நமது புக் டே-யில் எழுத்தாளர் விட்டல்ராவ் (Vittal Rao) எழுதும் புதிய தொடர் "வகுப்பறைக் கதைகள்" (Vagupparai Kathaikal) - 1 | லூர்துமேரி டீச்சர்

எழுத்தாளர் விட்டல்ராவ் எழுதும் புதிய தொடர் “வகுப்பறைக் கதைகள்”

வகுப்பறைக் கதைகள் – 1

லூர்துமேரி டீச்சர்

விட்டல்ராவ்

ஆறு வயது பூர்த்தியடைந்தவர்களைத்தான் முதல் வகுப்பில் சேர்த்துக்கொள்ளுவார்கள். ஆறு வயது பூர்த்தியடைந்ததைக் கண்டறிய அந்தப் பையனை அல்லது பெண்ணை அவர்களின் இடது கையால் அவர்களே தம் வலது காதை அல்லது வலது கையால் இடது காதை, கழுத்தைப் பின்புறமாய்ச் சுற்றி வளைத்து வந்து தொட்டுக் காட்டச் சொல்லுவார், பள்ளித் தலைமையாசிரியர், பிறப்புச் சான்றிதழ் எதுவும் வற்புறுத்தப்படாத காலம். அதைச் செய்ய முடிந்த பிள்ளைகள் ஆறு வயதானவர்கள் என்பதும் செய்ய முடியாதவர்கள் ஆறுவயதுக்கு குறைந்த வயதுக்காரர் என்பதும் அன்றைய நாள் கணக்கு. உண்மையில் ஆறு வயது நிரம்பிய பிள்ளைகளே சிலர் கழுத்தைப் பின்புறமாய்ச் சுற்றி கையால் காதைத் தொட முடியாது. பள்ளியில் சேர்க்கப்படுவதில் திணறலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
எனக்கு ஆறே முக்கால் வயது. மிக எளிதாக வலது கையால் சுற்றி வளைத்து இடது காதைத் தொட்டு முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். சித்திரத் தமிழ்வாசகம் என்ற பாடப்புத்தகம், சிலேட்டு, கல்பலபம்களை அப்பா வாங்கித் தந்துவிட்டு இரண்டுமுறை திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு புறப்பட்டுப் போனார். அவர் போன பின் வாசற்புற வெயில் நிறைந்த வெற்றிடத்தையே நான் பார்த்தபடியிருக்க, ‘‘இந்தப் பக்கம் பாரூ. சும்மா வெளியிலே பார்க்கக்கூடாது’’ என்ற டீச்சரம்மாவின் கனமான குரல் எச்சரித்தது.

பக்கத்து வகுப்பு ஆசிரியை எங்கள் வகுப்பாசிரியயை, ‘‘லூர்து… லூர்து…’’ என்றழைப்பாள். இருவரும் தனியாக ஒதுங்கிப்போய் நின்று எதையோ பேசிக் கொள்ளுவார்கள். நான் அப்துல் ரஜாக்கிடம் காதில் சொன்னேன், ‘‘எங்கப்பா ஆபீஸ் பியூன் பெயரு லூர்து’’, என்று. ‘‘பொம்பளயா?’’, என்று கேட்டான் ரஜாக்.

‘‘இல்லே, ஆம்பளெ, லூர்துசாமி’’, என்றேன்.

‘‘நம்ப டீச்சர் லூர்துமேரி’’, என்றான் ரஜாக். தினமும் வகுப்பில் நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் என் அக்காவிடம் சொல்லிவிடுவேன். லூர்து மேரி டீச்சர் பற்றியும் சொல்லுவேன்.

லூர்துமேரி டீச்சரைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். நல்ல உயரம். சற்று உள் வாங்கின கன்னங்கள். அப்பா ஆபீஸ் பியூன் ஞானம் வீட்டுக்கு வருவதுண்டு. அவரையே கவனித்துவிட்டு அப்பாவிடம் கேட்டேன்.

‘‘ஏம்பா, ஞானத்துக்கு கன்னம் ரெண்டும் உள்ளே போயிருக்கு?’’

