பாரதி புத்தகாலயம், பக். 104, விலை ரூ.90
தமிழ்சிறுகதை உலகின் தற்போதைய நம்பிக்கை பெயர்களில் ஒன்று அ.கரீம் சமீபத்தில் நான் வாசித்திருக்கும் சிறுகதை தொகுதிகளில் அதீத சோதனை முயற்சிகளும் புதிய எழுத்துப் பாதையும் புலப்படும் புத்தகமாக நான் சிதாரை முன்மொழிவேன். இந்த தொகுப்பின் கதைகள் பலவற்றை தமிழின் இலக்கிய இதழ்களில் வாசித்தும் இருக்கிறேன்.
இந்த தொகுப்பு முழுதும் நிழலாகும் மனித அவலங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. கவர்னர் வருகைக்காக சாலை ஓரம் கனக்கும் சிறுநீரோடு தவிக்கும் பெண் போலீஸ் பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா. வன்புணர்வில் சிதைக்கப்பட்டு பிணமாய் கிடக்கும் சிறுமியின் நட்பும் அறியாமையும் போன இடம் தேடியது உண்டா.. அவரது பிணம் முழுதும் ஈயாக மொய்ப்பது நமது தவிப்புகளும்தான்.
கோவையில் வழக்கறிஞராக பணிபுரியும் கரீம் மனித உரிமை செயற்பாட்டாளர், தமுஎ(க)சவின் நிர்வாகிகளில் ஒருவர். எழுதுவதே என் வேலை என படைப்பு போதை வாதி அல்ல. சமூக செயற்பாட்டாளர். அதனால்தான் அவரது கதைகள் தனித்து நிற்கின்றன தவிப்பை ஏற்படுத்துகின்றன.