நான் முதன் முதலில் மார்க்சியம் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வர்க்கங்கள் என்றால் என்ன? கம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன? (போல்ஷ்விக், மென்ஷ்விக், பூர்ஷ்வாக்கள் என்று பல தோழர்கள் பேசும்போது அவர்கள் வாயை மட்டும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறேன் அர்த்தங்கள் புரியாமல்)
என்ற பல கேள்விகளுக்கு உடன் இருக்கும் தோழர்களிடம் கேட்கும் போது பெரும்பாலான தோழர்கள் முதன் முதலில் பரிந்துரைத்த புத்தகம் ‘சிலந்தியும் ஈயும்’ முதலில் இதை படி உனக்கு புரிகிறதா என்று பார் மேற்கொண்டு வெவ்வேறு புத்தகங்களை தருவோம் என்று ஆரம்ப நாட்களில் சொல்லியதுண்டு.
நானும் சிலந்தியும் ஈயும் புத்தகத்தை வேகவேகமாக படித்த காலங்கள் உண்டு. சிவப்பு அட்டை போட்ட மாஸ்கோ பதிப்பகம் வெளிவிட்ட புத்தகங்களை படித்து புரியவில்லை என்றாலும் அதனை தொட்டு, உணர்ந்து நெஞ்சின் மீது வைத்துக் கொள்வதில் ஒரு சுகம் தான் அந்த சிவப்பு நிறத்திற்கு உண்டு.
இப்போதெல்லாம் சிவப்பு நிற புத்தகங்களை தேடி கண்டுபிடித்து சேகரிப்பதசேகரிப்பதே பெரும் வேலையாக போய்விட்டது.
மாஸ்கோ பதிப்பகத்திற்கு அடுத்தார் போல பாரதி புத்தகாலயமே மிகக்குறைந்த விலையில் புத்தகங்களை விநியோகித்த காலம் உண்டு.
தற்போதும் விலை அதிகமாக இருப்பது பேப்பர் விலை காரணமாக கூட இருக்கலாம். ஒரு சில புத்தகங்களை தவிர்த்து இன்று மீண்டும் சிவப்பு தின புத்தக நாளில் ‘புரட்சியின் துருவ நட்சத்திரம்
தோழர் லெனின்’ புத்தகம் 10 ரூபாய்க்கு கிடைப்பது பெரும் மகிழ்ச்சி வாசிப்பை அனைத்து மக்களிடம் கொண்டு செல்வதற்கும் இந்தப் புத்தகம் உந்துதலாகவும் உகந்ததாகவும் இருக்கும். மலிவான தரமான புத்தகங்களை குறைந்த விலையில் பாரதி புத்தகாலயம் தொடர்ந்து கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
மீண்டும் இன்று ‘சிலந்தியும் ஈயும்’
பாரதிபுத்தகாலயம் வெளியிட்ட அந்த பத்து ரூபாய் புத்தகத்தை எடுத்து வாசித்தேன். (ரெட் புத்தகத்தை காணவில்லை).
எவ்வளவு அற்புதமான ஒரு சின்னஞ்சிறு நூல் உலக முதலாளித்துவத்தையே தன் கைக்குள் கொண்டு வருவதைப் போல எளிமையாக விளக்குகிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் வில் ஹெல்ம் லீப்நெஹ்ட்(1826 – 1900).
நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள் அந்தப் பூச்சி சால்போன்ற வயிருடையது, முடிகள் மண்டிய பிசுபிசுப்பான உடல் கொண்டது. ….
என ஆரம்பிக்கும் அந்தப் புத்தகத்தின் வரிகள் எவ்வளவு கவித்துவமாக, ஒரு சிறுகதையின் தொடக்கமாக எழுதுகிறார் எனில் இவர் மார்க்ஸின் நண்பராக இருப்பதால் என்னவோ கவித்துவமாக எழுதுகிறார்.
அந்தப் பூச்சி யார் என்று நீங்கள் கணித்திருப்பீர்கள் ஆம் அது முதலாளி என்னும் சிலந்தி தான் அதற்குள் மாட்டிக்கொள்ளும் ஈ நாம்தான் என்பதை சொல்லிவிட்டு. ..
சுருங்கக்கூறினால் ஒடுக்கப்பட்டோரும், அடிமைப்பட்டோரும், சுரண்டப்படுவோரும் தான் ஈ, கேடுகெட்ட ஊக வாணிபக்காரர் என்றோ, சட்டம முறையற்ற கொடுங்கோலர் என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கப்படத் தக்கவராய் உள்ள அவரே தான் சிலந்தி.
மேலும்,
தன்னை விடிவித்து கொள்வதற்காக ஈ மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் மேலும் அதிகமான இழைகளில் அதை மாட்ட வைத்து, மேலும் அதிகமான வலைப் பின்னல்களில் சிக்கச் செய்கிறது. முடிவில், எதிர்க்கும் ஆற்றல் அனைத்தும் இழந்து ஓய்ந்துபோய் மூர்ச்சித்துவிடும் ஈ, அதன் பகைவனின், வெற்றியாளனின் அந்தப் பயங்கர சிலந்தியின் காலடியில் கிடக்கிறது!.
இதைப் போன்று தான் தொழிலாளியும் முதலாளியின் காலடியில் கிடக்கிறான். இதற்கு..இதிலிருந்து விடுபட அவனுக்கு விமோசனம் இல்லையா ஏன் இல்லை. அவர் சொல்கிறார் ஒடுக்குமுறைத் தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒருசேரப் பாடுபடுவது ஒன்றே வழி என்பதை தெளிவுபடுத்துகிறார்.
நாம் தனித்து நிற்கும் வரை நம்மைக் கட்டியிருத்தி வைக்கும் வலைப்பின்னல்களைப் பிய்த்தெரியப் பலமற்றவராகவே இருப்போம். நமக்கு விலங்குகளிடம் சங்கிலிகளை உடைத்து எறிவோம். நமது பகைவர்களை அவர்களது பதுங்கு இடங்களிலிருந்து விரட்டி அடிப்போம். எங்கும் அறிவின் பிரகாச ஒளியை பரப்புவோம். பேய்த்தனமான இந்தச் சிலந்தி இனி எந்நாலும் இருண்ட மூலையிலிருந்து தனது கொலைகாரக் கைங்கரியத்தைச் செய்ய வழி இல்லாதபடி செய்வோம்!
மார்க்ஸ் கூறியதைப் போல
“உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!.
நீங்கள் இழப்பதற்கு அடிமைச்சங்கிலிகளைத் தவிர வேறொன்றும் இல்லை ஆனால் அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது”.
நூலின் தகவல்கள்:
நூல்: ‘சிலந்தியும் ஈயும்’
ஆசிரியர்: வில்ஹெல்ம் லீப்னெஹ்ட்
விலை: ₹.10
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
அறிமுகம் எழுதியவர்:

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

