கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்
அம்மா
*********
கனடாவில்
குளிர் காலத்தில் —
கறுப்பு வீதிகள் அனைத்தும்
வெள்ளி வீதிகளாய் வேடம் தரிக்க
குளிர் விரட்டி கோட்டு சூட்டுகளே
குளிரில் நடுங்க
கையுறைகள் இருந்தும் விரல்கள் விறைக்க
குளிர் விழுங்கிய முழங்கால் சப்பாத்துகள்
பனிக்கட்டிகளில் பதுங்கு குழி தேட
உடலில் முக விழிகள் மட்டும்
மூடாமலிருக்க
ஒவ்வொருவர் முகத்திலும்
வாயும் மூக்கும்
வெண் புகை போக்கிகளாய்
வேலை செய்தன!
கோடை காலம் தொடங்கிவிட்டது
பூத்துக் குலுங்கும் பூக்கள்
கடுங்குளிர் முடிய
வெள்ளைப் போர்வையிலிருந்து
விடுதலையடையும் மலைகள்
மிதமான குளிர்
அம்மாவின் கைகள்போல்
ஆதுரமாய் அணைக்கும்
எப்போதும் சூழ்ந்திருக்கும் மேகங்கள்போல்
அகல மறுக்கும் அம்மாவின் நினைவுகள்
பிள்ளை செய்கிற
அத்தனை முட்டாள் தனங்களையும்
பொறுத்துக் கொள்வதற்காக
கடவுள் அனுப்பிய ஒரே பரிசு
அம்மா.
அம்மா
உயிர் பெற்று வந்துவிட்டதாய்ச்
செய்கிற சின்னக் கற்பனையும்
சிறந்த கவிதையாகிவிடுகிறது.
அவள் மடி
பிரபஞ்சத்தைவிடப் பெரிதாவது எப்படியோ!
பிள்ளை
வெளியில் விளையாடினால்
அடிபட்டு விடுமென்று
இமையிரண்டில் ஊஞ்சல் கட்டிய
இன்சொல்காரி.
இட்லிக்கு அவள் செய்கிற
மிளகு சாம்பாரில்
என்னதான் ரகசிய ருசி தூவுவாளோ தெரியாது.
அவள் வைத்த வெந்தயக் குழம்பிலும்
சீரகக் குழம்பிலும்
சுடச் சுட வெண்சோறு சாப்பிடும் ருசி
கனடாவில்
காண முடியாத சுவை
அவளது சேலைப் போர்வையில் தூங்குகிறபோது
மார்கழி மாத மணம்
மனமெல்லாம் சுழலும்
அவள் கருப்பை கடனடைக்கக்
கருந்துளையும் போதாது
அவளை நினைக்கையில்
பெருகும் கண்ணீரை
இதயத்தில் சேமிக்கிறேன்
எப்போதும்
என் இதயம் அவள் நினைவுகளின்
மிதவைப் படுக்கையாகும்.
மொழிபெயர்ப்பாளர் :
–நா.வே.அருள்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.