” இப்போ என்னங்க பண்றது.. திடீர்னு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நினைச்சு கூட பாக்கலங்க.. அவன் வேற இன்னைக்கு கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டு போறான்.. எப்படிங்க இத சமாளிக்க போறோம் ..”
“ நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத பாத்துக்கலாம்..”
” எனக்கு வேற காய்ச்சலடிக்குது.. இதுல இவன் வேற.. ” என்று கழுத்தில் கை வைத்து தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டாள் பார்வதி.இருவரும் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்கள்..
” ரெண்டு மாசத்துக்கு முன்ன கூட நல்லா தான் போய்ட்டு இருந்துச்சி.. இஷ்டபடி செலவு பண்ணோம்.. அப்ப தெரியாது பின்னாடி இவ்ளோ ஒரு கஷ்டம் வரும்னு… ”
” ம்… அதுக்காக இப்ப யோசிச்சி என்னங்க பண்றது.. ”
” யார்கிட்ட கேக்கறது.. ? என்று யோசித்தபடி இருந்தான் இளங்கோ. சட்டென பார்வதியிடம் திரும்பி,
” உங்க அண்ணிகிட்ட கேக்கலாமா..பாரு” என்றான்.
” அவங்ககிட்ட வேணவே வேணாம் சாமி.. அவங்கிட்ட மட்டும் கொடுக்கல் வாங்கலே வச்சிக்க கூடாது.. போன வாரம் அவங்க பேத்திக்கு கூட அவ்ளோ செய்தாங்க.. ஆனா நமக்கு ஒன்னுன்னு கேட்டா அப்டியே பஞ்ச பாட்டு தான் பாடுவாங்க.. வேற எதாவது ஐடியா பண்ணலாம்… ”
” ஹாங்.. எதிர் வீட்டுல கோகி அம்மாகிட்டே கேக்கலாமா.. ”
” வேணாம் பாரு… ”
” ஏங்க..? ”
” போன வாரம், அவங்க வீட்டுக்காரு, நம்ம வண்டி நிறுத்தற எடத்துல அவன் வண்டிய நிறுத்தி இருந்தான்… ‘ எங்க வண்டி விடணும் எடு ‘ ன்னு சொன்னதுக்கு எவ்ளோ திமிரா தெனாவெட்டடா பேசனான் தெரியுமா… அங்க போய் கேக்க வேணாம்.. ”
” இப்ப என்னங்க பண்றது.. நேரம் ஆக ஆக ‘ பட பட ‘ன்னு வருதுங்க.. எனக்கு கொஞ்சம் சுட தண்ணி தாங்களேன்… ”
இளங்கோ அவளை முறைக்க,
” என்னங்க மொறைக்கிறீங்க.. உங்களுக்கு ஆயிர கணக்குல நான் காபியும் டீயும் போட்டு கொடுத்து இருக்கேன்.. நீங்க என்னடான்னா ஒரு சுட தண்ணிக்கு இப்டி பாக்கறீங்க.. ”
” எம்மா.. தாயே.. போடறேன், அதுக்குள்ள நீ ஆரம்பிச்சிடாத… ”
‘ ஆயிர கணக்கான தடவ கடை கண்ணிக்கு போய் வருவேன்.. அதெல்லாம் இவங்களுக்கு கணக்குலயே வராது… ‘ என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே சுட தண்ணி போட்டான் இளங்கோ.
” இந்தா புடி… ”
” ஆமா… என்ன முணுமுணு த்துகிட்டே இருந்தீங்க.. ”
” நீ கூட தான் டீ காபி தரும் போது திட்டிகிட்டே தருவ.. நான் எதாவது கேட்டனா… ‘ கம்மு ‘ ன்னு குடிக்கல… பேசாம குடிப்பியா.. ”
” சரிங்க… நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம்… இப்ப அந்த விஷயத்துக்கு என்ன தான் பண்றது.. ”
” பக்கத்து வீட்டு கற்பகத்துகிட்ட கேட்டு பாரேன்… ” என்ற சொன்ன உடன்,
” ம்மா… நான் போய் கேக்கட்டுமா ” என்று உற்சாகமாக முன் வந்தாள் பிரியா.
” அடி பிண்ணிடுவேன்… போய் உன் வேலைய பாரு… ” என்று கோபமாக சொன்னாள் பார்வதி.
” ஏய், இப்ப எதுக்குடீ அவள இப்டி திட்ற.. ”
” ம்… அவங்க வீட்டு தருதல கூட இவ போன வாரம் மொட்ட மாடியில நின்னு ஜாடையில பேசிக்கிட்டு இருக்கா… ”
” ப்பா… அம்மா சும்மா எதாவது சொல்லிக் கிட்டே இருக்கும் .. நீங்க அவங்க பேச்சை எல்லாம் நம்பாதீங்க… ” என்றாள் பிரியா.
” ஆமா, என் பேச்சை நம்பாதீங்க.. அவளை நம்புங்க… ” என்று கூறியவள், ” எதாவது பேசுன அடி வாங்குவ பாத்துக்க.. ” என்று மகளிடம் கத்தி விட்டு, மீண்டும் இளங்கோ பக்கம் திரும்பி,
” இப்ப என்னங்க பண்றது.. ”
என்று மீண்டும் ஆரம்பித்தாள்.
” ஆமா… என்னையே கேளு.. நீ தான் யோசியேன்… ”
” நேரம் ஆயிட்டே இருக்குங்க.. ” என்றவள்,
” ஏங்க உங்க அம்மாகிட்ட வேணா கேட்டு பாருங்களேன்.. ”
” அய்யையோ.. அவங்க கிட்ட நான் போய் கேக்கலம்மா.. நீ ஆள விடு.. ”
” ஏங்க, உங்க அம்மாகிட்ட தான கேக்க சொன்னேன், அதுக்கு போய் அலறீங்க.. ”
” பாரு.. அப்பா இறந்த அப்புறம் கூட அவங்க நம்ம கூட இருக்க சம்மதிக்கல..தனியா தான் இருப்பேன்னு அப்பாவால வர பென்ஷன் பணத்துல சிக்கனமா செலவு பண்ணி வாழ்ந்துக்கறாங்க.. நம்ம எப்டி அவங்கள தொந்தரவு பண்றது… ?”
” ம்… இதுவே எங்க அம்மாகிட்ட பணமும் நகையுமா வாங்கிட்டு வர சொன்னனீங்களே அப்ப தோனலையா…இப்ப மட்டும் இவ்ளோ யோசீக்கிறீங்க… இதுவே எங்க அம்மாவா இருந்து இருந்தா கேக்காமலே தருவாங்க… அவங்க இறந்து போன பிறகு அனாதை மாதிரி ஆயிட்டேன்… ” என்று கண்ணை கசக்கினாள் பார்வதி.
‘ அய்யோ.. இவ வேற எதுக்கு எதை கொண்டு வந்து முடிச்சி போட்டு பிரச்சினை பண்ணுவாண்ணே தெரியாது… ‘ என்று தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டான் இளங்கோ.
” ஏங்க… இப்ப போய் உங்க அம்மாகிட்ட கேக்க போறீங்களா இல்லையா..?”
” போறேன்.. போறேன்.. போய் கேட்டு தொலையறேன்.. அவங்க மட்டும் எதாவது சொல்லட்டும் அப்ப இருக்குடீ உனக்கு… ” என்று கூறி விட்டு கீழ் போர்ஸனில் புதிதாக குடி வந்து இருக்கும் தன் அம்மாவிடம் கேட்க சென்றான்.
” ம்மா.. ”
” வாப்பா … உக்காரு, டீ போடவா.. ? ”
” வேணாம்மா… ” என்று கூறி விட்டு தயங்கி தயங்கி உட்காந்து இருக்க,
” இன்னாப்பா.. ஒரு மாதிரி இருக்க.. ”
ஒரு வழியாக வந்த விஷத்தை கூறி விட்டான் இளங்கோ.
அதுவரை ‘ ப்பா ‘ போட்டு பேசிய அம்மா இப்போது ‘ டா’ போட்டு பேசினார்.
” இன்னாடா… இதுக்கு தான் பக்கத்துலயே கொண்டு வந்து குடுத்தனம் வச்சியா நீ…
தெரியும்டா உன்ன பத்தி… இன்னா உம் பொண்டாட்டி சொல்லி அணுப்பி வச்சாளா… ‘
” இல்லம்மா…. நானே தான் வந்தேன்.. ”
” டேய்… எனக்கு தெரியும்டா எல்லாம்… இதோ பாரு எங்கிட்ட இப்ப இருக்கறதுல தரேன்… ஆனா அடிக்கடி எங்கிட்ட கேக்கற வேலை வச்சிக்காத.. ” என்று உள்ளே சென்று கொண்டு வந்து மகன் கையில் கொடுத்தார்.
” டேய்… உம் பொண்டாட்டிய சிக்கனமா செலவு பண்ண சொல்லுடா.. இப்டி எங்கிட்ட வந்து நிக்காத.. ”
” சரிம்மா… ”
” இருடா … டீ குடிச்சிட்டு போ.. ”
” வேணாம்மா.. நான் கிறம்பறேன்.. நேரமாகுது.. ” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.
” என்னங்க.. உங்க அம்மா என்ன சொன்னாங்க.. குடுத்தாங்களா.. ” கண்கள் விரிய மிக ஆர்வமாக கேட்டாள் பார்வதி.
” குடுத்தாங்க… இந்தா ” என்று அவள் கையில் கொடுத்தான் இளங்கோ.
‘ மொழு மொழு ‘வென்று மூன்று குண்டு தக்காளிகளை கையில் வாங்கியவளுக்கு காய்ச்சல் போயே போச்சு.. வேகமாக சமையலறைக்கு சென்று தக்காளி சாதம் செய்து ‘ சுட சுட’ லஞ்ச் பாக்சில் வைத்து மகனுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினாள்..
தக்காளி சாதத்தோடு இளங்கோவின் வண்டி பறந்தது.