Sasikalavin Kavithaigal சசிகலாவின் கவிதைகள்

கர்பத்தில் கரைந்திடவே ஆசை
*************************************
பத்து மாதம் பத்திரமாய்
பாதுகாத்தாயே உந்தன் கருவறையில்….
இருட்டறை என்றாலும்
இன்பமாய்தான் இருந்தேன்
உந்தன் இதயத்துடிப்பில் இசையறிந்தேன்…
உந்தன் உணவில் எந்தன் பசி மறந்து
உணவின் ருசி அறிந்தேன்
உந்தன் அன்பின் வாசம் அறிந்தேன்….

பத்துத் திங்கள் கழித்து
பத்திரமாய் வெளிக் கொணர்ந்தாய்
வெளிச்சமாய் காட்சியளிக்கும் வெளியுலகிற்கு…
பார்ப்பதற்கு பளிச்சென்று இருந்தாலும்
இங்கு எல்லாமே
பகட்டாய்தான் இருக்கிறது…

மனம் மாறும்
பச்சோந்திகளாய் மனிதர்கள்
கொலை, கொள்ளை, வன்மம், வன்முறை, கற்பழிப்பு, துரோகம்…. என
மனிதம் மறந்த உலகில் மானுடனாய்
பிறக்க வைப்பதற்கு பதிலாக
உந்தன் கர்ப்பத்திலேயே கரைத்திடுவேன்

நான் உன்னுள் உருவாகி
உன்னுள்ளேயே மடிந்து போகிறேன்…..

உன்னில் நனைந்த பொழுதுகள்…
****************************************
உளிபட்ட கல்லெல்லாம்
சிலையென மாறுமாம்
இதோ நானும் சிலையாகிறேன்
உந்தன் சிந்தனை உளிக்கொண்டு
நீ என்னை செதுக்கியதால் …

உலகில் விலை கொடுத்து
வாங்க முடியாத சிம்மாசனமாம்
உன் தோள்களில் அமர வைத்து
உயரத்தைக் காட்டியதும் நீதானே அப்பா…
நீ கற்பித்த பாடங்களெல்லாம்
என் வாழ்வின் பாலங்கள்….

உனது வீரத்தையும்
எனக்கே உரிமையென
அடிமைசாசனம் எழுதியதும்
நீதானே அப்பா..
ஆழ்கடலெனவே
அப்பா உனதன்பு…

மறுஜென்மமொன்றில்
உன்னை கருவறையில் சுமந்திடவே
ஆசையப்பா…
இதோ.. உன்னில் நனைந்த
பொழுதுகளெல்லாம்
இன்னமும் இனித்தே கிடக்கின்றன
இதயத்தின் துடிப்புகளில்..

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *