சென்ற வாரம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம். தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.சென்னை: இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) படம் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகி உள்ளது.(பிலிம் பீட்)
அனாதை இல்லத்தில் வளரும் சாக்ஷி காது கேட்காத வாய் பேச முடியாத பெண். ஓவியம் வரையும் ஆற்றல் பெற்றவள். அங்கு வளரும் இன்னொரு பெண்ணான சோனாலியுடன் நெருக்கமான தோழியாகிறாள். மற்றவர்கள் அவளுடன் பழகுவதையே பொறுத்துக் கொள்ளாத அளவிற்குஇவள் மேல் அளவுக்கடந்த நேசம் கொள்கிறாள் சோனாலி. ஒரு அருங்காட்சியகத்தில் வேலை கிடைத்து அங்கு செல்கிறாள் சாக்ஷி. அங்கு வரும் இசைக்கலைஞன் ஆண்டனியுடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் மோதிரம் மாற்றும் என்கேஜ்மென்ட் எனப்படும் நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது. சாக்ஷ்சியுடன் சேர்ந்து இருக்க வரும் சோனாலி திடீரென்று காணாமல் போகிறாள். ஒரு பாழடைந்த வில்லாவில் இருக்கும் ஓவியத்தை வரைவதற்காக சாக்ஷ்சியும் ஆண்டனியும் அங்கு செல்கிறார்கள்.அங்கு ஆண்டனி கொல்லப்படுகிறான். இதை விசாரிக்கும் காவல் அதிகாரி சற்று வித்தியாசமாக நடந்துகொள்கிறார். அவர் மனைவி இறந்தபின் அவ்வாறு ஆகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருடன் பணிபுரியும் பெண் போலிஸ் அதிகாரி தீவிரமாக துப்பு துலக்கி மர்மத்தைக் கண்டுபிடிக்கிறார். எல்லாவற்றிற்கும் காரணம் பிற ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மனைவிகள் என்பது கதையின் முக்கியப் புள்ளி.
நீண்ட காலம் கழித்து நடிப்புக்கு வந்திருக்கும் அனுஷ்கா சிறப்பாக நடித்திருக்கிறார். அமெரிக்காவின் அழகான கடற்கரை, பெரும் உணவு விடுதிகள், உல்லாச படகுகள், விமானங்கள், அந்த நாட்டின் பணக்காரர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை காட்டுகிறார்கள். ஆனால் இதுதான் அமெரிக்கா என்று யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அங்கும் நடைபாதையில் வசிக்கும்வீடில்லாத மக்கள், குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்தும் கருப்பு இனத்தவர், லத்தீன் அமெரிக்கர், பழைய கார், சாதாரண உடைகள் என்ற சூழ்நிலையையும் பல இடங்களில் காண முடியும்.
இயக்கம் பல இடங்களில் தடுமாறுகிறது. தன் மனைவியை அடுத்தவனுடன் படுக்கையில் பார்த்தவுடன் ஒருவன் கொலை செய்துவிடுவதாகக் காட்டுகிறார். அதற்கு முன் அவன் உளவியலில் ஏதாவது பிறழ்வு ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சரி ஒரு ஆத்திரத்தில் செய்வதாக வைத்துக் கொண்டாலும் அங்கு வரும் அதிகாரி சொல்வதால் உடனே மீண்டும் ஒரு கொலை செய்கிறான். நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் நம் பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ தான்.
தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண் வீது அமிலம் வீசும் மனப்பாங்கு தொடங்கி, ஆணவப் படுகொலை, இந்தப் படத்தில் காட்டுவதுபோல் பாலியல் சிக்கல்களுக்கு கொலை என ஆண்மனம் ஒரு முரட்டுத்தனமான தீர்வை தனக்குள்ளே கொண்டுள்ளது.தன் கணவனை இன்னொரு பெண்ணுடன் பார்த்த மனைவி அவனையும், தொடர்ந்து பல ஆண்களையும் கொலை செய்யத் தொடங்கினால் இந்த சமுதாயம் அதை எவ்வாறு பார்க்கும்? இன்னொரு புறம் இந்தப் பாலுறவு சிக்கல்கள் எதிர்காலத்தில் சீராவதற்கு சமுதாய மாற்றம் ஒரு காரணியாக இருக்குமா போன்ற கேள்விகள் எழுகின்றன.
மாற்றுத்திறனாளியான ஓவியருக்கும் பிரபல இசைக் கலைஞருக்கும் இடையேயான காதல், தோழியை மிகையாக சொந்தம் கொண்டாடும் பொஸசிவ் பெண் என ஒரு முக்கோண சிக்கலை முழுக் கதையாக வளர்த்திருக்கலாம்.
நானும் இப்படத்தை பார்த்தேன் தோழர்.. மிகுந்த ஏமாற்றம். அனுஷ்கா, மாதவன் போன்ற பெரிய நட்சத்திரங்கள் கூட எடுபடாமல் போய் விட்டனர்… கதை கருவே சொதப்பல்… பாரதிராஜா 80 களில் எடுத்த கதை இக்கால கட்டத்தில் பொருந்துமா என்று யோசித்து இருக்க வேண்டும்… உண்மையில் இயக்கமும் ரொம்ப சுமார் தான்… ஏதோ OTT க்காகவே எடுக்கப்பட்டது போல் இருக்கிறது… தற்போது OTT யில் வரும் web series கூட நல்ல தரமாக இருக்கும் போது, திரைப்படங்கள் இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்…