விலை போகுதே விவசாய நிலங்கள்
(கன்னடக் கதை “ சிவப்புக் கிளி” யை முன் வைத்து)
விளை நிலங்கள் எல்லாம் வீடு கட்டும் மனைகளாக மாறுவது
பற்றியும், விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது பற்றியும் பல
வடிவங்களில் கட்டுரைகளாகவும், சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் வந்து
கொண்டுதானிருக்கின்றன. கன்னட எழுத்தாளர், வசுதேந்திரா அவர்கள்
எழுதியுள்ள ”சிவப்புக் கிளி” என்ற குறுங்கதையும் அது பற்றித்தான் பேசுகிறது.
ஆனாலும், வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் பேசுகிறது.
பணம் அதிகம் படைத்தவர்கள், நிலமும் அதிகமும் வைத்திருந்தால்,
அநேகமாக அவர்கள் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து விட்டு, அவர்கள்
அளக்கும் பாட்டம் பெற்றுக் கொள்வதோடு இருந்து விடுவார்கள். இது மாதிரி
குடும்பங்களின் இளைய தலைமுறைப் பிள்ளைகள் விவசாயம், விளைநிலம்,
பயிர்கள் என்பதெல்லாம் கூட வளர்ந்து விடுவார்கள். அதைப் பற்றிய
அக்கறை கூட அவர்களுக்கு இருக்காது. இப்படி தங்கள் நிலம் என்று கூட
தெரியாமல், அவையெல்லாம் வீட்டு மனைகளாக மாறி, பணமாக
மாறும்போதுதான், அதைப் பற்றியே தெரிந்து கொள்வார்கள்.
இந்தக் கதை மிகவும் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது. பள்ளிக்
கூடத்தில் ஆசிரியர் எங்கள் வீட்டுத் தோட்டம் பற்றி கட்டுரை எழுதச்
சொன்னபோது, கதை சொல்லும் சிறுவன் எழுதும் கற்பனை மிகவும் ரசிக்கத்
தக்கதாக இருக்கிறது. அவன் வீட்டுக்குச் சென்று தான் எழுதிய கட்டுரையில்,
ஆசிரியர் பூஜ்ஜியம் என்று மதிப்பெண் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்து
அவன் அம்மாவும், தோட்டத்தையே சென்று பார்க்காததுதான் குறை
புலம்புகிறார். ஆனால், வாசகர்களுக்கு, அந்தப் பையன் எழுதியிருப்பது
நகைச்சுவையாகவும், குழந்தைகளின் அளவு கடந்த கற்பனையாகவும் எண்ணி
நகைக்க வைக்கிறது.
அந்தச் சிறுவன், தங்கள் வீட்டில் வேலை செய்யும் ஈரப்பா மூலமே
கதைகள் கேட்டு வளர்கிறான். ஈரப்பாவும், இவனை சின்ன முதலாளி என்று
அன்புடன் நேசிக்கிறார். ஈரப்பா இவனுக்குக் கதை சொல்லும்போதெல்லாம்,
ஒரு ஏழு தலை நாகம் வந்ததையும், அது ஒரு முறை சீறினால், அப்படியே
மண்ணை அள்ளி காற்றில் வேறொரு பள்ளத்தில் போட்டு விடும் என்று
சொல்கிறார். இவனும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
அம்மா வற்புறுத்தியதன் பேரில், அப்பா, இவனையும், அக்காவையும்
தோடடத்திற்கு அழைத்துச் செல்கிறார். தோட்டத்திற்கு அவருக்கு வழி
தெரியவில்லை. இவர்கள் பெயர் சொல்லிக் கேட்டால், மற்றவர்களுக்கு வழி
சொல்லத் தெரியவில்லை. ஈரப்பாவின் தோட்டம் என்று சொல்லால்
எளிதாகச் சொல்லி விடுகிறார்கள். இந்த இடத்தில் ஆசிரியரை எவ்வளவு
பாராட்டினாலும் தகும். நிலத்தின் உரிமையாளரை விட அதிலேயே வேலை
செய்து சுழலும், ஒரு விவசாயியின் நிலத்தின் மீதான் பற்று, அவன் அந்த
நிலத்தின் மீது ஏற்படுத்தி கொள்ளும் பற்று என்பது ஒவ்வொரு
விவசாயிக்கும் உண்டானது.
