ஸ்தாபனம் ஓர் அறிமுகம் – நூல் அறிமுகம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமான சமயத்தில், தோழர் எம்.ஆர். அப்பன், செம்பியன் என்னும் புனைபெயரில் எழுதிய ‘ஸ்தாபனம் ஓர் அறிமுகம்’ என்னும் சிறுபிரசுரம் தற்போது தஞ்சாவூர், வீரா பதிப்பகம் சார்பில் மூன்றாவது பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இது, 16 பக்கங்களைக் கொண்ட சிறுபிரசுரம் என்றபோதிலும், இயக்கங்களில் ஈடுபடும் ஒவ்வொரு முன்னணி ஊழியர்கள் கைகளிலும் போர்வாளாக இருக்க வேண்டிய ஒரு புத்தகமாகும்.
உடனடித் தேவைக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் சமூக மாற்றத்துக் காக நடத்தப்படும் நெடிய போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதை தோழர் எம்.ஆர்.ஏ. இதில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
“தொழிற்சங்கத்திற்கு ஒரு வரலாற்றுக் கடமையுண்டு. அந்தக் கடமையை நிறைவேற்ற திறமை வாய்ந்த தலைமை தேவை. உணர்வுள்ள – போர்க்குணமிக்க தொண்டர்கள் தேவை. முழுமையான -ஜனநாயக ரீதியான நடைமுறை தேவை.” என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
தொழிற்சங்க ஜனநாயகம் குறித்தும், விமர்சனம்-சுய விமர்சனம் குறித்தும் மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார்.
“விமர்சனமும், சுயவிமர்சனமும் ஓர் இயக்கத்தின் ரத்தமும் சதையும் போன்றதாகும்.
சங்கத்தினுடைய ஜனநாயக மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான மாபெரும் வாய்ப்பைத் தருவது விமர்சனமாகும். இதுவே சங்கத்தில் ஜனநாயகத்தை உத்திரவாதப் படுத்துவதற்குரிய பாதுகாப்பையும் வழங்கும். சங்கத்தில் உள்ள தலைவர்களோ அல்லது ஏனையோரோ செய்யும் தவறுகளை-பிழைகளை-சறுக்கல்களை வெளிக் கொணரும் வாசல்களைத் திறந்துவிடுவது விமர்சனமும் சுய விமர்சனமுமேயாகும். தவறுகளை-பிழைகளை சறுக்கல்களை களையவும், எதிர் காலத்தில் இப்போக்குகள் ஏற்படுத்துவதைத் தடுக்கும் சக்தியாகவும் விமர்சனமும், சுய விமர்சனமும் அமைகின்றது.” போன்றவை இந்த சிறுபிரசுரத்தில் காணப்படும் வாசகங்கள்.
அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் முன்னணி ஊழியர்களே என்றார் தோழர் ஸ்டாலின். அதை முன்னணி ஊழியர்களும், மற்றவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் ‘சரியாக பயிற்றுவிக்கப்பட்ட முன்னணி ஊழியர்கள்’ என்ற உட்தலைப்பில் முன்னணி ஊழியர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் கூறியிருக்கிறார்.
முன்னணி ஊழியர்கள் (cadres) தலைமையையும் சாதாரண ஊழியர்களையும் இணைக்கின்ற பாலம் போன்றவர்கள்.
சரியான தீர்மானங்களை நிறைவேற்றவும். அவற்றை அமுல் படுத்தவும். அவ்வாறு அமுல்படுத்தும்போது ஏற்படும் முழுப் பயன்களும் முன்னணி ஊழியர்களினாலேயே ஏற்படுத்த முடியும். வெற்றியும் தோல்வியும் இந்த முன்னணி ஊழியர்களையே சார்ந்திருக்கும். எனவே முன்னணி ஊழியர்கள்பால் தலைமைக்குத் தீவிரமான கவனம் வேண்டும்.
தலைமை முன்னணி ஊழியர்களிடத்தில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் உண்டு. ஏனென்றால் அமைப்பின் மிகச் சிறந்த போர்க் கருவிகள் முன்னணி ஊழியர்கள்.
அவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நேரடியான பிணைப்புண்டு.பிரச்சினைகளில் மூழ்கி எழுந்து தீர்க்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள் முன்னணி ஊழியர்கள் தான். எனவே முன்னணி ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகள் பலவுண்டு.
முன்னணி ஊழியர்கள் தலைமையிடமிருந்து சரியான ‘வழிகாட்டுதலைக் கற்றுக்கொள்ள வேண்டும். உறுப்பினர்களிடமிருந்து சரியான அனுபவங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
முன்னணி ஊழியர்கள், தங்களுக்கும், சாதாரண உறுப்பினர்களுக்கும் உள்ள உறவை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும்.
உறுப்பினர்களின் விருப்பு வெறுப்புக்களை உணர்ந்து அவர்களுடைய அபிப்ராயங்களுக்கு உரிய மதிப்பைத் தருதல் வேண்டும்.
ஒரு அமைப்பின் விலை மதிக்க முடியாத செல்வங்கள் தான் சரியான முறையில் பயிற்றுவிக்கப்பட்ட முன்னணி ஊழியர்கள்.
தலைமையால் முன்னணி ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
முன்னணி ஊழியர்களின் வளர்ச்சிக்குத் தலைமை உறுதுணையாக இருக்கவேண்டும்.
முன்னணி ஊழியர்கள் மீது தலைமை கவனமில்லாதிருந்தால் முன்னணி ஊழியர்கள், முழு ஆற்றலோடுசெயல்படாத நிலையும் சுறு சுறுப்பற்ற நிலையும் ஏற்படும்.
ஊழியர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களையும் ஒழுக்கங்களையும், நடவடிக்கைகளையும் விழிப்போடு கற்றுணர்தல் வேண்டும்.
பிரச்சினைகளுக்கேற்ற மாதிரி சரியான ஊழியர்களை சரியான இடத்தில் அமர்த்த வேண்டும்.
தலைமைக்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவில் தொந்திரவு அல்லது இடைஞ்சல் நிலையை தலைமை தருவதாக உள்ளது என்ற எண்ணம் ஏற்படும் நிலையைக் கூட தவிர்த்தல் வேண்டும்.
முன்னணி ஊழியர்களின் குறைகள் – தவறுகளை அனுதாபத்தோடு தலைமை சுட்டிக்காட்ட வேண்டும்.
இத்தகைய முன்னணி ஊழியர்களிடமிருந்துதான் எதிர்காலத்தில் தலைவர்கள் வருவார்கள்.
ஏராளமான புதிய புதிய இளந் தலைவர்களை உருவாக்குகின்ற தலைமையே தலைமைக்குரிய முழுக் கடமையையும் ஆற்றியவர்களாவார்கள்.
தன்னால் உருவாக்கப்பட்ட இளந்தலைமை, சங்கச் செயல்பாடுகளில் தலைமையையும் விஞ்சி வேகத்தோடு செயல்படும்போதுதான் தலைமைக்கு மிகுந்த பெருமிதத்தைத் தோற்றுவிக்கும்.
குறுகிய மனப்பான்மை உள்ள தலைமையே இளந்தலைமையின் வளர்ச்சிப் பாதைக்கு தடையாக இருக்கும்.
குறுகிய, கடினமானத் தன்மையுடைய தலைமையே தனி நபர் வழிபாட்டு போக்குக்கும், அதிகார வர்க்க மனோபாவத்திற்கும் எடுத்துக்காட்டாகும்.
ஊழியர்களிடமிருந்தும் தனித் திறமைகளைக் கண்டு பிடித்து – மேலும் மேலும் அவர்களுடைய திறமைகளை வளர்க்க வேண்டும்.
ஊழியர்களின் குறைகளைத் தீர்த்துவைத்து அவர்களைச் சரியான திசை வழியை நோக்கி தலைமையானது செலுத்துதல் வேண்டும்.
முன்னணி ஊழியர்களின் தத்துவார்த்த அறிவையும் அவர்களின் உணர்வு மட்டத்தையும் மேம்படுத்த உதவி புரியவேண்டும்.
முன்னணி ஊழியர்களின் தனிப்பட்ட கஷ்டங்களையும் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.
பற்றுறுதி, நேர்மை, துணிவு, பொறுப்புணர்வு, கட்டுப்பாடு, அறியும் ஆர்வம், உறுப்பினர்களோடு பிணைப்பு இவைகளே ஒரு முன்னணி ஊழியரின் சிறந்த குணங்களாகும்.
இயக்கங்களில் ஈடுபடும் ஒவ்வொரு தோழரும் அவசியம் படிக்க வேண்டிய கையேடாகும்.
நூலின் தகவல்கள் :
நூல் : ஸ்தாபனம் ஓர் அறிமுகம்
ஆசிரியர் : எம். ஆர். அப்பன்
பதிப்பகம் : வீரா பதிப்பகம்
விலை : ரூ.20/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
ச.வீரமணி
கிடைக்குமிடம்:
ச.வீரமணி – உரிமையாளர்
விலை : ரூ.20/-
பதிப்பகம் : வீரா பதிப்பகம்S.1, N&N Homes, மனை எண் 9, சிலப்பதிகார வீதி, முத்தமிழ் நகர், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613007. பேசி: 8903631454. தனிப்பிரதி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

