1986இல் நடந்த விமானக் கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2016இல் வெளிவந்த இந்திப்படம். சாய்வின் குவாத்ரஸ் (Saiwyn Quadras) கதை திரைக்கதை எழுதியுள்ளார். குத்துசண்டை வீராங்கனை மேரி கோம்ஸ், பொக்ரான் குண்டு வெடிப்பு போன்ற படங்களுக்கும் இவர் திரைக்கதை எழுதியுள்ளார். சன்யுக்தா சாவ்லா ஷேக் (Sanyuktha Chawla Shaikh) உரையாடல்கள். குறிப்படத்தகுந்த தயாரிப்பாளர், எழுத்தாளர் ராம் மத்வானி இயக்கியுள்ளார். சோனம் கபூர்,ஷபனா ஆஸ்மி, யோகேந்திர திக்கு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ANO எனும் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் சிறைப்பட்டிருக்கும் தங்கள் சகோதரப் போராளிகளை விடுவிப்பதற்காக, மும்பையிலிருந்து கராச்சி, பிராங்ஃபர்ட் வழியாக நியூயார்க் செல்லும் விமானத்தை கடத்த முயற்சிக்கின்றனர். இந்த நிகழ்வில் தன்னுடைய தனிப்பட்ட துயரங்களை மறந்து துணிச்சலாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு பயணிகளை நீர்ஜா எனும் விமானப் பணிப்பெண் காப்பாற்றுகிறாள். தன் உயிரையும் இழக்கிறாள். குடிமக்களின் வீர தீர செயலுக்கான மிக உயரிய விருதாகிய அசோக சக்ரா விருது அவருக்கு அளிக்கப்படுகிறது. மிகக் குறைந்த வயதில் இதைப் பெற்றவர் என்கிற பெருமையும் கிடைக்கிறது.
நீர்ஜா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் இருக்கிறார். அவள் குடும்பத்திற்கு தெரிந்தவனும் நீர்ஜா பழகியிருந்தவனுமான ஜெய்தீப்பிற்கு அவளை திருமணம் செய்யாமல் வேறு ஒருவருக்கு செய்கிறார்கள். அவன் அவளை கடுமையாக துன்புறுத்துகிறான். முடிந்தவரை பொறுத்துக் கொள்கிறாள். தந்தை அவளை தைரியமாக இருக்க சொல்கிறார். இறுதியில் விவாகரத்து ஆகிவிடுகிறது. இந்த நிலையில்தான் அவள் விமானப் பணிப் பெண்ணாக சேர்ந்து தலைமை பணியாளராகவும் பதவி உயர்வு பெறுகிறாள். இரண்டு நாளில் அவளது 23ஆவது பிறந்த நாள் வரும் நிலையில் நியூயார்க் செல்லும் விமானத்தில் தலைமைப் பணியாளராக முதல் முறையாக செல்கிறாள். அவளுடைய பழைய நண்பன் ஜெய்தீப் அவளை விமான நிலையத்தில் விட்டு பிறந்தநாள் பரிசு ஒன்றும் தருகிறான். அதில் அவளை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டிருப்பான்.
கராச்சியில் கடத்தல்காரர்கள் விமானத்தினுள் புகுந்துவிடுகிறார்கள். நீர்ஜா சமயோசிதமாக விமான ஓட்டிகளுக்கு தெரிவிக்க அவர்கள் விமானத்திலிருந்து வெளியேறி தப்பித்து விடுகிறார்கள். இப்பொழுது கடத்தல்காரர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு பைலட்டுகளை அனுப்ப சொல்லி கெடு விதிக்கிறார்கள். அரை மணி நேரம் பொறுத்து தான் அமெரிக்கக் குடிமகன் என்று சொல்லும் இந்திய அமெரிக்க பயணி ஒருவரை சுட்டுக் கொல்கிறார்கள். பயணிகளில் அமெரிக்கர்கள் யார்யார் என்று அறிவதற்காக அமெரிக்க பாஸ்போர்ட்டுகளை வாங்க சொல்கிறார்கள். அவர்களைக் காப்பாறுவதற்காக, நீர்ஜா சக பணிப்பெண்களிடம் அமெரிக்கப் பாஸ்போர்ட்டுகளை வாங்க வேண்டாம் அல்லது மறைத்து வைக்க சொல்கிறாள்.
நேரம் ஆக ஆக கடத்தல்காரர்கள் பொறுமை இழக்கிறார்கள்.பயணிகளையும் பணிப்பெண்களையும் தாக்குகிறார்கள். ரேடியோ அறிவிப்பாளர் ஒருவரை சுட்டுக் கொள்கிறார்கள். இதற்கிடையில் பாகிஸ்தான் அரசாங்கம் கடத்தல்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே விமானப் பயணிகளை மீட்க அதிரடிப் படை ஒன்றை தயார் செய்கிறது. இறுதியில் கடத்தல்காரர்களுக்குள்ளே அடிதடி ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீரஜா அவசர வழியை திறந்துவிட்டு எல்லோரையும் தப்பிக்க சொல்கிறாள். கடத்தல்காரர்களின் துப்பாக்கி சூட்டில் சிலர் பலியாகிறார்கள். அதிரடிப்படை கடத்தல்காரர்களை சுடுகிறது. மூன்று குழந்தைகள் மட்டும் மிஞ்சியிருக்கிறார்கள். நீரஜா அவர்களை தப்பிக செய்யும்போது தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்துவிடுகிறாள்.