இவனும் வளர்ந்து கல்லூரிக்குச் சென்று விடுகிறான். கல்லூரியில்
இருக்கும்போது அப்பா அக்காவின் திருமணத்திற்காக நிலத்தை விற்க
வேண்டுமென்றும், இவனும் வர வேண்டும் என்றும் தொலைபேசியில்
அழைத்துப் பேசுகிறார். விலை பேசப்படுகிறது. அப்போது, எவனுடைய அப்பா,
ஈரப்பாவையும் அழைத்து, அவனை வெறுங்கையோடு அனுப்ப
மனமில்லாமல், ஒரு தொகையைக் கொடுக்க முடிவு செய்கிறார். எனவே
அவனையும், அவரது மகனான குமாரசாமியையும் கூட கையெழுத்து போடச்
சொல்கிறார். குமாரசாமி மறுக்கிறான். ஈரப்பா அவனை அடிக்கிறார். அந்த
நிலத்தை விற்பதில் ஈரப்பாவுக்கும், அவர் மகன் குமாரசமிக்கும் மனம்
ஒப்பவில்லை. ஆனாலும், அவர் தன் இயலாமையை, கோபத்தை தன் மகன்
மீது காண்பிக்கிறார். அந்தப் பணம் கையில் கிடைத்ததிலிருந்து குடிக்க
ஆரம்பிக்கிறார். இந்த இடத்தில் ஆசிரியர் அருமையான ஒரு காட்சியை
வைக்கிறார். இவன் சிறுவனாக இருக்கும்போது கதை சொல்லி
கொண்டிருக்கும்போதே, இடையில் அம்மாவிடம் காப்பி வாங்கி வந்தால்தான்
தொடருவேன் என்று அடம் பிடிக்கும் ஈரப்பா, நிலம் விற்கும் அன்று,
எல்லோருக்கும் அம்மா காப்பி கொண்டு வந்தபோதும் ஈரப்பா அதைக் குடிக்க
மறுக்கிறார். அதே போல, நிலம் விற்றுப் பணம் வந்தவுடன் குடிக்க
ஆரம்பிப்பதும் அவருடைய மன வருத்ததையே காண்பிக்கிறது.
இவனுடைய வாழ்க்கை, மெபொறியியல் துறையில் வேலை,
திருமணம், குடும்பம் என்று காலம் நகர்கிறது. அவனுடைய பள்ளி அசிரியர்,
பள்ளியின் ஆண்டு விழாவிற்காக, இந்தப் பள்ளியில் படித்து பெரிய ஆளாக
இருக்கும் பழைய மாணவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்ததன்
பேரில் மீண்டும் தன் கிராமத்திற்கு, பல ஆண்டுகள் கழித்து வருகிறான்.
விழா முடிந்து தங்கள் நிலம் இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறான். ஒரு
செம்மண் பூமியாக இருக்கிறது. பெரிய பெரிய இயந்திரங்கள் நிற்கின்றன.
எங்கும் ஒரே சிவப்பு மண். நிலத்தின் மேலே பறக்கும் பறவைகளின் நிறம்
கூட சிவப்பாகவே இருக்கிறது. மண்ணை அள்ளும் இயந்திரங்களை
புகைப்படம் எடுக்கிறான். அந்தப் படத்தை அவன் நண்பனிடம்
காண்பிக்கும்போது, அவன், ஏழு தலை கொண்ட பாம்பு படமெடுத்து நிற்பது
போல இருக்கிறது என்று சொல்கிறான். அந்த வார்த்தகளைக் கேட்டு இவன்
திடுக்கிடுகிறான். ஈரப்பா சொன்னதை நினைவு கூறுகிறான். ஆனால், ஈரப்பா,
அந்த பாம்பு, புதையலைக் காக்கும் என்று சொன்னாரே; இப்போதோ நம்
பூமிக்கடியிலான செல்வங்களையெல்லாம் அது வாரி வாரி
வெளிநடுகளுக்கெல்லாம் கொடுக்கிறதே என்று அங்கலாய்க்கிறான்.
அந்த இயந்திரத்தை இயக்கும் மனிதனையும் புகைப்படம் எடுக்கிறான்.
பார்த்தால், அது ஈரப்பா மகன் குமாரசாமி.. அவனும், அவன் மனைவியும்
இன்ங்கு வேலை செய்வதையும், அவனும், குடும்பமாக ஆகி விட்டதையும்
எல்லாம் சொல்கிறான். இந்த இடத்தில் ஆசிரியர், அவனது பல்லும் சிவப்பாக
மாறியிருந்தது எனக் குறிப்பிடுகிறார். ஈரப்பா இறந்து விட்டதை, நிலம்
விற்றவுடனேயே குடிக்கவும் ஆரம்பித்து, கொஞ்ச நாளிலேயே இறந்து
விட்டதைச் சொல்கிறான். ஈரப்பாவிற்கு அந்த நிலத்தின் மேல் இருந்த
பற்றினை, இந்த இடத்தில் நாம் உணர முடிகிறது. இது ஈரப்பா என்ற தன்
மனிதனின் பற்று மட்டுமன்று. விவசாயிகளின் சமுதாயத்திற்குண்டானது.
இவனுடைய நண்பன், நிலத்தின் தற்கால மதிப்பினை கோடிக்கணக்கான
ரூபாய்களாக இருக்கும் என்று சொல்லும்போது கூட இவனுக்கு, அது ஒரு
பொருட்டாகவே தெரியவில்லை. விளைநிலம், இப்படி வீணாகி விட்டதே
என்றும், அனைத்துமே செம்மண்ணாகி விட்டதே என்றும், உடலை சுத்தம்
செய்து கொள்ளக்கூட அருகில் நீரி நிலை இல்லையே என்றும் வருத்தம்
மேலிடுகிறது. இவன், இவனது அக்காவுக்கு, அனுப்பும் குறுஞ்செய்தியாக,
சிவப்பாக மாறியிருக்கும் கிளிகள், செடியில் மலர்ந்திருக்கும் செம்பருத்த்திப்
பூவாக தெரியவில்லை; அவை கொலை உரித்து கடைகளில் தொங்க
விடப்பட்டிருக்கும் இறைச்சித் துண்டுகளைப் போல இருக்கின்றன என்று
அனுப்பும்போது, இவனுடைய மனப் பாரம் வாசிக்கும் நம்மையும் தொற்றிக்
கொள்கிறது.
43 பக்க அளவே கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில், விவசாய நிலங்கள்,
வணிக நிலமாக மாறுவது, அதனால், மண்ணின் தன்மை மாறுபடுவது,
நீர்நிலைகள் வற்றுவது, நம் நாட்டின் வளங்கள் வெளி நாட்டு பெரு
முதலாளிகளின் கையில் பெரும்பணமாக மாறுவது என விவசாயத்தின்
அழிவை ஒரு பக்கம் சொல்கிறார் நூலாசிரியர்.
இன்னொரு புறம் விவசாயியின் நிலத்தின் மீதான பற்று,
விவசாயத்தின் மீதான மாளாக் காதல், முதலாளி போன்று, நிலமே அவன்
பெயரால் வழங்கப்படும் அளவுக்கு பெயரெடுத்தவன், வணிகப் பெரு
முதலாளிகளுக்கு ஊழியம் செய்பவனாக மாறியிருப்பது என விவசாயிகளின்
வாழ்க்கையை சொல்கிறார். ஈரப்பாவின் மனைவியும், வயற்காட்டில் வேலை
செய்தவள், தற்போது தொலைக்காட்சியில் பகல் முழுவதும் தொடர்கள்
பார்த்துக் கொண்டிருப்பதை குமாரசாமியின் வாயிலாகச் சொல்கிறார்.
உலகமயம் என்பது எப்படி விவசாயத்தை அழித்து, மக்களை கூலிக்கு
வேலை செய்பவர்களாகவும், தொலைக்காட்சியில் தம்மைத் தொலைத்துக்
கொள்பவர்களாகவும், நிலத்தின் மீதான் மதிப்பை விட, மென்பொறி
நிறுவனங்கள் தரும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை
உயர்வானது என்று கருதுபவர்களகவும் மாற்றி விட்டிருக்கிறது என்பதை மிக
அழகாக. குறுநாவலை விடவும் சிறியதான கதை வடிவத்தில்
சொல்லியிருக்கிறார் கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா. அதைத் தமிழில்
அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் யூமா வாசுகி. இருவருக்கும் பாராட்டுகள்.
அழகாக அச்சிட்டு வெளிக் கொண்டு வந்திருக்கும் பாரதி புத்தகாலயத்தார்
பாராட்டுக்குரியவர்கள்.
நூலின் தகவல்கள்
நூல் : சிவப்புக் கிளி (கன்னடக் கதை)
ஆசிரியர் : வசுதேந்திரா – யூமாவாசுகி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 40/-
பக்கங்கள் : 48
எழுதியவர்
எஸ். ஜெயஸ்ரீ, கடலூர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.