இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் பறவை ‘சின்னான்’.

ரொம்ப பிரபலமா எல்லா இடங்களிலும், குறிப்பா கிராமப்பகுதிகளில் ஆண்களுக்குச் சூட்டும் பெயர்போலவே இருக்கிறதா?

ஆமாம்..இந்தப்பறவையும் அப்படித்தான்.சின்னான்களில் ‘சிவப்பு வாலடி குருவி’ அல்லது ‘செம்புழைக் கொண்டைக்குருவி’ என்பது இந்தியா முழுவதும் மிகப்பரவலாய் மலை, சமவெளி என பாரபட்சம் பாராமல் எல்லா இடங்களிலும் இருக்கிறது.இதற்கு ‘கொண்டைக்குருவி’ என்றொரு பெயரும் இருக்கிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ‘கொண்டைக்குருவி’ (Bulbul) என பெயர் இருந்தாலும் நன்கு பார்த்தவுடன் கொண்டை எடுப்பாய் சில வகை சின்னான்களுக்கு மட்டுமே தெரியும்.மற்றவை சிலவற்றிற்கு ‘Bulbul’ என பெயர் இருப்பதால் ‘கொண்டைக்குருவி’ என வழங்கப்பட்டாலும் கொண்டை இல்லாமல் இருப்பதைப் பார்த்து நீங்கள் குழம்பக்கூடாது.

இன்னொரு விஷயம், ‘கொண்டலாத்தி’ என்பதை கொண்டைக் குருவிகளுடன் சிலர் இணைத்துச் சொல்கின்றனர். ‘கொண்டலாத்தி’ அல்லது ‘எழுத்தாணிக்குருவி’ என்பது வேறு வகை. ‘கொண்ட’, ‘கொண்டை’ என்னும் முதல் மூன்று எழுத்துகளில் வரும் உச்சரிப்பு ஒற்றுமை இந்த குழப்பத்திற்க்குக் காரணம். நிறைய கிராமப்புறங்களில் கொண்டைக்குருவி , கொண்டலாத்தி என்றே சொல்லப்படுகிறது.

நம் பகுதியில் காணக்கூடிய சின்னான்கள்/கொண்டைக்குருவிகளை காணும் வாய்ப்பிற்கு ஏற்ப வரிசைப்படுத்தியுள்ளேன்..(எளிதில் பார்ப்பது முதலிலும், அருகி வருவது கடைசியிலும் தரப்பட்டுள்ளது- மே.தொ.மலை நீங்கலாக பொதுவாக பிற தமிழக மாவட்டங்களில் காணப்படுபவை)

1.செம்புழை கொண்டைக் குருவி/சின்னான் அல்லது சிவப்பு வாலடிக் குருவி ( Red – vented bulbul விலங்கியல் பெயர்-Pycnonotus Cafer)

2.செம்மீசைச் சின்னான் / செம்மீசை கொண்டைக்குருவி ( Red – Whiskered bulbul விலங்கியல் பெயர்-Pycnonotus Jacosus)

3.வெண்புருவச் சின்னான் ( White – browed bulbul விலங்கியல் பெயர்-Pycnonotus luteolus)

4.சதுரவால் சின்னான் ( Square-tailed bulbul விலங்கியல் பெயர்-Hypsipetes (Leucocephalus) ganeesa இது இமயமலையை வாழிடமாகக் கொண்ட கருஞ்சின்னானை (Black bulbul- விலங்கியல் பெயர் – Hypsipetes Leucocephalus) ஒத்த இனமாகும்.

5.மஞ்சள் தொண்டை சின்னான்( Yellow – throated bulbul விலங்கியல் பெயர் Pycnonotus Xantholaemus)
கட்டுரைக்குச் செல்வதற்கு முன் பறவைகளின் உடல் பாகங்களுக்கு வழங்கப்படும் பெயர்களை ஆங்கிலப் பெயர்களோடு பொருத்தி அறிவோம்.

தலை உச்சி – Crown
பிடரி – Nape
அலகு – Bill
புருவம் – Brow
மீசை – whisker
தொண்டை – Throat
முதுகு – Back
அடிவயிறு – Belly
தொடை – Thigh
கழிவாய் அல்லது மலத்துவாரம் – Vent
வால் — Tail

உடல் பாகங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது என்பது எவ்வளவு பயனுள்ளது என்பது இதிலுள்ள ஆங்கிலப் பெயர்களைக் கண்டால் விளங்குகிறது அல்லவா? உடல் பாகங்களோடு முன்னொட்டாய் உள்ள (Prefix) அந்த சொல்லையும் கவனித்துக்கொள்ளுங்கள்..அது பெரும்பாலும் ஒரு வண்ணத்தையோ (Colour) அமைப்பையோ (Structure) குறிக்கும்.

பறவைகளின் உடல் பாகங்கள் பட்டியலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..இப்போ நாம பறவையைப் பார்க்காமலேயே பெயர்களை வச்சு நாமாளே சொல்லலாமா?

Red- vented – செம்புழை
Red – whiskered – செம்மீசை
White – browed – வெண்புருவம்
Squire – tailed சதுர வால்
Yellow -throated – மஞ்சள் தொண்டை

அடடா! அருமையா சொல்லிட்டீங்களே..!

இந்த மாதிரி ஆங்கிலப் பெயர்களை மொழிபெயர்த்தால் ஓரளவு பறவைகளின் தோற்றத்தையும் நாம விவரிக்கலாம்..ஆனா எல்லாப் பறவைக்கும் இப்படியே தமிழ்ப்பெயர்கள் கண்டுபிடிக்க முடியாது..சில விதிவிலக்கு களும் இருக்கின்றன..

ஓரளவு உங்களுக்கு சின்னான்கள் பற்றி தெளிவு பிறந்திருக்கும்…இருந்தாலும் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் விரிவா பார்ப்போம்.

செம்புழை சின்னானுக்கு கருப்பு நிற தலை, தலையில் உள்ள கருப்புக் கொண்டை, உடல் முழுவதும் கருப்பு, வெள்ளை வண்ணங்களில் அமைந்த மீன் செதில்கள் போன்ற அமைப்பு, சிவப்பு நிற மலத்துவாரம் தனித்த அடையாளம்..வயிறு வெண்மை நிறம்..பரவல் எல்லா இடங்களிலும்..இதன் கூடு தேங்காய் நார்களைக் கொண்டு வட்ட வடிவில் சிறிதாய் அழகாய் அமைந்திருக்கும்… இயற்கைச்சூழலா, மனிதர்கள் வாழும் பகுதியா? என்றெல்லாம் இந்த சின்னானுக்கு கணக்கு கிடையாது.தனக்குப் பொருத்தமான இடமென்று தேர்ந்தெடுத்துவிட்டால் நாம் வசிக்கும் வீட்டின் உள்ளே கூட கூடமைக்கும்.

Image
செம்புழை கொண்டைக் குருவி (படம் – வை.கலைச்செல்வன்)

கண்ணுக்கு பக்கவாட்டில் இரண்டு பக்கமும் உள்ள சிவப்பு மீசையும் அதற்குக் கீழ் உள்ள வெள்ளைக்கோடு, சிலிர்த்தபடி உயர்ந்து முன்னோக்கி சற்று வளைந்திருக்கும் கருப்புக் கொண்டை இவை செம்மீசை சின்னானின் தனித்த அடையாளங்கள்..

Image
செம்மீசைச் சின்னான் (படம் – வை.கலைச்செல்வன்)

இதற்கும் கழிவாய் சிவப்பு நிறம்தான்..நெஞ்சு, வயிறு வெண்மை நிறம்..பரவல் கொஞ்சம் மலைப்பகுதி அல்லது மலையடிவாரம், அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் காணலாம்.வீட்டிலுள்ள கறிவேப்பிலை மரத்தின் பழங்களை ருசிக்கவும், பாட்டி வீட்டிலிருக்கும் சிங்கப்பூர் செர்ரி மரத்தின் பழங்களை உண்ணவும் பல முறை இவை வந்துள்ளதைக் கண்டிருக்கிறேன் .

வெண்புருவச் சின்னான் கண்ணின் மேல்பகுதி தடித்த பெரிய வெண்புருவத்தையும், கண்ணின் கீழ் சிறிய புருவமும் உடையது. இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறமுடையது..நெஞ்சு ப்பகுதி வெளிரிய ஆலிவ் நிறம், வெண்மை,மஞ்சள் இவை கலந்த கலவை யாக உள்ளது.வால் பகுதி தொடங்கும் இடத்தில் தெளிவான மஞ்சள் நிறம் கொஞ்சம் காணலாம்..

