கவிதை 1
பேசினேன் கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் இலையுடன் பேசினேன்
கொஞ்ச நேரம் ஏதுமற்ற கிளையுடன்
காற்றிடம் கொஞ்ச நேரம்
கவிதையுடன் கொஞ்ச நேரம்
இப்படி எல்லாவற்றிடமும் ஏதாவது பேசி கொண்டே இருக்கிறேன்
என்னை கொய்து கொன்ற உன்னை பற்றி..
கவிதை 2
(2) தஞ்சாவூர் அழைத்து சென்றேன் அவளை
சிற்பம், கலை, ஓவியம் என
வியந்து வியந்து
வியப்பில் ஆழ்த்தினாள் என்னை..
பிடித்தவையெல்லாம்
கேட்டு கேட்டு வாங்கிக்கொண்டாள்
அங்கே நின்றுகொண்டிருந்த பொம்மையை
ஆசையாய் ஆட்டி ஆட்டி
பார்த்துவிட்டு நகர்ந்தாள்
ஏன் தலையாட்டி பொம்மை
வேண்டாமா! என்றேன்
அதான் நீ இருக்கிறாயே என
தலையாட்டி தலையாட்டி
சிரித்துக்கொண்டாள்
அந்த பொம்மையும்
அப்படியே சிரித்து நகைத்தது
அந்த எதிர்வினையை
எதிர்க்க தெரியாமல்
குழைந்த கூச்சத்தோடு
கொஞ்சும் அவள் விழிகளைப்
பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய்
தலையாட்டாமல்
சிரித்து நின்றேன் நான்.
~ ஷினோலா