கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனை தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது.

‘பொறி’
அரவிந்தன்

மாற்றுச் சாவியை வைத்துக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, வீடு இருளில் மூழ்கியிருந்தது. படுக்கையறையில் மட்டுமே ஜீரோ வாட் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. படுக்கையறையிலிருந்து கசியும் மெல்லிய வெளிச்சத்தின் துணையோடு, சுதாகர் காலணிகளை கழற்றி அவற்றுக்குரிய இடத்தில் வைத்துவிட்டுப் படுக்கையறைக்குள் வந்தான். கையோடு கொண்டு வந்திருந்த லேப் டாப்பை படுக்கைமீது நந்தினிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு – இவள் ஏன் புடவை கட்டிக் கொண்டு தூங்குகிறாள் – குளியலறைக்குச் சென்றான்.

கூட்டங்கள், விவாதங்கள், திட்டங்கள், திட்ட முன்வரைவுகள், கடந்த மூன்று மாத நிலவரம் குறித்த பரிசீலனைகள் . . . . நாள் முழுவதும் வாட்டி எடுத்த சுமைகளெல்லாம் குளிர்ந்த நீரில் கரைவதுபோல் இருந்தது. மனம் லேசானதுபோல் இருந்தது. நந்து ஏன் இவ்வளவு சீக்கிரம் தூங்கிவிட்டாள்? என்று தோன்றியது. பதினொன்றரை என்பது சீக்கிரம் அல்ல என்று நன்றாகத் தெரிந்த போதிலும் விட்டுக்குள் வரும்போது இருந்த இறுக்கம் குளியல் அறையைவிட்டு வரும்போது குறைந்திருந்தது.

உள்ளாடையையும் அரை நிஜாரையும் மாட்டிக் கொண்டு, குளிர்பதனப் பெட்டியைத் திறந்து தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டு மறுபடியும் படுக்கையறைக்குள் நுழைந்தபோது “சாப்டாச்சா?” என்ற குரல் கேட்டது.

சுதாகர் விசில் அடித்தான். “நீ இன்னும் தூங்லயா?” என்று கேட்டான். பக்கத்தில் சென்று அவள் அருகில் சரிந்து உட்கார்ந்தபடி தோளைத் தொட்டு “இன்னிக்கு என்ன இவ்வளவு சீக்கிரம்
தூங்கிட்ட” என்றான். நந்தினி நகைச்சுவையை ரசிக்கும் மன நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. “எங்க சாப்டீங்க?” என்றாள்.

“மீட்டிங்லயே சாப்பாடு. சரவண பவன்ல ஆர்டர் பண்ணியிருந்தோம்.”

சுதாகரின் விரல்கள் அவள் தோள்மீது கோலமிட்டன. அவள் அந்த விரல்களைத் தட்டிவிட்டாள். சுதாகர் மேஜையில் கால் சுண்டுவிரல் இடித்துக் கொண்டது போன்ற வலியை உணர்ந்தான். சிறிது நேரம் பேசாமல் இருந்து தன்னை சுதாரித்துக் கொண்டான். பிறகு “ஒடம்பு சரியில்லையா?” என்று கேட்டான்.

நந்தினி பதில் பேசவில்லை. சுதாகரும் சிறிது நேரம் பேசவில்லை. அவளை எப்படி பேச வைப்பது? யோசித்துக் கொண்டிருக்கும்போது அந்தப்புடவை மறுபடியும் கண்ணை உறுத்தியது.

“ஏன் பொடவ கட்டிண்டு தூங்கற? அதுவும் புதுப் பொடவ.”

“பரவாயில்லயே. நா பொடவ கட்டிண்டு இருக்கறதும் உங்க கண்ணுக்கு தெரியுது. அது புதுசுன்றதும் தெரியுது. ரொம்ப இம்ப்ரூவ் ஆயிட்டீங்க.