‘‘நிறைய பீடி குடிப்பான்?’’ என்றார் அப்பா,

ஆனால் லூர்து மேரி டீச்சர் கன்னத்தைப் பற்றி அதே கேள்வியை யாரிடமும் கேட்டதில்லை. என் அம்மா, அக்கா, எங்கள் வீட்டுக்கெதிர் வரிசையில் போலீஸ் லைனிலுள்ள அஞ்சலைபோலவெல்லாம் இல்லாது டீச்சரின் மார்பு என்னைப்போல சமமாக இருக்கும். அதை அவர் அடிக்கடி முந்தானையால் இழுத்து மூடி மூடி வைத்துக்கொள்ளுவார்.

‘‘என்னடா?’’ என்றார் ஒரு சமயம் என்னைப் பார்த்து, தலையாட்டினேன். லூர்துமேரி மாராப்பை மறைத்துக்கொண்டார். இதெல்லாம் வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மூன்று மணிக்கு மேல் பள்ளிக்கூடத்து சிறிய மைதானத்தில் ஏதாவது விளையாட்டு சொல்லித் தருவார் லூர்துமேரி டீச்சர்.

‘‘கைச் சப்பளாம் போடுங்க. ஒரு பாட்டு சொல்லுவேன். கடைசி வார்த்தை யாருமேலே முடியுதோ அவங்க அவுட். பாக்கியிருக்கிறவங்களுக்கு மறுபடியும் பாட்டுப் பாடி, அப்ப யாருமேலே கடேசி வார்த்தை வருதோ அவங்க அவுட். அது மாதிரி எல்லாரும் போய் மிஞ்சி நிற்கிறவங்க ஜெயிச்சாப்பல, இந்த பென்சில் அவங்களுக்கு பரிசு. ரெடி’’ என்றார் டீச்சர். நாங்கள் டீச்சரை மத்தியில் நிற்க வைத்து வட்டமாய்ச் சுற்றி நின்று கொண்டதும், அவர் பாடத் தொடங்கினார்.

‘‘ஓ, ஒண்ணா டவ்வர டக்கர டை
யாவல் காவல் மஸ்கி டன்.
கள்ளன் குள்ளன் டுவெண்டி ஒன்.
யா, ஊ, மே, ப்ளக்!
ப்ளக்கத் தூக்கி மேலே போட்டா,
செட்டியார் வூட்டு நண்டு.
நண்டத் தூக்கி மேலே போட்டா,
நாகரத்தின பாம்பு.
பாம்பத் தூக்கி மேலே போட்டா,
பஞ்ச வர்ண கிளி! – அந்தக் கிளி யார் மீது
உட்கார்ந்ததோ அவர் அவுட்.’’

முதல் சுற்றிலேயே நான் அவுட்டாகி வெளியில் வந்துவிட்டேன். டீச்சர் என்னை ஒரு விதமான இளக் காரத்தோடு பார்த்துவிட்டு பாட்டைத் தொடங்கினார்.

சாயங்காலம் எல்லோரும் வீட்டுக்குப் போகும்போது லூர்துமேரி சொன்னார்,

‘‘நாளைக்கு பால் தர்றாங்க… எல்லாரும் டம்ப்ளரும் சக்கரையும் எடுத்திட்டு வாங்க.’’

அரசாங்க ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் இலவச பால் வழங்குவார்கள். பெரிய டின்னில் பால் பவுடர் வரும். லூர்து மேரி டீச்சர்தான் அடுப்பு மூட்டி பெரிய பாத்திரமொன்றில் பால் பவுடரைக் கரைத்து காய்ச்சுவார். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அந்த அரசாங்க ஆரம்பப் பாடசாலை தாரமங்கலம் சாலையில் முஸ்லிம் பள்ளி வாசலை அடுத்து இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு பால்பவுடரை எடுத்துத் தருவார் தலைமையாசிரியர். ஐந்தாம் வகுப்புக்கு அவரே வகுப்பாசிரியர். லூர்து டீச்சர் முதலிரண்டு வகுப்புகளையும், மூன்றாவது நான்காவது வகுப்புகளை கமலா டீச்சரும் கவனித்துக் கொண்டனர். பள்ளிக்கூடத்தின் உள்ளேயும் வெளியேயும் பெருக்கி சுத்தம் செய்வது ஐந்தாம் வகுப்பிலுள்ள இரு பெண்பிள்ளைகளின் வேலை. இரு ஐந்தாம் வகுப்புப் பையன்கள் காவடி கட்டிய பெரிய டின்னைக் கொண்டு சென்று பொதுக்கிணற்றிலிருந்து காவடி டின்னில் நிரப்பி பள்ளிக்கு சுமந்து வருவார்கள். இன்னொரு பையன் தொங்கும் தண்டவாளத் துண்டில் மணியடிப்பான்.

