Subscribe

Thamizhbooks ad

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

 

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சைவ வெள்ளாளர் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தையார் பிழைப்புத்தேடி நாஞ்சில் வட்டாரத்திற்குச் சென்று அங்கேயே மணம் செய்துகொண்டு குடியிருக்கலானதால் நாஞ்சில்நாடன் குமரி மாவட்டத்துக்காரராகிறார். ஓர் ஏழை உழைப்பாளிக் குடும்பத்தில் பிறந்து, வறுமையான பொருளாதாரப்பின்னணியுடன் போராடிக் கல்லூரிக்கல்வி முடித்து 1972இல் பிழைப்புக்காக பம்பாய் நகரத்தில் குடியேறுகிறார். சுமார் இருபதாண்டுகாலம் மும்பை நகரில் ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய நாஞ்சில்நாடன் இந்தியா முழுவதும் தொழில் நிமித்தம் பயணம் செய்தவர்.சில மொழிகளையும் பல கலாச்சாரங்களையும் அறிந்தவர். பழந்தமிழ் இலக்கியங்களின் மீது ஆழ்ந்த பற்றுதலும் புலமையும் பெற்றவர். 1989க்குப் பிறகு தன் குடும்பத்துடன் கோவை மாநகரில் குடியேறி இன்று அங்கு வசிக்கிறார். இந்தப்பின்னணி பற்றிய அறிதல்  அவருடைய சிறுகதைகளைப் புரிந்துகொள்ள அவசியமாகிறது. அவருடைய மொத்தக்கதைகளுமே குமரி மாவட்டத்தின் நாஞ்சில் வட்டாரம், மும்பை மாநகரம், கோயம்புத்தூர் நகரம் என மூன்று நிலப்பரப்புகளில்தாம் இயங்குகின்றன. தன் வரலாற்றுத் தன்மையுடன் அவருடைய கதைகள் இருப்பதாக அடையாளம் பெறுவது இந்நிலக்காட்சிகளாலும் அவருடைய அற்புதமான மண்சார்ந்த மொழியாலும் தான்.

நாஞ்சில் நாடு என்பது குமரி மாவட்டம் முழுவதையும் குறிப்பதாக பிற மாவட்டத்தினர் கருதுகின்றனர். அது சரியல்ல என்கிறார் நாஞ்சிலார்.நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை” என்கிற அவரது நூலில்  நாஞ்சில் நாட்டின் கிடப்புஎன்னும் முதல் கட்டுரையில்,  அதை விளக்குகிறார். கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில்  நாட்டைச் சொல்வார்கள்.   கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும் . வடக்கிலும் வடக்கிழக்கிலும் வடமேற்கிலும் மலைகள் சூழ்ந்த பகுதியும் ஆன செழிப்பான நிலத் துண்டு நாஞ்சில் நாடு எனக் கொள்ளலாம் என்பார்.தான் பிறந்து வளர்ந்த வட்டாரத்தைப் பற்றி,அந்த மண்ணையும் மக்களையும் பற்றி நாஞ்சில்நாடன் அளவுக்கு விஸ்தாரமாக தமிழில் வேறு யாரும் எழுதியிருக்க முடியாது.

2004 வரை அவர் எழுதிய 80 கதைகள் ’தமிழினி’ வெளியிட்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ என்னும் தொகுப்பாக 2006 இல் வெளிவந்தது. அதற்குப்பின்னர் எழுதப்பட்ட கதைகள் ’சூடிய பூ சூடற்க’ (சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்)கான் சாகிப்,தொல்குடி,சங்கிலிப்பூதத்தான் ஆகிய நான்கு தொகுப்புகளில் சேகரமாகியுள்ளன.

இருநூறை எட்டும் இக்கதைகளை இப்போது மீண்டும் வாசிக்கையில்,ஒரு கதையைப் பற்றி மட்டும் தனியாக துவக்கத்திலேயே சொல்லிவிடவேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. அக்கதை “யாம் உண்பேம்” என்னும் கதை. தோழர் பி.சாய்நாத்தின் கட்டுரைகள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் மராட்டிய மாநில விவசாயிகளின் தற்கொலைகளை முன் வைத்து, உறைக்கும் விதமாகத் தமிழில் ஒரு கதையை எழுதிய முதல் அல்லது ஒரே தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தான். மராட்டிய மாநிலத்தில் இருபதாண்டுகாலம் வாழ்ந்த அவரது வாழ்க்கையின் அர்த்தமாகவும் பெருங்கொடையாகவும்  இக்கதையை நான் பார்க்கிறேன்.. இக்கதையுடன் சேர்த்துச் சமமாகப் பேச வேண்டிய இன்னும் இரு மிக முக்கியமான மும்பைக்கதைகள் என ’கான்சாகிப்’ மற்றும் ’தன்ராம்சிங்’ ஆகிய கதைகளைச் சொல்ல வேண்டும்.முதலில் “யாம் உண்பேம்”:

“கோதுமை மாவை உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசைந்தால் மல வாடை வந்தது. எந்த முரட்டு ரகக் கோதுமையும் மட்ட ரக அரிசியும் கெட்ட நாற்றத்துடன் விளைவதில்லை. மலிவான ரகங்களை ஆதரவு விலை கொடுத்து வாங்கி, புழுங்க வைத்து, மக்க வைத்து, நிறம் மங்கவைத்து, கசக்க வைத்து, நாற வைத்து, ஒன்றிரண்டு ஆண்டுகள் மழையில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, புழுக்க வைத்து, மக்கள் தின்பதற்கென்று வள்ளன்மையுடன், பெருங்கருணையுடன், தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள் தேசத் தலைவர் களும் தேசத்தைக் கட்டி எழுப்பிக் கொண்டிருந்த அதிகாரிகளும். அமெரிக்க ஐரோப்பிய நாட்டுப் பன்றிகள் தின்னாது அவற்றை கனிவுடன் பள்ளிக் குழந்தைகளுக்கு மதியம் ஒருவேளை மக்காச் சோள ரவை எனும் பெயரில் களி போன்றதொன்றைக் கிண்டிப் போட்டார்கள். வயிற்றின் காந்தல் உப்பின் சுவையைக் கூட எதிர்பார்க்க வில்லை. கொடுந்தீயொன்று குமுறிக்குமுறி எரிந்து கொண்டிருந்தது பங்கு பங்காக யாவர் வயிற்றிலும். பிள்ளைகளுக்குப் போட்டியாக கிழடுகட்டைகளும் அலுமினியத் தட்டேந்தி நின்றார்கள். செவலை நாய்கள் மலங்கள் தேடி எப்போதும் அலைந்தவாறிருந்தன.

முரண்டு | நாஞ்சில்நாடன்

ஈதல்லாம் ஆப்பிரிக்கக் கண்டத்துச் சின்னஞ்சிறு நாடொன்றின் பஞ்ச காலச் செய்திகள் என்றெண்ணிக் கொள்ளாதீர்! பொற்காலத்தை நோக்கி, வெளிநாட்டு நவீன சொகுசு ஊர்திகளில் வேகமெடுத்துப் பறந்து கொண்டிருக்கும் இந்தியத் திருநாட்டின் மத்தியப் பகுதியின் சமகாலச் சேதிகள்.” என்கிற மனதைப் பதைக்க வைக்கும் விவரிப்புடன் துவங்குகிற இக்கதை கன்பத் சக்காராம் நாத்ரே என்கிற விவசாயியின் கதையைச் சொல்கிறது.அவரது மகன் பாகோஜியும் ஒரு விவசாயி.தாண்ட முடியாத பாழ்கிணறாக வழிமறித்துக் கிடந்த பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாத பாகோஜி தானும் தன் மனைவி,இரு பெண்மக்களும் என ஒரே நாளில் நான்கு பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குடும்பத்தாரின் பசியாற ‘போர்’ என்கிற காட்டு இலந்தையையும் கிழங்குகளையும்  தேடிக் காட்டுக்குள் சென்ற நாத்ரே மாலை வீடு திரும்புமுன் எல்லாம் முடிந்து விட்டிருந்தது. 

வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்தன நான்கு சவங்கள். கொள்ளிக் குடம் சுமக்கையில் ஈரல் கீறிப் பிளந்து வேதனித்தது நாத்ரேக்கு.

திருட்டு ரயிலேறிப் போய் நாக்பூரிலோ ராய்ப்பூரிலோ ஜபல் பூரிலோ கட்டிடக் கூலியாக செங்கல் லோ ஜல்லியோ மணலோ சுமந்திருக்கலாம். கரகரத்த குரலில்அபங்பாடிக்  கையேந்தி  நடந்திருக் கலாம். தினத்துக்கு ஐந்து ரொட்டி சம்பாதிக்க இயலாதா?

எதை அஞ்சினான் பாகோஜி?

வயிற்றை அஞ்சினானா? பருவமான பெண்களின் வாசம் கவர்ந்து வரும் கோரைப்பல் ஓநாய்களை அஞ்சினானா?

தன்னை மட்டும் ஏன் விட்டுப் போனான்?

உடைந்து உடைந்து பெருகியது கிழவனுக்கு. தன்னிலிருந்து தன்னை விலக்கி, தன்னைச் சேர்த்துத் தன்னை மாய்த்து..

தனியாகத் தன்னை மாய்த்துக் கொள்ளத் திராணியில்லை நாத்ரேக்கு!

கதையின் இரண்டாம் பகுதியில், ஒரு விற்பனைப் பிரதிநிதி யான பாபு ராவ் அடிலாபாத் ரயில்நிலையத்தில் அவசரமாக ஓடி வந்து ரயிலை பிடிக்கிறார். சாப்பிட நேரமில்லாததால்  சோள ரொட்டியை பார்சல் வாங்கிக் கொண்டு ரயில் ஏறும் அவர், ரயில் புறப்பட்டதும் சாப்பிடத் துவங்குகிறார்.வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு, பறக்கும் தூசி ரொட்டியில் விழாமல் காபந்து செய்து கொண்டு, கார மிளகாய் கடித்துக் கொண்டு, நிதானமாக ரொட்டியைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தான்.

கால் துண்டு ரொட்டியும் கொஞ்சம் சப்ஜியும் இலையில் மீதம் இருந்தன. ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் விரல்கள் கவ்விப் பிடித் திருந்தன. வாய்க்குக் கொண்டு போகும் நேரம். பாபுராவின் உயர்த்திய கையை, முதிய, தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப் பிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து பார்த்தான்

அமி காணார்அமி காணார்…’,

 ‘எனக்குத் தாஎன்றல்ல, ‘நான் தின்பேன்என்றல்ல, ”நாம் உண்போம்” என. தூய சங்கத் தமிழில் பெயர்த்தால்யாம் உண்பேம்என

கண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் மீண்டும் பதற்றம் பரவ, ”அமி காணார்அமி காணார்…”

பல்கிப் பெருகிக் கிளைத்துத் தழைத்த பசியின் மொழி பாபுராவை திடுக்கிடச் செய்தது

நம்மையும்தான்.ஒரு நவீனமயமாகிக்கொண்டிருக்கும் தேசத்தின் விவசாயியைச் சோற்றுக்கு அலையவிட்டுள்ள நம் காலத்தின் வெக்கையும் வேதனையும் இந்த ஏழு பக்கக் கதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது.சமகாலத்தின் கதையை கலை அமைதி கெடாமல்,அதே சமயம் அரசின் மீதான விமர்சனத்தையும் வைத்து அழுத்தமானகுரலில் பேசியிருக்கிறார் நாஞ்சிலார்.

பல்கிப் பெருகிக் கிளைத்துத் தழைத்த பசியின் மொழியை நாம் நாஞ்சில்நாடனின் 90 சதவீதக் கதைகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.பசியும் பசித்த வயிற்றுக்கு உணவும் நாஞ்சில்நாடனின் சிறுகதைகளின் முக்கியப் பாடுபொருளாக அமைந்திருக்கிறது.

எண்பது கதைகள் கொண்ட  தொகுப்பின் முதல் கதையான விரதம் கதையே சின்னதம்பியா பிள்ளையின் பசியோடு தான் துவங்குகிறது. சின்னத்தம்பி யாபிள்ளை மட்டுமல்ல. நாஞ்சில் நாடனின் எந்த ஒரு கதாபாத்திரமும் கதைக்குள் தனியாக வருவதில்லை. தனியாக அறிமுகம் ஆவதும் இல்லை .அவருடைய கதைகள் ஊரை விரிவாக வர்ணித்து அவ்வூரில் நடமாடும் மனிதர்களை வர்ணித்து அந்த மனிதர்களில் ஒருவராகத்தான் ஒவ்வொரு கதையின் நாயகனும் நாயகியும் அறிமுகமாவார்கள்.நாஞ்சில்நாடன் கதைகளின் மிக முக்கியமான அடையாளம் என்று சொல்லலாம்.

வண்ணதாசன் கதைகளில் விரிக்கப்படும் திரைச்சீலையைப் போலவே  நாஞ்சில் நாடன் வரையும் ஓவியத்துடன் சேர்த்து அவர் விரிக்கும் பின் திரையும் மிகுந்த கவனமும் முக்கியத்துவமும் உடையவை.

நாஞ்சில்நாடன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் | Buy Tamil & English Books Online | CommonFolks

I . நாஞ்சில் நாட்டுக்கதைகள்

நாஞ்சில்நாடனின் முக்கால்வாசிக்கதைகள் நாஞ்சில்நாட்டுக் கிராமத்தைக் களனாகக் கொண்டே இயங்குகின்றன.எல்லாம் சைவ வேளாளக் குடும்பங்களின் பண்பாட்டு அசைவுகளையும் அவர்களின் விவசாயம் சார்ந்த பொருளியல் கூறுகளையும் அக்கிராமங்களுக்குள் ஊடும்பாவுமாகப் பின்னிக்கிடக்கும் திராவிடக் கட்சிகளின் அரசியலையும் வயல்வெளிகளில் அம்மக்கள் கொட்டும் உழைப்பின் மகத்துவத்தையும் அவர்களுக்குள் உள்ளுறையாகக் கிடக்கும் பாசத்தையும் துரோகத்தையும் ஆதிக்க உணர்வையும் அடிமைத்தனத்தையும் பக்தியையும் கடவுள் மறுப்பையும் மேன்மைகளையும் கீழ்மைகளையும் எந்த ஒளிவுமறைவுமின்றிப் பேசுகின்றன.

இக்கதைகளைச் சொல்ல அவர் கைக்கொள்ளும் மொழி தனித்துவமானது.பெரிதும் மக்களின் பேச்சு மொழியைச் சார்ந்து நிற்பது.அவசியப்படும் இடங்களில் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு வரி பளிச்சென மின்னுவது.இப்படிப் பின்னிப்பின்னிச் செல்லும் மொழிநடை நம்மை அப்படியே ஆகர்ஷித்து ஆலிங்கனம் செய்துகொள்கிறது.

ஒன்று

நாஞ்சில் நாட்டுக்கதைகளில் ஒரே சாதிக்குள்ளும் நிலவும் வர்க்க வேறுபாட்டைத்துல்லியமாக வேறுபடுத்திக்காட்டும் கதைகள் நம் கவனத்தை முதலில் ஈர்க்கின்றன.

’சில வைராக்கியங்கள்’ கதையில் பண்ணையார் பரமசிவம் – அவருக்கு வில் வண்டி ஓட்டும் ஆறுமுகம் இருவரும் அவரவர் வீட்டில் காலையில் தயாராகும் காட்சியை அருகருகே வைத்து நமக்குக் காட்டுகிறார்.

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல

 உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல

 பெண்டிர் சதமல்ல

 என்று நீட்டி முழக்கிப் பட்டினத்தடிகளைப்  பரலோகம் வரை சென்று பற்றி இழுத்தது பரமசிவம் பிள்ளையின் வெண்கலக் குரல்…..

பூஜையை முடித்துவிட்டுக் கூடத்துக்கு வந்தார் உடலெல்லாம் வரிவரியாக திருநீற்றுப் பூச்சு. கழுத்தில் தங்கத்தால் கோக்க்ப்பட்ட உருத்திராட்சம்அரையில் நூறாம் நம்பர் இரட்டை வேட்டி. வேட்டியை மீறிச் சரிந்திருந்த தொந்தியை இழுத்து பிடிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது அரையில் சுற்றிக் கட்டிய துண்டு …..

இன்னும் நேரம் இருக்கிறது. என்றாலும் சூட்டோடு சாப்பிடுவதில் அவருக்கு விருப்பம்சூடு ஒரு ருசி; சிவப்பு ஒரு அழகுஇல்லையா?   அடுக்களையை  நோக்கி நடந்தார்.

நுனி வாழை இலையில் ஆவி பறக்க ஐந்தாறு இட்லிகளை வைத்து ஓரத்தில் இரண்டு மூன்று கரண்டி மிளகாய்ப் பொடியை வைத்து  அவர் அதை விரலால் குழிக்க நல்லெண்ணெயை அதன் மீது சரித்தாள் மனைவி.

பரமசிவம் பிள்ளை சாப்பிட ஆரம்பித்தார். உள்ளே போய்க் கொண்டிருந்த இட்லி களின் எண்ணிக்கையை கணக்கிட்டால்ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்லஎன்று சற்றுமுன் பாடியவர் இது ஒன்றைத்தான் சதம் என்று எண்ணுகிறாரோ  என்று தோன்றும்.

சாப்பிட்டுவிட்டு வெளிப்படிப்புரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் சுடச்சுடச்  சாப்பிட்டதால் அந்தப் பனி மாதத்தில் கூட, அவர் மேனியில் வியர்வை பொடித்தது .தோளில் கிடந்த துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டு வெற்றிலை போட ஆரம்பித்தார்.

*

Nanjil Nadan Kathaigal by Nanjil Nadan

ஆறுமுகம் குதித்துக்கொண்டிருந்தான். அவனும் பிள்ளைமார்தான் . வயதும் பரமசிவம் பிள்ளையைப் போல் அறுபது இருக்கும். என்றாலும் வறுமை காரணமாகவோ, இல்லைவண்டிக்காரன்பதவி காரணமாகவோ அவனுக்குர்மரியாதையோ, ‘பிள்ளைபட்டப் பெயரோ யாரும் தருவதில்லை. எல்லோருக்கும் அவன் வெறும் ஆறுமுகம் மட்டும்தான்

செறுக்கி மவளே.. நாகருகோயிலுக்குப் போணும்காலப் பறையே வண்டிபோடணும்ணு நேத்தே சொல்லி இருந்தம்லா? ஒனக்கு இப்பத்தான் தொவையலரைக்க நேரங்கெடச்சா?” ஆறுமுகத்தின் கூக்குரல், அழுது கொண்டிருந்த அவன் கடைசி மூன்று வயது மகளின் வாயைக்கூட அடைத்து விட்டது.

”இன்னா ஆச்சுஆக்கப் பொறுத்தவரு ஆறப் பொறுக்க மாட்டாரா!” என்று சொல்லி அம்மியிலிருந்து துகையலை வழித்துவிட்டு எழுந்தாள் அவன் மனைவி.

”சரி…. சரி…. கஞ்சியை ஊத்துஎன்று சொல்லி. ‘பத்தும் தண்ணி யுமாகக் கலந்து வைக்கப்பட்டிருந்த தாலத்தின் முன் உட்கார்ந்தான்.

பூவரச இலையில் வைத்திருந்த புளித்துகையலைத் தொட்டு நாக்கில் தீற்றிக்கொண்டு அவன் விரல்கள் தாலத்தில் நீந்தின. கஞ்சியை குடித்து வாயைக் கொப்பளித்துவிட்டு மீசையைக் கையால் ஒதுக்கினான்.”யேவ்யேவ்என்று இரண்டு ஏப்பமும் விட்டபிறகுதான் அவனுக்குத் தெரிந்தது, தான் அனாவசியமாகக் கோபப்பட்டு விட்டோம் என்று.

அடுத்தடுத்து,அருகருகே இவ்விரு காட்சிகளை வைப்பதன் மூலமும் பண்ணையார் சாப்பாட்டை எள்ளலுடன் குறிப்பிடுவதன் மூலமும் தன் சாய்மானத்தைச் சந்தேகத்திடமின்றிக் காட்டிவிடுகிறார்.எல்லா அசலான கலைஞர்களையும் போலவே  நாஞ்சில்நாடன் எளியவர்கள் பக்கமே நிற்கிறார்.சாதி ஒன்றெனிலும் வர்க்கம் வேறு என்பதை இதைவிடக் கலாபூர்வமாக எப்படிச் சொல்வது?

’எச்சம்’ என்கிற கதையில் பண்ணையார் பலவேசம்பிள்ளை செத்துப்போகிறார்.அந்த மரணத்தைப் பண்ணையார் வீட்டார் எதிர்கொள்ளும் விதமும் அவர் பண்ணையில் உழைக்கும் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் விதமும் இருவேறு பார்வைகளாகக் கதையில் இயல்பாக வந்து நிற்பதைப் பார்க்கலாம்.

”கோலப்பன் வீட்டை நோக்கி நடந்தார். அவர் தலைமறைந்த பிறகு மாடசாமி முணுமுணுத்தான். “செத்தாரா…! மனுசன் நல்லா அழுந்தித் தான் செத்திருக்காருடேசின்ன நிலையா நிண்ணாரு…” –

பின் ஏர் அடித்துக்கொண்டிருந்த யாக்கோவு சொன்னான். “மச்சான்உமக்கு யாபகம் இருக்கா…? பத்து வருசம் முன்னாலேசெவுத்தி யானுக்கு மக போட்டாளே போடு, வாரியக் கொண்டையாலமனுசனுக்குப் பொறகாவது சொணை வந்தா? கண்டவ பின்னாலே கார்த்திகை மாசத்து நாய்மாதிரி அலையத்தாலா செய்தாரு…” –

அது மாத்திரமாடேஇருபது வருசமா மாடா வேலை செய்யோம்மூணாமாண்டு ஆடி மாசம்பொட்டு நெல்லு இல்லே வீட்டிலேபிள்ளைங்கெல்லாம் பட்டினி கெடக்குஒரு அஞ்சுமரக்கா நெல்லுத் தாரும்ணு கேட்டேன்மனுசன் பேப் பட்டியாட்டமா வள்ளுண்ணுல்லா விழுந்தாரு. திருப்பி வாங்காமலா விடுவாருசவம்  பின்னே  சொணை கெட்டுப் போய்த்தான் வேலை செய்யோம்தூபெரிய பண்ணையாரு…” மாடசாமி காறி உமிழ்ந்தான். ”

இருள்கள் நிழல்களல்ல” கதையில் ஒரு பெரிய வீட்டு கல்யாணம். கல்யாண வீட்டு வாசலில் கடைசிப் பந்தி முடிந்தபிறகு நமக்கும் மீந்த சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் கையேந்திக் கூட்டம் . கல்யாணப் பரபரப்புக்கு இடையில் வசதியான உறவினர்கள் கார்களில் வந்து இறங்கிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் காத்திருக்கிறார்கள்.

” கொஞ்சம் தள்ளிப் போய் இரிங்கோஇப்பமே மாநாடு கூடியாச்சா.. இன்னும் நேரமில்லா கிடக்கு ..”என்று விரட்டும் குரல்கள்.

விரட்டலுக்கு பயந்து  ஒதுங்கி இருந்த அவர்கள் நசுங்கிய அலுமினியப் பாத்திரங்கள், மழிக்கப்பட்ட தேங்காய் சிரட்டைகள் ,பீழை  வறண்ட கண்ணிமைகள் ,பூர்வாசிரமத்தில் இன்ன நிறமாக இருந்தது என்று சொல்லமுடியாத கிழிந்து நைந்த  அழுக்குகள், அவசரகால நிவாரணமாக செப்பனிட வேண்டிய ஒட்டிய வயிறுகள், கனவுகளே இல்லாத வெளிறிய கண்கள்.

கோயில் உண்டியலை எண்ணிக் கணக்கிட வேண்டிக்  கொட்டிக் கொடுக்கும் போது முழு ரூபாய் எட்டணா நாலணா நாணயங்களுக்கு இடையில் கிடைக்கும் செல்லாத ஓட்டைக் காலணாக்களைப் போன்று அந்த கும்பல் கூசிக் குறுகிப் புறக்கணித்துப்  புறந்தள்ளப்பட்டு கிடந்தது. இந்தப் புறக்கணிப்புகள் என்றும் எங்கும் நிகழ்ந்து மரத்துப்போன மனம். அதனால் இது ஒன்றும் உறைக்காமல் ஓட்டியபோது நகரவும் நீங்கிய போது நெருங்குவது மாக இருந்த ஊமை நாடகம்..

முதல் பந்தி முடிந்தது எச்சிற்கையைத்  தாழ்த்தப்பட்ட சாதியைப் போல உடலிலிருந்து நீக்கித்  தனியாக மடக்கிப் பிடித்துக் கொண்டு சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்கள். தெருவில் இந்தக் கும்பல் ஒதுங்கி இருந்த இடத்தின் தெற்குப் புறம் பெரிய உருளியில் நிறைத்து வைத்திருந்த தண்ணீரைகச்  செம்பினால் கோரி கோரிக் கையையும் வாயையும் கழுவிக்  கொப்பளித்துப்  பலருக்கும் முகத்தில் வியர்வை பிடித்திருந்தது. பனியன் போடாமல் சட்டை மட்டும் போட்டவர்களுக்கு வியர்வையில் சில இடங்களில் ஈரம் படிந்திருந்தன. சாப்பிடுவதே உழைப்பாகிப்  போய்விட்டதால் உழைக்கும் போது  வியர்க்காதா

ஒவ்வொரு பந்தியும் முடிவதும் வீட்டுக்காரர்கள் கைகழுவுவதும் இந்தக் கும்பல் காத்திருப்பதும் எனக் கதை முழுவதுமே இவ்விரு வர்க்கங்களையும் நாணயத்தின் இருபக்கங்களையும் மாற்றி மாற்றிக் காட்டுவதுபோலக் காட்டி வாசக மனதில் பெரும் மன உளைச்சலையும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம் என்கிற பெருமூச்சையும் ஒருசேர உருவாக்கி விடுகிறார்.இரண்டுக்கும் நடுவில் சிக்கிய பண்டாரம் என்கிற நாவிதரின் வழியே கதை சொல்லப்பட்டாலும் இருவேறு வர்க்கங்களின் படப்பிடிப்பாக அமைந்து நிற்கிறது.

‘உபாதை’ கதையில் பூமணி என்கிற உழைக்கும் வர்க்கப்பெண்ணும் கங்காதரம்பிள்ளை என்கிற பண்ணையாரும் முரண்படும் கோலம் வரையப்படுகிறது.”அண்ணைக்கு விடியக்காலம் எந்திரிக்கச்சிலேயே மலப்பா இருந்து…இண்ணத்தப்பாடு எப்படிப் போகப்போகோ?சின்னதுகோ மொகத்தை மொகத்தைப் பார்த்துக்கிட்டு பள்ளிக்கொடம் போச்சு…” என்றுதான் பூமணிக்குப் பொழுது விடியும்.கங்காதரம்பிள்ளை வயலில் வேலை பார்த்தால் வெள்ளிக்கிழமை பொழுதுசாய்ந்து விட்டால் அவரிடம் கூலி வாங்க முடியாது.

“என்னட்டீ மூதி?இண்ணைக்கு வெள்ளிக்கிழமைன்னு தெரியாதா?மூந்தி கருக்கல்லே வந்து நிக்கே?..

“ஓர்மையில்லே நயினாரே ..ஆனா நேத்தே பட்டினி..கும்பித்தீயை பச்சத்தண்ணி குடிச்சு அணைக்கவா முடியும்? தந்து அனுப்பும் நயினாரே..”

“….காலம்பற ஏழு மணிக்கு வந்து ஓங்காசை வாங்கீட்டுப்போ…சவங்களுக்கு என்னத்தைக்கொடு, நிறைவே கிடையாது..”

என்பது நடைமுறை.இன்றும் அதே போல வெள்ளிக்கிழமை வேலை சுணங்கி இருட்டிவிட்டது.என்ன சொல்லப்போறாகளோ என்கிற பதைப்புடன் ஓட்டமும் நடையுமாக வரப்பில் வந்துகொண்டிருக்கிறாள்.வயல்வெளியில் ஆளரவமில்லை.அந்த இருட்டுக்குள் திடீரென்று கங்காதரம்பிள்ளை வந்து குறுக்கிடுகிறான்.

“..வளியை விடும் ..போட்டும்..”

“ அது சரிதான்…போறதுக்கா இவ்வளவு நேரம் தாயமாடிட்டு நிண்ணேன்..வா..கொஞ்சம் செண்ணு போகலாம்..” என்று கையைப்பிடிக்கிறான்.அவள் கையை உதறிவிட்டுச் சுற்று முற்றும் பார்க்கிறாள்.சற்று நிதானித்து “ஆமா.. எம்புட்டுத் தருவேரு..?” என்று கேட்கிறாள்.அவன் பத்துரூபாத்தாளை எடுத்து நீட்டுகிறான்.அதை வாங்கி மடியில் செருகிக்கொண்டு அவனைப்பள்ளத்தில் கிடந்த வயலில் தள்ளிவிட்டு தப்பி ஓடுகிறாள்.

“ஓட்டமும் நடையுமாக ஆற்றைக்கடந்து ரோட்டில் ஏறியபின்பும் பூமணியின் படபடப்பு அடங்கவில்லை.நடையைச் சற்று நிதானித்துக்கொண்டு ,அரிசி வாங்க ரோட்டுக்கடைக்கு ஒதுங்கினாள்” என்று கதை முடிகிறது.நாஞ்சில்நாடன் நேர்காணல்களிலும் நேர்ப்பேச்சுக்களிலும் முற்போக்கு பிற்போக்கு என்று சொல்லுவதை மறுப்பவர் என்றாலும் இக்கதை மிக முக்கியமான ஒரு ‘முற்போக்கு’க் கதை என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை.நாளை அவளுக்கு எனா ஆகுமோ என்கிற கவலையுடன் கதை நம் மனதில் தொடர்கிறது.இத்தகைய வெளி முரண்பாட்டை மட்டுமின்றி பூமணி என்கிற அந்த ஒடுக்கப்பட்ட பெண்ணின் மனதில் ஓடும் உள் முரண்பாடுகளும் கச்சிதமாகக் கதையில் சொல்லப்படுகிறது.

 ‘மார்த்தாளும் சாமிதாசும் பள்ளிக்கொடம் விட்டு வந்திருக்கும்மூதி, உலையாவது வச்சா கொள்ளாம்சமயத்திலே எங்கயாம் போயி வாயைப் பாத்துக்கிட்டு நிண்ணாலும் நிண்ணிரும்சாமிதாசை அஞ்சாறு சுள்ளி பெறக்கிட்டு வர காலம்பறையே சொன்னேன்சவம் போச்சோ? இல்லை எங்காயாம் போய் ஓந்தான் புடிச்சுக்கிட்டு நிக்கோவ்?’ 

அவளுடைய புருஷன் நினைப்பும் கூடவே வந்தது. ‘அஞ்சு மணிக்கே வேல முடிஞ்சுரும்தாளாக்குடிக்குப் போயி அரிசியும் மீனும் வாங்கீட்டு வந்திருப்பாருஒண்ணும் தீர்ச்சையாச் சொல்ல முடியாது. சிலசமயம் எல்லாம் ஓர்மையில்லாம கள்ளத்தனமாக கள்ளு குடிச்சுக் கிட்டு வந்து நிண்ணாலும் நிக்கும்சவம் மாடு கெணக்கதான். ஒரு சுவாவத்திலே எல்லாம் செய்யும். மொரண்டிச்சிண்ணா அதுவும் இல்லேஎன்னமேளமா இருக்கோவ்? போய்ப் பாத்தாதான் தெரியும். நமக்கே பசி பொறுக்க முடியலேண்ணு இருக்கச்சிலே சின்னச் சவங்க எப்பிடிப் பொறுக்கும்?’

ஆண் தலைமையிலான குடும்பமாக வெளித்தோற்ரம் கொண்டிருந்தாலும் உழைக்கும் வர்க்கக் குடும்பங்களில் பெண் தான் தலைமை ஏற்கிறாள் என்பதை இக்கதையிலு இன்னும் பல கதைகளிலும் நாஞ்சில்நாடன் எழுதிச்செல்கிறார்.

அவள் பத்து ரூபாயைக் கைநீட்டி வாங்கியதும் இன்னொரு பொன்னகரத்து அம்மாளுதானோ எனத்தோன்றியது.ஆனால் அப்படி முடிந்துவிடாதது ஆறுதல் அளித்தது.

பேச்சியம்மை – நாஞ்சில்நாடன் | அழியாச் சுடர்கள்

’வாய் கசந்தது’ கதையில் அறுவடை செய்த பொலி நெல்லை அளப்பதற்கு வெண்கலப் பூண் போட்ட பொலி மரக்காலும் கூலி அளப்பதற்கு அதை விடச் சிறிதான கொத்து மரக்காலும் பண்ணைகள் வைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார்.தஞ்சாவூர்ப் பண்ணைகளைப் போலத்தான் தமிழகம் முழுவதும் சுரண்டல் நடைபெற்றது என்பதன் அடையாளம் இது.தோழர் டி.செல்வராஜின் ’மலரும் சருகும்’ நாவல் எழுதிச்செல்லும் ‘முத்திரை மரக்கால்’ போராட்டமும் இதையே பேசுகிறது. 

இதுபோலப் பலகதைகளில் இந்த வர்க்க வேறுபாட்டை, இருப்பவன் இல்லாதவன் இடைவெளியை எந்த மெனக்கெடலும் இல்லாமல்,வலிந்து சொல்லாமல், வாழ்வின் பகுதியாகவும் வாழ்வின் அடித்தளமாகவும் அது இருப்பதைச் சொல்லிக்கொண்டே போவதைப் பார்க்கிறோம்.இரு வாழ்நிலைகளையும் ”அருகருகே வைத்துக் காட்டுவது” என்பதுதான் மற்றவர்களிடம் காணக்கிடைக்காத, நாஞ்சில்நாடனின் தனித்துவமான பாணியாக இருக்கிறது.அவருடைய படைப்பின் அரசியலாகவும் அது அமைகிறது.

இரண்டு

கதாபாத்திரங்களுக்கு எந்த அளவுக்கு இடமும் முக்கியத்துவமும் அவர் கதைகளில் தரப்படுகிறதோ அதற்கு இணையாக ஊரின் மக்களும் ஊரின் மரம் செடி கொடிகளும் ஊரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் வாய்க்காலும் பழையாற்றின் கிளைகளும் முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது. எந்தச் சூழலுக்கு நடுவில் இந்த கதாபாத்திரங்கள் இயங்குகின்றன என்பதை நமக்குச் சொல்வது முக்கியம் என்று அவர் கருதுகிறார். முழுமையின் ஒரு பகுதியாகத்தான் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர் கதைகளில் நடமாடுகிறார்கள் .இந்த சமூகவியல்ரீதியான அணுகுமுறை மிகவும் அறிவியல்பூர்வமானது.எந்த ஒன்றையும் அதன் சூழலிலும் வரலாற்றின் புள்ளியிலும் வைத்துப் பார்க்கும் இப்பார்வை மிக முக்கியமானது.

’கிழிசல்’ என்கிற ஐந்தரைப்பக்கக் கதையில் கதை நாயகனான மாணிக்கம் இரண்டரைப்பக்கம் கடந்த பிறகுதான் கதைக்கு உள்ளேயே வருகிறான்.அவன் எந்தத் திருவிழாவுக்குப் போய் எந்தக்கடையில் சாப்பிடப்போகிறானோ அவற்றின்  சித்திரம்தான் முதலில் விரிவாகத் தீட்டப்படுகிறது.இப்போது நாம் மையக்கதையைக் கேட்பதற்குத் தயாராகிவிட்டோம்.வாசக மனநிலையைத் தயார்ப்படுத்தும் நாஞ்சில்நாடனின் முயற்சிகள் அபாரமானவை..

‘படுவப்பத்து’ கதையில் கதையின் நாலாம் பக்கத்தில்தான் வடக்குத்தெரு சங்கரசுப்பையருக்கு படுவப்பத்தில் முக்கால் கோட்டை விதைப்பாடு இருக்கிறது என்று கதைக்குள் நுழைகிறார்.அதற்கு முன்னால் அழகிய நல்லூர் கிராமமும் அக்கிராமத்தின் சாதி அடுக்கும் வயல்களின் தன்மையும் படுவம் என்றால் என்ன படுவப்பத்து என்றால் என்ன என்பதெல்லாம் கொஞ்சமும் பாக்கி இல்லாமல் விளக்கப்பட்டு…சரியா..இப்பம் கதையைக் கேளுங்க என்று கதை துவங்கும்.