சுதாகர் சற்று நிம்மதி அடைந்தான். மெதுவாக அவள் கையை வருடியபடி “இங்கே பார்” என்றான். நந்தினி வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டாள். அவன் கை இப்போது அவள் இடுப்பின் மீது படிந்தது. அவள் அந்தக் கையைத் தள்ளிவிட்டு நகர்ந்து படுத்துக் கொண்டாள். அவனது உற்சாகம் முற்றிலுமாக வடிந்துவிட்டது.

“ஃபஸ்ட் க்வாட்டர் கணக்கு முடிக்கற நேரம் நந்து. அக்கவுண்ட்ஸ் உட்பட மூணு டிபார்ட்மெண்ட்ஸ கோ ஆடினேட் பண்ற பொறுப்புல நா இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்லே எல்லாம் முடிஞ்சிடும்”.

நந்தினி அவனைப் பார்த்துத் திரும்பினாள். “ரெண்டு வருஷமா இதே எழவெடுத்த பதிலத்தான் கேட்டுண்ட்ருக்கேன். எதுக்கு ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்றீங்க?” என்றாள். ஆழமான ஆதங்கமும் பொறுமையின்மையும் அவள் குரலில் வெளிப்பட்டன. அவள் கண்கள் சிவந்து வீங்கியிருப்பது அந்த மங்கலான வெளிச்சத்திலும் தெரிந்தது.

“என்ன நந்து இதுக்குப் போய் அழற..” என்றபடி அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான். அவன் குரலும் தழுதழுத்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு “இன்னிக்கு என்ன தேதி தெரியுமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“இருபத்தி மூணு” என்றான். இது நன்றாக அவனுக்கு நினைவிருக்கிறது. இந்தத் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டிய அறிக்கையின் அழுத்தம் கடந்த ஒரு மாதமாக அவன் மனத்தில் பெரும் சுமையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சொன்னபடி முடிக்க முடியாமல் மேலும் மூன்று நாட்கள் அவகாசம் பெற வேண்டியிருந்தும் அந்த மூன்று நாட்களுக்குள் முடிக்காவிட்டால் நிலைமை மிகவும் சிக்கலாகிவிடும் என்பதும் நினைவுக்கு வந்தது, இவனால் இந்த அறிக்கையை இந்தத் தேதிக்குள் சமர்ப்பிக்க முடியாது என்று இவன் பதவிக்குக் குறி வைத்துக் கொண்டிருக்கும் தீபக் மேத்தா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. சவாலில் வெற்றி கிடைக்கவில்லை. எம்.டி.யிடம் கெஞ்சி இன்னும் மூன்று நாள் அவகாசம் பெற வேண்டியதாயிற்று. அந்த மூன்று நாளில் சனி ஞாயிறு அடக்கம். ஆக இந்த வாரமும் நந்தினியை எங்கும் கூட்டிக் கொண்டு போக முடியாது. அவன் மிகவும் ஆயாசமடைந்தான்.

“இருபத்து மூணு, என்ன விசேஷம் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் நந்தினி.

எனக்கு ரிப்போர்ட் சப்மிட் பண்ண இதுதான் டெட்லைன் என்ற வார்த்தைகள் இயல்பாக எழுந்தன. அவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு “என்ன விசேஷம்?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“இந்தப் பொடவ எப்ப வாங்கினதுன்ன ஞாபகம் இருக்கா?”

நேராக விஷயத்துக்கு வராமல் ஏன் சுற்றி வளைக்கிறாள் என்ற எரிச்சலுடன் “இல்லையே” என்றான்.

“இன்னிக்கு நமக்கு வெட்டிங்டே” என்று கேவல்களுக்கு மத்தியில் நந்தினி சொன்னாள். சுதாகரின் பிடி தளர்ந்தது.

கையால் நெற்றியில் அறைந்து கொண்டான். “மை காட்” என்ற வார்த்தைகள் அவன் அடி வயிற்றிலிருந்து புறப்பட்டு வந்தன. போனமாதம் இந்த 23ந்தேதி கெடு குறிக்கப்படுவதற்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை கஷ்டப்பட்டு நேரம் ஒதுக்கி இருவரும் கடைக்குப் போய் தங்களது இரண்டாவது திருமண நாளுக்கான உடைகளை வாங்கிக் கொண்டு சினிமாவுக்குப் போய்விட்டு, பாலிமரில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியது நினைவுக்கு வந்தது, போனவாரம் கூட திருமண நாளைக் கொண்டாடுவது பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் இப்போதெல்லாம் காலையில் அவள் எழுந்திருப்பதற்குள் சுதாகர் கிளம்பிப் போய்விடுகிறான். தொலைபேசியிலும் பேசிக் கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.