மாணவர்களை வரிசையில் நிற்கச் சொல்லி, அவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த குவளைகளில் சூடான பாலை நிரப்பித் தர.. பிள்ளைகள் தாங்கள் சிறு பொட்டலமாய்க் கொண்டுவந்த சர்க்கரையைக் கலந்து பவுடர்பால் குடிப்பார்கள். வீட்டுக்குப் போனதும் இப்படியென்று சொன்னதும் அம்மா சீறினாள்.

‘‘சக்கரையுமில்லே ஒண்ணுமில்லே, அப்பிடியே குடி.’’

ரேஷனில் மாதத்துக்கு இரண்டு பவுண்டு சர்க்கரைதான் தருவான். கடைகளில் கருப்புச் சந்தையில் ஒரு பவுண்டு சர்க்கரை கொள்ளை விலை. வீட்டில் நான் காபி குடிக்கும் பித்தளைக் குவளை எடுத்துப் போனேன்.

‘‘பத்திரம், மறக்காம எடுத்திட்டு வா,’’ என்றாள் அக்கா. அன்று மாலை பவுடர் பால் குடிக்கையில் வெள்ளையன் என்னையே கவனித்துவிட்டு இன்னொருவனிடம் சொன்னான்,

‘‘டேய்! இவன் சக்கரையில்லாமலேயே குடிக்கிறாண்டா!’’

‘‘சுத்தப் பிசுநாரிடா இவங்க வூட்ல.’’

‘‘வூட்லயும் சக்கரையில்லாமதான் காபி குடிப்பியா?’’

‘‘டேய்! இவங்கூட்ல சக்கரையே இல்லையாண்டா!’’

உடனே சொன்னவன் முகத்தைப் பார்த்து குத்தினேன். மற்ற மூன்று பையன்களும் வந்து வந்து என்னைக் குத்தினார்கள். ஒருவன் என் சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தான். பதிலுக்கு நானும் அவன் சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தான். பதிலுக்கு நானும் அவன் சட்டையைக் கிழித்தேன். ஒருவன் மண்ணை வாரி என் மீது வீசினான். அப்போது லூர்து மேரி டீச்சர் ஓடிவந்து பிள்ளைகளை விலக்கி விட்டு விட்டு, முதலில் என் கன்னத்தில் அறைந்தார். பிறகு மற்ற மூவரையும் வகுப்பறைக்குள் வரச் சொல்லி பிரம்பால் கையை நீட்டச் சொல்லி அடித்தனுப்பினார். பிரம்படி வாங்கின மூவரும், ‘‘வெளிலே வா, உன்னப் பாத்துக்கறோம்’’, என்று என்னைப் பார்த்துச் சொல்லிவிட்டு கையை ஊதிக் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடம் விட்டதும் நான் வேகமாக ஓடிப் போய்விட்டேன். என்னைத் தொடர்ந்து யாரும் வரவில்லை. அப்போதுதான் கவனம் வந்தது வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பித்தளை தம்பளரை வகுப்பறையிலேயே விட்டுவிட்டெனென்பது. வீட்டுக்குப் போனதுமே அம்மா அதைத் தான் கேட்டாள், ‘‘டேய்! தம்பளரைத் தேய்க்கப் போடு’’ என்றாள். நடந்ததைக் கூறவும் எல்லாரிடமும் நன்றாக பாட்டு வாங்கினேன். பித்தளைக் குவளையை மறந்துவிட்டதற்காக அடிக்காத குறைதான்.

மறுநாள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றதும் வகுப்பறையில் நான் வைத்த இடத்தில் தம்பளரைக் காணவில்லை. வகுப்பறையெங்கும் தேடிப் பார்த்துவிட்டேன். காணோம்.

‘‘என்னடா?’’ என்றார் லூர்துமேரி டீச்சர்.
சொன்னேன்.

