது? முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்படும்போது, காஷ்மீரிலே உள்ள பிரத்யேகமான கலாச்சார ரீதியான காரியங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற அடிப்படையில் சில குறிப்பிட்ட சட்டங்கள் இந்திய நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்படக்கூடிய சமயத்தில், அவை காஷ்மீர் மாநில சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டால்தான் அந்த மாநிலத்திலே அவை அமலாகும் என்பதுதான் அரசமைப்புச்சட்டட்ததின் 370ஆவது பிரிவாகும். அதாவது அந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு அவர்களுடைய கலாச்சாரத்திற்கு முழுமையாகப் பாதுகாப்பு அளிப்பதற்கு நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஏற்றுக்கொண்ட, நாடு ஏற்றுக்கொண்ட ஒரு பிரிவு 370ஆவது பிரிவாகும். இந்தப் பிரிவை நீக்க வேண்டுமென்று பாரதிய ஜனதாக் கட்சியினர் சொல்கிறார்கள். அதன்மூலம் இந்திய ஒற்றுமை பலப்படும் என்று கூறுகிறார்கள்.

தங்களுக்கு விரோதமாக எந்தவிதக் கலாச்சாரமும் தங்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு பறிக்கப்பட்டால், காஷ்மீர் மக்கள் அதனால் மகிழ்ச்சி அடைவார்களா? பிரிவினை இயக்கம் அங்கே பலமடையுமா? நாட்டில் ஒற்றுமை பலமடையுமா? என்பதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆகவேதான் நாம் கூறுகிறோம், அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்படக்கூடாது என்று கூறுகிறோம்.

காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இணைந்திருப்பதற்கு நாம் ஏற்றுக்கொண்டுள்ள அந்தப் பிரிவைப் பறிப்பது என்பது, அவர்கள் பெற்றுவந்த உரிமைகள் மீது கை வைப்பதாகும், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பதாகும் என்று நாம் கூறுகிறோம்.

அடுத்து, பாபர் மசூதி பிரச்சனை பற்றி எனக்கு முன்னால் பேசிய தலைவர்கள் எல்லாம் கூறினார்கள். நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மதங்கள் இருந்து வருகின்றன. செயின்ட் தாமஸ் மவுண்ட் என்கிற பறங்கிமலையை உருவாக்கியவர், ஏசுவினுடைய நேரிடையான ஒரு சீடனே என்று சொல்வார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே கத்தோலிக்கப் பாதிரியார்களாக வந்து மதங்களைப் பிரச்சாரம் செய்தார்கள். அதுபோலவே இஸ்லாம் மதமும். அதுபோலவே பௌத்த மதமும். இந்து மதங்கள் இன்றைக்கு தத்துவங்களாக மாறி இருக்கின்றன. அவற்றை மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இந்துத்துவம் பற்றி சொல்ல விரும்புகிறவர்கள், இதை மறந்துவிடுகிறார்கள். உதாரணமாக, தமிழ்நாட்டிலே இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தினால் இஸ்லாமியர்கள். ஆனால் மொழியால் தமிழர்கள். தமிழ்நாட்டில் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தினால் கிறிஸ்துவர்கள். ஆனால் மொழியால் தமிழர்கள். தேசிய இனத்தால் தமிழர்கள். இவர்களையெல்லாம் இந்து மத வெறியர்கள் அந்நியர்கள் என்று கூறுகிறார்கள். தமிழ்மொழியைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது. ஆந்திராவிலுள்ள இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் தெலுங்கு மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆனால் இந்துமத வெறியர்களோ அவர்களை அந்நியர்கள் என்கிறார்கள். எனவேதான் இவர்களை நாம் எதிர்க்கிறோம்.

அயோத்தி நிலைமை என்ன? அங்கே பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அருகருகே இருக்கின்றன. மேலும் பத்து கோவில்களை அங்கே கட்டுவதற்கு யாராவது ஆட்சேபிக்கிறார்களா? இல்லை. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஒரு ராமர் கோவிலைக் கட்டித் தருகிறோம் என்று சொன்னார். ஆனால் பிரச்சனை அதுவல்ல. இந்து மத வெறியர்களின் நோக்கம், பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்பதாகும். எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு மத நிறுவனத்தை இடித்துவிட்டு, அந்த இடத்திலே இன்னொரு மத நிறுவனத்தைக் கட்டுவோம் என்பதைப் பகுத்தறிவாளர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது? மனிதாபிமானம் உள்ளவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. சகோதர உணர்வுள்ளவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லெண்ணம் கொண்டவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுதான் பிரச்சனை. ஆகவே, அத்வானி போன்றவர்கள் அங்கே உருவாக்கிய கலகங்கள் எல்லாம் நாட்டிற்கு எவ்வளவு விரோதமானவை என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

