டிரிங் டிரிங்… சமையலறையிலிருந்து வந்து அலைபேசியை எடுத்தால் கதீஜா புது நம்பரா வேற இருக்கிறதே..
ஹலோ யாரு… மெல்லிய குரலில் அக்கா நான் ஜஹீர் பேசுறேன். இங்க சென்னையில் முழு லாக் டவுன் இருப்பதால் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. ஐந்நூறு ரூபாய் இருந்தா கொடுத்தீங்கன்னா விரைவில் திருப்பி கொடுத்துவிடுகிறேன். எட்டு வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடிப்போன தம்பியின் குரலைக் கேட்டு குற்றவுணர்ச்சியுடனேயே அவரை கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிவிட்டாள்.
இந்த எட்டு வருடங்கிடையிலும் ஓரிரு முறைகள் அம்மா வீட்டில் அவனைக் காண போதிலும் அவ்வளவாகப் பேசுவதில்லை. அவன் அப்படி பன்னிட்டு போனதுனாலெயோ என்னாவோ.. ஆனாலும் அவன் மிகவும் பாசத்தோடு நம்முடன் பழகுவான்.. அன்புக்காக ஏங்குபவனாகவே இருப்பான். இருந்தாலும் அவனிடம் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதும் எதற்கெடுத்தாலும் பொய்களும், பண விஷயத்திலும் அவன்மீது கெட்ட பெயராக இருப்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.
டிரிங் டிரிங்.. என்னங்க ஜஹீர் கால் பண்ணா ஐந்நூறு ரூபாய் வேணுமா..என்னாங்க பண்லா.
நீ என்ன சொல்றே.
குடுத்துடுலாங்க ஐந்நூறு ரூபாய் தானே.
சரி, குடுதிடலா ஆனா எப்படி கொடுக்க முடியும்.
அவன் சென்னையில் இருக்கிறான். நாம வேலூர்லே இருக்கிறோம். அவன் அக்கவுண்ட் நம்பரும் தெரியாது. நீ ஒன்னு பண்ணு உன் தம்பி ரபீக்கு சொல்லி ஐந்நூறு ரூபாய் அவ அக்கவுண்டுக்கு போட்டுற்றானு சொல்லு. நான் இவ அக்கவுண்ட்ல போட்டுடறேன்..சரிங்க நா அவன்கிட்ட பேசுறேங்க…
ரபீக் ஏறத்தாள அவன் வயசு தான் இருப்பான். ஆனா அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை குட்டியுடன் நல்ல வேளையிலும் இருக்கிறான். கதீஜாவுக்கு ரபீக் போக இரண்டு அண்ணன்களும் இரண்டு அக்காக்களும் அனைவருக்குமே கல்யாணமாகி நல்லபடியாக இருக்கிறார்கள் ஜஹீரை தவிர..
ரபீக்குடன் பேசிட்டு தர்ம சங்கடத்துடன் போன் செய்தாள் கதிஜா..
என்னங்க ரபீக்கிட்ட பேசினேன். அவன் திட்றாங்க. அவன்கிட்ட இந்த லாக்டவுன்ல இப்ப வரைக்கும் பத்தாயிரத்துக்கு மேலெயே வாங்கிட்டானா..
பெரியண்ணா கிட்ட கூட போன் பண்ணி பைசா கேட்டானா.. அவன் சின்னண்ணா அப்துல் கிட்ட வாங்கிக்கோ சொன்னாரா..
இவன் அப்துல்ணா கிட்டேயும் வாங்கிட்டு ரபீக் கிட்டேயும் வாங்கிட்டானாங்க..
அதனால தயவு செய்து அவனை கொடுக்க வேண்டானு சொல்கிறாங்க. என்னங்க செய்றது..
நீ சொல்றது புரியுது, நான் வெளியே இருக்கிறேன்.
இப்போதைக்கு உங்க அண்ணங்க சொல்ற மாதிறியே நடந்துக்கோ.. சங்கடத்துடனெயே சரிங்க சொல்லிட்டாள்..
அவன் போன் வருமே எப்படி சொல்றதுன்னு தவித்துக் கொண்டிருந்தாள் கதீஜா.
அவன் சிறுவயதில் பிங்க் கலர் முகபாவத்துடன் அவன் சிரித்தால் முகத்தில் குழிவிழுந்து அவ்வளவு அழகாக இருப்பான், சேர்ந்தே விளையாடி வளர்ந்தோம். இந்தப் பிரிவினையை நினைத்து வருத்தம் அடைந்தாள். அவன் நினைவு வரும்போதெல்லாம் தன் பெற்றோர்கள் செய்ததை நினைத்து மிகவும் வருத்தப்படுவாள்.

அவன் மிகவும் சந்தோஷமான வாழ்க்கையிலிருந்திருக்கலாமோ என் பெற்றோர்கள் செய்த காரணத்தினால் தான் இதுபோல அவதிப்படுகிறானோ என்ற எண்ணம்தான் கதீஜாவை இன்னும் வருத்தமாகிக் கொண்டிருந்தது. நாங்க ஆறு பேர் இருந்தும் கைக் குழந்தையாய் ஜஹீர் எங்க வீட்டுக்கு வந்தது இன்றும் நினைவிருக்கிறது.
என்னை விட இரண்டு வயசு சின்னவன். அவன் ஒரு இந்து பையன் என்பதற்காகவே வளர்க்க தயங்கிய எங்க தூரத்து சொந்தக்கார தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை என்பதற்காக ஒரு ஏழைப் தமிழ் பெண்மணியிடம் பெற்ற குழந்தை தான் அவன்.. இதை அறிந்த என் பெற்றோர்கள் அக்குழந்தையை வாங்கி ஒரு இஸ்லாமியனாக வளர்த்தனர். அப்போதும் என் சின்னக்கா இக்குழந்தையை வேண்டாமே நாங்களே ஆறு பேர் இருக்கிறோமே கஷ்டத்துலே வேற இருக்கிறோம்.. அவனையும் வாங்கி கஷ்டப்படுத்த வேண்டாமே என சொல்லியும் என் பெற்றோர்கள் அவன் இஸ்லாமியனாக வாழ்ந்தால் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும், எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதற்காகவே யார் பேச்சையும் கேட்பதற்கு தயாராக இல்லை.
ஏழ்மையிலிருந்த காலம் அது..ஆனாலும் சந்தோஷமும், நிம்மதியும் நம்மைச் சூழ்ந்தே இருந்தது. அந்த நினைவுகள் மட்டுமே இப்போ மிஞ்சி இருக்கிறது.
குர்ஆன் அவனுக்கு ஒத வராததால் எங்க அம்மாவிடம் நிறைய அடி வாங்குவான் ஜஹீர். பாவமாக இருக்கும். அவனுக்கு மட்டும் ஏனோ பள்ளிப் படிப்பும் ஏறவில்லை. கடைசியாக அவனை ஒரு மதரசாவில் சேர்த்தனர்.. இங்கே என் அண்ணன்களுக்குச் சென்னையில் வேலை கிடைக்க அனைவரும் கிராமத்தைவிட்டு சென்னைக்கு வந்து விட்டோம். அவனை மதரசாவிளியே இருப்பதற்கான ஏற்பாடு செய்துவிட்டு.. சில நாள் கழித்து அங்கு இருக்க முடியாமல் அவனும் சென்னைக்கு வந்துட்டான்.
பருவம் மாற மாற நம்முடன் பிறக்கவில்லை என்ற உணர்வு அவனுல் எழாமல் இல்லை…
அண்ணன்கள் நல்ல வேலைகள் பெற இவனும் அதற்கு ஈடாகப் பணம் சம்பாதிக்கச் சின்ன சின்ன வேலைகள் செய்தாலும் திருப்தி இல்லாமல் பணத்துக்காகத் தவறான ஆட்களிடம் அவன் கடன் வாங்கி இருக்க, சிலர் அவனைத்தேடி வருவதும். அண்ணங்க எவ்வளவு அதட்டியும், அவன் தொடர்புகள் தொடர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகமாக, அவன் வீட்டைவிட்டு ஓடியது தான். பிறகு அவனைத் தேடி பணத்துக்காகச் சிலர் தேடி வருவதும்.. அதற்காகவே நாங்களும் வீடு மாறியதாயிற்று….சில வருடங்களுக்குப் பிறகு அவன் வீட்டுக்கு அவ்வப்போது வந்து போவான்.
ஜஹீர் போன் அடிச்சுது..
பதற்றத்துடன் கதீஜா ஹலோ..
“கொடுக்க முடியாதுனா என்கிட்ட நேரடியா சொல்லிவிட வேண்டியதுதானே ஏன் எல்லோரிடம் சொல்லி கஷ்டப்படுத்திறிங்க இனிமேல் கேட்க மாட்டேன் சொல்லி கால் அணைத்து விட்டான் ஜஹீர். கதீஜா கண் கலங்கினாள்.
கதீஜாவின் கோபமே. கைக்குழத்தையாக இருந்த எங்க வீட்ல அவனே தேடி அவன் சொந்த தாய் தயங்கித் தயங்கி வந்து இருக்கா..பாவம் எதுக்காக வந்தாலோ..உடனே எங்கம்மா எங்கே வாங்கிட்டு போயிடுவாலோன்னு மறைச்சுகிட்டாங்களா..நாம ஒரு முறை ஏம்மா அப்படி செய்தேனு கேட்டதற்கு..குடுத்தா அவன் இந்துவா மாறிடுவா..அப்புறம் அவனுக்கு சொர்க்கம் கிடைக்காம போயிடுமே…இப்போ அதெல்லா நினைத்தாலே எரிச்சலா வருது..
உண்மையாகவே அவனுடைய சொர்க்க வாழ்க்கையை அழித்து நரக வாழ்க்கையில் தள்ளி விட்டோமே என்ற வருத்தம் கதீஜாவுக்கு உருத்தி கொண்டு இருந்தது..
கதாசிரியர்:
ருக்சானா ஜமீல்
வாணியம்பாடி
த மு எ க ச, அறம்.

