மனிதர்களுக்குள் கோயில் எல்லை
வேறுவேறாய்
கட்டப்பட்டது
அப்பட்டமாய் புலப்படும்
கிராமத் திருவிழாக்களில்
அரசாங்கக் கவனிப்பில்
அசலூர்களில்
பெருங்கோயில்களில்
குடும்ப சகிதமாய்ப் போய்
மொட்டை போட்டு
கவுரவமாய் செலுத்துவர்
காணிக்கை
அங்கெல்லாம் மொட்டை போடும் மயிர்
எந்த சாதியென
எவனுக்கும் தெரியாது
திருவிழா வரும்போதெல்லாம்
பூஜை போக்குவரத்து
வெற்றுச் செயல்தான்
அர்த்த ராத்திரி
ஆடல் பாடலே
பிரதானம்
நன்கொடை
கொடுக்க விரும்பினாலும்
வாங்குவதில்லை நம்மிடத்தில் அவர்கள்
மாடி வீடு படிப்பு பதவி
நிலபுலம்
வளர்ந்து நிற்பவனையும்
பொருட்படுத்துவதில்லை
நாளுக்கொரு நாட்டியம் வகையறாக்களின் பங்களிப்பு
கச்சேரி
கரகாட்டம் கதா காலட்சேபம்
சனங்களும்
ஊரில் திருவிழா என்று
கறிகாய் ஆக்கி
அருகாமை உறவுகளை அழைக்கின்றனர்
போன மாதந்தான் முயல்வேட்டை திருவிழா கொண்டாடினாலும்
பெரிய தெரு திருவிழா என்றால்
சனங்களுக்கும் இருப்பு கொள்ளாது
நீலா அண்ணி
நெற்றி நிறைய நீருடன்
சும்மாடு கோலி
சடச்சுட பொங்கல் பானையை
தூக்கி வருவதைப்பார்த்து
நான் தான் கேட்டேன்
கோயிலுக்குள் போகலாமா நாம் என
நமக்குஅங்க வேலை இல்ல
‘நமக்கு இடம் இருக்கு தம்பி’
கோயிலத் தள்ளி
சனங்க அங்க தான் பொங்க வைக்கும்’
கோயிலுக்குள் மட்டுந்தான்
உடமாட்டாங்க
தெருவுக்கு சாமி வராதே ஒழிய
அங்கனையே ஒதுங்கி நின்னு
படைக்கலாம்’
மாரியாத்தா அருள் ஒளிர
அண்ணி சொன்னார்கள்
‘முயல் வேட்டை மாரியம்மனை
கும்புட்டதோட நிக்க வேண்டியதுதானே
திரும்ப என்ன
பெரிய தெரு மாரியம்மன் மயிறு தெரு மாரியம்மன்’
என்று சொல்ல
வாய் வரைக்கும்
வார்த்தை வந்தது சொல்லவில்லை
இந்த ஊரில்
மாவட்டம்
ஒன்றியம்
சட்டமன்றம்
பாராளுமன்றமென
அரசியல் மயிருக்குக்
குறையொன்றுமில்லை.
– விநாயக மூர்த்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.