சுரேஷ் இசக்கிபாண்டி
நூல்: வெட்கமறியாத ஆசைகள்
ஆசிரியர்: சிவசங்கர் ஜெகதீசன்
“ஆசையே” துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் உலகத்தின் அடிப்படை தத்துவத்தை, அனைத்தையும் துறந்த மகான் கௌதம புத்தர் கூறியிருக்கிறார். அதையே நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் பேசிட கானொளியாக பார்த்து இருக்கிறேன். ஆனால் அவரது வாழ்வு இன்றளவும் ஆசைகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதா என்று கேட்டால், அது பெரும் கேள்விக்குறிதான். எனினும் ஆசைகள் குறித்து அவர் பேசியதற்காக தான் அவரை குறிப்பிட்ட தவிர அவரை ஆசைகள் அற்ற மனிதர் என நான் சொல்வதற்காக இல்லை. இப்போது புத்தகத்திற்குள் வருவோம் இதில் ஆசிரியர் ஆசையே எல்லா சாதனைகளின் தொடக்கப்புள்ளி என நெப்போலியன் ஹில் வார்த்தைகளை தாங்கி தனது புத்தகத்தை துவக்கியிருக்கிறார்.
பதினோரு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பை, தான் வாசித்த செய்திகள், கடந்து சென்ற சில சம்பவங்கள் ஆகியவற்றின் தாக்கங்களிலிருந்து அவருக்கே உரிய பாணியில் கதைகளாக உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம் நாம் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்தி, கடந்து வந்த சில சமூக தாக்கங்கள் கொண்ட சம்பவங்களும், சிறுகதைகளாக ஆகும் அளவிற்கு பாதிப்பினை நூலாசிரியருக்கு உருவாக்கியிருக்கிறது என்பதை நாம் இங்கே உணர்ந்து பாராட்ட வேண்டியுள்ளது.
2007ஆம் ஆண்டு துவங்கிய முதல் சிறுகதையான வெட்கமறியாத ஆசைகள் கதையில் வரும் ஸ்வேதா, என்னதான் படிப்பில் படு சுட்டியாக, முற்போக்கு எண்ணம் கொண்டு தனது சக தோழிகளிடம் பேசும் பெண்ணாக இருந்தாலும், இறுதியில் தான் கொண்ட அதீத ஆசையாலும், அது அழைத்துச்சென்ற ஆடம்பர சுகபோக வாழ்க்கையையே தன்னை மறந்து, பெற்றொரை மறந்து, தடுமாறி தன்னையே இழந்து மரணித்து போகும் அளவிற்கு தள்ளி இருக்கிறது. அப்படிப்பட்ட ஆசையே இன்று ஒரு மனிதனை நகர்த்துவது மட்டுமன்றி மாற்று வழிகளில் அழைத்துச் சென்று இறுதியில் அவள் அல்லது அவனை வெற்றியாளனாக ஆக்குக்கிறது. சில நேரங்களில் அதனை அடைய முடியாமல் அவன் / அவளை ஆட்கொல்லும் வேதனை பால் வரும் வலிகள், துக்கம், கோபம், அவமானம், வன்மம் அவர்களை இல்லாமலும் ஆக்குகிறது என்பதற்கு இத்தொகுப்பில் வரும் ஸ்வேதா (வெட்கமறியாத ஆசைகள்), சாந்தகுமார் (த்ரில்), ரஞ்சித்குமார் (நிராசை), ஸ்டீபன் பால் (விபரீத ராஜயோகம்) ஆகியோரது வாழ்வே ஆகும்.
எப்போதும் ஊரோடு ஒத்துப் போ என சொல்லும் பெற்றோர்களையும் உறவினர்களையும் நாம் கடந்து சென்றிருப்போம். அப்படி போகாதே என சொல்லும் ஒரு சுயபரிசோதனை கதையாக ”நூதன திருட்டு” நம்மை அழைத்துச் செல்லும். குழந்தைகள் எல்லாவற்றையும் ஆசை கொள்வார்கள். அதற்காக அவர்கள் விரும்புவதெல்லாம் நாம் செய்து கொடுத்தால், அதனால் ஏற்படும் அழுகையையும், வலியையும், வேதனையையும், இழிவையும் நாமே தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை ”த்ரில்” மற்றும் ”ஜேஃஎப்சி” கதைகள் உணர்த்துகிறது.
அளவு மாற்றம், குண மாற்றத்திற்கு வழிகோலுகிறது என மாமேதை மார்க்ஸ் உருவாக காரணமாக இருந்த ஹெகல் குறிப்பிட்டிருக்கிறார். அதை அப்படியே நமக்கு உணர்த்துகிறது ”ஏளனம்” என்னும் சிறுகதை. கணவனைச் சார்ந்து அவரது இணையருக்கு வரும் ஆசையும் (சுற்றத்தாரின் ஆடம்பரம்) நண்பர்களை பார்த்து குழந்தைக்கு ஏற்படும் ஆசையும், காதலனை காண துடிக்கும் காதலியது ஆசை என இங்கே வரும் அனைத்து ஆசைகளும் ஈடேறினாள், அதனால் அவர்கள் அடையும் சந்தோஷமும் இங்கே நமக்கு நெருக்கமான வார்த்தைகள் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் ஆங்கிலம் கலந்து விவரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில இடங்களில் ஆங்கில வார்த்தை இடம்பெறாமல் இருக்கிறது. அது வாசகருக்கு சிலர் குழப்பத்தை ஏற்படுத்தும். எனினும் ஆசிரியரது முயற்சியான ஆசைக்கும் வாழ்த்துக்கள்…
எளிய கதைகள் அனைவரும் வாசிக்க முயல்வோம்…
நன்றி என்றும் தோழமையுடன்
சுரேஷ் இசக்கிபாண்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கதைகளை பற்றிய உங்கள் பார்வை அருமை. பொறுமையாக படித்து புரிந்துணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி சுரேஷ்.
நன்றி தோழர்