செங்கொடி நிழலில் சமூக பண்பாட்டு மாற்றங்கள்
– அ. குமரேசன்
“எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடக்குது. நேத்து வரைக்கும் இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டுப் போன சேரிக்காரனுங்க இப்ப தோள்ல போட்டுக்கிட்டு வர்றானுங்க.”
1950களிலும் 60களிலும் இந்தப் பேச்சைத் தமிழ்நாட்டின் பல ஊர்களும் கேட்டிருக்கின்றன. கேரளம், ஆந்திரம், வங்கம் என வேறு பல மாநிலங்களிலும் பெரும்பாலான ஊர்களில் இப்படிப் பேசப்பட்டிருக்கிறது. ஊர்களின் வயல்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இறங்கி உழைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட, ஆனால் சேரிகளிலிருந்து ஊரின் தெருக்களில் இறங்கி நடப்பதற்கு அனுமதிக்கப்படாத மனிதர்கள் இருந்தார்கள். வயல்களின் உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் மேட்டுத் தெருக்களில் வாழும் யாரைக் கண்டாலும் கக்கத்திலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குனிந்து செல்ல வேண்டியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்த மக்கள் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு அந்தத் தெருக்களில் ஏறி நடக்கத் தொடங்கியது சாதாரண மாற்றமல்ல. ஆகவேதான் அந்த ஊர்களிலெல்லாம் மேலே பார்த்த பேச்சு ஒலித்தது. இந்தப் பேச்சு ஒலிக்காத ஊர்கள் இருந்திருக்கும் என்றால், அவை கம்யூனிஸ்ட் இயக்கம் வேரூன்றாத பகுதிகளாகத்தான் இருக்கும்.
வேலை நடக்கும் இடத்திற்கு வெளியே தொழிலாளர்கள் சாதியாக, மதமாகப் பிரிந்துவிடுவது இன்றைக்கும் தெரிகிறது, முன்பு மிக அழுத்தமாகத் தெரிந்தது. கூலி உயர்வு, பணி நேரம் போன்ற வேலை சார்ந்த கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், செங்கொடிச் சங்கங்களின் தலைமையை ஏற்ற தொழிலாளர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்காகவும் திரள்வதை, அந்தத் திரட்சியில் அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்தவர்கள்பங்கேற்றபதை நிகழ்வாக்கியது கம்யூனிஸ்ட் இயக்கம்
இரட்டைத் தண்டவாளம்
இந்தியச் சமுதாயம் என்ற தொடர்வண்டி ஓடுவதற்கான பாதையைத் தாங்கியிருக்கும் அடித்தளமாக இருந்து வந்திருப்பது “உழைப்பை வழங்குவோர்–அதைச் சுரண்டுவோர்” என்ற வர்க்கக் கட்டுமானம்தான். அந்தப் பாதையின் இரண்டு தண்டவாளங்களில் ஒன்று, சாதிப் பாகுபாடு. இன்னொன்று மாதர்தமை இழிவு செய்யும் ஆணாதிக்கக் கோட்பாடு. சமத்துவத்துக்கான மாற்றுப் பாதையில் சமுதாய வண்டி செல்வதற்குத் தோதாக, அந்த இரண்டு தண்டவாளங்களையும் பெயர்த்தெடுக்கும் வரலாற்று முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அவற்றின் மீது விழுந்த சம்மட்டி அடிகள் எளிதானவை அல்ல.
இடுப்பைச் சுற்றியிருந்த துண்டு தோளுக்கு ஏறியது அப்படிப்பட்ட ஒரு சம்மட்டி அடிதான். அதுவொரு மாறிய காட்சி. அப்படி மாற்றியது கம்யூனிஸ்ட் கட்சி. நாடு தழுவிய அளவில் டாக்டர் அம்பேத்கர் முனைந்தெடுத்த இயக்கம், தமிழகத்தில் அயோத்திதாசர் தொடங்கி, சிங்காரவேலர், பெரியார் வளர்த்தெடுத்த இயக்கங்கள் வரையில் அந்தச் சம்மட்டியைக் கையில் எடுக்க வைத்திருக்கின்றன. அதே வேளையில், கருத்துப் பரப்பலைச் செய்துகொண்டே களத்திலும் இறங்கி, சங்கம் அமைப்பதில் தொடங்கி, நியாயக் கோரிக்கைகளை எழுப்பி அசைவுக்கான போராட்டங்களை நடத்தியது, நடத்திக்கொண்டே இருப்பது கம்யூனிஸ்ட் இயக்கம்.
பெரிய கோவில்களில் கூட ஒதுக்கப்பட்ட மக்கள் நுழைந்து வழிபடுவது சாத்தியமாகிவிட்டது, ஆனால் கிராமங்களின் சிறிய கோவில்களில் இன்னமும் அசாத்தியமாக இருக்கிறது. அதையும் சாத்தியமாக்குவதற்கான போராட்டத்தை, இன்றைய சூழலில் வீரியத்தோடு நடத்திக்கொண்டிருக்கிற நாடுதழுவிய இயக்கம் என்றால் அது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மட்டுமே என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு, தேர்ந்தெடுக்கப்படும் தலித் சமூகத் தலைவர்கள் ஊராட்சிமன்ற இருக்கைகளில் அமர்ந்து பணியாற்றுகிற உரிமை நிலைநாட்டல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டச் செயலாக்கத்திற்குத் துணைநிற்றல், ஒரு காதல் இணை எந்தச் சாதியினரானாலும் அவர்களைப் பாதுகாப்பதற்கான சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்திற்கு வலியுறுத்தல் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வழிகாட்டியாகக் களமாடிக்கொண்டே இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இன்று, சட்டப்பேரவையில், தமிழகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவான ஆதரவாக நிற்பதும இதே கட்சிதான்.
பாரினில் பெண்கள்
இரட்டைத் தண்டவாளம்தான் என்று நிறுவிக் காட்டுவதாக, கேரளத்தில் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மார்க்கச்சை அணியக்கூடாது என்ற, ஆண் வக்கிரத்தின் அப்பட்டமான வெளிப்பாடாக ஒரு விதி இருந்து வந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னெடுப்பால், பெண்ணின் சுயமரியாதை எழுச்சி, தோள் சீலைப் போராட்டமாக உருவெடுத்தது. அந்த வக்கிரம் பழைய கதையாக மாறியது. வரதட்சனைத் தடைச் சட்டம் வந்ததற்கு மையமான காரணமாக இருந்ததும், நடைமுறையில் கண்டும் காணாமலும் வரதட்சனை தொடர்கிற நிலையில் அதன் கொடுமைகளைத் தடுக்க அந்தச் சட்டத்தை ஆயுதமாக உயர்த்துவதில் முன்னணியில் இருப்பதும் கம்யூனிஸ்ட் தோழர்களே.
மும்பையில் ஒரு பெண் குடும்பத்தில் பல்வேறு கொடுமைகளையும் அவமதிப்புகளையும் சந்தித்தவராகத் தனித்து வாழ முடிவு செய்தார். அதன் பிறகும் கூட, உறவினர்களின் முகச்சுளிப்புகளுக்கும், “நீதான் பொறுப்பா இருந்திருக்கனும்” என்பது போன்ற விமர்சனங்களுக்கும் ஆளானார். பெற்றோரின் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையில், ஒத்துழைக்க முன்வந்த சில ஆண்கள் அவருடைய உடலை விலையாகக் கேட்டார்கள். வெறுத்துப்போய் தற்கொலைக்கு முயன்றவரைத் தடுத்து நிறுத்திய சிநேகிதி, நேராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கே இருந்த சங்கப் பொறுப்பாளர்கள் சிறந்த உளவியல் வல்லுநர்களாகவும் மாறி, தற்கொலைச் சிந்தனையிலிருந்து விடுவித்து, தங்களின் உறவாக அவரை வரித்துக்கொண்டார்கள். இன்று ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, விடுமுறை நாட்களில் சங்கத்திற்காகவும் பணியாற்றுகிறார். தனித்து வாழும் பல பெண்களுக்கு அற வலிமையும் வழிகாட்டலும் வழங்குகிறவராக இருக்கிறார். இப்படி நிறையப் பெண்கள்.
எந்த ஊரானாலும், ஒரு பெண் கடுமையாகப் பாதிக்கப்படுகிறபோது “இங்கே மாதர் சங்க ஆட்கள் இருப்பாங்க, போய்ப்பாருங்க,” என்று மற்றவர்கள் சொல்கிற அளவுக்கு அடையாளம் கிடைத்திருக்கிறது. கலாச்சாரப் பெருமையின் பெயரால் பெண்ணின் மீது சுமத்தப்படும் பல சடங்குச் சுமைகளையும் அணிவிக்கப்படும் அடையாளங்களையும் அப்புறப்படுத்தவும், பாலின சமத்துவக் கனவை முழுமையாக நனவாக்கவும் போராடிக்கொண்டே இருக்கும் மாதர் அமைப்புக்குக் கட்சி பின்புலமாகத் திகழ்கிறது. பெண்களின் சுயத்தை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்களித்தது “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற முழக்கம். அதை உருவாக்கியதும், நடைமுறை உண்மையாக மாற்றியதும் கம்யூனிஸ்ட் இயக்கம்.
வர்க்கக் கடமை
தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் இருக்கின்றன. அவர்களின் ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலை நேரம், மருத்துவ நலன் ஆகிய நியாயமான கோரிக்கைகளுக்காக அந்த அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றைத் தாண்டி, ஒட்டுமொத்த சமுதாயத்தை விடுதலை செய்கிற மகத்தான வர்க்கக் கடமை இருப்பதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது, அந்த வரலாற்றுத் திருப்பத்திற்காக அணி திரட்டிக்கொண்டே இருப்பது கம்யூனிஸ்ட் இயக்கம்.
கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான ஆதரவால்தான், போராட்டங்களை ஒடுக்குகிற நீதிமன்ற ஆணைகள் உட்பட அனைத்தையும் எதிர்கொண்டு, அடக்குமுறைகளை உதிர்த்துத் தள்ளி, நிர்வாகங்களும் அதிகார வர்க்கத்தினரும் தங்களோடு உட்கார்ந்து பேச வைத்திருக்கிறார்கள் கரத்தாலும் கருத்தாலும் உழைக்கிற பாட்டாளிகள். இது அவர்களுடைய சொந்த முன்னேற்றங்களோடு நில்லாமல், நாட்டின் வளர்ச்சியில், சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பங்களிக்கிறவர்கள் என்ற இடத்தை உழைப்பாளிகள் பெற வைத்திருக்கிறது.
கலை இலக்கியக் களத்தில்
இத்தகைய சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வதில் கலைகளுக்கும் இலக்கியத்திற்கும் மிகப் பெரும் பங்கு உண்டு. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிந்தனைகளாலும் செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுடைய படைப்புகளில் அவற்றைத் தங்களுக்கே உரிய தனித்துவ அழகியலோடு வெளிப்படுத்துகிறார்கள். அது, பொது வெளியில் இருக்கிற மக்களிடையே தாக்கம் ஏற்படுத்துகிறது.
இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தமக்கு எவ்வித இயக்க வண்ணமும் பூசிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறிடும் சிந்தனையாளர்களும், படைப்பாக்கம் என்று வருகிறபோது, சமூக உண்மைகளைச் சித்தரிப்பது என்று வருகிறபோது, இயல்பாகவே அந்தச் சித்தரிப்புகளில் சிவப்பு வண்ணம் பூத்துவிடுகிறது. தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகிறபோதெல்லாம், இடதுசாரிகளுக்கே விருதுகள் கிடைப்பது எப்படி என்று ஒரு பகுதியினர் கூச்சல் போடுவதைக் கேட்கலாம். பின்னர் அது வெறும் முனகலாக முடிந்து போவதையும் காணலாம்.
இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலைக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பாகத் தொடங்கியதைப் போலவே, இலக்கியத்திலும் அக்காலத்தில் சிவப்புச் சிந்தனைகளை, சமத்துவக் கனவுகளை, உரிமை உணர்வுகளை விதைத்த, சமூகத்தின் சமத்துவமற்ற நிலைமைகள் குறித்த குற்றவுணர்வை ஏற்படுத்தியவர்கள் பேனா ஆயுதம் ஏந்திப் புறப்பட்டார்கள். அவை நாடகங்களாகின. திரைப்படங்களாகவும் பரிணமித்தன. 1936இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதல் இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரையில், பல்வேறு மாநிலங்களிலும் செயல்படும் அமைப்புகள் உட்பட ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அருமையானவை.
இயக்கம் சாராதவர்கள் கூட தங்களது தயாரிப்புகளில் அந்தக் கருத்துகளைப் பதிய வைத்தார்கள். அத்தகைய பல திரைப்படங்கள் வணிகக் களத்தில் வெற்றிபெற்று ஏதேனும் ஒருவகையில் அந்த எண்ண ஓட்டங்களைப் பிரதிபலித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தையே கூட ஏற்படுத்தியிருக்கின்றன. இன்றைக்கும் கூட, வெறும் பொழுதுபோக்கு மசாலாத் தூவல்களாக இருப்பதற்கிடையே, விதிவிலக்காக வந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளான படங்களைத் தவிர்த்து, மற்ற பெரும்பாலான படங்களின் நாயகப் பாத்திரங்கள் சமத்துவம் பேசுகிறவர்களாக, சாதியை மறுக்கிறவர்களாக, மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறவர்களாக உருவாக்கப்படுவது அன்றைய தொடக்கத்தின் தொடர்ச்சிதான்.
சொந்த வாழ்விலும்
ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தக்கூடிய இடத்தில் இருக்கிற வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் சரியான, தேவையான சட்டங்களை நிறைவேற்ற வைத்திருக்கிறார்கள். தொழிலாளர் வேலை நேரம், பணிப் பாதுகாப்பு, ஒப்பந்த முறையிலிருந்து விடுவிப்பு, பெண்களின் சொத்துரிமை, குடும்ப வன்முறை தடுப்பு, நில விநியோகம், குறைந்தபட்ச ஊதியம், கல்வி உரிமை, தனியார் பள்ளிகளிலும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் வாரிசுகளுக்கு இலவசக் கல்வி, தகவல் உரிமை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி, உணவுப் பாதுகாப்பு, தகவல் அறியும் உரிமை ஆகியவை உள்ளிட்ட சட்டங்கள் இயற்றப்பட்டதில் கம்யூனிஸ்ட்டுகளின் மையமான பங்கை நாடு மறக்காது.
ஊருக்கு மட்டும் உபதேசிக்கிறவர்களாக இல்லாமல், ஏராளமான தோழர்களின் வீடுகளில் சாதி மறுப்புத் திருமணங்களும், சடங்குகள் விலக்கப்பட்ட நிகழ்வுகளும், பெண்களுக்கு முடிவெடுக்கும் உரிமைகளும் இயல்பாக இருக்கின்றன. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இணையர்கள் ஒரே வீட்டில் வாழும் தோழர் குடும்பங்களைப் பல இடங்களில் காண முடியும். இது அவர்களுடைய சுற்றத்தாரிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிறுமிகள் வயதுக்கு வருவதை, கல்யாணச் சந்தைக்குத் தயாராகிவிட்டாள் என்று அறிவிப்பது போல ஊரறிய டமாரமடித்துத் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டாடுகிற சடங்குகள். பெருமளவுக்குத் தோழர்களின் குடும்பங்களில் நடத்தப்படுவதில்லை. சமபந்தி என்று பலகை மாட்டாமலே சமமாக அமர்ந்து சாப்பிடுகிறவர்களாக, சாப்பிட வைக்கிறவர்களாகப் பல தோழர்கள் சமூகத்திற்கும் சக தோழர்களுக்குமே கூட முன்னுதாரணம் படைக்கிறார்கள்.
இவ்வாறு கொள்கையாக, வாழ்வியல் நடப்பாக, சட்டமாக இந்தியச் சமுதாயத்தில் மார்க்சியச் சிந்தனையின் மையமான பாத்திரத்தை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். உயர்ந்து பறக்கும் செங்கொடியின் கீழ் நிகழ்ந்துள்ள, நிகழ்ந்துகொண்டிருக்கிற சமூக, பண்பாட்டுத்தள மாற்றங்களையும் வரலாறு பதிவு செய்திருக்கும்.
எழுதியவர் :

அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.