“நீ ஞாபகப்படுத்தியிருக்கலாமே நந்து!” என்று பரிதாபமாகக் கேட்டான்.

“வெட்டிங் டே கூட உங்களுக்கு மறந்துபோகும்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்” என்று அழுகைக்கு மத்தியில் சொன்னாள். இப்போது அவள் அழுமை விசும்பலாக மாறியிருந்தது. திடீரென்ற அவன் மடியில் சரிந்தாள். “ஆஃபீஸ்லேந்து லேட்டா வர்றதுகூட பரவாயில்லை சுதா, ஆனா இருபத்து நாலு மணி நேரமும் ஆஃபீஸ் நெனப்பா இருக்கணுமா? உங்களுக்குன்னு ஒரு லைஃப் இல்லையா?” இப்போது அவள் குரல் தெளிவாக இருந்தது.

“இப்பல்லாம் ஆஃபீஸ் வேலன்றது வெறும் உடம்ப மட்டும் பிழியற வேலை இல்ல நந்து. சொல்லப்போனா உடம்புக்கு அதிக சிரமமே இல்ல. எல்லாம் மனசுக்கும் மூளைக்கும்தான். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், இல்லன்னா கோட்டை விட்ருவோம். நாமை குனிஞ்சா நமக்குக் கீழே இருக்கறவன் முதுகுமேல கால வெச்சி ஏறி நம்மத் தாண்டிப் போயிடுவான்”.

“இவ்ளோ கஷ்டப்பட்டு என்னத்த சாதிக்கப் போறோம்?”

“தோ இந்த வீடு வாங்கியிருக்கேனே. முப்பது வயசுக்குள்ள நானா சம்பாதிச்சு வாங்கின வீடு இது. எங்கப்பாவாலயோ உங்கப்பாவாலயோ நெனச்சுப் பார்க்க முடியாத விஷயம். இது பெட் ரூம். நமக்கு ஏ.சி தேவைப்படுது. வீக் எண்ட்ல வெளியே போக கார் இன்னும் நகை நட்டு . இந்த ஆஃபீஸ்தானே எல்லாத்துக்கும் ஆதாரம்”.

“எல்லாமே ரொம்ப காஸ்ட்லின்னு படுது சுதா.”

“எல்லாத்துக்கும் ஒரு வெல இருக்கு நந்து.”

“சின்ன வயசுல நாங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம் சுதா. ஆனா தினமும் ராத்ரி வீட்ல எல்லாரும் சேந்து சாப்டுவோம், ஒரே கும்மாளமா இருக்கும், சிரிப்பு சத்தம் கேட்டுண்டே இருக்கும், இங்கே நாம் சேந்து சாப்ட்டு பலநாள் ஆச்சு. சேந்து சிரிச்சு பல நாள் ஆச்சு”.

“எல்லாம் கொஞ்சநாள்தான் நந்து. எனக்கு பிரமோஷன் கெடச்சிட்டா இதுல பாதி டென்ஷன் போயிடும்”.

நந்தினி விரக்தியாகச் சிரித்தாள். “ரெண்டு வருஷமா கேக்கற பல்லவிதான் இது” என்றாள் அவள் தொடர்ந்து பேசினாள். “நீங்க புக் ஷெல்ப் பக்கம் போய் எவ்வளவு நாளாச்சு ஞாபகமிருக்கா?” அதோடு விடவில்லை “அம்மாவைப் பார்க்கப் போய் எத்தனை மாசமாச்சு?” என்றாள்.