‘‘நல்லா தேடு’’

‘‘நல்லா தேடிட்டேன் டீச்சர்!’’

‘‘டேய், யாராச்சும் இவன் டம்ப்ளர பாத்தீங்களா?’’

‘‘இல்லீங்க டீச்சர்!’’

அன்று வீட்டில் அடியும் கிடைத்தது. பால்பவுடர் பால் குடிக்க வேறொரு குவளையைத் தரமாட்டேன் என்று வீட்டில் சொல்லிவிட்டதால் பாலன்று நான் வரிசையிலும் நிற்கவேண்டிய அவசியமில்லாமற்போனது. வகுப்பறையிலேயே உட்கார்ந்திருந்தேன். ஐந்தாறு பிள்ளைகள் சூடான பால் குடித்துக் கொண்டே உள்ளே வந்து வந்து என்னப் பார்த்துவிட்டுப் போனார்கள். லூர்துமேரி டீச்சரும் வந்து பார்த்துவிட்டு, ‘‘வேறே டம்ப்ளர் குடுத்தனுப்பலியா?’’ என்று கேட்டதற்கு இல்லையென்பதாகத் தலையை ஆட்டினேன்.

‘‘வாயத் தொறந்துதான் சொல்லேன், மரியாதை இல்லாதது’’ என்று சற்று கோபமாகக் கூறிவிட்டுப் போன டீச்சர், ஒரு காகிதத்தில் பால்பவுடர் கொஞ்சத்தை வைத்துப் பொட்டலங்கட்டி எடுத்து வந்து என்னிடம் நீட்டினார்.

‘‘போய் வீட்ல பால் செஞ்சி குடி’’ என்றார்.

மனக்கணக்குப் போடக் கற்றுத் தந்துவிட்டு மாலையில் தினமும் சின்னச் சின்ன கூட்டல், கழித்தல் மனக்கணக்கு போட வைத்தார். அன்று பிடித்ததுதான் சனியன், எனக்கு கணக்கே வரவில்லை. இந்தக் கணக்குச் சனியன் எனக்கு தொட்டில் பழக்கம்… அடுத்தவன் சிலேட்டைப் பார்த்துவிட்டேன்.

‘‘டீச்சர்! இவன் என் பலகையப் பாக்கறான்’’ என்று புகார் செய்துவிட்டான் அவன்.

அடுத்த நிமிடம் நான் எதிர்பார்க்கவில்லை. பிள்ளைகள் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

பளீரென்று என் கன்னத்தில் ஓர் அறை.

‘‘அறிவு கெட்ட கழுதை, காப்பியா அடிக்கறே,’’ என்று கத்தினார் பல்லைக் கடித்து லூர்து மேரி டீச்சர்.

முதன்முதலாக கன்னத்தில் அந்நிய அடியும், என்னமோ கழுதையென்று சொல்லித் திட்டியதும் அதுதான் முதல் அனுபவம்.

‘‘வெளியில போய் நில்லு’’

நான் என் பலகை, பலப்பத்தோடு வெளியில் போய் நின்று கொண்டேன். லூர்து மேரிக்கு கொஞ்சம் ஆண் குரல். வெளியில் இருந்தபடியே அவர் சொல்லும் மனக்கணக்கைக் கேட்டு செய்துவந்தேன். எல்லாருடைய ஸ்லேட்டுகளையும் வாங்கிப் பார்த்து தப்பு- ரைட்டு திருத்திப் போட்ட டீச்சர் என் ஸ்லேட்டை கேட்டு வாங்கிப் பார்க்கவேயில்லை.

அன்று வீட்டுக்குப் போனதும் அக்காவிடம் கேட்டேன்,

‘‘அறிவுன்னா என்னாக்கா?’’

‘‘ஏண்டா, புத்தினு அர்த்தம்’’ என்றாள் அக்கா.

புத்தியில்லாதவனே என்று சொல்லவில்லை. புத்தி கெட்டவனே என்றுதான் டீச்சரம்மா சொன்னார்கள் என்று மனத்தில் நினைத்துக் கொண்டவுடனே, புத்தியிருந்தால்தானே கெடும். இல்லாத ஒன்று கெடவும் முடியாதே என்றும் நினைக்கவும் மிகவும் சமாதானமானது. காபியைக் குடித்துவிட்டு பக்கத்து வீட்டு ஜூக்காளியோடு மரக்குரங்காட்டம் விளையாடப் போய்விட்டேன். பிறகு எல்லாம் மறந்துபோனது.