கதை முழுமையாகச் ‘சென்று சேர’ வேண்டும் என்பதில் நாஞ்சில் நாடன் கொள்ளும் அக்கறையும் எடுக்கும் பிரயத்தனங்களும் ஆகா…என்று சொல்ல வைப்பவை.

பெரும்பாலான கதைகளில் அவர் மக்கள் கூட்டத்தை விரிவாகக் காட்சிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்.காட்சிப்படுத்திவிட்டுப் பிறகுதான் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மீது நம் கவனத்தைக் குவிமையப்படுத்துகிறார்.மக்களை-மக்கள் கூட்டத்தை – அவர் மையப்படுத்துவது ஐசன்ஸ்டீனின் ’போர்க்கப்பல் பொடெம்கின்’ படத்தை நினைவு படுத்துகிறது.உதாரணத்துக்கு ஒரு கதை:-

“லைன் வீடென்று சொல்வாரிங்கு” என்று ஆரம்பிக்கும் “கொங்கு தேர் வாழ்க்கை” கதையின் முதல் நாலு பக்கங்கள் லைன் வீடுகள் பற்றிய விவரிப்பாகவும் அவற்றில் வாழும் மக்களின் வாழ்வும் பாடுகளும் பண்புகளும் எனப் பேசி நான்காம் பக்கத்தில்தான் கதை துவங்குகிறது.பிறகும் அது லைன் வீட்டு மக்களைத்தான் படம் பிடிக்கிறது.ஒரே ஒரு முறை நாதஸ்வரம் வாசிக்கும் பெரியவரை மின்னலெனக் காட்டி மறைவதுதான் கதை .ஆனால் அதுவல்ல நாஞ்சில்நாடனின் நோக்கம்.அதைச் சாக்கிட்டு இந்த மாநகரத்துக் கீழ் நடுத்தட்டு மக்களின் வாழ்வை நமக்குச் சொல்ல வேண்டும்.தேன் தடவிக் கசப்பு மருந்தைக் குழந்தைக்கு ஊட்டும் தாயைப்போல மையக்கதை என்ற ஒன்றைக் காட்டி நமக்கு வேறொன்றைச் சொல்ல வருகிறார்.

”இதற்குள் எப்படி ஐயா நான்கு பேர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாழமுடியும் என்ற வினா கிளைத்துப் பெருகுகிற வாசக அன்பர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். மும்பையில் தாராவி யில், கோவண்டியில், சுன்னாபட்டியில், மான்கூர்டில், கோலிவாடா வில் இந்த லைன் வீட்டை மூன்றாகப் பிரித்து வீட்டுக்கு எட்டுப்பேர் ஆணும் பெண்ணுமாய் குழந்தையும் முதியவருமாய் தாயும் பிள்ளையு மாய் பிழைத்து வாழ்வார்கள். மனசிருந்தால் புளியிலையில் கூட மூன்று பேர் புரண்டு படுக்கலாம்

பெரிய பூட்ஸ் ஒன்றினுள் குடித்தனம் நடத்திய கதை ஒன்று நம்மிடம் ஏற்கனவே உண்டு. உடம்பாடு இலாதார் வாழ்க்கை தான் குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று. லைன் வீட்டுக்காரர்கள் என்னதான் முன்னூற்று அறுபத்தாறு பிரிவுகளும் உப பிரிவுகளும் துணைப் பிரிவுகளும் பிற்சேர்க்கைகளும் கொண்ட வாடகைக் குடியுரிமை சட்டங்கள் செய்தாலும் உச்ச நீதி மன்றத்தின் துணை கொண்டு தம்பதியர் புணர்ந்தனர், கர்ப்பமுற்றாள், குழந்தை ஈன்றாள், பிறந்த நாள் கொண்டாடினர், நோயுற்றனர், நோய் நீங்கினர், மரண முற்றனர், விருந்தினர் வந்தனர், பெண் குழந்தைகள் சமைந்தன, லைனுக்குள் சண்டை இட்டனர், சமாதானம் ஆயினர், தக்காளியும் தோசைமாவும் கடன் கொடுத்தனர், மீன் குழம்பு செய்து கிண்ணத்தின் மேல் கிண்ணம் வைத்து மூடிக் கொடுத்தனர். எல்லாம் இன்பமயம்.

நான் குடியிருக்கும் வீட்டின் எதிர்முகத்திலும் பக்கவாடுகளிலும் ஏழெட்டு லைன்கள் இருந்தன. நான் இருப்பதும் ஏகதேச உருவகமாக லைன் வீடுதான்.

”பெரிய பூட்ஸ் ஒன்றினுள் குடித்தனம் நடத்திய கதை” என்று போகிறபோக்கில் அவர் குறிப்பிடுவது கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு..’ கதையை.இப்படி நவீன இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களாஇயும்கூடக் கதைக்குள் வெகு இயல்பாகக் கொண்டுவர அவரால் முடிகிறது.லேசான எள்ளலுடன் கூடிய அவரது நடை அதற்கு அகன்று இடம் கொடுக்கிறது.

காடு,”கால்நடைகள்,கனகதண்டிகள்”,ராஜாக்களும் சீட்டுக்கம்பெனிகளும் ஆகிய கதைகளில் பேருந்து நிலையமும் பேருந்து நிறுத்தமும் அங்கு காத்திருக்கும் மக்களும் கதைமையமாக ஆகிறார்கள்.பஸ்ஸில் ஏறும் கூட்டமே கால் நடைகள் கனகதண்டிகள் கதையின் கதாநாயகம்.ஒரு கும்பல் கலாச்சாரத்தின் உளவியல் இக்கதையில் பேசப்பட்டாலும் அதிலும் வர்க்க வேறுபாடு உள்ளுறையாக இருக்கிறது.

Andhimazhai - அந்திமழை - சிறுகோட்டுப் பெரும்பழம் : நாஞ்சில்நாடன்!

மூன்று

தெய்வங்கள்,தெய்வ நம்பிக்கைகள்,ஆச்சாரங்கள்,அனுஷ்டானங்கள்,சைவம்,ஊரில் நிலைபெற்றிருக்கும் சாதியக்கட்டமைப்பு  என கடவுளும் நம்பிக்கைகளும் சார்ந்து அவர் எழுதியுள்ள கதைகள் நமக்கு வியப்பூட்டுகின்றன.”தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்” ஒரு கதையே போதும். என்ன ஒரு நுட்பமான பதிவு! முத்தாரம்மனின் கதையை வில்லுப்பாட்டுக்காரர் சொல்லி,வரத்துப்பாடிக்கொண்டிருக்கிறார்.வில்லிசைக்கும்  குமரி ,நெல்லை மாவட்ட நாட்டார் கோவில் தெய்வங்களுக்குமான உறவை இவ்வளவு விரிவாக வேறு தமிழ்க்கதைகள் பதிவு செய்ததில்லை. தொ.மு.சி.ரகுநாதனின் ‘ஆனைத்தீ’ கதைக்குப் பிறகு நாஞ்சில்நாடன் கதைகள்தான் இத்தெய்வங்களைப்பற்றி விரிவாகப்பேசி நம்மை மலைக்க வைக்கின்றன.

தெய்வத்தின் கதையும் கோவில் தர்மகர்த்தாக்களான முதலடிகளுக்கிடையிலான அரசியலும் சாமியைவிட முக்கியம் பெறுவதைச் சொல்லும் கதைதான் “தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்” என்றாலும் கதையின் போக்கில் அவர் சொல்லிப்போகும் காட்சிகள் அவருடைய வர்க்கச் சார்பைத் துல்லியமாகக் காட்டுகின்றன.

”அது வேளாளர் சமுதாயக் கோயில்.எனவே தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு  அங்கே இடமில்லை.பலகை அளிக்கு வெளியில் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்.மனிதன் என்பதற்கான மரியாதயைக்கூடத் தேடித்தராத ,தர இயலாத வக்கற்ற தெய்வத்தின் அருள்வேண்டி  அவர்கள் பழியாகக் காத்துக் கிடந்தனர்”

பிரதான தெய்வமாகிய முத்தாரம்மன் கோவிலுக்கு வெளியே துணைத்தெய்வங்கள் நிலை கொண்டிருப்பது வழக்கம்.அதுபற்றி நாஞ்சில்நாடன் எழுதுகிறார்:

அரவணைப்போத்தி கோவிலில் சிலை,சிங்காரம் எதுவும் வித்தாரமாகக் கிடையாது.சுண்ணாம்புக்காரையால் ஆன ‘மொட்டை மொழுக்கட்டை’யான உருவம்.சாதி குறைந்த சாமிக்கு இதுகூட அதிகம் என்று தர்மகர்த்தாக்கள் நினைத்தார்களோ என்னவோ?என்றாலும் இன்று அவர் முகத்தில் செக்கச் செவேரென மஞ்சணை பூசி,அரளிப்பூ,பிச்சிப்பூ ஆரங்கள் கழுத்தில்- அதாவது கழுத்து என்று ஊகிக்கக் கூடிய  பாகத்தில் – புரண்டன.எப்போதும் அடக்க ஒடுக்கமாகவே இருக்கும் அரவணைப்போத்தி,அன்றைய தடபுடலில் சற்று அரண்டு போயிருந்தார்.

அவர் முகத்தில் இருந்த பாவத்தைக் கண்டால் யாராவது பண்ணையார் அந்த வழியாக வந்தால் எழுந்து நிற்பார் போலத் தோன்றியது.

…அடாவடித்தனம் இல்லாத சாமி ஆனதால்,அரவணைப்போத்தி மீது அவ்வூர்ச் சிறுவர்களுக்குப் பயமே கிடையாது.வாட்டசாட்டமாக வளர்ந்திருக்கும் நாற்பது வயது ஆண்பிள்ளையைக் கூட ‘எலே’ என்று விளிக்கும் ‘நுண்மாண் நுழைபுலம்’ உடைய சிறுவர்கள் ஆனபடியால் ,அவர்கள் இந்தச் சாமிக்குப் பயப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லைதான்!கோவிலின் உள்ளே ‘ஒன்றுக்குப்’போனால்கூட ,அவர் அலட்டிக்கொள்வதில்லை.சிறுவர்கள் – அதுவும் –மேல்சாதிச் சிறுவர்கள் அல்லவா?”

மேற்கண்ட பத்திகள் மிக முக்கியமான அரசியலைப் பேசுகின்றன.சாதியக் கட்டமைப்பும் இந்துசமயமும் –அது நாட்டார் தெய்வமாக இருந்தபோதும் கூட- எப்படிப் பின்னிக்கிடக்கின்றன என்பதைப் பிசிறற்ற குரலில் பேசுகின்றன.நாஞ்சில்நாடனின் குரல் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் பக்கம் காலூன்றி நிற்கிறது.

சாதிக்கு ஒரு நீதி பேசுகிற மனுநீதி எப்படி நம் கிராமங்களில் தொழிற்படுகிறது என்பதை ”நேர்விகிதம்” கதையின் ஒரு காட்சியில் அநாயசமாகத் தூக்கிப் போடுகிறார்.கிராமத்தில் பள்ளி விடுமுறை நாளீல் மாங்காய்த் தோப்புகளுக்குள் புகுந்து மாங்காய் அடிப்பது விடலைப்பையன்களின் உரிமை அல்லவா? சூனாப்பிள்ளையின் தோப்புக்குப் பயல்கள் செட்டாகக் கிளம்பிப் போகிறார்கள்.,சாதியில் கீழ்ப்படுத்தப்பட்ட முருகப்பன் தான் குழுவின் கேப்டன்.மற்றவர்களை விடவும் மரம் ஏறுதல்,கொக்கு முட்டை எடுத்தல், கண்ணி வைத்து ஓணான் பிடித்தல் என்கிற சகல வித்தைகளிலும் அவன் தான் முன்னோடி.அப்படி அவர்கள் சூனாப்பிள்ளையின் தோப்பில் நுழைகிறார்கள்.முருகப்பன் மாங்காய் பறித்துப்போட கீழே நின்று மற்றவர்கள் காய்களைக் கடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது சூனாப்பிள்ளை வந்து பயல்களைப் பிடித்து விடுகிறார்.அதற்குப்பிறகு நாஞ்சில் நாடன் எழுதும் இக்காட்சிதான் கதையின் மையம்:

மரத்திலே யாருலே? கீளே எறங்கு செறுக்கிவிள்ளா…” நெஞ்சுத் தோல் மரத்தின் உடம்பில் உரச, அரைகுறை உயிருடன் கீழே இறங்கினான் முருகப்பன். குதித்து நின்று வெடவெடத்த முருகப்பனை எட்டிப் பிடித்த சூனாப் பிள்ளை மற்ற பயல்களை அடையாளங் காண முயன்றார். நிதானமாக எல்லோரையும் பார்த்தார்.