அவனால் பதில் பேசமுடியவில்லை, மெதுவாகக் கீழே குனிந்து அவள் உதட்டின் மேல் முத்தமிட்டான், நந்தினி சிரித்தாள். அவன் கழுத்தைப் பிடித்து இழுத்தாள். பேச்சு அவர்களை விட்டுப் பிரிந்தது. பேச்சின் சாரமும் மறந்தது. வெகு சீக்கிரமே அவர்கள் வெறும் உடல்களாக மாறினார்கள். உடல்கள் தங்களது பிரத்யேக மொழியில் பேசிக் கொண்டன.

உடலின் தன்னிச்சையான செயல்பாட்டில் நிகழ்ந்த வேகமான அசைவொன்றின் போது தன் கால் எதன் மீதோ பலமாகத் தட்டியதை உணர்ந்தான். அதை உணர்ந்த மாத்திரத்தில் மனமும் மூளையும் விழித்துக் கொண்டன. காலில் பட்டது லேப் டாப் கம்ப்யூட்டர் என்பது மூளைக்குள் உறைந்தது. வான்வெளியில் திடீரென்ற சிறகுகள் வேரோடு அறுக்கப்பட்ட பறவை போல சதாகர் வேகமாகத் தரையில் மோதி விழுந்தான்.

இரவு குளித்துவிட்டு லேப் டாப்பை தூக்கிக் கொண்டு உட்கார வேண்டும் என்ற திட்டத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் முதலில் தோன்றியது, இன்னும் மூன்றே நாட்களில் முடித்தாக வேண்டிய வேலையின் கணிசமான பகுதியை இன்று இரவு முடிக்க வேண்டும் என்று மேற்கொண்ட உறுதி அதன் தொடர்ச்சியாக நினைவுக்கு வந்தது. நாலை பகலில் வேறொரு கூட்டம் இருக்கிறது, இதில் உட்கார முடியாது. இன்று இரவு விட்டுவிட்டால் ஒரு நாள் போய்விடும், ஒரு நாள் போய்விட்டால் நிச்சயம் முடிக்க முடியாது, மறுபடியும் தோல்வி. பின் இந்தப் பொறுப்பு தீபக் மேத்தாவுக்குப் போகும், அவன் எனக்கு சமமாக வந்துவிடுவான் பிறகு தாண்டிச் செல்வது சாத்தியமாகிவிடும், அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.

திடீரென்று அவன் உடலும் அதன் இயக்கமும் தளர்வதைக் கண்டு நந்தினி குழப்படைந்தாள். தன் மேல் படுத்திருந்த அவனை இறுகக் கட்டிக் கொண்டாள். அவன் உடலை மறுபடியும் பேசவைக்க முயன்றாள். ஆனால் அவன் உடல்மொழி மாறிவிட்டிருந்ததை தெளிவாக உணர்ந்தாள். பரிதவிப்போடு சில முயற்சிகள் செய்து பார்த்தாள். அந்த முயற்சிகளின் வியர்த்தத்தை உணர்ந்தபோது மனத்தில் கசப்பும் வெறுப்பும் பொங்கி எழ ஆரம்பித்தன. அவள் கை சுதாகரைத் தன் மேலிருந்து சரித்தது.

தன் உடல் விடுபட்டதும் சுதாகர் லேப் டாப்பை பத்திரமாக எடுத்து வைக்க யத்தனித்தான். அவன் கை லேப் டாப்பை நாடுவதைக் கண்ட நந்தினியின் மனத்தில் புயல் மூண்டது. அவளது ஆவேசம் கால் வழியாக வெளிப்பட்டது. அவள் கால் வேகமாக லேப் டாப்பை நோக்கிச் சீறுவதைப் பார்த்த சுதாகர் தாவி எழுந்து லேப் டாப்பை வாரி எடுத்துக் கொண்டான். உதை அவன் இடுப்பில் விழுந்தது. உடலில் பொட்டுத் துணி இல்லாமல் லேப் டாப் கம்ப்யூட்டரை அணைத்தபடி தன் மனைவியின் ஆடையற்ற காலைப் பார்த்துக் கொண்டிருந்தான்

இந்தியா டுடே இலக்கிய மலர் , 2001

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள்
சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு
நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *