அந்த பெயருல எப்பவும் ஈர்ப்பு தான். வீட்டுல அப்படி வளத்திட்டா…. மொதல்ல பாக்கற பழகிற எல்லா விசயங்களும் கூட வரும். சொல்லுவா….
அப்பா…. எப்பவும் பாடுக, ‘என்னடி இராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி … ‘ என்கிற விசில் ஓலியோடு கூடிய பாடலை எங்க கேட்டாலும் சிலிர்ப்பு தான்.
அப்பா…. அப்படியொரு கலாரசிகர். எல்லாத்தயும் தாள லயனத்தோட இரசிப்பவர்.
அம்மா…. அப்படியில்ல, பேச்சின் வளமை தான். ஆழ்ந்த பேச்சு. ஆழ்ந்த சிந்தை. பாடல்களையோ , ஆட்டத்தையோ ரொம்ப இரசிச்சு பார்த்ததில்லை.
சில விசயங்கள் கூட அப்பா கூட வந்த பிறகு தான் வந்திருக்கும் . பஸ் பிரயாணம், பல ஊர் சுற்றல். எல்லாமே அப்பா காணித்த வித்தை தான்.
அம்மாவுக்குப் பேச்சுன்னா ருசி. ஊர்ல பல இரசிகர்கள். பல படுப்பலைகள் தான் புகலிடம் …. இராசா மங்கலம் ….
ஆதி மங்கலத்து பதிவுகள்ல வர்ற ஊர் மாதிரி தான். இப்போது அந்த வளமை இல்லை.
ஆட்கள்லயும் வறட்சி , பேச்சிலயும் உணர்விலயும் வறட்சி, நாய் கூட முழிக்குது. அன்னைக்கு, பட்டின்னு கூப்பிட்டா நாய் கூட வாலாட்டும்.
ஆளைப் பொறுத்து , உணர்வினைப் பொறுத்து அதன் தன்மை . எஜமானுக்குத் தனியாகவும் வழிப்போக்கனுக்குத் தனியாகவும்! என்னை மாதிரி வரக்கூடியவனுக்கு கொஞ்சம் லேசா வாலாட்டும் . அதன் படிப்பினை அவ்ளவு தான். மனுசனை மாதிரி நேரம் பாத்து அது வாலாட்டுறது இல்லை. அதுக்கு ஆரத்தி கிடையாது …. பிரச்சாரக் கூட்டம் கிடையாது. அதினால அது படிச்சது அவ்ளவு தான்.
மனுசன் வித்தியாசமான இனம்: அதுலயும் பல வித்தியாசங்கள். இந்த வித்தியாசத்தில்ல நானும் ஒரு வித்தியாசம். என்னை மாதிரி ஒரு வித்யாசத்த பாத்தா, எனக்கு ஒரு வித சந்தோசம். அப்படியொரு மனம்.
மாணவன் தான் அவன்.
நான் அவன் வகுப்புக்கு போகல்ல , பாடம் நடத்தல்ல …. பாத்ததுல பழக்கம்,
ஏற்கனவே அவன் படத்தயும் , அவன் அம்மா படத்தையும் முகநூல்ல பதிவிட்டு இருந்தேன்.
என்னைத் தினம் தேடி வரும் ஆன்மா.
‘சார்… உங்களை இரண்டு நாளாச்சு பாத்து, கண் தேடுது’ ன்பான்.
நேற்று..
‘சார்… லீவு வருதில்ல , உங்க போன் நம்பரை குடுங்க. எப்போதாது பேசுவேன்’ என்றான்.
நான் குடுக்கல்ல ….
உடனே ….திரும்பத் திரும்பப் பேசி என் போன் நம்பரை வாங்கிட்டான்.
பெறகு, ‘என் போன் நம்பரை வச்சிக்கோங்க சார்’ என்றான்.
நான், வேண்டாம் என்றேன், விடாப்பிடியாய். அவனும் விடவில்லை..
கடைசியாய் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதிக் கையில் திணித்தான்.
‘சார்… மறக்காமல் வச்சுக்கோங்க’ என்றான்.
பர்சில் பத்திரமாய் வைச்சேன். லேசான சிரிப்பு.
பெறகு …. அவன் தலையை தடவிக் குடுத்து, ‘ஏன்… முடி வெட்டல்ல?’ என்றேன்.
நாளைக்கு என்றான். பிறகு , ஒரு சில மாணவர்கள் வர ஆரம்பித்தார்கள்.
நான், ‘நாளைக்கு முடி வெட்டிட்டு வா…காசு இல்லையா?’ என்றேன்.
முழித்தான். ‘திருச்செந்தூருக்கு மொட்டை’ என்றான்.
மாணவர்கள் போய் விட்டார்கள். ‘அப்பாட்ட இல்லையா?’ என்றேன்.
உடனே, ‘இருந்தா, இப்படி எப்படி ஏன் வர போறேன்?’ என்றான்.
“சரி…. நான் தரட்டா?” என்றேன்.
“சார்… உங்களை கஷ்டப்படுத்த கூடாதுல்லா?” என்றான்.
உடனே, எடுத்துக் குடுத்தேன்.
வாங்க வில்லை. “மொட்டை தான்” என்றான்.
திணித்தேன். வாங்கி கொண்டான்.
உடனே, “பெரிய ஆளாகிக் கடனை அடைப்பேன்” என்றான்.
சிரித்தேன்.
“சார்…திருச்செந்தூர் மொட்டைப் போட்டு உங்களுக்கு காமிப்பேன்” என்றான்.
அகலாது சிரிப்புடன் அவனையே பார்த்தேன்.
அவன் பெயர் ….. ‘சிவாஜி’. எப்போதும் அந்த பெயரில் ஈர்ப்பு தான்.
அப்பாவின் நடிகரை இப்போது அணைந்து நிற்கிறேன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.