குழந்தைகளின் கற்பனைக்குச் சிறகுகள் முளைக்கவைத்து பறக்கவைக்கும் முயற்சியில் ’கதைகள்’ ஒருபோதும் தோற்றுப்போனதில்லை. அந்த வரிசையில் புதிய எழுத்தாளர் அஞ்சலி தன் பங்கிற்கு குழந்தைகளுக்கான நூலை வெளியிட்டுள்ளார். அவரை வாழ்த்தி வரவேற்போம்.
இந்த நூல் வாசிக்கக் கிடைத்துவிட்டால் போதும், யாராக இருந்தாலும் சிறகடித்துப் பறக்கும் சக்தியைப் பெற்றுவிடுவார்கள். அத்தனை எளிய நடை. எளிய சொல்லாடல்.
கதைகளுக்கான ’கரு’வும், கதை சொல்லும் விதமும் அருமை. அதைவிட கதாப்பாத்திரங்களுக்கு இடப்பட்ட பெயர்கள் மிக அருமை. கதைசொல்லியும், எழுத்தாளருமான சரிதா ஜோவின் ரத்தினச் சுருக்கமான அணிந்துரையும், ஆசிரியரின் நேர்த்தியான என்னுரையும் இந்நூலுக்குப் பலம் சேர்க்கிறது.
13 கதைகளும் ஒவ்வொரு விதம். கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. அஞ்சலி கதை சொல்லி என்பதால் எல்லாக் கதைகளும் வாய்மொழிக் கதைக்கான பாணியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லாக் கதைகளுக்குள்ளும் வந்து போகும் விலங்குகள் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான, பார்த்த, மற்றும் பழகிய விலங்குகளாகவும், அவைகள் பேசிக்கொள்வது குழந்தைகளின் மனதிற்குள் ஊடுருவி நேர்மறையான சிந்தனையைத் தூண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
முதல் கதையான “இராமாயிப் பாட்டியின் பண்ணை” யில் விலங்குகள் எதார்த்தமாக பேசிக்கொள்வதுபோல் வடிவமைத்திருப்பது சிறப்பு. பாட்டியைப் பற்றிய அறிமுகம், அவர் வளர்க்கும் விலங்குகளைப் பற்றிய அறிமுகம், திடீர் திருப்பமாக திருடர்கள் பற்றிய விவரிப்பு என்று கதை விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
”எது சுதந்திரம்?” என்ற கதை குழந்தைக்கு எழும் சந்தேகத்தை ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதைப் போல் ஒரு அம்மா தன் மகளுக்குச் சொல்கிறார்.
“செவ்விதனின் சேட்டைகள்” வீட்டிற்குள் இருக்கும் அனைத்து மின் சாதனங்களைப்பற்றியும் குளவி தன் தந்தைக் குளவியிடம் கேட்டு அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்தக் கதையின் வாயிலாக மின்சாதனங்களைப் பற்றியும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியிருப்பது நன்றாக உள்ளது.
”நரியும் வெள்ளரித் தோட்டமும்” கதையை வாசிக்கும் போது அவரவர் சிறுவயதில் பாட்டி, தாத்தாக்கள் சொல்லிய கதைகளை நினைவூட்டும். கிராமமும், கிராமத்து வாழ்க்கையும் எதார்த்தம் குறையாமல் சொல்லியதற்காகவே பாராட்டுக்கள்.
“ஓட்டைக் குரும்பை” கதை சிரிப்பை வரவழைக்கிறது. ”பறவைகளின் மாயக்கண்ணாடி” கற்பனையின் உச்சம். “கதைகளைத் தேடிச் சென்ற செம்பி” குழந்தைகளின் கற்பனைகளுக்கு நன்றாகத் தீனி போடும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
“டக்கரிக்கா! டக்கரிக்கா!” தலைப்பும் சரி, கதையின் தேர்வும் சரி, நன்றாக உள்ளது. “மனிதர்களின் நண்பர்கள்” கற்பனையே செய்து பார்க்க முடியாதபடி வியப்பில் ஆழ்த்திய கதை.
“பைரவ்” ஆட்டுக்குட்டியுடன் நானும் பயணித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். “சிறகடித்துப் பற” நம்பிக்கை ஊட்டும் சிறுகதை. தற்போதைய குழந்தைகளுக்குத் தேவையான கருத்தைச் சொல்லும் கதை.
“சணப்பைச் செடியும், வண்ணத்துப் பூச்சியும்” கிராமத்து வயல் வெளியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நிறைவுக் கதையாக “மிட்டு” தற்போதைய பரபரப்பான சூழலில் சிக்கித் தவிக்கும் உயிரினங்களைப் பற்றி விவரித்திருப்பது மிக நன்றாகவே உள்ளது.
முதல் நூல் என்பதால் பலத்தையும் பலவீனத்தையும் ஒருசேரக் கொண்டிருக்கிறது. ஒரு இளம் கதைசொல்லியாக இருந்துகொண்டு துணிந்து குழந்தைகளுக்கான நூலை மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டதற்காகவே பாராட்டுக்களும், பேரன்பும்.
கதைகளுக்கேற்ற ஓவியங்கள், நேர்த்தியான நூல் வடிவமைப்பு, சிறப்பான அட்டைப்படம் என அனைத்தும் மிகச் சரியான தருணத்தை அழகாக்கவே வந்துள்ளது.
இனி வரும் காலங்களில் அஞ்சலி ஒரு தேர்ந்தெடுத்த கதை சொல்லி மட்டுமல்லாமல், சிறந்ததொரு குழந்தை இலக்கிய எழுத்தாளர் என்று அனைவராலும் அழக்கப்படட்டும். அதற்காக மீண்டும் ஒருமுறை என் அன்பார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக எழுதப்படும் நூல்களில் எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கியப்பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக மிக நல்லது. ஏனென்றால் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் அதே நேரம் அவர்கள் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் ஒரு நூல் துணைபுரிகிறதல்லவா?
இதுபோன்ற தவறுகள் கடைசி நேர அவசரத்தில் ஏற்பட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள் முடிகிறது. ஆனால், ஒரு புத்தகம் அச்சுக்குச் சென்றபிறகும்கூட கடைசி நேரப் பிழைதிருத்தம் செய்துவிட்டு வெளியிடுவதுதான் நூல் ஆசிரியரின் மதிப்பை உயர்த்தும்.
அடுத்தடுத்து வெளியிடும் நூல்களில் அதிகக் கவனம் எடுத்தும் அவசரம் இல்லாமலும் நூல்களை வெளியிட வாழ்த்துகள்.