நாராயணன் நிக்கரிலேயே ஒன்றுக்குப் போய்விட்டான். ”என்ன அய்யரே? உமக்கும் கள்ளப்புத்தி வந்தாச்சா?” நாராயணன் அழத்தொடங்கினான். சூனாப் பிள்ளை இரண்டு காய்களைப் பொறுக்கி அவன் கையில் தந்தார். “இனி இந்தப் பயக்க கூடச் சேரப்பிடாதுகேட்டேரா? ஓடும் வீட்டைப் பாத்து.” நாராயணன் ஓட்டம் பிடித்தான்.

அவர் பார்வை மூத்தபிள்ளையின் மகன் சுந்தரத்தின் மீது சென்றது.” மக்கா உனக்கு ஏம்லே இந்தத் தலையெளுத்து. எங்கிட்டே கேட்டா தரவா மாட்டேன்? உங்க அப்பன் அறிஞ்சா தொலைச்சுப் போடுவானே தொலைச்சு? போலேபோசத்த மூச்சுக்காட்டாம போயிரு..”

அடுத்தது பூதலிங்கம், பொன்னையா. பாக்கிப்பேர் மனதில் திடுக் திடுக்கென ஓசை. ரங்கையா ரெட்டியாரின் மருமகன் சிதம்பரத்தின் கண்களில் குளம் கட்டி நின்றது. “இது யாருலே? புதுசா இருக்கு?… ஆங்ரெட்டியாருக்கு மருமகனா? கொள்ளாண்டேநல்ல கூத்துதான். உங்க தோப்பிலே இருந்து நீலமும் ஒட்டும் வண்டி வண்டியாப்போகு. நீ இந்த புளிச்ச மாங்காய்க்கு வந்தியாக்கும்பண்ணிக்குக் கூடச் சேந்த கண்ணுக்குட்டியும் பீத்திங்கும்கது சரியாத்தான் இருக்கு….”

முருகப்பனைத் தீர்க்கமாகப் பார்த்தார். கையைப் பிடித்தபிடி அழுந்தியது. பளீரென கன்னத்தில் ஒன்று கொடுத்தார்.

திருட்டித் தேவடியாவுள்ளா.. களவாங்கவா வந்தே? சாதிகெட்ட பயலுக்கு ரொம்பத் தைரியம் தான்லே.. குளியைத் தோண்டி மூடீரு வேன்.”

கீழே கிடந்த சுள்ளி ஒன்றை எடுத்து வாங்கு வாங்கென்று வாங் கினார். முதுகு, விலா, பெருந்தொடை என்று வரிவரியாககதறக்கதற

இனி வரமாட்டேன்இனி வரமாட்டேன்மண்ணில் விழுந்து புரண்டு துடித்தவனைக் காலால் தள்ளி, “இனி இந்தப் பக்கம் எட்டிப்பாத்தே, வெட்டி வெலி குடுத்துப் போடுவேன்.”

 

மனுதர்மத்தின்படி சூனாப்பிள்ளை தண்டனை கொடுத்ததோடு கதையை முடிக்கவில்லை நாஞ்சில்நாடன்.

மூன்று நாட்கள் கழிந்தன

சித்திரை பத்தாம் உதயத்துக்கு கோழியறுத்தான் வயலில் நட்ட தென்னங்கன்றுகள் எப்படி இருக்கின்றன எனப் பார்த்து வர சூனாப் பிள்ளை காலையில் போனபோதுகால்மாடு தலைமாடாக, குருத்து மண்டைகள் சிதைக்கப்பட்டு நாற்பது தென்னங் கன்றுகளும் கோரமாகக் கிடந்தன. இரண்டு மாதமாக, நிலத்தைப் பண்படுத்தவும் குழி எடுக்கவும் உரம் சுமக்கவும் பட்டபாடு. நக்க வாரித் தென்னங்கன்றுகள் வாங்க கொட்டாரம் பண்ணைக்கு அலைந்தது. பிள்ளைபோல பொதிந்தி தண்ணீர் ஊற்றிசூனாப் பிள்ளை கண்களை மூடிக்கொண்டார்.”

என்று அவர் கதையை முடிக்கும்போது கதைக்கு அழுத்தமான ஒரு ‘முற்போக்கு முகம்’ (மரபார்ந்த!)கிடைத்து விடுகிறது.

நாஞ்சில்நாட்டுக் கதைகளில் 60களுக்கு முந்திய வாழ்க்கையை விவரித்தாலும் அந்த வாழ்க்கை சிதைந்துபோச்சே என்கிற மாதிரி அவ்வாழ்வைப் புனிதப்படுத்தும் வேலையை அவர் செய்வதில்லை.அவ்வாழ்வில் ஏற்பட்டு வரும் சமகால மாற்றங்களைத் தவறாமல் பதிவு செய்கிறார்.

சைவத்தில் ஊறிய நாஞ்சில் வாழ்க்கைக்குள் –சைவாள் காப்பி கிளப் நடத்தும் சுப்பையாபிள்ளை வீட்டுக்குள்ளேயே மாட்டுக்கறி உணவு நுழைந்து விட்டது.சுப்பையாபிள்ளையின் மருமகன் கவர்மெண்ட் உத்தியோகஸ்தன்.மதுரை தாண்டி மேலூர்ப்பக்கம் குடியிருப்பு.மகளைப்பார்க்க, சைவாள் காபி கிளப்பை அடைத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பஸ் ஏறிப் போகும் சுப்பையாபிள்ளைக்கு கலாச்சார அதிர்ச்சி காத்திருக்கிறது.மருமகன் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுக்கறி,மாட்டுக்கறி எடுத்து மகளைச் சமைக்கச்சொல்லிச் சாப்பிடுகிறவர் என்பதை மகள் சொல்லக் கேட்டு சாப்பிட்டதையெல்லாம் ஓவ்..ஓவ்..என்று அங்கேயே வாந்தி எடுத்துவிட்டு ஊர் திரும்புகிறார்.ஆனால்,அதைச் சமைத்துக் கொடுக்கும் மகளை நினைக்கையில் அவருக்குத் துக்கம் அடைக்கிறது.

கணவன் (அவனும் சைவப் பிள்ளைதான்) மூக்கில் நீர் ஒழுக கறியைச் சுவைப்பதைக் காண ஒரு மிருகத்தைப் பார்ப்பது போலிருக்கும் மனைவிக்கு.(கட்டமைக்கப்பட்ட சைவ வெள்ளாள மனம்) பதி கேட்டானே என்று அவள் சமைப்பாளே ஒழியச் சாப்பிடுவதில்லை.இனி மக வீட்டுக்குபோய் எப்படித் தண்ணி குடிக்கது? என்று கவலைப்படும் சுப்பையா பிள்ளையிடம் அவருடைய நண்பரான காத்தமுத்துத் தேவர் “எங்க வீட்டுக்கு வந்தா குடிக்கேரில்லா?அது மாதிரி நெனச்சுக்கிடும்” என்கிறார்.இன்னும் சமாதானம் ஆகாத அவரிடம் “நாளைக்கி உம்ம பேத்தியா திம்பா..என்ன செய்வேரு?வேண்டான்னு தள்ளீருவேரா?” என்று கேள்வி கேட்பதுடன் கதை முடிகிறது.வேற்றுச் சாதி உணவுப்பழக்கம் சைவாள் வீடுகளுக்குள் நுழைந்துவிட்ட உண்மையை அவர்களால் செரிக்க முடியாவிடாலும் அதுதான்  சமகால யதார்த்தம் என்பதை நாஞ்சில் நாடன் பதிவு செய்கிறார்.உணவு அரசியலை முன்வைத்து விவாதிக்க உதவும் முக்கியமான கதை இது.

அன்றும் கொல்லாது,இன்றும் கொல்லாது,ஏவல்,கறங்கு போன்ற கதைகளில் சாமிகளே கதாபாத்திரங்களாகக் களமிறங்கி வேலை செய்வதும் இயலாமையில் புலம்புவதுமாக அலைகிறார்கள்.பரிசில் வாழ்க்கை ஒரு பூசாரியான நம்பியாரின் இல்லாமையைப் பரிவுடன் பேசுகிறது.

சூடிய பூ சூடற்க/ Soodiya Poo Sudarka (Tamil Edition) eBook: / Naanjil Naadan, நாஞ்சில் நாடன்: Amazon.com.br: Loja Kindle

நான்கு

அவரது நாஞ்சில் வட்டாரக் கதைகளின் இன்னொரு முக்கியமான முகம் எனப்படுவது அவர் கதைகளில் உழைப்பைப் போற்றும் விதம்.நெல் விவசாயத்தின் அத்தனை கட்டங்களிலும் செலுத்தப்படும் உழைப்பை நாமே வயலிலும் களத்து மேட்டிலும் நின்று உழைப்பதைப் போன்ற உணர்வைத் தரும் விதமாகத் துல்லியமாக எழுதிச்செல்கிறார்.சொந்த உழைப்பு அனுபவமில்லாமல் இப்படி எழுத முடியாது.

உடைப்பு என்கிற கதையில் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கத் தொழிலாளிகள் இரவிலும் உழைக்கின்ற காட்சி இப்படி விரிகிறது:

”பழையாற்றங்கரையில் ஒரே பெகளமாக இருந்தது. மனிதக் கூச்சல்களின் ஆரவாரம். ‘சதக் சதக்என்று நனைந்து கொவர்ந்திருந்த வரப்புத்திரட்டில் மண்வெட்டி இறங்கும் ஓசை. ‘சொத்தென்று பிரம்புக்குட்டை களில் உரம் சுமைக்கடவங்களில் மண்வெட்டி முங்க வெட்டிக் கோரிய மண் விழும் சத்தம். ‘ம்என்று முக்கி வெட்டி உயர்த்தித் தலையில் சுமந்து ஓடுவோரின் தடதடப்பு

 – பிரியாகச் சுற்றிய வைக்கோல் வடங்களையும் வைக்கோல் கூளங் களையும் பலவீனமான கரையில் பரத்தும் சலசலப்பு. வெட்டிய மண்ணைச் சுமந்து ஆற்றங்கரையில் போட்டு மண்வெட்டுபவனிடம்  மீண்டும் வந்து துரிதப்படுத்தும் அரவம்

வெட்டுபவனுக்கு குறுக்குக் கடுக்கிறது என்று நிமிர முடியவில்லை . சுமப்பவனுக்குக் கழுத்து வலிக்கிறது என்று நிற்க முடியவில்லை. வீசிய வாடைக் காற்றையும் பொழிந்து கொண்டிருந்த மழை யையும் மீறி வியர்வை துளிர்த்து, மழையில் கரைந்தது. ”

வாய் கசந்தது,படுவப்பத்து,உப்பு,உபாதை,வைக்கோல்,ஆங்காரம்,விலாங்கு,கொடுக்கல் வாங்கல்,சுரப்பு,அம்புரோஸ்,எருமைக்கடா,சாலப்பரிந்து போன்ற பல கதைகளின் மையம் வேறாக இருந்தாலும் உழைப்பைப் பல ராகங்களில் பாடும் கதைகளாகவும் அமைவதைச் சொல்லியாக வேண்டும்.அதிலும் குறிப்பாக உள் மாவட்டத்துக்குள்ளேயே  புலம் பெயர்ந்து உழைக்கும்  தொழிலாளியான ’அம்புரோஸ்’ என்னும் உழைப்பாளியின் மரணத்தைப் பேசும் கதை மனதை அசைக்கும் கதை.

II . மும்பைக்கதைகள்

நாஞ்சில் வட்டாரத்தை களமாகக் கொள்ளாத பிற கதைகள் எல்லாவற்றையும் மும்பைக்கதைகள் என்கிற தலைப்பின் கீழ் வைத்துப் பேசலாம்.இந்தியா முழுவதும் சுற்றியலைந்த அவரது வாழ்க்கை அனுபவமும்,மும்பை என்கிற ஒரு சர்வதேச மாநகரத்தின் கீழ் மத்தியதரவர்க்கத்து வாழ்க்கை அவருக்கு வழங்கியுள்ள முதிர்ச்சியும் பக்குவமும் ஒரு தேசம் தழுவிய பார்வையும் மொழி,இன பேதங்கள் கடந்த அன்பும் கனிவும் இக்கதைகளில் துலாம்பரமாக வெளிப்பட்டு நிற்கின்றன.

பயணங்கள்,அதுவும் நீண்ட தூரப் பயணங்கள் கொடுக்கும் பண்பாட்டுப் பாடங்கள் இவை.இவை தமிழர்களுக்குக் கிடைத்திருப்பதைவிட சதா கோவில்களை நோக்கி ரயில்களில் கூட்டம் கூட்டமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் வட இந்தியர்களுக்குக் கிடைப்பது அதிகம்.இதையே ஒரு கதையாக எழுதியிருக்கிறார்.”வளைகள் எலிகளுக்கானவை” என்கிற அக்கதையில் ஏழைகளான மராட்டிய விவசாயிகளில் மூத்தோரெல்லாம் ஒன்று சேர்ந்து பாசஞ்சர் ரயிலில் மட்டும் பயணிக்கும் சுழல்முறை டிக்கட் எடுத்து கன்னியாகுமரிக்கு வருகிறார்கள்.ஆங்காங்கே பிளாட்பாரங்களில் கிடைக்கும் கல்லில் அடுப்பு மூட்டி ரொட்டி சுட்டுச் சாப்பிட்டுக்கொண்டு, தண்ணீர் கிடைக்கும் இடத்தில் குளித்துக்கொண்டு  வந்து சேர்கிறார்கள்.அவர்கள் குமரியிலிருந்து திரும்புவதற்காக கன்னியாகுமரியில் ரயில் ஏறி பெட்டிகளில் இடம் அடைத்து அமர்கிறார்கள். அங்கே ரயிலேற வந்த உள்ளூர்க்காரர்களுக்கு இடமே இல்லை.அவர்கள் அதிகபட்சம் வள்ளியூர் வரை பயணிக்கிறவர்கள்.அவர்கள் இவர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கீழே போட, இவர்கள் மறுக்க என்று தள்ளுமுள்ளு ஆகிவிடுகிறது. கலவரம்போலக் கூச்சலும் குழப்பமும் ஆக, காவல்துறை பறந்து வர,சற்று நேரத்தில் மாவட்ட ஆட்சியரும் வந்து சேர்கிறார்.

அடிவாங்கிய மராட்டிய மக்கள் அதிகாரிகளிடம் முறையிடுகிறார்கள்:

“நாங்க ஏழைங்க சாப்..கற்சிரோசி விவசாயிங்க..வித்தவுட் பிச்சைக்காரங்க இல்லே..போன வருசம் காசி போனோம்..அதுக்கு முந்தி காளிகட் போனோம்…கன்னியாகுமரி வந்து நாங்க ரத்தக்கோறையோட போறோம்…இது நியாயந்தானா?உங்களுக்கே இது நல்லாருக்கா?” 

ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட, மாலையப்பன் முறுக்கை எடுத்து மகாதேவ் தெல்கேயிடம் நீட்ட எனக் கதை முடிகிறது. 

தமிழர்கள் எலிவளைகளுக்குள்,கிணற்றுத் தவளைகளாக வாழ்கிறார்கள்,வட இந்தியர்கள் அப்படி அல்ல என்கிற கோணம் இக்கதையில் உள்ளது.இது விவாதத்துக்குரியது.அப்படிப் பொதுமைப்படுத்த முடியுமா?போக, வட இந்திய மக்களின் பயணம் முழுக்கவே பூஜா,மந்திர் என்றே அமைபவை.வட இந்தியாவில் மதவாத அரசியல் பெற்றுள்ள செல்வாக்குக்கு இந்தப் புனிதபயணங்கள் உருவாக்கும் சமூக உளவியலும் துணை நிற்கிறது என்கிற கோணத்திலும் பார்க்க வேண்டுமல்லவா?2006 இல் நாஞ்சில் நாடன் இக்கதையை எழுதியிருக்கிறார். இப்போது இக்கதையை எழுதினால் இந்தக்கோணத்தையும் கணக்கில் கொண்டு எழுதியிருப்பார் என்று நினைக்கத்தோன்றுகிறது.

தளவாய் சுந்தரம்: நேர்காணல்

மும்பை வாழ்க்கையின் வெதுவெதுப்பான சூழலில் கனிந்த ஒரு நட்பின் காவியமாக வந்திருக்கும் கதை ‘கான் சாகிப்’ .தன் வரலாற்றுக்கதையான இதில் நாஞ்சிலுக்கும் மும்பையில் வாழும் ஆம்பூர் இஸ்லாமியரான கான் சாகிப்புக்கும் இடையில் 1972 இல் முகிழ்த்து 2010 இல் இக்கதையை எழுதும்வரையிலும் பிறகும் நீளும் தூய அன்பின் –சுகுமாரன் மொழியில் சொல்வதானால்- ‘நடு ஆற்றில் அள்ளிய நீரைப்போன்ற’ அன்பின் – நட்பின் கதை இது.ஒரு சைவ வெள்ளாளருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலான இந்தக் காதலை ’பகை வளர்ப்புக் காலமாகிவிட்ட’ இன்று அவர் எழுதியிருப்பதே முக்கியமான அரசியல் என்று சொல்ல வேண்டும்.

கூர்க்காக்கள் எனப்படுகிற இரவு நேரக் காவலர்கள் மீது அளவற்றை அன்பையும் பரிவையும் நம் உள்ளங்களில் ஊற்றெடுத்துச் சுரக்க வைக்கும் ’தன்ராம் சிங்’ என்னும் கதை 2007இல் அவர் விகடனில் எழுதிய மாஸ்டர் பீஸ்.

”அவனுக்கு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. இருக்கத்தானே செய்யும்? பெண்ணும் இரண்டு பையன்களும். இரண்டாண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்குப் போய் வரும் அபாக்யவான் அவன்.

பதினைந்து இருபது பேர் சேர்ந்துதான் பயணமாவார்கள். பம்பாயில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில் வண்டி.. இறங்கி வண்டி மாறி பாட்னா, பரூணி, மன்சி.. மறுபடியும் வண்டி மாறி மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப்பாதையில் மங்கன் வழி சிக்கிம் எல்லை வரை கிழட்டு டப்பா பஸ். ஐம்பது கிலோமீட்டர் போக நான்கு மணி நேரமாகும். பிறகு மலைப்பாதையில் தலைச் சுமடாக வும் மட்டக் குதிரையிலும் பாரம் ஏற்றிக்கொண்டு எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை. காலை எட்டு மணிக்கு மேல் பிற்பகல் நாலுமணிவரை மலைப் பயணம். மலைக் கிராமம் ஒன்றில் கிடை. ஆண்டாண்டு நடந்து பழகிய மலைத்தடம், பனிப்பொழிவு, பாறை கள், கொடுங்குளிர்நமக்கு பொள்ளாச்சியில் இருந்து உடுமலைய பேட்டை போக அலுப்பாக இருக்கிறது. –” என்று நாஞ்சில் எழுதும் இந்த ஒரு பத்தியே போதும்.

Saalapparinthu... (Tamil Edition)

சாப்பாட்டுக்கதைகள் இரண்டு

சாப்பாட்டின் மீது மிகுந்த கவனமும் அக்கறையும் எடுத்துக்கொள்ளும் பகுதிகள் நாஞ்சில்நாடனின் ஏராளமான கதைகளில் வந்துகொண்டே இருக்கும்.சாப்பாடு முக்கியம் என்று பேசுகிற கலைஞன் நிச்சயம் பசியை அறிந்தவனாகவும் உணர்ந்தவனாகவும்தான் இருப்பான்.கால்வயிற்றுக் கஞ்சியேனும் வயிறாரக் குடிக்கத்தானே இந்தப்பாடு.

இரண்டு கதைகளைப்பற்றி மட்டும் இப்பகுதியில் குறிப்பிட்டாக வேண்டும்.ஒன்று ‘இடலாக்குடி ராசா’ இன்னொன்று ’துறவு.’.சோற்றுக்கு வழியில்லாதவரான இடலாக்குடி ராசா கிடைப்பதைக் கிடைக்கிற இடத்தில் சாப்பிட்டுக்கொள்பவர்.சாப்பாட்டுப் பிரியரான நமச்சிவாயம்பிள்ளை இன்னொருவர்.இவ்விரு கதாபாத்திரங்களோடும் நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே அடையாளம் காண முடிவதுதான் இக்கதைகளின் சிறப்பு.

பார்த்தால் மனப்பிறழ்வானவர்போலத்தோன்றும் இடலாக்குடி ராசா உண்மையில் மனப்பிரச்னைக் காளானவரில்லை.எந்த ஊர்,குடும்பம் உண்டா பெற்றவர் உற்றவர் யாரும் உண்டா என்பது ஏதும் தெரியாது.திடீரென்று அவசரமாக ஊருக்குள் நுழைவார்.யாருடையதோ ஒரு வீட்டுத்திண்ணையில்-படிப்புரையில்- அமர்வார்.அக்கா…பெரீம்மா…என்று ஏதேனும் ஒரு முறை வைத்து வீட்டுப்பெண்களை அழைப்பார்.”ராசாக்குப் பசிக்கில்லே…” என்பார்.இவன் போக்கை அறிந்தவர்கள் என்பதால் இருக்கும் பழையசோற்றைப் போட்டு விடுவார்கள்.அப்பம் ராசா வண்டியை விட்டிரவா..என்று கேட்டபடி விறீர் என்று கிளம்பி விடுவார். சாப்பாடு போடாவிட்டாலும் “ராசா வண்டியை விட்டிரவா..” என்று கேட்டுவிட்டு விறீர் என்று கிளம்பி விடுவார். இது வழமையாக நடைபெறும் காட்சி.

இளைஞர்கள் சிலர் ராசாவிடம் விளையாட்டுக்காட்ட காத்திருக்கிறார்கள்.ஒரு கல்யாண வீட்டுச் சாப்பாட்டுக் கூடத்தில் இளைஞர்கள் பறிமாறிக்கொண்டிருக்கையில் ராசாவை அழைத்து வந்து வீட்டார் பந்தியில் அமர வைக்கிறார்கள்.

”நீள நீளமான தலைவாழை இலைகள், ஏந்திய கைகளில் எவர்சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து இலையைத் துடைத்துவிளம்ப நின்ற ஐந்து பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்ப் பச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டு விட்டு விளம்பிச் சென்றான். பிரப்பிரம்மமாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.

நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு, எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்புகறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து

காது வைத்த செம்பு நில வாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோடுவையால் பார்த்து, இலையிலையாக வைத்துக்கொண்டு போனான் ஒருவன். தன் இலைத் தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான்.

எண்ணேன் எண்ணேன்ராசாக்கும் போடாமாப் போறியே…”

பருப்புக்குப் பின்னால் நெய் வந்தது.

ராசாவின் முகத்தில் ஒரு பதைபதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்ராசாக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா…”

இதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப் போல… “சோவென்று சிரிப்பு. ஒரே சமயத்தில் போட்டித் தெறித்த அலையாய் பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காலி ஓசை

ராசாவின் கண்களில்

அவன் இலைக்கு ஒருவன்  சாத நிலவாயை எடுத்து வருமுன்னால்… “அப்பம் நான் வண்டியை விட்டிடுரேன்…” சொற்கள் நனைந்து வந்தன. திடீரென்று சிரிப்பு நின்றது.

விறீர்என்று எழுந்து நடந்தான் ராசா

யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.” என்று கதை முடியும்போது இடலாக்குடி ராசாவுக்காக நம்முடைய கண்களிலும் நீர் திரண்டு நிற்கும்.

இதற்கு நேர் மாறானது  நமச்சிவாயம்பிள்ளையின் கதை.சாந்தம் தவழும் முகம்.நெற்றியில் வரி வரியாக அனுபவக்கோடுகள்.குறுகத்தறித்த தலை மயிர்…தோளில் சுட்டி போட்ட துவர்த்து.மடியில் எப்போதும் தேவார திருவாசகத் திரட்டு.அவரது முதன்மையான பலவீனம் சாப்பாடு.

”ஆனால் அவருக்கு அப்படி குறிப்பிட்ட வகைகளின் மீதல்ல பலவீனம். மொத்தமாக சாப்பாட்டின் மீது. அதாவது சைவ சாப்பாட்டின் மீது. குளித்து முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் சமையலை முடித்து மூடி வைத்து விட்டு பெண்டாட்டி குளிக்கப் போயிருப்பாள். பிள்ளைகள்  பள்ளிக்கோ, விளையாடவோ போயிருக்கும். சோற்றுப் பானை, வரிச்சட்டி, தண்ணீர்ச் செம்பு இவற்றை முன்னால் இழுத்து வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குவார். சாப்பிட்டு முடியும்போது சில சமயம் இரண்டு அகப்பைச் சோறு மீதமிருக்கும். சிலசமயம் சில பாருக்கைகள் மட்டும்  பாசம் காரணமாகப் பானையில் ஒட்டிக் கொண்டிருக்கும். ‘பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளாஎன்று நாவுக்கரசர் பாணியில்பாவி சண்டாளா பேயே பிணம்பிடுங்கிஎன்று பெண்டாட்டி எடுப்பாள். வாயை உரசிக் கொப்பளித்து மேல் துண்டால் கைம் துடைத்து நிற்கும் அவர் மீது இந்தப் பாணங்கள் ஏதும் பாயாது.அதே சாந்தம் பரவிய முகம் 

 மூன்று பேர் சாப்பிடும் சாப்பாடானாலும் உள்ளே போன பிறகு  நமச்சிவாயம் பிள்ளையின் வயிற்றுப் பரப்பில் மாறுதல் ஏதும் தெரியாது. சாப்பிடு முன் வயிற்றில் திருநீற்றுக் கோடுகள் போல் இருந்த குறுக்கு  வரிகள்

சாப்பிட்ட பின்னும் அப்படியே இருக்கும். முன்புறமோ பக்கங் களிலோ புடைத்தல் கிடையாது. தின்ற, தீற்றி எல்லாம் பிரம்மத்தில்  கலந்து விடும் போல.

நாளாக ஆக, குளிக்கப் போகும் போது பெண்டாட்டி வீட்டைப்  பூட்டிக் கொண்டு போனாள்; தனக்கும் பிள்ளைகளுக்குமான சோற்றை  எடுத்து ஒளித்து வைத்து விட்டு, மீதியைப் பானையில் விட்டுச் செல்வாள். நமச்சிவாயம்பிள்ளை குளித்துவிட்டு வருமுன்பே தானும் தின்று  பிள்ளைகளுக்கும் போட்டு விடுவாள். ”  

இப்பேர்ப்பட்ட நமச்சிவாயம்பிள்ளை கடைசியில் ஒரு சமையல் பரிசாரக அய்யரின் குழுவில் சேர்ந்து சோற்றோடே பயணிக்கும் வாழ்வை ஏற்கிறார்.

“சில நாட்கள் கல்யாணச் சாப்பாட்டை ஆர்வமாகத் தின்றார் நமச்சிவாயம்பிள்ளை.பிறகு, சாப்பாடு தயிரும்மாங்காய் உப்பிலிடும்தான்.” என்று நாஞ்சில் கதை முடிக்கிறார்.சோற்றிலிருந்து துறவறம் என்கிற நிலைக்குப் போகிறார்.

சாப்பாடும் சாப்பாடு சார்ந்தும் கதைகளிலும் கட்டுரைகளிலும் நிறைய எழுதிய எழுத்தாளராக நாஞ்சில்நாடன் திகழ்கிறார்.

Enbilathanai Veil Kayum: Buy Enbilathanai Veil Kayum by Nancilnatan ( NanjilNadan) at Low Price in India | Flipkart.com

கும்பமுனி கதைகள்

கும்பமுனி என்கிற கற்பனைக் கதாபாத்திரத்தையும் அவருக்குத் துணையாக அவருக்கு ஆக்கிப்போட தவசிப்பிள்ளை என்கிற பாத்திரத்தையும் (சுஜாதாவின் கணேஷ்-வசந்த் –அயன் ஃபிளமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் போல) மையமாகக் கொண்டு தொடர்ந்து பல கதைகளை எழுதி வருகிறார்.மறைந்த எழுத்தாளர் நகுலனனின் சாயலில் படைக்கப்பட்ட ஒரு மூத்த எழுத்தாளர்தான் கும்பமுனி.தொடர்ந்து கும்பமுனி கதைகளை எழுதி எழுதி நாஞ்சில்நாடன் தான் கும்பமுனி என்று ஆகி விட்டது இலக்கிய உலகில்.அவரைக் கும்பமுனி என விளிப்பதும் நடக்கிறது.இலக்கியவாதியான கும்ப முனி எல்லாவற்றின் மீதும் விமர்சனத்தை வைப்பவராக- எல்லாம் அறிந்த ஞான நிலையில் பேசுபவராக படைக்கப்பட்டிருக்கிறார்.அவருடைய ஆல்டர் ஈகோ போல படைக்கப்பட்ட பாத்திரம் தவசிப்பிள்ளை.இருவரும் பேசிக்கொள்வதன் ஒரு சாம்பிள்:

பாட்டா! சொல்லுகனே ண்ணு வெசண்டையா நெனக்கப்பிடாது. நீரு என்ன எழுதினாலும், பேசினாலும், நேர்காணல் குடுத்தாலும் ஓட்டுப்போட்டாலும் போடாட் டாலும் ஒம்மால ஒரு புல்லும் புடுங்கீர முடியாதுபின்ன என்னத்துக்குக் கெடந்த பெடங்கி அடிச்சுக்கிட்டு வரணும்? இல்லே, தெரியாமத்தான் கேக்கேன்! இளைய தளபதியா உம்மை அறிவிச்சா, உம்மைக் கொண்டு ஏலுமா? ஒரு வீல் செயர் வாங்கப்பட்ட காசு உண்டா உம்ம கோமணத்துக்கு உள்ளே? என்னத்துக்குப் போட்டு வெப்ராளப் படுகேரு?’

அதுக்கு நான் இப்பம் ஒண்ணும் சொல்லல்லியே வே! தமிழ் எழுத்தாளன்னா உங்களுக்கெல்லாம் என்ன நெனப்புண்ணு எனக்கு மனசிலாகாதா? குளி முறியிலே சறுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிஞ்சாக் கூட, சவத்துக்குப் பொறந்த பய சாவட்டும்ணு ஸ்டேட்டஸ் போடக்கூடிய ஆளுததானவே நீங்க?”

தான் செத்துப்போனால் தவசிப்பிள்ளை என்ன செய்வார் என்று யோசித்தார் கும்பமுனி

(காக்கைச் சிறகினிலே-2020)

கும்பமுனி கதைகளில் சிலவே சுவாரஸ்யம் தருகின்றன.பல கதைகள் ஆழமற்ற அரசியல் விமர்சனங்களுடன் அயர்ச்சியும் சலிப்பும் தருகின்றன.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா?

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி வெளியீடு | panuval.com

பெண்கள் கதைகள் இரண்டு

எழுத்தாளர் அம்பையுடன் நட்புடனும் தொடர்ந்த உரையாடல்களுடனும் வாழும் வாய்ப்புப் பெற்றிருந்தபோதும் நாஞ்சில்நாடன் படைப்புகளில் வெடிப்புறப் பேசும் நவீனப் பெண்களின் நடமாட்டத்தைக் காண முடியவில்லை.சமூகம் வரையறுத்த வரம்புகளில் நின்று வாழ்க்கைச் சக்கரத்தை (இந்தக் கேடுகெட்ட ஆம்பிளைகளையும் இழுத்துக்கொண்டு சுழற்றுபவர்களாக) பெண்கள் வருகிறார்கள்.

அமெரிக்காவுக்குப் போய் செட்டில் ஆகிவிட்டு மாதம் தவறாமல் கிராமத்தில் தனித்திருக்கும் அம்மாவுக்கு வங்கிக்கணக்கில் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தவறாமல் மாதாமாதம் பணம் மட்டும் போடும் பையனை ”நேரில் வந்து என்னைப் பார்க்கணும் அல்லது உன் பணம் வேண்டாம்” என நிராகரிக்கும் ஒரு தாய் ”பேச்சியம்மை” இருக்கிறாள்.

“சாலப்பரிந்து” மற்றும் ”தெரிவை” ஆகிய இரண்டு கதைகளைப்பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

“காளியம்மை இட்டிலிக்கார அக்காவாக இருந்தபோது காலணாவாக இருந்தது.இட்டிலிக்கார அம்மாளானபோது இரண்டணா ஆகி,இட்டிலிக்கார பாட்டி ஆனபோது எட்டணா ஆகியது.” 

மகன் மலையப்பனைப் பெற்றுப் பிறந்த நாள் கழியுமுன்னே புருசன்காரன் காணாமல் போகிறான்.மீண்டும் அவனை அவள் காணவே இல்லை.’தேய்ந்து போனதோர் பழந்தாலியும் நெற்றிக்குங்குமமும் தவிர வேறு பொருளற்றுப் போனதோர் இல்வாழ்க்கை.தவறாது வந்த மாதவிடாய் போல அவன் நினைவு வந்தது கொஞ்ச நாட்கள் அதுவும் நின்று போனது”

இப்படியான வாழ்க்கையில் மகனை வளர்த்துப் படிக்க வைத்து  அவனும் வேலைக்குப் போய்க் கலியாணம் கட்டிக்கொண்டு நகரத்தில் சொந்த வீடும் கட்டிக்கொண்டு அம்மையை வருந்தி வருந்தி அழைத்துச் சென்று கூட வைத்துக்கொள்கிறான். பழகிய மாமியார் கசந்துதான் போகிறாள்.வயதாகித் தொண்டுகிழமாகி அவளை ஒரு தனி அறைக்குள் போட்டு வைக்கிறார்கள்.மகன் கூட எட்டிப்பார்ப்பது குறைச்சல்.”உடலில் இருந்த காளி செத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.மனதில் இருந்த காளியும் செத்துக்கொண்டிருந்தாள்”

ஒரு சோக காவியமாக காளியம்மையின் ஜீவிய சரித்திரம் முடிந்துபோவதை நம் மனம் உருகச் சொல்லிவிட்டார் நாஞ்சில்நாடன்.காலமெல்லாம் உழைத்தே சாகும் கோடானு கோடி இந்தியப்பெண்களின் கதை இது.

“தெரிவை” என்கிற கதை மிக முக்கியமான கதை.கண்ணாடி பார்த்து நரைமயிர் பறிக்கும் நாற்பது வயதான நீலவேணி தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டு பெண்பார்க்கும் படலங்களில் காப்பி சுமந்து கொண்டிருப்பவள். 42 பேருக்குக் காப்பி கொடுத்துவிட்டவள்.

”நாற்பத்திரண்டு என்பது தற்போதைய வரிசை எண். எத்தனை யெத்தனை காரணங்கள் நிராகரிப்புக்கு?

ஐந்து பவுன் பேரத்தில் தட்டியது, மாற்றல் கிடையாது என வழுகியது, நிறக்குறைவு என நிராகரிப்பானது,

மூங்கில் கழி போல் என்றும் முன்பல் தூக்கல் என்றும் வக்கை நாடி என்றும் ஏறு நெற்றி என்றும் கொக்குக் கழுத்து என்றும் கூனல் முதுகு என்றும்மூல நட்சத்திரம் என்றும் பாவி கூடுதல் என்றும் மாரும் இல்லை மயிரும் இல்லை என்றும்…”

இப்படிப்பெண்கள் ’காமத்துக்காக ஏங்கிக்கிடப்பவர்கள்’ எனக்கருதும் ஆண்மனங்களோடு நடத்தும் போராட்டங்கள் இன்னொரு புறம்.

” தோழியொருத்தி அடிக்கடி சொல்வதுண்டு, பரபுருடர் யாவர்க்குமே மறைவான நிகழ்நிரல் உண்டென. ஆடை கழற்றினால் யாவும் நிர்வாணம் என்பது போல, ஆண்மனத் தோலைச் சுரண்டினால் அரிப்பெடுக்கும் சேனைக் கிழங்கின் சிவப்புத் தெரிகிறது. புளிவிட்டு அவித்தாலும் தணியாத அரிப்பு, ஊரல், நாக்குத் தடிப்பு.”

வெளிநாட்டிலிருந்து அண்னனும் அண்ணியும் வருகிறார்கள்.அண்ணியும் தாய் சமீபத்தில் இறந்து போனாள்.தன் தகப்பனுக்கு நீலவேணியை இரண்டாந்தாரமாகக் கட்டிவைத்தால் என்ன என்கிற கோரிக்கையுடன் தான் அண்ணனின் சம்மதத்துடன் அண்ணி வந்திருக்கிறாள்.அண்ணிக்காரி நீலவேணியுடன் இதுகிறித்துப் பேசும் கடைசிக்காட்சி உண்மையில் ஒரு ஆழமான துன்பியல் நாடகம்தான்.

கு.அழகிரிசாமியின் “தேவ ஜீவனம்” கதையில் வரும் அருணாசல முதலியாரைப்போல நாம் இந்த சமூகத்தை நோக்கி வெடித்துப் பேசும் மனநிலைக்கு நம்மை ‘தெரிவை’ கதை கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.லா.ச.ரா.வின் ”கன்னியாகுமரி” போல நீலவேணி காத்திருந்தால் கூடப் பரவாயில்லை என்று மனம் கடைசியில் பதைப்புக்கொண்டு விடுகிறது.

சொற்களின் தீராக்காதலராக நாஞ்சில்நாடன் இக்கதைகள் நெடுகிலும் சங்கச் இலக்கியத்திலிருந்தும் பேச்சு வழக்கிலிருந்தும் சொற்களைத் தேடித்தேடி எடுத்துப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டாக வேண்டும்,ஒரு எழுத்தாளன் மொழிக்கு ஆற்ற வேண்டிய தொண்டு அது.

பேரம்(1975),அம்பாரி மீது ஒரு ஆடு (ஏப் 1977) வைக்கோல்-ஜூலை 1977,விலக்கும் விதியும்-1977 ஆகிய நான்கு கதைகளை செம்மலர் ஏடு வெளியிட்டிருக்கிறது.

1975இல் தீபம் இதழில் வெளியான ‘விரதம்’ கதையிலிருந்து 2020 செப்டம்பரில் ஆவநாழி மின்னிதழில் அவர் எழுதியுள்ள ‘உண்டால் அம்ம’ கதை வரை படைப்பின் வேகமும் வீச்சும் குன்றா இளமையுடன் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.

தான் சரி என்று நம்புகிற உண்மைகளைத் தயக்கமின்றிப் பேசும், எழுதும் படைப்பாளியாக நாஞ்சில்நாடன் நம்முடன் என்றும் பயணிக்கிறார்.

Theethum Nandrum: Buy Theethum Nandrum by Nancilnatan (NanjilNadan) at Low Price in India | Flipkart.com

பின்குறிப்பில்:

கும்பமுனியுடன் ஒரு பஞ்சாயத்து:

ஒன்றல்ல இரண்டு பஞ்சாயத்துக்கள்.

பஞ்சாயத்து 1: 

15-08-2020 அன்று விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சார்பில் நாஞ்சில்நாடனுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அ.முத்துலிங்கம்,ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களும் வாசகர்களும் அவரிடம் கேள்விகள் முன்வைத்து நகர்ந்த நல்ல நிகழ்வு அது.

அதில் ஜெயமோகன் ஒரு கேள்வி கேட்கிறார்.இன்றைய நவீன எழுத்தாளர்களும் கூட கட்சிகளுக்குப் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன? இந்தக் கேள்விக்குள்ளேயெ ஜெயமோகன் எழுத்தாளர்களை இரண்டாகப் பிரிக்கும் ஒரு கூற்றையும் சொல்கிறார்.கட்சிக்குப் பின்னால் போகும் எழுத்தாளர்கள் ஒரு வகை.தங்கள் மனச்சாட்சிப்படி எழுதும் எழுத்தாளர்கள் இன்னொரு வகை என்று.

அந்தக்கேள்விக்கான பதிலில் நாஞ்சில்நாடன் இவ்விதம் கூறுகிறார்,” சொந்த லாபத்துக்காகத்தான் சில எழுத்தாளர்கள் கட்சிகளுக்குப் பின்னால் போகிறார்கள்.” அப்படி ஆரம்பித்த பதில் நீண்டு கொண்டே சென்று கம்யூனிஸ் கட்சி என்று பேர் சொல்லாமல் ”கி.ராஜநாராயணன்,சுந்தரராமசாமி போன்ற பலரும் ஏன் கட்சியை விட்டு வெளியே போய்க்கொண்டே இருக்கிறார்கள்.உள்ளே இருக்கமுடியாத மூச்சு முட்டல் இருக்கிறது” என்று முடிக்கிறார்.

கட்சி என்பது ஒரு குறிப்பிட்ட லட்சியத்துக்காகச் சிலர் ஒன்று கூடிக் கனவு கண்டு இயங்கும் ஓர் அமைப்பு.நான் கடந்த 40 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியனாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.நானோ என்போன்ற பல எழுத்தாளர்களுமோ என்ன மாதிரியான சொந்த லாபத்தைக் கட்சியால் அடைந்திருக்கிறோம் என்பதை கும்பமுனி விளக்க வேண்டும்..கட்சிக்குப் பின்னால் போகிறவர்கள் அல்ல நாங்கள்.கட்சியே நாங்கள்தான்.நாங்கள்தாம் கட்சியே.இந்த எங்கள் உளவியலை ’மனச்சாட்சி’ எழுத்தாளர்களால் புரிந்துகொள்ளவே முடியாது என்று நினைக்கிறேன்.

அப்புறம் மனச்சாட்சி என்பது அந்தரத்தில் இருந்து ஆவி மாதிரி வந்து ஒருவரைப் பற்றிக்கொள்வதல்ல.அவரவர் பிறந்த சாதி,குடும்பம்,நாடு ,வாசித்த புத்தகங்கள்,பிறந்த வர்க்கம் என எல்லாம் சேர்ந்து கட்டமைப்பதுதானே?ஆகவே சுதந்திரமான மனச்சாட்சி என்ற ஒன்றே இருக்க முடியாதே?அப்புறம் என்ன மனச்சாட்சிப்படி சார்பில்லாமல் எழுதுவது?குடும்பம்,அலுவலகம்,வாசகர் வட்டம் எல்லாமே அமைப்புத்தானே?அந்த அமைப்புகள் நம் மீது தாக்கம் செலுத்துவதுபோலத்தான்  கட்சி என்கிற அமைப்பும்.இப்படித்தான் நான் புரிந்து வைத்திருக்கிறேன்.நாம் என்ன லட்சியத்துக்காக கட்சியில் இணைந்தோமோ அதைக் கை விட்டாலும் கட்சியை விட்டு வெளியேறலாம்.அந்த லட்சியத்தை இந்தக் கட்சியால் நிறைவேற்ற முடியாது என்று நம்பிக்கை இழந்தாலும் வெளியேறலாம்.ஒவ்வொருவருக்கு ஒரு காரணம்.சொந்த லாபத்துக்காக அவர்கள் வெளியே போனார்கள் என்று கட்சி ஒருபோதும் சொல்வதில்லை.

Nanjilnadan Award 2019-Pa.Saravanan -PART 4 - YouTube

இரண்டாவது பஞ்சாயத்து:

இன்னொரு நேர்காணலில் (பதாகை நேர்காணல்: கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில்)

நாஞ்சில்நாடன் வழங்கும் முன்னுரைகள் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது கண்மணி குணசேகரனின் நாவலுக்குத் தான் முன்னுரை வழங்கியது பற்றிக் குறிப்பிட்டு விட்டு கண்மணியுடன் டான் பேசியதாகக் குறிப்பிடுகையில் 

 ‘நீ பாமக உறுப்பினரா இருக்கலாம், இல்லாம இருக்கலாம். தொழிற்சங்க உறுப்பினரா இருக்கலாம், இல்லாம இருக்கலாம். உன்னுடைய படைப்புல அது interfere ஆகாமப் பார்த்துக்கோ.’ இந்தத் தப்பத்தான் நம்ம இடதுசாரிகள் அத்தனைபேரும் செஞ்சாங்க. மேலாண்மை பொன்னுசாமில இருந்து, தமிழ்ச்செல்வன்ல இருந்து எல்லாரும் இதைத்தான் பண்றாங்க. ”

என்று பதில் அளித்துள்ளார்.

மேலாண்மை பொன்னுசாமி இன்று நம்மோடு இல்லை.ஆனால் நானும் என் கதைகளும் கண்முன்னால் இருக்கிறோம்.நான் எழுதிய கதைகள் இன்றுவரை 35 மட்டுமே.அதில் ஒரு கதையிலாவது கட்சி என்ற வார்த்தை கூட வந்ததில்லை.கட்சிப்போராட்டம் அல்லது கட்சியின் பெருமை என்று எதையுமே என் ஒரு கதை கூடப் பேசியதில்லை.கட்சிக்காகப் பிரசுரங்கள் எழுதுவேன்.பிட் நோட்டீஸ் எழுதுவேன்.புத்தகம் எழுதுவேன்.அது தனி.ஆனால் சிறுகதையில் நான் கண்டதை என் பார்வையில்தான் எழுதுகிறேன்.என் கதைகள் இலக்கியத் தரம் இல்லாதவை என்று சொல்லுங்கள்.தலை தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன். முன்னோடியான உங்கள் கருத்துக்கு நான் மதிப்பளிப்பேன்..ஆனால் கட்சி சொன்னபடி எழுதப்பட்ட கதை என ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது.அப்படி இருந்தால் கதையின் பேர் சொல்லிச் சுட்டிக்காட்டுங்கள் நான் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.கட்சிக்கருத்தைக் கதையாக எழுதுவது ஒன்றும் தப்புமல்ல.அது கலையாக வந்திருக்கிறதா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும்.

நாஞ்சில் நாடன் போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகள் இப்படிச் சொல்வது அவரைப் பின் தொடரும் வாசகர்கள் எங்கள் கதைகளை வாசிக்காமலே புறந்தள்ளும் நிலையைத்தான் உருவாக்கும்.இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதின எந்தக் கதையையும் வாசிக்காமலேயே அதெல்லாம் பிரச்சாரம் என்று பிரச்சாரம் செய்யும் கநாசு காலத்து உளவியலுக்குள் நீங்களும்…. என்பது வருத்தமளிக்கிறது.

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...

5 COMMENTS

  1. கும்பமுனி கதைகளில் வழக்கமான நாஞ்சில்நாடனை பார்க்க முடியாது, தவிர அவரது craftம் அடிபட்டு போயிருப்பதை பட்டவர்த்தனமாக அறிய முடிகிறது.

  2. கடைசில ரெண்டு பஞ்சாயத்தும் காலத்தின் தேவை தோழர். இந்த குரல் முக்கியமானது. இளம் படைப்பாளிகளுக்கு கேடயம் போல கையில் தந்துள்ளீர்கள். வாசிப்போருக்கும் இது ஒரு தெளிவைத் தரும். எழுத்துலகில் பெரிதாக முகம் கிடைத்துவிட்ட சிலரின் அவதூறுகளை ஞாயமான வாதத்தை முன் வைத்து மெல்ல துடைத்து வைத்துள்ளீர்கள். தோழர்.

  3. இந்த சமூகத்தோடு வாழும் எழுத்தாளர்கள் எவரும் சார்பில்லாமல் இருக்க இயலாது அவர்கள் யாரின் சார்பாக எழுதுகிறார்கள் என்பதே முக்கியம். நாஞ்சில்நாடனின் படைப்புகளில் மிகை நாடி மிகக் கொண்ட கட்டுரை.அங்கங்கே சில பஞ் கள் உண்டு. கடைசியில் இரண்டு பஞ்சாயத்துகளில் தேங்காயை உடைத்து விட்டீர்.அப்புறம் என்ன வெள்ளரிப்பழத்துக்கு பூண் பிடிக்கவா தொடர்? ஆனால் இந்தப் பஞ்சாயத்து விவரம் இத்தொடர் நூலாகும்போது பிற்சேர்க்கையிலாவது இடம்பிடித்தாகவேண்டும். தொடருக்கு வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here