Sarugagi Pogum Pina Manithargal ShortStory by Kumaraguru. சருகாகி போகும் பிண மனிதர்கள்! சிறுகதை - குமரகுரு

சருகாகி போகும் பிண மனிதர்கள்! சிறுகதை – குமரகுரு




நாளை நாளை என்று, எல்லாவற்றையும் நாளை செய்து கொள்ளலாம் என்றே நினைத்து கொண்டு வாழ முற்படுபவனின் முன்- இன்று பூக்க காத்திருந்த மொட்டு காற்றிலாடி கொண்டிருந்தது. அவனின் மூளைக்குள்ளிருந்து வரும் கட்டளையெல்லாம் நாளை செய்ய வேண்டியதைப் பற்றியதாகவே இருந்ததில் எந்த தவறும் இல்லை? ஆனால், அவன் எதையும் இன்று செய்வதில்லை என்பதுதான் குறை.

தலைகளற்ற மனிதர்கள் உலாவும் வீதியின் நடுவில் கிடந்த தலைகளிலிருந்த மூளைக்கு எதை எப்படி , செய்வதென்று தெரிவதில்லை. மூளை கட்டளையிட உடலின் பாகங்கள் அதை செய்வதெனவே இப்போதுவரை நிகழ்ந்தபடியிருப்பதால் தலையற்ற உடல்கள் கட்டளைக்கு ஏங்கி தள்ளாடியபடியிருந்தன.

அவனுக்குத் தலையிருக்கிறதா என்றால்- இருப்பது தலை மட்டும்தான். அதனுள் இருந்து கட்டளைகளிடும் மூளையை அவன் “நாளைப் பார்த்து கொள்ளலாம்” என்று சொல்லும்படி பழக்கி வைத்திருந்தான்.

இன்னொரு வகையான மனிதர்கள்-அவர்கள்தான் இவ்வுலகில் ஏராளம்- அவர்களிடம் உடல் உண்டு ஆனால், இன்னொருவனின் மூளையின் கட்டளைக்குப் பழகியவர்கள். அவர்களின் மூளைக்குள் இருப்பது இன்னொருவனின் மூளையின் ஜெராக்ஸ். அவர்கள் எப்போதும் சொந்தமாக சிந்திக்க முடியாதபடிக்கு பழக்கிவிட கற்றவனின் அத்தனை கட்டளைகளுக்கும் அடிபணியும் ஆற்றல் படைத்த மழுங்கிய மூளையை தலைக்குள் திணித்து வைத்துத் திரிபவர்களை நீங்கள் எப்போதும் சந்தித்து கொண்டே இருப்பீர்கள்?

பானங்களின் மயக்கத்தில் மூளையை இழந்தவர்களுள் இவனும் ஒருவன். அவன் இன்று செய்யும் இப்போது செய்யும் ஒரே வேலை “போதைக்குள் நுழைந்து திரும்பாமலிருப்பதற்கான வழியைக் கண்டடைதல்”. அந்த மயக்கத்தில் இருப்பவனுக்கு எப்போதும் எதுவுமே முக்கியமில்லை. அவன் நீர் பாய்ச்ச வேண்டிய செடிகள் வாடினாலும், அவனை நம்பியே இருந்த பெண் மக்கள் உதிர்ந்தாலும், அவன் கொட்டகையில் கட்ட வேண்டிய பசு தவிட்டுக்காக கதறினாலும்- அவன் இன்று இப்போது எப்போதும் இப்படியேத்தான் இருப்பான்.

தள்ளாடியபடி நடப்பது அவன்தானா என்றால், அவனில்லை. அவனுடைய உடலை வழிநடத்த முடியாமல் குழம்பி நிற்கும் மூளை எப்படியாவது அவனை நேராக நடத்த வேண்டுமென்று தன் கையிலிருக்கும் “தோல்பாவை பொம்மையின் கயிறுகளை” இறுகப் பிடித்திழுத்து நிறுத்தவே முனைகிறது. ஆனால், உடலால் மூளையின் கட்டளைப்படியும் மூளையால் உடலைக் கட்டுப்படுத்த முடியாமலும், வண்டியோட்டியில்லாத ‘கூண்டு வண்டியாக’ குலுங்கி கொண்டே செல்கிறான்.

அவன் உதடுகளிலிருந்து வெளிவரும் குழறிய வார்த்தைகளுக்கும் கூட யாரிடமும் அர்த்தமில்லை. அவன் நாளை எப்படி எங்கே எழுந்திருப்பானோ, அங்கேயிருந்து மீண்டும் அவன் கால்கள் பானத்தை நோக்கியே செல்லும்.

அவனைப் பெற்றாளொரு பெண் பார்த்து அவனுக்கு மணம் முடிக்க நினைத்தாள். எப்போதும் மிதந்தபடியிருப்பவனை எப்படி? எந்த பெண்? மணமுடிப்பாள்? அவன் விழாத தெரு முக்கில்லை. அவனைத் தெரியாத கண்கள் அவ்வூரிலேயே இல்லை. அப்படியிருக்க ஊருக்குள் யார் அவனைத் திரும்பி பார்ப்பார்? அவனின் நாளைக்குள் எப்போதும் அவனே இருப்பதில்லை.

அவனின் நண்பர்கள் அவனின் அழுகையை ரசிப்பதில்லை. அவன் அவனை நினைத்தேப் பல நாட்களாக அழுது கொண்டிருப்பதைக் கண்டுஅறுவறுப்புற்றவர்கள், மெல்ல மெல்ல அவனை விட்டு விலகிட, ஒரு கட்டத்தில் குடிப்பதற்கென கடன் வாங்கி கடன் வாங்கி கை நடுங்க கை நடுங்க நடந்து கடன்காரன்களைக் கண்டு மறைந்து வாழவும் துவங்கினான்.

அவனுக்கென ஞானம் இல்லை. அவனுக்கெனத் திறமை இல்லை. அவனுக்கென சொத்தில்லை. அவனுக்கென இருந்ததெல்லாம் அவன் தாயின் பரிவு மட்டுமே. பெற்றவளெப்போதும் பிள்ளையைத் தாங்குதல்தானே மரபு.

பெருங்கடல் ஸ்தம்பித்து நின்றதைப் போலவொரு குடிகாரனின் உலகம் போதைக்குள் நின்றுவிடுகிறது. அலைகள் திரும்ப திரும்ப அடிப்பதால் என்னவாகும்? அலையில் கால் நனைத்தல் சுகமென்று கடற்கரையிலேயேத் தங்கி எப்போதும் கடலில் கால் நனைத்துக் கொண்டேயிருக்க முடியாதல்லவா?

கடலின் அலைகளைவிட காலத்தின் அலைப் பெரிது!! சக்தி வாய்ந்தது!! காலம் அலையாக வந்து மனிதர்களைக் கொத்தாக வயதாளிகளாக்கியும் வயதாளியாக்காமலும் விழுங்கி விடுகிறது. குழந்தையாகப் பிறந்து பால்யத்தில் நுழைந்து வாலிபத்தை வீணடித்தே நடுத்தர வயதில் தடுமாறி வயோதிகத்தில் வீழ்ந்து போகும் எத்தனை மனிதர்கள் நம்மோடு இருக்கிறார்கள். எண்ணற்ற கதைகள் உண்டு அவர்களைப் பற்றி.

இப்படி பால்யத்தின் முனையிலிருந்து வாலிபத்துள் செல்லும் அத்தனைப் பிள்ளைகளுக்கும் போதைப் பழக்கிவிட்டால் நாடு அநாதையாகுவதைத் தவிர வழியில்லையே?

இவனின் சிவந்திருக்கும் கண்களும் மெலிந்து போன உடலும் அவனை மரணத்தின் பாதையில் தள்ளாட செய்வதை, அவனின் பரட்டைத் தலைக்குள் நுழைந்து கொண்டு வாழ்ந்து களிக்கிறானே ஒரு முதலாளி, அவனின் அத்தனைக் கட்டளைகளும் எளிதில் நிறைவேறி விடுகின்றன. அவன் போட வேண்டியதெல்லாம் ஒரே ஒரு உத்தரவு மட்டுமே. அவன் நேரில் வர வேண்டியதில்லை, எங்கேயிருந்து எப்படி அடிமைகளைப் பரப்பி விட்டு அடிமைத்தனத்துக்குள் உழற்றிவிட வேண்டுமென நன்கறிந்தவன் அவன்.

பண்டமாற்றை ஒழிக்க பணம் கொண்டு வந்து, மண்ணையெல்லாம் பொன்னாக்கி கொண்டிருந்தவர்களை ஏமாற்றி பணத்துக்கு வேலை செய்ய வைத்துத் தன் ஆசையையெல்லாம் நிறைவேற்றிய களிப்பில் எங்கேயோ ஓரிடத்தில் பல ஆயிரம் காசுகள் மதிப்புள்ள ஒரு மிடறு பானத்தை உறிஞ்சுகிறான்.அதில் வரும் போதையில் நம் நாயகனின் ரத்த வாடையிருப்பதில் உங்களுக்கேதும் ஆச்சரியமுண்டா நண்பரே?

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *