அறிவியல் பேசுவோம்!
இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
1. உலகின் மிக சக்திவாய்ந்த ஒலி லேசர்
விஞ்ஞானிகள் ஒளிக்கு பதிலாக ஒலி அலைகளைப் பயன்படுத்தும் லேசர்களை உருவாக்கும் திசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். தற்போதுள்ள ஃபோனான் லேசர்களின் குறைந்த சக்தி மற்றும் துல்லியமற்றதன்மையை இந்த புதியமுறை மாற்றியமைத்துள்ளது. புதிய முறையில், ஒலி அலைகள் நிலையான மற்றும் சக்திவாய்ந்த நிலையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த “ஃபோனான் லேசர்கள்” மருத்துவ படமாக்கல், ஆழ்கடல் ஆய்வு மற்றும் பிற துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.
https://doi.org/10.1186/s43593-024-00064-8
2. செவ்வாயிலிருந்து நீர் வெளியேறியது எவ்வாறு? புதிய ஆய்வுத் தகவல்கள்.
Hubble மற்றும் MAVEN விண்கலம் தந்த தகவல்களை இணைத்து ஆராய்ந்து, விஞ்ஞானிகள் புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். நீர் மூலக்கூறுகள் உடையும்போது, ஹைட்ரஜன் தனது மற்றொரு ஐசோடோப் ஆன டியூட்டீரியத்தை விட மிகவும் எளிதாக விண்வெளிக்கு தப்பிச் செல்கின்றது. செவ்வாய் கிரகத்தின் தற்போதைய D/H விகிதத்தை அளவிடுவதன் மூலம், செவ்வாய் கிரகம் எவ்வளவு நீரை இழந்துள்ளது என்பது மதிப்பிடப்பட்டுள்ளது.
3. பரிணாமத்தில் உடல் வெப்பநிலைக்கும் சைவ உணவுக்கும் ஓர் ஆச்சரியமான தொடர்பு
முதுகெலும்புள்ள உயிரினங்களின், பரிணாமத்தில் உயர் உடல் வெப்பநிலைக்கும், சைவ உணவுப் பழக்கத்துக்கும் இடையே நேர்தொடர்பு உள்ளது என அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உயர்ந்த உடல் வெப்பநிலை, தாவர செல் சுவர்களின் முதன்மைக் கூறான செல்லுலோஸை, உடைக்கும் குடல் பாக்டீரியாவை ஆதரிக்க தேவையானதாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
https://doi.org/10.1111/geb.13900
4. நகரங்கள் மழையைக் கவர்கின்றன! – புதிய ஆய்வு
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வின்படி, உலகின் பல பெரிய நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை விட அதிக மழையைப் பெறுகின்றன. உயரமான கட்டிடங்கள் மற்றும் காலநிலை மாற்றம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், எதிர்காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் மோசமாகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நகரங்கள் வெள்ளத்தை எதிர்கொள்ள புதிய வழிகளை கண்டுபிடித்தாக வேண்டும்.
https://www.pnas.org/doi/10.1073/pnas.2311496121
5. உயிரின் ஆரம்பகால உலோகம் – இரும்பு

கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பூமியின் ஆரம்பகால கடல்களில் மிகுதியாக இருந்த இரும்பு, ஆரம்பகால உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். பெரிய ஆக்ஸிஜனேற்ற நிகழ்வுக்குப் பிறகு இரும்பின் கிடைக்கும் தன்மை குறைந்ததால், உயிரினங்கள் மற்ற உலோகங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டன என்கிறது இந்த ஆய்வு.
http://dx.doi.org/10.1073/pnas.2318692121
6. ஒரு பரிமாண ஒளி வாயு – குவாண்டம் இயற்பியல் கண்டுபிடிப்பு
இயற்பியலாளர்கள் ஒரு பரிமாண ஒளி வாயுவை உருவாக்கும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறப்பு வகை பாலிமர் கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒளியை ஒரு பரிமாணத்தில் கட்டுப்படுத்தி இந்த வாயுவை உருவாக்கினர். இந்த கட்டமைப்பு ஒளியை ஒரு நேர்கோட்டில் நகர வைக்கிறது, இதனால் அது ஒரு பரிமாண வாயுவாக செயல்படுகிறது. குவாண்டம் இயற்பியல் துறையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு இது வழிவகுக்கும்
https://www.uni-bonn.de/en/news/177-2024
7. ஆச்சரியமான காட்சி: விழுங்கப்பட்ட பின்பு தப்பிக்கும் மீன்கள்

ஜப்பானின் நாகசாகி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அங்குயில்லா ஜப்போனிகா வகை மீன்கள் தங்களது வேட்டையாளர்களான டார்க் ஸ்லீப்பர் மீன்களின் வயிற்றிலிருந்து தப்பித்து வெளியே வரும் விதத்தை எக்ஸ்-ரே வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். இந்த மீன்கள் விழுங்கப்பட்ட பிறகு, தங்கள் எதிரிகளின் வயிற்றில் இருந்து தங்கள் வால்களை வெளியே தள்ளி, அவைகளின் செவுள்கள் வழியாக வெளியே வந்து, அதியத்தக்கவாறு தப்பிக்கின்றன.
https://www.cell.com/current-biology/fulltext/S0960-9822(24)00926-6
8. நியாண்டர்தால்கள் மற்றும் ஹோமோ சேபியன்கள் இனக்கலப்பு நிகழ்ந்த இடம்
நவீன மனிதர்களின் மரபணுவில் நியாண்டர்தால் DNA காணப்படுகிறது. இந்த இனச்சேர்க்கை நிகழ்ந்திருக்கக்கூடிய மிகவும் சாத்தியமான பகுதி, பெர்சியன் பீடபூமியில் உள்ள சாக்ரோஸ் மலைகள், என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த மலைகள் பல்லுயிர் வளம்மிக்கதாக இருந்ததால் இவ்விரு இனங்களும் இங்கு வந்துள்ளனர். மேலும் இங்கு இருவரின் எலும்புகளும் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன.
https://dx.doi.org/10.1038/s41598-024-70206-y
9. பூமியின் மிகப்பெரிய பேரழிவில் எல் நினோவின் பங்கு

25.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நிகழ்ந்த மிகப்பெரிய பேரழிவுக்கு எல் நினோ நிகழ்வுகள் முக்கிய காரணமாக இருந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, பெர்மியன்-ட்ரையாசிக் காலகட்டத்தில் ஏற்பட்ட விரைவான காலநிலை மாற்றத்தின் விளைவுகள் கடலிலும் நிலத்திலும் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் அழிவுகரமாக இருந்ததற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்த பேரழிவின் பின்னரே, டைனோசர்கள் பூமியில் பரிணமித்தன.
https://www.science.org/doi/10.1126/science.ado2030
10. ஒளி ஊடுருவும் தோல்! ஓர் ஆச்சரிய சாதனை!

உயிருள்ள எலிகளின் தோலை தற்காலிகமாக ஒளிஊடுருவும் தன்மையுடையதாக மாற்றி புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக அறிவியலாளர் ஜிஹாவோ ஓ மற்றும் அவரது சக ஊழியர்கள், செல்களைச் சுற்றியுள்ள திரவங்களின் ஒளி ஊடுருவும் திறனை மாற்றியமைப்பதன் மூலம் திசுக்களை ஒளிஊடுருவும் தன்மையுடையதாக மாற்றும் உயிரியல் ரீதியாக பாதுகாப்பான ஒரு சாயத்தைக் கண்டறிந்துள்ளனர்.
எழுதியவர் :
பெருமாள் ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