Image
வெண்புருவச் சின்னான் (படம் – வை.கலைச்செல்வன்)

பரவல் அனைத்து இடங்களிலும்…பறவைத்தேடல் செல்லும் போது நம்மைக் கண்டால் ஆள்காட்டியை விட மிக மோசமாய் ஆரவாரமாய்க் கத்தி ஊரையே கூட்டிவிடும். வீட்டுக் கொய்யா மரத்தில் அழகாய் அமர்ந்து , கிளி உண்டுவிட்டுச் சென்ற மீதி கொய்யாப்பழத்தை ஒருமுறை இந்தச்சின்னான் சுவைத்துக் கொண்டிருந்தது.

Image
கொய்யாப்பழம் சுவைக்கும் வெண்புருவச் சின்னான் (படம் – வை.கலைச்செல்வன்)

சதுரவால் சின்னான் கருப்பு நிறத்தில் நல்ல எடுப்பான அடர் சிவப்பு மூக்கோடு, அதே நிற கால்களும், தலையில் சிறிய கொண்டையோடும் காணக்கிடைக்கும்….இதனைக் காண கொஞ்ச மலைப்பாங்கான இடத்திற்கு செல்ல வேண்டும்..சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் அடிக்கடி காணக்கிடைக்கிறது..வாலிள்ள இறகுகள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் முடிவது இதற்கு Square Tailed என்னும் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது..

Image
சதுரவால் சின்னான் (படம் : திருமலை R.T வெங்கட்ராமன்)

இறுதியில் உள்ள மஞ்சள் தொண்டை சின்னான், சர்வதேச இயற்கைப் பாதுகாப்புக் கழகம் ( International Union for Conservation of Nature- (IUCN) வெளியிடும் சிவப்புப் பட்டியலின் (Red list) அடிப்படையில் பார்க்கும்பொழுது அழிவுக்கான அச்சுறுத்தல் (Vulnerable) அதிகமாய் உள்ள அரிய பறவையினம். மலைப்பகுதியில் இருந்தாலும் அங்குள்ளவர்களுக்கே இது அரிதாகவே காணக்கிடைக்கும்..

Image
மஞ்சள் தொண்டை சின்னான் (படம் : ஏஞ்சலின் மனோ)

மஞ்சள் நிற தலையுடன் பிரகாசமான மஞ்சள் தொண்டைப் பகுதி இதன் தனித்த அடையாளம்..வெள்ளை நிற உடல், ஆலிவ் நிற இறக்கைகள், மலவாய்ப்பகுயில் நல்ல மஞ்சள் நிறம் அமைந்துள்ளதும் கூடுதல் அடையாளங்கள்…அரிதான இப்பறவை சேலம் ஏற்காடு பகுதி யில் நண்பர்களால் கண்டறியப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது..

பெரும்பான்மை சின்னான்கள் ஆல், அரச மரத்தின் பழங்களை, புழு பூச்சிகளை உண்ணும்..வெண்புருவச்சின்னானும், செம்புழைச்சின்னானும் இந்த உண்ணிமுள் புதரே கதி எனக் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்..அந்த உண்ணிமுள் செடியில் இருக்கும் பழங்களை மட்டுமின்றி காய்களையும் விடாமல் அவை விழுங்கிக் கொண்டிருக்கும்..

Image

Image

ஒருமுறை சாலையொன்றில் சிவப்பு வாலடிச் சின்னான் ஒன்று சிறுகாயமேதுமின்றி இறந்து கிடந்தது என்னுள் பல வினாக்கள் எழக் காரணமாயிருந்தது..!

Image
இறந்துபட்ட ஒரு செம்புழைக் கொண்டைக்குருவி (படம் – வை.கலைச்செல்வன்)

பலவாறு சிந்தித்தும் அதன் இறப்புக்கான காரணத்தை என்னால் யூகிக்க முடியவில்லை… நண்பர்களில் சிலர் வாகனம் மோதிய அதிர்ச்சியில் இறந்திருக்கலாமென்றும், இன்னும் சிலர் விஷமுள்ள எதையேனும் தின்றிருக்கலாம் எனவும் கூறினர். இருந்தாலும் அது பற்றிய சிந்தனையே சில நாள்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அன்புடன்
வை.கலைச்செல்வன்,
E.Mail: [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *