300 ஆண்டுகால கொங்கு பகுதியின் சரித்திரமாகவும் நாவல் அனுபவமாகவும் இந்த நாவல் விளங்குகிறது
நெசவுத்தொழிலின் ஒரு குறியீட்டுக்களமாக அமைந்த சுப்ரபாரதிமணியன் புதிய நாவல்
மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளாக இருப்பவை உணவு , உடை, உறைவிடம் . இவைகளின் பின்னணியில் மனித உழைப்பு தவிர்க்க முடியாத படி இருக்கிறது ..அதுதான் சமுதாயம் என்ற ஒரு அமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது ..உழைப்பு சக்தியின் தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைந்து வரலாற்றை மனிதர்கள் வடிவமைக்கிறார்கள் .அந்த வரலாற்றின் உள்ளீடாக அமைந்துள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வாழ்க்கையில் வளர்ச்சியை புரிந்து கொண்டு அதை மதிப்பீடு செய்கிறோம்.
இந்த வகையான ஒரு புரிதலையும் அறிதலையும் உணவு பூர்வமாக உள்வாங்கிக் கொண்டு இந்த நாவலில் கொங்கு பகுதியை முன் நிறுத்தி சுப்ரபாதி மணியன் வடிவமைத்திருக்கிறார் .அதை வாசிப்பின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடியும்
நீர் வளமும் நிலவளமும் மனித வளமும் மிகுந்த இந்தியா அதன் இயல்பிலேயே பன்முகத்தன்மை உடைய ஒன்றாக நின்று நிலவி வந்தது கடந்த 300 வருட உலகின் வளர்ச்சி போக்கில் நீண்ட மாற்றங்களின் தாக்கங்கள் இந்தியாவையும் மாற்றி அமைத்தன. கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தனித் தன்மைகள் தொடர்ந்து புதிய தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டு வேகமாக வளர தொடங்கின .அந்த வரலாற்று மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை இவர் மதிப்பீடு செய்கிறார் நாவல் அனுபவம் மூலம்.
தொழில் வளர்ச்சியின் காரணமாக புதிய தொழில்களையும் வேலை வாய்ப்புகளையும் தேடி விரிந்த நிலப்பரப்பின் பல பகுதிகளுக்குள்ளும் புலம்பெயரும் உழைக்கும் மக்களின் மனப்போக்குகளையும் வாழ்க்கை மாற்றங்களையும் அன்னிய மற்றும் இந்திய மதங்களின் தாக்கங்களையும் தொழிற்சங்க தோற்றங்களையும், வளர்ச்சியையும் தொடர்ந்து பதிவு செய்கிறார்..
பல வகையான இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளுக்குள் ஊடுருவும் கிறிஸ்து மதத்தின் பின் தங்கிய வறுமை மிகுந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் வறுமையைப் போக்க முனைவதோடு கல்வி மருத்துவம் புதிய கலாச்சார வாழ்க்கை முறைகளிலும் விரிவான பரவலான மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தில் அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வாய்ப்பளித்திருக்கிறார் கள்
கொங்கு மக்களின் 300 ஆண்டுகளின் வாழ்க்கை மாற்றங்களின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை தனிப்பட்ட அளவிலும் விரிவான அளவிலும் தகுந்த யதார்த்தமான இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளை முன்வைத்தும் மனதை நெகிழச் செய்யும் விதத்தில் இந்த நாவலை வடிவமைத்து இருக்கிறார் … கிறிஸ்தவக் குடும்பம் ஒன்றின் பல் வேறு தலைமுறை வாழ்க்கையை நெசவாளர் பின்னணியில் ஆரம்பித்து பின்னலாடை தொட்டு வெவ்வேறு வேலை முறை வாழ்க்கையில் மாறுபடுவதை இந்த நாவல் காட்டுகிறது
நாவலை மூன்று பாகங்களாகப் பிரித்து தொழிலிலும் அதன் உற்பத்தி உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களையும் வழக்கு போக்குகளையும் தகுந்த தகவல்களையும் அடிப்படை ஆதாரங்களையும் முன்வைத்து எதிரும் புதிரமான மனப்போக்குகள் தெளிவாக தெரிந்துகொள் ளும் வகையில் புலப்படுத்துகிறார் .
கதை சொல்லும் மரபிலிருந்து மாறுபடும் கற்பனையானக் களங்களை தவிர்த்து, வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் மாறிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை நம்பகத் தன்மையுடன் விளக்குகிறார் . இதற்கு ஆரம்பத்தில் கிறிஸ்துவ வாழ்வின் ஆதாரங்கள் உதவுகின்றன.
வளர்ச்சி குறைந்த ஒரு காலகட்டத்தில் கைத்தொழில் அளவில் கைத்தறி நெசவு போன்ற வை வளர்ந்ததை துல்லியமாக சித்தரிக்கிறார்
அறிவியல் பொருளாதார வளர்ச்சியின் விளைவாக கைத்தொழிலை குறைத்து இயந்திரங்களில் உதவியால் உற்பத்தியில் அளவு மாற்றங்களையும் இரண்டாவது பாகத்தில் சித்தரிக்கிறார். மின்சக்தியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு நெசவுத் தொழிலை பெருமளவுக்கு நவீனப்படுத்திய செயல்முறைகளையும் மூன்றாம் பாகத்தில் அடையாளப்படுத்துகிறார் .
இதற்காக கோவை மாவட்டத்தின் சோமனூர் , செகனந்தாளி கிராமம், திருப்பூர் மற்றும் வேலூர் ,திருப்பத்தூர் ஆகிய ஊர்களை களனாகக் கொள்கிறார்
ஒவ்வொரு காலகட்டத்திலும் நெசவுத் தொழிலாளர்கள் , மில் தொழிலாளர்கள் போதிய அளவுக்கு வாழ்க்கை தேவைகளை நிறைவு செய்ய நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராட்டங்களில் வாயிலாக உரிமைகளைப் பெற முயன்ற நிகழ்வுகளையும் இவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். இதில்
கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வாயிலாக விவரிப்புகளையும் குறைத்து எளிய உரைநடையின் வாயிலாகக் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்ளும் புதிய உயர்த்தியை கையாண்டு உள்ளார்.
மத கருத்துக்களை கூட தர்க்கரீதியாகவும் உரையாடலின் வாயிலாகும் பரிமாறிக் கொள்ளும் முறையில் மாறுபட்ட ஒரு முறையை கையாண்டு உள்ளார் ..
வெவ்வேறு கால கட்டத்தில் மொழியின் மாறுபாடும் காட்டப்படுகிறது என்பதும் முக்கியமானது.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களையும் அவர்களின் தொழிற்சங்கப் போராட்டங்களையும் அதன் விளைவுகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகும் சித்தரித்துக் காட்டுகிறார்..அதில் நெசவு, பஞ்சாலை தொழில்கள் முதன்மை பெறுகின்றன. .அங்கங்கே மாறுபட்ட மனிதர்களின் சித்தரிப்பு வாயிலாக கதைத்தன்மையைக் கையாண்டாலும் வரலாற்று தன்மையையும் எதார்த்தத்தையும் தவிர்க்கவில்லை
300 ஆண்டு கால மனித வாழ்க்கையை நிகழ்ச்சிகளின் சித்தரிப்பு வாயிலாக்க் காட்டி மாறுபட்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை புதிய முறையில் அறிவுப்படுத்தும் வகையில் இந்த நாவல் வடிவமைப்பு பட்டிருக்கிறது. .
மாறுபட்ட பல்வேறு கதைகளின் தொகுப்பாகவும் அசலான நமது காலத்து வரலாறாகவும் அமைந்துள்ள ” சிலுவை ” நாவல் ஏராளமான வரலாற்று நிகழ்வுகளை அரசியல் சமூகம் ஆன்மீகம் தொழில்நுட்பம் கொண்ட்தான வாழ்க்கை நிகழ்ச்சிகள் கலாச்சார பண்பாட்டு தன்மைகளை கடந்த 300 ஆண்டுகளின் காலகட்டத்தில் உள்ளடக்கிய மாறுபட்ட ஒரு புதிய கண்ணோட்டத்தில் சிலுவை நாவலை படைத்திருக்கிறார் சுப்ரபாரதி மணியன். .கடந்த நூற்றாண்டுகளை கொங்கு பகுதி சார்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறாக சிலுவை நாவல் விளங்குகிறது
சி. ஆர். ரவீந்திரன்
நூலை பெயர்: சிலுவை (நாவல்)
ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்
விலை: ரூ 1200
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியீடு, சென்னை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

