சிலந்தியும் ஈயும் – நூல் அறிமுகம்
தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராகவும் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்தவர் வில்ஹெம்ல் லீப்நெஹ்ட். “லீப்நெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்ததாகும்” என எழுதினார் லெனின்.
சிலந்தியும் ஈயும் ஐரோப்பிய நாடுகளில் வெளிவந்த மிக முக்கியமான பிரசுரம். இது பாட்டாளி வர்க்க மக்களிடையே அரசியல் உணர்வை வளர்ப்பதற்கும், மிக எளிதாய் புரிந்து கொள்வதற்கும் வழிவகை செய்தது. தொழிலாளி வர்க்கத்தோடு லீப்நெஹ்ட் பேசிய உரை தான் இந்நூல்.
சிலந்தியானது தன்னுடைய இரையை சிக்க வைப்பதற்காக மிக கடினமான, எளிதில் வெளியேற முடியாத வகையில் அடுக்கடுக்காய் வலையைப் பின்னும். பிறகு இரை எப்பொழுது சிக்கும் என ஒரு மூலையில் ஒளிந்துக் கொண்டு கண்காணித்துக் கொண்டேயிருக்கும். பிறகு இரையான ஈ சிக்கிக்கொண்டதும் மிக பொறுமையாக அதனை முற்றுமாக உறிஞ்சும் அந்த சிலந்தி. இப்படி சிலந்தியையும் ஈயையும் உவமையாகக் காட்டி முதலாளி வரக்கத்தை சிலந்தியாகவும் நகரத்தையும், கிராமத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரை ஈயாகவும் சொல்லியுள்ளார்.
இரத்தத்தை உறிஞ்சுக் குடிக்கும் அருவருக்கத்தக்க சிலந்தியாக எஜமான், பணமூட்டை, சுரண்டலாளன், ஆசைகாட்டி மோசம் செய்கிறவன், சமயச் சபை மேலவர்கள், எல்லா வகையான புல்லுருவிகள், நம்மை வருத்தும் கொடுங்கோலன், படுமோசமான ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றுகிறவன் அனைவரையும் குறிப்பிட்டுள்ளார்.
உழைக்கும் வர்க்கத்தினரால் தான் எஜமானார்களாகவும், ஒடுக்குமுறையாளராகவும் இருக்கும் சிலந்திகள் பெரியவர்களாகவும் வலியவராகவும் மாறியுள்ளார்கள். மேலும் முதலாளி வர்க்கம் எப்பொழுதும் திருப்தி அடைவதே இல்லை. மேலும் முதலாளி வர்க்கம் உயர்ந்த லாப விகிதம் வேண்டுமென்பதற்காக தொழிலாளர்களுடைய உழைப்பின் பயன்களை அவர்களிடமிருந்து சுரண்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்நூல் தெளிவுப்படுத்துகிறது.
ஒரு பெண் நேர்மையாக வாழ வழி தேடினாலும் கூட, முதலாளிகளின் காமவெறிக்கு அடிபணியாவிடில் வேலை பெற முடியாதவர்களாய் திண்டாடுகிறாள். இப்படி பெண்களை சீரழிப்பதால் தன்மதிப்பு உயருகிறது என்று எண்ணுபவர்கள் சிலந்தியே!
சிறு பிள்ளைகளை ஆலையிலும், பட்டறையிலும் பணிக்கு அமர்த்தி சிறுபிள்ளைகளின் குழந்தைத்தனத்தை திருடக் கூடியவர்கள் சிலந்தியே!
ஏழை சாகுபடியாளர்களையும், பண்ணையடிமைகளையும், கூலியாட்களையும் சிறு ஓய்வின்றி வேலை வாங்கியும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுக்க மறுக்கும் நிலப்பிரபுவும் சிலந்தியே!
மேலும் போதனையின் மூலம் பக்தர்களாகிய எளிய மக்களின் மனதில் பணிந்து ஒடுங்கும் அடிமை புத்தியை வளர்த்து தேசத்தை பாழாக்கும் குருமார்கள் சிலந்தியே!
இப்படி சிலந்தியாக பலர் இருக்க ஒடுக்கப்பட்டோரும், அடிமைப்பட்டோரும், சுரண்டப்படுபவரும் ஈயாக இருக்கிறார்கள். சிலந்திகள் பலமுடையதாக இருந்தாலும் அவை எண்ணிக்கையில் குறைவு. ஈக்கள் சின்னஞ்சிறியதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கை கொண்டவை. ஆக உழைக்கும் பாட்டாளிகள் தனித்து இல்லாமல் ஒன்றுபட்டால் முதலாளி வர்க்கம் கட்டி வைத்துள்ள சிலந்தி போன்ற வலைகளை அறுத்து எரிந்து விடலாம் என்றும் வறுமைகளையும் அடிமை வாழ்வையும் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையே ஒழித்துக் கட்டும் என்பதை இந்நூல் எடுத்தியம்புகிறது.
நூலின் தகவல்கள் :
நூல் : சிலந்தியும் ஈயும்
ஆசிரியர் : வில்ஹெம்ல் லீப்நெஹ்ட்
தமிழில் : இரா. கிருஷ்ணையா
விலை : ரூ. 10
பக்கங்கள் : 16
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
தீபா ராஜ்மோகன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.