தீவிரவாதிகளின் கெடுபிடிக்கிடையில் தன் நண்பன் கொடுத்த பரிசுப் பொருளை பிரித்துப் பார்க்கும்போது அவன் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான் என்று தெரிந்து கொள்கிறாள். ஆனால் அவளால் உயிர் தப்பிக்க முடியாத சூழல். அழுகை வருகிறது. அதை துடைத்துவிட்டு கடமை செய்ய எழுகிறாள். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் அவளின் சூழல் இவ்வாறு நகைமுரணாக இருக்கிறது. அவளால் காப்பாற்றப்பட்ட சிறுவன் நீர்ஜாவின் தாயாரிடம் அவள் கடைசியாக சொல்ல சொன்ன செய்தியை கூறுகிறான். ‘கண்ணீர் சிந்துவதை நான் வெறுக்கிறேன்’ என்பதே அது.

பாலஸ்தீனிய தீவிரவாதிகளின் நியாயம், அவர்களின் வழிமுறை, அமெரிக்க இஸ்ரேல் அரசுகளின் வழிமுறை ஆகியவை குறித்து நமக்கு முரண்பட்ட கருத்துகள் இருக்கலாம். அதை ஒருபுறம் வைத்துவிட்டு படத்தில் காட்டப்படும் பெண் குறித்த சித்திரம் பாராட்டிற்குரியது. நீர்ஜா ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து பெண்தான். கணவனின் கொடுமைகளை முடிந்த மட்டும் பொறுத்துக் கொள்கிறாள். வேறு வழியில்லாமல் விவாகரத்து பெறுகிறாள். பழைய நண்பனிடமும் பரிவுடன் இருக்கிறாள். ஆனால் சூழ்நிலையின் நெருக்கடியில் தன் துயரங்களை மறந்து திறமையாகவும் துணிவாகவும் செயல்படுகிறாள். அவள் தந்தை கூறிய ‘தைரியமாக இரு’ என்பதை கடைபிடிக்கிறாள். அவள் நினைத்திருந்தால் அவசர வழி திறந்த உடனேவோ அல்லது பெரும்பாலோர் தப்பித்த உடனேவோ அவளும் வெளியேறி இருக்கலாம். தனித்து விடப்பட்ட மூன்று குழந்தைகள்மீது அவள் கொண்ட கருணை அவள் உயிரையும் துச்சமாக மதித்து காப்பாற்ற வைக்கிறது. பெரும்பான்மையான தமிழ்ப் படங்கள் பெண்களை அழகு பொம்மையாக அல்லது செயற்கையான ரவுடித்தனத்துடன் காட்டுகின்றன. பெண்களை இயல்பாகவும் அதே நேரத்தில் அவர்களின் புத்திக் கூர்மை, துணிச்சல், வீரம் ஆகியவற்றை காட்டும் தமிழ்ப் படங்கள் வர வேண்டும்.
‘அவளை ஒரு குழந்தை போல் பாவித்து அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறினேன். அவள் விடை பெறும்போது அவளைக் கட்டியணைக்கக் கூட செய்யவில்லை.’ என்றும் ‘பெண்கள் தங்களை பாதுகாக்க சகோதரர்களிடம் ராக்கி கட்ட சொல்கிறோம். ஏன் பெண்கள் ஆண்களைக் காப்பாற்றுவார்கள் என்று நாம் நினைக்கவில்லை’ என்றெல்லாம் அவள் தாயார் கூறுவது பெற்றோர்களுக்கும் மொத்த சமூகத்தையும் நோக்கி சொல்லப்பட்டவை.
நீர்ஜாவிற்கு இந்தியா வழங்கிய அசோகா சக்ரா விருது தவிர, அமெரிக்க விமான பாதுகாப்புக் கழகத்தின் வீராங்கனை விருது, பாகிஸ்தானின் அளவிடந்த கருணை(Tamgha e Insaaniyat) விருது, அமெரிக்கக் கொலம்பிய மாகாணத்தின் குற்றங்களுக்கான நீதி விருது இன்னும் பல விருதுகள் அளிக்கப்பட்டன.
நீரஜாவின் பெற்றோர்கள் அவளது காப்பீட்டுத் தொகையைக் கொண்டு ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தினர். அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் தன் கடமைக்கு அப்பாலும் செயல்படும் விமானப் பணிப்பெண் ஒருவருக்கும் தனக்கு இழைக்கப்படும் சமூக அநீதியை துணிச்சலாக எதிர்கொள்ளும் மற்றும் அதேபோன்ற சூழலில் உள்ள பிற பெண்களுக்கு உதவும் இந்தியப் பெண் ஒருவருக்கும் ரூ 150000/ ரொக்கப் பரிசும் ஒரு கேடயமும் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