அன்று மாலை மனக்கணக்கின்போது லூர்து மேரி டீச்சர் என்னை அவ்வப்போது கவனிக்கத் தவறவில்லை. கோடை நெருங்கிற்று. ஓமலூரில் தண்ணீருக்கு தரித்திரம் பிடித்தது. சாதாரணமாகவே குடிதண்ணீருக்கு ஆற்றுக்குப் போய் ஆற்று மணலில் ஊற்றுப் பறித்து தண்ணீரை ஒரு வாய் குடித்துப் பார்த்து குடத்திலும் பானைகளிலுமாக குடிநீர் எடுத்துக்கொண்டு வருவது ஓமலூரில் சகஜம். இத்தனைக்கும் காவேரி பாயும் மேட்டூருக்கு ரயில் ஓமலூர் வழியாகத்தான் ஓடுகிறது.
அக்காதான் ஆற்றுக்குப் போவாள். மாலைப் பொழுதானால் நானும் கூடப் போய்வருவேன். ஆறு, வீட்டிலிருந்து தூரமில்லை. ஆறு அப்படியே தாலுகாபீசு, ரெயில்வே ஸ்டேஷன், நெருங்கினபடி ஓடி பழைய ஓமலூர் கோட்டை மேடு பக்கமாய் போய்விடுகிறது. பருவ காலத்தில் வெள்ளம் பார்க்கலாம். மற்றபடி குட்டையாக அங்கங்கே தேங்கி நிற்கும். தட்டாரப் பூச்சி பிடித்துவர நான் போவேன். பல வண்ணங்களில் வெவ்வேறு அளவுகளில் தட்டாரப்பூச்சிகள் சுற்றும். நீண்ட வாலும் கண்ணாடி போன்ற தலையுமாய் தட்டாரப்பூச்சிகள் பொன்வண்டுக்கு அடுத்து பிடித்து நூல்கட்டி விளையாட பிடித்தமான பாவச் செயல். ஊர்ப் பெண்கள் குடிதண்ணீருக்கு ஆற்று மணலில் ஊற்றுப் பறித்து தண்ணீர் எடுத்துச் செல்லுவார்கள். அந்த வருடம் வெயிலும் அதிகம். மழையுமில்லை. ஆற்று மணலில் பெண்கள் கூட்டம் அதிகமாயிருந்தது. சைக்கிளில் குடங்களைக் கட்டிக்கொண்டு ஆண்களும் வந்தபடியிருந்தனர் அக்கா இரண்டு நடை வந்துபோவாள். நாந்தான் ஊற்றுப் பறிப்பேன்.

ஆற்று மணலில் ஊற்றுப் பறிப்பதில் சாத்திரியம் வேண்டும். வெள்ளை மணலைப் பறித்தால் கீழே போகப் போக கருநிற மணலும் தெரியும். அனேகமாய் அந்த இடத்து ஊற்றுத் தண்ணீர் கும்பி நாற்றமடிக்கும். ஊற்றுப் பறித்தால் தெளிந்த தண்ணீர் மேலே வரும். ஒருவாய் குடித்துப் பார்க்க வேண்டும். அதை அப்படியே டபராவில் மணல் சேர விடாமல் முகண்டு முகண்டு எடுத்து குடத்தில் ஊற்றுவாள் அக்கா. ஊற்றுமுன் ஒரு கை தண்ணீர் எடுத்து குடித்துப் பார்ப்பாள் அக்கா. கும்பி நாற்றம் என்பது ஒரு வித கெட்ட வாடை. அந்த ஊற்றில் ஊறும் தண்ணீர் முழுக்கவும் அப்படித்தான் வாடை வீசும். அதை விட்டு விட்டு சற்றுத் தூரம்போய் வேறொரு ஊற்றைத் தோண்டிப் பார்ப்பேன்.

ஒரு குடம் நிரம்பியதும் அதையெடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அக்கா வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டாள். வீட்டுக்குப் போய் வேறொரு பெரிய தவலையில் கொட்டிவிட்டு அடுத்த நடை வருவாள். நான் ஊற்றுக்கு காவலாக அங்கேயே உட்கார்ந்திருப்பேன். அன்று தூரத்தில் அக்கா வரும் தடத்தில் உயரமாய் ஒல்லியாய் வரும் உருவைக்கண்டு அதிசயப்பட்டேன். லூர்துமேரி டீச்சர்தான் அது. டீச்சர் ஓரிடத்தில் ஊற்றுப் பறித்து ஒரு வாய் குடித்துப் பார்த்துவிட்டு தூவென்று துப்பிவிட்டார்.

‘‘இங்க வாங்க டீச்சர், இந்த ஊத்தில தண்ணி நல்லாயிருக்கு,’’ என்று டீச்சரை அழைத்தேன். டீச்சரும் வந்து, ‘‘ஒங்களது வேணாம், நா வேறே ஊத்து பறிச்சிக்கிறேன்’’ என்று சொல்லவும், ‘‘வுடுங்க, நாம் பாக்கிறேன்’’ என்று முந்திக்கொண்டு வேறொரு ஊற்றைப் பறித்தேன். வெள்ளை மணல், மளமளவென்று தெளிவாகத் தண்ணீர் ஊற்றுப் பள்ளத்தில் மேலுக்கு வந்து நின்றது. ஒரு வாய் குடித்துவிட்டு டீச்சரையும் குடித்துப் பார்க்கச் சொன்னேன். அவரும் ஒருவாய் அள்ளிக் குடித்துவிட்டு என்னைப் பார்த்து புன்னகை செய்தார். இந்த ஐந்து மாதங்களில் என்னைப் பார்த்து லூர்துமேரி டீச்சர் புன்னகை செய்வது இதுதான் முதல் தடவை. நான் பதிலுக்கு புன்னகைக்காமல் விழித்துவிட்டு அக்காவை எதிர்பார்த்தேன்.

‘‘வீட்டுப் பாடமெல்லாம் செஞ்சிட்டியா?’’ என்று அந்த ஆற்றங்கரையில் வைத்து டீச்சர் என்னைக் கேட்டது கொஞ்சமும் பிடிக்கவில்லை. பேசாமலிருந்தேன். அதற்குள் அக்காவும் வந்துவிடவே… எங்கள் ஊற்றிலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றினேன். குடத்தின் வாயில் வெள்ளைத் துணியைக் கட்டியிருந்தாள் அக்கா. தண்ணீர் அதன் வழியாக வடிகட்டப்பட்டு குடத்துக்குள் போனது. டீச்சரும் மற்றவர்களும் அப்படியே துணியைக் கட்டி வடிகட்டித்தான் கொண்டு போனார்கள். டீச்சர் அக்காவைப் பார்த்துவிட்டு, ‘‘அக்காவா?’’ என்றார். குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்ட அக்காவும், ‘‘ஆமாங்க’’ என்றாள்.
என்னைப் பார்த்து, ‘‘ஒரு கொடம் போதும். போறேன்’’, என்று கூறிவிட்டு இன்னொருமுறை புன்னகை காட்டினார். நான் வேறு பக்கமாய்ப் பார்க்க முற்பட்டேன்.
மறுநாள் லூர்துமேரி என்னைக் கண்டதும் சிரித்தார். நான் பேசாமல் போய் உட்கார்ந்தேன்.

‘‘காலேலே ஆத்தங்கரைக்கு ஊத்துப் பறிக்கப் போனியா?’’ என்று டீச்சர் கேட்டதற்கு பதில் தரவில்லை. வகுப்பறையில் வைத்து அதைக் கேட்டது பிடிக்கவில்லை. அன்றைக்கு பால்பவுடர் கலக்கித் தருவார்கள். அக்கா நிறைய தடவை எச்சரிக்கை செய்துவிட்டு ஓர் அலுமினிய குவளையில் வெல்லத் துண்டைப் போட்டு கொடுத்தனுப்பியிருந்தாள்.

எழுதியவர்:

பென்னிஸ் – விட்டல்ராவ் - அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Magazine

விட்டல்ராவ்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. sridhar bulusu

    today i read this. about lurthu teacher very interesting

  2. Arunachalam Ramasami

    விட்டல் ராவின் வகுப்பறை கதைகள் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. விறுவிறுப்பாகச் செல்கிறது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *