1
ஒரே நிறத்தில்
உடுத்தியிருக்கிறோம்.
ஸேம் ஸ்வீட்டென்று புன்னகைக்கிறாய்.
பக்கத்தில் முறைக்கிறான்
ஆபத்துதவி.
2
வளர்த்த பூனைக்குட்டி
காணாமல் போனதென்று
கதறியழுகிறாய்.
பூனைக்குட்டி
இல்லையேயென்று
நான் அழுகிறேன்.
3
யாரென்று தெரியவில்லை.
பேசிக்கொண்டேவருகிறாய்.
தலையில் குட்டுகிறாய்.
தோளில் தட்டுகிறாய்.
பல்லைக்கடித்தபடி தள்ளிப்போகையில்
அருகில்அழைத்துஅறிமுகம் செய்கிறாய்.
பக்கத்து வீட்டுத்தம்பி என்று.
குழலினிது..யாழினிது..
தம்பி அதைவிட இனிது..
4
கவிதைகளைப்படித்துவிட்டு
யாரையாவது காதலிக்கிறாயா
என்கிறாய்.
கடவுளிடம்போய் யாராவது
கோவிலுக்கு வழிகேட்பார்களா?
5
நீ என்ன இத்தனை சுத்தக்காரியாய்
இருக்கிறாய்.
என்உலகத்தில் இன்னும்
சீப்புக்கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
6
நீ போகிற வருகிற
வழியில்
எவனாவது கையில்
ரோஜாவோடு நின்றிருந்தால்
என்வீட்டுத்தோட்டத்தில்
கள்ளிகாய்க்கிறது
7
பேசிக்கொண்டே வந்தவள்
சட்டென என்தோளில்
சாய்ந்து துயில்கொண்டாய்.
பயணம்முடியும்வரை
துயில்கலையக்கூடாது.
துயில்கலையும்வரை
பயணம் முடியக்கூடாது.
8
காதலைச்சொல்லிவிட்டு
இரண்டுநாட்களாய்
உன் கண்ணிலேயேபடவில்லை.
மூன்றாவதுநாள் மாட்டிக்கொண்டேன்.
சப்பென கன்னத்தில்அறைந்து
எங்க போய்த்தொலைஞ்ச ரெண்டுநாளா என்றாய்.
சம்மதம் இப்படிச்சொல்வாய்
என எதிர்பார்க்கவேயில்லை..
எழுதியவர்
கௌ.ஆனந்தபிரபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Super alagana varigal arumai arumai
மிக்கநன்றி