எழுத்தாளர் சூ.ம.ஜெயசீலன் எழுதிய "உஷ் குழந்தைங்க பேசுறாங்க" புத்தகம் ஓர் அறிமுகம் | Soo.Ma.Jeyaseelan's Ush Kuzhanthainga Pesuraanga Book Review | Soo Ma Jeyaseelan Books | www.bookday.in

எழுத்தாளர் சூ.ம.ஜெயசீலன் எழுதிய “உஷ் குழந்தைங்க பேசுறாங்க ” – நூல் அறிமுகம்

“உஷ் குழந்தைங்க பேசுறாங்க ” – நூல் அறிமுகம்

குழந்தைங்க பேசுவதை கேட்பதற்காக மனதை திறந்து வைத்து புத்தகத்தை வாசித்தேன் அவர்கள் பேசுவது நன்றாக கேட்கிறது…

இந்நூலில் பேசுபொருளாக 18 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அவர்களே சொல்வதாய் அமைந்துள்ளது.

அவர்களது வாழ்வில் நடந்த சம்பவத்தை பொருண்மைபடுத்தி அதை நம்மோடு கடத்தி இருக்கிறார் நூலாசிரியர். மிகச் சிறப்பான புத்தகம்.

குழந்தைகளுக்கு கற்பனை திறன் அதிகம் உண்டு.

அசையும் செடிகளோடு
பேசுவார்கள்.

அலையும் மேகங்களில்
உருவங்கள்
காண்பார்கள்.

பொம்மைகளில் உயிர்
பார்ப்பார்கள்.

அதனை உறவினர்
ஆக்குவார்கள்..

அனைத்தையும்
அதிசயமாய்
பார்ப்பார்கள்.
அனைத்திலிருந்தும்
கதை எடுப்பார்கள்…

குழந்தைகள் உங்கள்
குழந்தைகள் அல்ல..
உங்கள் வழியாக
பிறந்தவர்கள்…
அவர்களுக்கு உங்கள் அன்பை தரலாம்..
எண்ணங்களை அல்ல!!!!
என்ற
கலில் ஜிப்ரான் அவர்களது வார்த்தைகள் போன்று வாழுகிறார்கள் நம் குழந்தைகள்.

நீங்கள் உங்களைக் கடந்து மற்றவர்களுக்கும் உங்கள் நேரம்,பணம், உடல் உழைப்பு, ஆறுதலை கொடுத்துப் பாருங்கள்… அப்போது மகிழ்ச்சியின் பொருள் முழுதாய் புரியும் என குழந்தைகள் நம் காது மடல் கூச அருகில் வந்து பேசுவதாக நிதானப்படுத்தியுள்ளார்

யாரிடமும் பேசக்கூடாது யாருக்கும் கொடுக்கக் கூடாது, எங்கேயும் வேடிக்கை பார்க்க கூடாது, அங்கே இங்கே நிற்கக்கூடாது, கூட்டமா இங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிச் சொல்லி குழந்தைகளை அவர்களை இயல்பிலிருந்து பிரித்து எரியும் பெற்றோர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

எங்களை எங்கள் இயல்பிலேயே இருக்க விடுங்கள் .எங்களால் இயன்ற அளவு பிறருக்கு சேவைகள் செய்கின்றோம் என குழந்தைகள் பேசுகிறார்கள் அது கேட்கிறதா என காது மடல்களை சுண்டியுள்ளார் .

நான் வாசிக்க கற்றுக்கொண்ட போது உலகம் முழுவதும் எனக்காக திறந்து கொண்டது.
கற்றுக் கொள்வதற்காக உள்ளே வருக..
சேவை செய்வதற்காக வெளியே செல்க.. என்ற கோட்பாடு மனதிற்குள் குடித்தனம் கட்டி விட்டது.

விரும்பினால் நீ எழுது என்று தன் தந்தை ஜியாவுதீன் சொன்னதற்கு தன் உள்ளத்தில் கிடந்த அக்னி நெருப்பை பேனா வழியாக இறக்கி வைத்தவர்தான் 12 வயது சிறுமி மலாலா…

*ஒரு பள்ளி மாணவி டைரி குறிப்பு* என்னும் அந்த தொடர் மிகுந்த தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு இயல்பிலேயே எழுத்தூக்கம் படைப்பாக்கம் கற்பனை உண்டு என்பதை ஆக்கபூர்வமான ஆசிரியர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

*உங்களின் கோட்பாடுகளால் எங்கள் சிறகை முறித்து விடாதீர்கள்.. ஊக்கப்படுத்துங்கள்* என குழந்தைகள் பேசுகிறார்கள் .

இப்பொழுதெல்லாம் வாய்ப்புகளை பெறுவதே குழந்தைகளுக்கு அரிதாகி விட்டது. சாதித்தவரை பார்ப்பது, அவர்களின் வாழ்வை வாசிப்பது, அதை பிறருக்கு தெரிவிப்பது எல்லாம் மங்கி விட்டது.

குழந்தைகளை நாம் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதும் குறைந்துவிட்டது.
யார் என்ன சொன்னாலும் சரியா தவறா எனை யோசித்து முடிவு எடு..
எங்களிடம் சொல்.. நாங்களும் வழிநடத்துகிறோம் என சொல்லி வளர்ப்பதற்கு பதிலாக…

யார் என்ன சொன்னாலும் எதுவும் கேட்கக் கூடாது என்று வளர்ப்பதால் தான் பல நேரங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை அச்சத்துடன் இழந்து நிற்கின்றனர் நம் குழந்தைகள்.

குழந்தைகளுக்கு நிறைய கற்றுக் கொடுப்போம் வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம்.
அவர்கள் தவறும் பட்சத்தில் தட்டிக் கொடுப்போம் என்பதை குழந்தைகளே பேசுகிறார்கள்…

நான் வருவது கூட தெரியாமல் அப்படி என்ன பேச்சு ?
அப்படி என்ன விளையாட்டு? என கேட்டு ஆசிரியர் முறைக்கும் பார்வையும் படிப்பில் மட்டும் தான் கவனம் இருக்கணும் என ஒரே திசையை நோக்கி திருப்பும் பெற்றோரின் கவனத்திலும் நம் குழந்தைகள் சிக்கிக் கொண்டு …
ஆசிரியர் விரட்ட பெற்றோர் மிரட்ட கடைசியில் புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு கனவுலகில் மிதக்கிறார்கள்.அவர்கள் படிக்கிறார்கள் என பெற்றோர்களும் நம்புகிறார்கள்.

பிறப்பிலேயே உள்ள திறமையை மழுங்கடிக்கச் செய்துவிட்டு ,என் பிள்ளை சரியாக படிப்பதே இல்லை என புலம்பித் திரிகின்றனர்..
இன்னும் சொல்ல போனால் இதையெல்லாம் நம் குழந்தைகளே நம்மிடம் பேசுவதாக புத்தகம் அமைந்துள்ளது.

🤫🤫உஷ் குழந்தைங்க பேசுறாங்க🤫🤫

பேசுவதை இரண்டாம் முறை கேட்ட …

நூலின் விவரங்கள்:

நூல்: உஷ் குழந்தைங்க பேசுறாங்க (Ush Kuzhanthainga Pesuraanga)
ஆசிரியர்: சூ.ம.ஜெயசீலன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 90
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர் : 

✍️ யாழ் .மாரி,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆடுதுறை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *