ஹளபேடு அழகி
*************************
முத்துவடம் தொட்ட
மொக்குத் தாமரை
மார்பகங்கள்
பித்துப் பிடிக்க வைக்க
சந்தனக் கிண்ணக்
காம்புபோல் இடை
வெண்ணையாய்க் குழைந்திருக்க
பாதரசம் மௌனித்த கால்கள்
ஒய்யாரம் கண்டிருக்க
கவிதை கலகலக்கும் வளையல்கள்
சப்தமின்றி கவனம் கொண்டிருக்க
சந்திரப் பிறையும்
சூரியப் பிறையும்
தலையலங்காரக் கர்வத்தில் வீற்றிருக்க
இடக்கரம் ஏந்திய
கல் கண்ணாடியில்
முறுவலித்து முறுவலித்து
நூற்றாண்டுகளாய் முகம் பார்க்கிறாயே…..
திகட்டவில்லையோ உனக்கு?
தீரவில்லையோ தாகம்?
சொந்த அழகில்
சொக்கிக் கிடப்பவளே
உனக்குத் தெரியுமா?
அந்த அழகைக்
கண்ணில் சுமந்தபடி
நிற்கிறது காலம்.
ஃஃஃஃஃஃ
காலை இரவானது
***************************
அதிகாலைப் பிரம்ம முகூர்த்தத்தில்
சாதகம் செய்ய எழுந்தார்
நாதசுரச் சக்கரவர்த்தி
எண்பது வட்டம்
சூரியனை வலம் வந்த
பூமியின் வயது
முகம் கழுவித் திருநீறணிந்தார்
சீவாளியை ஈரப்படுத்தினார்
நாதசுரத்தை
மழலையாய் ஏந்தும்போது
பரிசுப் பதக்கங்களின் கொண்டாட்டம்
விரல்கள் துளைகளில்
விளையாடக் காத்திருந்தன
ஆனந்த பைரவி
ஆலாபனை ஆரம்பம்…
எங்கோ பிசிறு…
அய்யோ… அபசுரம்
நழுவி மடியில் விழுந்தது
நாதசுரம்
முத்து முத்தாய்க்
கண்களில் அரும்புகள்
மௌனம் கீற
அறுந்தது சங்கீதம்
மூச்சுக்காற்று
இப்போது
பிரபஞ்ச வெளியில்
குழல்
உயிரற்று…
ஃஃஃஃஃஃஃஃ
காணாமல் போன பூனை
***************************************
இப்பொழுதெல்லாம்
குழந்தைகளை வசீகரிக்கும்
பூனைகளின் ‘மியாவ்’
கேட்பதே இல்லை.
உறைக்குள் இருக்கும் கத்தியென
கால்நகங்களைப் பொதிந்து வைத்து
மீசை முறுக்குவதில்லை.
வஞ்சம்
கண்களில் கசிய
எலிகளைத் துரத்துவதில்லை.
பால் பாத்திரங்களைத்
தேடி உருட்டுவதில்லை.
மாயப் பூனைகளாய் மாறிக்
கண்ணில் படுவதேயில்லை.
காடுகளுக்குப் போய்
புலிகள் ஆகி இருக்குமோ?
அல்லது
சாமியார்களின் காலமென
அகலிகை ஆசிரமம் பக்கம்
தவம் செய்யப் போயிருக்குமோ?
– சிற்பி