உலகம் அறிந்த இந்திய அணுவியல் விஞ்ஞானி சிசிர் குமார் சர்க்கார் (Sisir Kumar Sarkar)
தொடர் : 58 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சிசிர் குமார் சர்க்கார், பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடைய இந்திய அணுவியல் விஞ்ஞானி ஆவார். அணு எரிபொருள் சுழற்சி மற்றும் ரசாயன இயக்கவியலில் தனித்துவமிக்க இவருடைய ஆய்வுகள் உலகளவில் பேசப்படுகின்றன. ஒளி இயற்பியல் மற்றும் ஒளி வேதியியல் ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். சர்வதேச அணுசக்தி தகவல் அமைப்புடன் இவர் மிக நெருக்கமான அந்தஸ்தில் உள்ளார்.
சர்க்காரின் ஆராய்ச்சி -அணு வேதியியல் என்னும் துறையில் தான் முதலில் தொடங்கியது, இந்த துறை கதிரியக்கத்தன்மை அணுக்கரு செயல்முறைகள் மற்றும் அணுக்களில் உள்ள அணுக்கருக்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வேண்டிய ஆகும். குறிப்பாக இந்த துறை அல்ஃபா சிதைவு என்று அழைக்கப்படும் ஒரு வகை கதிரியக்கச் சிதைவை ஆய்வு செய்கிறது. ரேடியம் மற்றும் ரேடான் போன்ற கதிரியக்க தனிமங்களில் வேதி அம்சங்களுடன் இணைந்து அணுக்கரு செயல்முறைகளைச் செய்வதற்கான அடிப்படை உபகரணங்களை அறிவியலுக்கு வழங்கியவர் சிசிர் குமார் சர்க்கார் (Sisir Kumar Sarkar) .
உயிருள்ள விலங்குகள் தாவரங்கள் மற்றும் பிற பொருட்களின் மீது கதிர் வீச்சு ஏவப்படும் பொழுது அதை உறிஞ்சுவதன் விளைவாக ஏற்படுகின்ற உடலியல் வேதி விளைவுகளைப் பற்றிய ஆய்வில் சிசிர் குமார் சர்க்கார் (Sisir Kumar Sarkar) உலகின் கவனத்தை ஈர்த்தவர். அணு உலைகள் உள்ள ஊர்களில் மிகவும் அருகிலே வாழும் மக்களுடைய உடலில் அந்த உலைகளிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் எவ்வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் துல்லியமாக ஆய்வு செய்து பலவகை தரவுகளை அவர் வெளியிட்டார். கதிர்வீச்சு வேதியியல் என்பது இந்த வகையான பாதிப்புகளிலிருந்து மனிதர்களை எப்படி காப்பாற்றுவது என்பதைக் குறித்து ஆராய்ந்து கதிர்வீச்சின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் துறையாக உள்ளது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அணு உலைக் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் ஒரு உயிரினத்தில் உள்ள உயிர் வேதிப்பொருட்கள் முற்றிலுமாக ரசாயன மாற்றத்தை அடைகின்றன. உயிர் மூலக்கூறுகளில் இந்த மாற்றம் மனித டிஎன்ஏக்களை மாற்றி பலவகையான நோய்களை ஏற்படுத்துகிறது. சிசிர் குமார் சர்க்காரின் ஆய்வுகள் இப்படி அணு உலைகளால் ஏற்படும் புற்றுநோய் தீர்வுக்கான சிகிச்சைகளை முன்மொழிந்தது.

அவர் கையில் எடுத்த அடுத்த துறை ஒளிவேதியியல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து வெளி வருகின்ற புற ஊதாக்கதிர்கள் அல்லது அகச்சிவப்பு கதிர்வீச்சு மனிதனின் உடலால் உறிஞ்சப்படுவதால் ஏற்படும் ரசாயன எதிர்வினைகள் குறித்த மிக விரிவான அவருடைய ஆய்வுகள் உலகெங்கும் பேசப்பட்டன. இயற்கையில் ஒளிச்சேர்க்கை என்பதிலிருந்து மனிதன் பார்வை என்பது வரையிலாக அனைத்து துறைகளையும் ஒளி வேதியியல் ஆய்வு செய்கிறது. சூரிய ஒளியை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே மனிதனுக்குக் கிடைக்கும் வைட்டமின் டி என்கிற மனித உருவாக்கம் குறித்த சிசிர் குமார் சர்க்காரின் ஆய்வுகள் நவீனக் கால மனிதர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்குகின்றது.
சிசிர் குமார், மதன்போர் என்று அழைக்கப்படும் மேற்கு வங்காளத்தின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர். கொல்கத்தாவிலுள்ள மாநில கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றரர். அதன் பிறகு அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டபடிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்திற்குச் சென்று தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுகளில் அவர் இறங்கிய பொழுது, அவருக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு பிறகான அணுவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. J. W. FLYNN எனும் அறிஞரோடு இணைந்து CHEMICAL DYNAMICS துறையில் செமிகண்டக்டர் டயோட் குறித்து அவர் பலவகை ஆய்வுகளில் ஈடுபட்டார். 1974 ஆம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் மும்பைக்கு வந்து அங்கு முதன்மை விஞ்ஞானியாகப் பதவியேற்றார்.
ஒளி வேதியியல், லேசர் ஒளிகள், நிறமாலை அறிவியல், மற்றும் கதிர்வீச்சு அறிவியலில் 350க்கும் மேற்பட்ட முக்கிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சர்வதேச அணு ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து நான்கு முறை அழைப்புகளை ஏற்று யுரேனியம் 235 என்கின்ற ஐசோடோப்பு குறித்த நிபுணத்துவ ஆய்வுகளில் சிசிர் குமார் சர்க்கார் ஈடுபடுத்தப்பட்டார். இந்தியாவுக்கு இன்று வடிவமைக்கப்பட்ட அணு உலைகளை இருபத்தோராம் நூற்றாண்டில் செயல்படத்தக்க நவீன கருவிகளாக மாற்றிய பெருமை அவரையே சேரும்.
அணு இயற்பியலில் இருந்து ஒளி இயற்பியலுக்குத் தாவிய அவர் ராமன் விளைவை ஆய்வுக்கு உட்படுத்தி அமிலங்களில் ராமன் விளைவு என்பது குறித்து உலகின் கவனத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம் தண்ணீரின் உடைய குறிப்பாகக் குடிநீரினுடைய அயினியாக்கத் தன்மைகளை ஆய்வு செய்யும் புதிய முறையை அவர் அறிமுகம் செய்தார். உலகெங்கிலும் பல்வேறு வகையாக கௌரவிக்கப்பட்டிருக்கும் சிசிர் குமார் சர்க்கார் (Sisir Kumar Sarkar) அவர்கள் 2010 ஆம் ஆண்டு புனே பல்கலைக்கழகத்தில் சாவித்ரிபாய் புலே பேராசிரியராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஜப்பானின் கியோட்டோ கல்வி நிறுவனத்திலும் செக் குடியரசின் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் ப்ராசஸ் நிறுவனத்திலும் பாரிசிலுள்ள ஸ்டார்ட் பல்கலைக்கழகத்திலும் ஜெர்மனியில் உள்ள ஹைடல் பார்க் பல்கலைக்கழகத்திலும் அணுவியல் லேசர்கள் மற்றும் ஒளிவேதியியல் குறித்த வருகை தரும் பேராசிரியராக இருக்கிறார் என்பது இந்தியாவுக்குப் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: நியூட்ரினோ இயற்பியல் துறையின் உலகறிந்த இந்திய பெண் விஞ்ஞானி டி.இந்துமதி
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