சில நீதிபதிகளைப் போட்டு பாபர் மசூதியைத் தோண்டிப் பார்க்கலாம் என்று ராஜீவ் காந்தி கூறுகிறார். எவ்வளவு தவறான யோசனை? அதன் விளைவுகளைறக் கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தாரா? இப்படித் தோண்ட ஆரம்பித்தால் அப்புறம் 15 ஆயிரம் இடங்களில் தோண்ட வேண்டியிருக்குமே. சரி, தோண்டிப் பார்த்து அங்கு ஒன்றுமே இல்லை என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? எவ்வளவு தவறான யோசனைகளை ராஜீவ் காந்தி சொல்லி இருக்கிறார், பாருங்கள்.

நாகூர் தர்கா இருக்கிறது. வேளாங்கண்ணியில் கிறிஸ்துவ ஆலயம் இருக்கிறது. எங்களுடைய தாத்தா வீட்டில் குடியிருந்த முப்பாட்டன் எழுதி வைத்த ஏட்டிலே, அந்த இடத்திலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே, விநாயகர் கோவில் இருந்தது என்று எழுதி வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தோண்டிப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

பாபர் மசூதி பிரச்சனையில் சங்கராச்சாரியார் யோசனையைக் கேட்போம் என்று ஒருவன் சொன்னான். “சங்கராச்சாரியார் ஒரு சைவர். இது விஷ்ணு கோவில். எனவே அவருக்கு இதில் சம்பந்தம் இல்லை,” என்று சொல்லி விட்டனர். இந்துத்துவம் அடிபட்டுப்போயிற்று.



அப்புறம் இந்த ‘விஷ்ணு’விலேயே தென்கலை, வடகலை என்ற பிரச்சனை வரும். பிரிட்டிஷ் கோர்ட், “என்னடா இது ஒரு நாமம், ‘யு’ மாதிரி இருக்கிறது. இன்னொன்று ‘ஒய்’ மாதிரித இருக்கிறது, இதற்குப் போய் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்,” என்று ஆச்சரியப்பட்டது.

கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது? பெரிய சண்டை. இந்து மதத்திற்குள்ளேயே எத்தனைப் பிரிவுகள்?

நம்மைப் பொறுத்தவரை இந்திய அரசமைப்புச்சட்டத்திலே இந்திய மக்கள் அனைவரும் அவரவர் மனச்சாட்சிப்படி அவரவர் இஷ்டப்பட்ட மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் பாதுகாப்போம். நம் உயிரைக் கொடுத்துப் பாதுகாப்போம். ஆனால் ஒரு மதத்தைப் பின்பற்றக்கூடியவர்கள் மற்ற மதத்தைப் பின்பற்றக்கூடிய மக்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது. அனைத்து மத்தினரும் அமைதியான முறையில் தங்களுடைய மதக் காரியங்களை நடத்துவதற்கு நாம் உத்தரவாதமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நீண்டதொரு விவாதம் நடத்தி ஒரு தெளிவான முடிவு எடுத்திருக்கிறார்கள். “1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 இரவு முடிந்து 15ஆம் தேதி ஆரம்பித்த நள்ளிரவில், எந்தக் கோவில் எங்கே இருந்ததோ, எந்த சர்ச் எங்கே இருந்ததோ, எந்த மசூதி எங்கே இருந்ததோ, எந்தப் பிள்ளையார் கோவில் எங்கே இருந்ததோ, அது அது அப்படி அப்படியே இருக்கும். அதை யார் மாற்றுவதற்கும் உரிமை இல்லை என்று சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்திலே நிறைவேற்றுவாதன் மூலம் எந்த ஒரு சர்ச்சைக்கும் இடமில்லாமல் செய்துவிடுவோம்,” என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.

இதிலும் ஒரு தவறை ராஜீவ் காந்தி செய்தார். அவர் பாபர் மசூதியை மனதிலே கொண்டு, “1947 வேண்டாம் 1951 ஜனவரி 26ஆம் தேதி என்று வைத்துக் கொள்வோம்” என்றார். காரணம் என்ன? 1949ஆம் ஆண்டில்தான் ராமருடைய சிலைகள் பாபர் மசூதியிலே கொண்டுபோய் வைக்கப்பட்டது. அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இவ்வாறு ஆண்டினை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார். நாம் தெளிவாகச் சொல்லிவிட்டோம். இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் எந்த எந்த கோவில், மசூதி, எப்படி எப்படி இருந்ததோ, அந்த அந்த கோவில், மசூதி அப்படி அப்படியே இருக்க வேண்டுமென்று தெளிவாகச் சொல்லிவிட்டேம். இவ்வாறு செய்தால் பிரச்சனை முடிந்துவிடும்.

தொழிலாளி வர்க்கத்தினுடைய ஒரு பகுதியான அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தோழர்களே, உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம், தொழிலாளர்கள் உணவுக்காகப் போராடுவதோடு மட்டும் மனிதன் வாழ்வதில்லை என்று சொல்வார்கள். மிக முற்போக்கான முறையில் ஒரு மாபெரும் லட்சியத்தைத் தங்களுடைய பதாகையில் பொறித்துக்கொண்டு இந்தக் கருத்தரங்கத்தை நடத்தும் தோழர்களே, இந்தக் கருத்தரங்கில் சொல்லப்படும் கருத்துக்களை நீங்கள் லட்சோபலட்சம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கருத்துக்களை அவர்களிடத்திலே விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்ன என்ன வழிகள் உண்டோ அந்த வழிகளில் எல்லாம் இந்தக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக எந்தவித ஸ்தாபன அமைப்பும் இல்லாத முறைசாராத் தொழிலாளர்கள், லட்சக்கணக்கான பேர் (unorganised) இருக்கின்றனர். அவர்களுக்கு எந்தவிதப்வ பாதுகாப்பும் கிடையாது. அதேபோல் கிராமப்பகுதிகளில் வசிக்கும் ஏழை எளியவர்கள், அவர்கள் மத்தியிலே உள்ள இயக்கங்களோடும் நீங்கள் பணியாற்ற வேண்டும். அவற்றைத் தங்களுடைய சகோதர இயக்கங்களாகக் கருத வேண்டும். அவர்கள் மத்தியிலே இந்த நல்ல கருத்துக்களை, எல்லாம் பரப்ப வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

தோழர்களே, விஞ்ஞானத்தைப் பரப்புவதில் நமக்கு ஒரு பொறுப்புண்டு. விஞ்ஞானக் கருத்துக்களைப் பரப்பாமல், மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து மக்களை மீட்க முடியாது. சிலர் சொல்வதுபோல், வர்க்கப் போராட்டத்தின் மூலமாக, மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்க முடியும் என்பது பூரணமாக உண்மை அல்ல. வர்க்கப் போராட்டம் ஒரு பக்கம் நடக்க வேண்டும், பொருளாதாரக் கோரிக்கைகளுக்கானப் போராட்டம் ஒரு பக்கம் நடக்க வேண்டும். அரசியல் லட்சியத்திற்கான போராட்டம் ஒரு பக்கம் நடக்க வேண்டும். அதேபோல் சித்தாந்தத் துறையிலேயும் போராட்டம் ஒரு பக்கம் நடக்க வேண்டும்.

உலகம் எப்படித் தோன்றியது? பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? மனிதன் எப்படித் தோன்றினான்? சமுதாயம் எப்படி உருவாயிற்று? என்பனவற்றை விஞ்ஞான அடிப்படையில் லட்சோபலட்சம் மக்களிடம் பரப்புவதன் மூலமாகத்தான் மூடப் பழக்க வழக்கங்களை ஆதாரமாகக்ச கொண்டு வியாபாரம் செய்யக்கூடிய பெரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சித்தாந்தங்களை முறியடிக்க முடியும்.

திருச்சி மாநகரம், தமிழகத்திலே கேந்திரமான நகரமாகும். தமிழ்நாட்டின் நடுநாயகமாக விளங்கக்கூடிய நகரமாகும். இங்கே அரசு ஊழியர் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் ஆயிரம் பேரைக் கொண்ட ஒரு கருத்தரங்கத்தினை நாட்டின் ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும், அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை நீக்குவதற்காகவும் மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். வரக்கூடிய காலங்களில் இக்கருத்தரங்கத்தில் நீங்கள் பெற்றிட்ட கருத்துக்களை, தமிழகம் பூராவும் மக்கள் மத்தியிலே கொண்டுசென்று பணியாற்றி, பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

(தொகுப்பு: ச.வீரமணி)



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *