சிறுகதை: பிரம்ம முகூர்த்தம் – ஜெயஸ்ரீ

சிறுகதை: பிரம்ம முகூர்த்தம் – ஜெயஸ்ரீ

“ஏம்மா.. வாழக்கா இருக்கா..? சிறுகீரை ஒரு கட்டு குடுங்க.. ” என்றவாறே இரண்டாம் தளத்திலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் சுவாதி. 
 
மடிப்பு கலையாத கரும்பச்சை பருத்திப்புடவை, சின்னதாய் இளஞ்சிவப்பில் வட்டப்பொட்டு, காதில் சின்னதாய் கொஞ்சும் ஜிமிக்கி, வகிட்டில் குங்குமம், குட்டியாய் வைர மூக்குத்தி,  களையான முகம், மாநிறம், ஈரக் கூந்தலை ஊதா நிற டவல் தழுவிக்கொண்டது. “இந்தாம்மா.. 25 ரூபா குடு”,கீரையும் வாழைக்காயும் நீட்டினாள் பங்கஜம் பாட்டி. “இருங்கம்மா.. காபி சாப்பிடுவீங்க” புன்னகையோடு சுவாதி. “பரவால்ல தாயி, யாவாரம் பாக்கணும்.. அடுத்த தபா வாரேன்” அதே புன்னகையோடு சும்மாட்டை சுருட்டி தலையில் வைத்து அலுமினிய கூடையை ஏற்றி நகர தொடங்கினாள் பங்கஜம் பாட்டி. 
 
கீரையும் வாழைக்காயும் எடுத்துக்கொண்டு அடுப்பங்கரை நோக்கி நடக்கையில் சுந்தரின் மொபைலில் யூடிப் சப்தம் கேட்டு காலை போட்டு வைத்த காபியை சூடுபடுத்தி சுந்தருக்கு தந்து தானும் ஜன்னலரோமாய் நின்றபடி தங்க ஒளிவட்டதோடு மிளிறியபடி மேகத்திறையினை திறந்து வெளியே வரும் கதிரவனை ரசித்தவாறே காபியை சுவைத்துக் கொண்டிருந்தாள் சுவாதி. 


 
கலைந்த இரட்டை குடுமியோடு, முக்கால் தூக்கத்தோடு, கையில் சின்னஞ்சிறு பொம்மையை கட்டியணைத்தவாறே மெத்தையிலிருந்து இறங்கி “டுடே ஆன் லைன் க்ளாஸ் இருக்கா மம்மி?” என்ற மீனுக்குட்டி சுவாதியின் பின்னால் நின்று கொண்டாள். “குட்மார்னிங் டா பட்டுக்குட்டி, ஆமா டா கண்ணு, நயன் ஓ க்ளாக் வொக்கேகுபுலரி டெஸ்ட் இருக்கு. சீக்கிரமா ரெடியாயிடு கண்ணா..” மீனுக்குட்டி முன் மண்டியிட்டு அவள் தலையை வருடிவிட்டபடியே. “ஓகே ம்மா” தபதபவென்று கழிவறை நோக்கி ஓடினாள் மீனுக்குட்டி பாதி வழியிலேயே பொம்மையை கீழே போட்டுவிட்டு.
 
ஹாலில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தான் சுந்தர்.
 
“சுவாதிமா.. டீவி ரிமோட் எங்க?”
 
“ஷோபா மேல இருக்கும் பாருங்க” தொடர்ந்தாள் சுவாதி “கீர கடஞ்சி வாழக்கா வருத்து வெச்சிட்றேன். சாமந்தி பூ பால் பாக்கெட் வாங்கிட்டு வந்திருங்க”
 
“ம்ம்..” ஐ. பி. எல் செய்திகளை டீவியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“டிங்டாங்” வாசலில் காலிங் பெல் அடித்தது. 


 
சட்டென விழித்தெழுந்தாள் சுவாதி.  விடியவிடிய மின்னஞ்சல் அனுப்பி களைத்துப்போய் மேசையில் தலைசாய்த்து உறங்கிய உறக்கம் கலைந்து மொபைலை எடுத்துப்பார்த்தாள் மூன்று மிஸ்டு கால் மற்றும் மணி 4:35 ஆகியிருந்தது. “பிரம்ம முகூர்த்தத்தில் கண்ட கனவு பலிக்கும்னு அடிக்கடி மல்லிகா அக்கா சொல்லியிருக்கா..  எப்போ நான் ஹோம் மேக்கர் ஆகுற எங்கனவு பலிக்குமோ..” ஏக்கப்பெருமூச்ச விட்டபடி தண்ணீர் குடித்துவிட்டு, சுந்தரும் மீனுக்குட்டியும் தூங்கிக் கொண்டிருந்த ரூமை லேசாக மூடிவிட்டு ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு, “ஹலோ ஃபெர்ணான்டோ. ஹவ் ஆர் யு. ஸாரி ஃபார் தி டிலே. சம் டெக்னிகல் இஷ்யூஸ்” என்று இரட்டை விழித்திரை உயிரினமாய் வடஅமெரிக்க மேலதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
 
நன்றி
Show 7 Comments

7 Comments

  1. Rathika

    அருமையான வர்ணனைகள் வாழ்த்துகள்.

  2. Suganya R

    குருங்கதை சிறப்பு…. கதையில் வரும் வருணனைக்கள் அருமை. கண்ணில் காட்சியாக விரிகிறது.

  3. Manikandan PK

    Well visualised. Amazing choice of words. Super Madras Tamil by Pangajam Paatti. I loved the overall articulation Jaish ❤️. Keep writing. God bless.

  4. DHANANCHEZHIYAN M

    அடைந்ததை நினைக்காமல் அடைய நினைப்பதை எண்ணிக் கொண்டிருப்பது ஆசை…..

    உங்களின் ஆசையே உங்கள் கனவு நிச்சயம் பலிக்கும் காத்திருங்கள்…

    மு தனஞ்செழியன்..

  5. PADMAVATHY

    Well written..could visualise the story from ur words..good choice of words..keep rocking..all the very best jaishree

  6. C. S. NAGALAKSHMI

    சிறுகதை மிக அருமையாக உள்ளதுநிறைவேறட்டும், வர்ணனைகள் நேராக பார்க்கும் உணர்வை தருகிறது, சுவாதியின் கனவு நிறைவேறட்டும்👍😊

  7. கமலேஷ், தமுஎகச அறம் கிளை

    வாழ்த்துக்கள் தோழர், சிறப்பான சிறுகதை , கதை களத்தை கண்முண்ணே கொண்டு வந்த விதம் மிக அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *