உலகெங்கும் உள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும் தங்கள் பண்பாடு, பாரம்பரியம், சுற்றுச்;சு+ழல் ஆகியவற்றைத் தழுவி கானுயிர்கள், பறவைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேசிய விலங்காகவும், தேசிய பறவையாகவும் வைத்திருக்கிறார்கள். அவைகளை தங்கள் நாட்டின் ரூபாய் நோட்டுகளிலும், நாணயங்களிலும் அச்சிட்டு வெளியிடுகிறார்கள். அத்தகைய விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க பல கடுமையான சட்டங்களை இயற்றுகிறார்கள். உதாரணமாக சீனாவின் தேசிய விலங்காக பாண்டா கரடி உள்ளது. இங்கிலாந்தில் சிங்கமும், பாகிஸ்தானில் தாடி வைத்துள்ள மார்க்கோர் ஆடும,; இலங்கையில் யானையும் தேசிய விலங்குகளாக உள்ளன. அமெரிக்காவின் தேசிய விலங்காக பைசன்(காட்டெருமை)யும், தேசிய சின்னமாக கழுகும் உள்ளது. நேபாளத்தில் பசு தேசிய விலங்காக இருக்கிறது. கலிங்கத்துப் போருக்குப் பின் அசோகர் மனம் திருந்தி புத்த மதத்தைத் தழுவி அமைதியையும், சமாதானத்தையும் விரும்பினார். அதன் வடிவமாக சாரநாத்தில் கருணை வடிவமான சிங்கமுகத்தைப் பொருத்தி ஸ்தூபி அமைத்தார். அதையே நேருவின் ஒன்றிய அரசு 1948ல் தேசிய சின்னமாக அறிவித்தது. அதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. அதே ஆண்டில் அறிவிக்கப்பட்ட சிங்கம் 1972வரை தேசிய விலங்காக இருந்து வந்தது.
யானைக் குட்டிகள் பரிசளிப்பு
தேசிய விலங்கு பற்றிய முரண்பாடான கருத்துக்கள் நாடு சுதந்திரம் அடைந்ததுமே எழுந்தது. ஜவஹர்லால் நேரு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட ஜப்பானுக்கு 1949ம் ஆண்டு ஒரு யானைக் குட்டியை “இந்திரா” எனப்பெயரிட்டு அங்குள்ள ஒரு குழந்தைக்கு பரிசாக அனுப்பினார். யானையோடு அனுப்பப்பட்ட கடிதத்தில் யானை என்பது இந்தியாவின் அடையாளம் என்று குறிப்பிட்டிருந்தார். எதிர்ப்பு எதுவும் வராததால் அந்தக் கருத்து உறுதிப்படுத்தப்பட்டது. 1955ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா, துருக்கி, ஜெர்மெனி, சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அமைதியின் அடையாளமாக யானைக் குட்டிகளை பரிசளித்து வந்தார்.
அயலக தூதரகங்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தகைய அரசியல் விளையாட்டுக்கள் இந்தியாவின் மீது உலக நாடுகளின் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா கடைப்பிடித்த அணிசேராக் கொள்கையின் குறியீடாக யானை உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு யானைக் குட்டிகளை அனுப்பிய செயலானது நாளடைவில் யானையை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அன்றைக்கு இருந்த குஜராத் தேசிய வரலாற்றுக் கழகம் இந்தக் கோரிக்கையை பலமாக எதிர்த்தது. குஜராத் காங்கிரஸ்; கமிட்டியும் யானையை தேசிய விலங்காக கோரிக்கை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது. சர்தார் படேல் தலைமையிலான குஜராத் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் பழமைவாதிகளாகவும், நேருவின் சோசலிசக் கொள்கைகளை முற்றிலும் எதிர்ப்பவர்களாகவும் இருந்தார்கள். குஜராதின் கலாச்சார அடையாளத்தை பாதுகாப்பதற்காக சிங்கம்தான் தேசிய விலங்காக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். விலங்கிற்காக இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் தேசம் இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்திருந்தது. எல்லைப்புற மாகாணங்களிலும், தலைநகர் டெல்லியிலும் பெரிய கலவரம் ஏற்பட்டு இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அடித்து மடிந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
புலி தேசிய விலங்காக அறிவிப்பு
நேருவிற்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியும், இந்திராகாந்தியும் பிரதமராக வந்தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு மொரார்ஜிதேசாய் தலைமையில் சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிரிந்தது. 1971ல் இந்தியா பாகிஸ்தானுடன் போர்புரிந்து வங்க தேசத்தை மீட்டுக் கொடுத்தது. இதனால் இந்தியாவின் செல்வாக்கும், இந்திராகாந்தியின் புகழும் உலகெங்கும் பரவியது. அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் மாபெறும் வெற்றிபெற்று 352 இடங்களைக் கைப்பற்றியது. மொரார்ஜிதேசாய் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் 16 இடங்களைப் பெற்றது. அதில் பதினோறுபேர் குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக காமராஜர் மட்டுமே வெற்றிபெற்றார். இந்திராகாந்தி பெரிய அரசியல் சக்தியாக, அதிகாரம் மிக்க துணிச்சல்காரராக, இரும்பு மனுஷியாக அறியப்பட்டார். இந்த தைரியத்தில், பெருமிதத்தில் குஜராத்தின் கலாச்சார அடையாளமாக அறியப்பட்ட சிங்கத்தை மாற்றி புலியை தேசிய விலங்காக அறிவித்தார். நாடு முழுவதும் பிரச்சனை வெடித்தது. சிங்கத்தை மாற்றி புலியை அறிவித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் வந்த போது, புலிகளுக்குத்தான் சரணாலயம் உள்ளது. சிங்கங்களுக்கு இல்லை என்று அரசின் முடிவுகளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.
மீண்டும் சிங்கத்தை அறிவிக்க கோரிக்கை
குஜராத் தொழிலதிபரும், மாநிலங்களவை சுயேட்சை உறுப்பினருமான பரிமால் நாத்வானி என்பவர் 2012ல் சிங்கத்தை மீண்டும் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று தனிநபர் மசோதா கொண்டுவந்தார். அன்றைய மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை நிராகரித்தது. அதன் பின்பு முன்னாள் குஜராத் முதல்வாரன நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார். 2015ல் பரிமால் நாத்வானி மீண்டும் சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் கோரிக்கை எழுப்பினார். ஆனால் தேசிய வனவிலங்குகள் வாரியம் இக்கோரிக்கையை ஏற்கவில்லை. புலிதான் தேசிய விலங்னென்று உறுதிப்படுத்தியது. ஆனால் சிங்கத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். சுதந்திரம் வாங்கியதிலிருந்து 1972 வரை சிங்கம்தான் தேசிய விலங்காக இருந்தது. அதை காங்கிரஸ் அரசுதான் மாற்றி புலியை அறிவித்தது என்று குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குரலெழுப்பிக் கொண்டே இருந்தார்கள். இதன் பின்னணியில்தான் நரேந்திரமோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சதைப்பிடிப்புடன், குரூரமாக கர்ஜிக்கும் சிங்க முகத்தைப் பொருத்தியுள்ளார். இது ஏற்கனவே தேசிய சின்னமாக உள்ள சிங்கமுகத்தின் மாறுபட்ட வடிவமாக உள்ளது.
ஆர்எஸ்எஸ் செயல் திட்டம்
இந்த குழப்பத்தில் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவா செயல் திட்டத்தை புகுத்த நினைத்தது. சிங்கமும் இல்லை புலியும் வேண்டாம். உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் கோமாதாவை தேசிய விலங்காக வைத்திருக்கிறார்கள். அதைப்போல் பாரத தேசத்தில் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்றார்கள். 2018ம் ஆண்டு சேகர் குமார் யாதவ் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். உத்தரப்பிரதேசத்தில் அப்போதுதான் பதவிக்கு வந்திருந்த முதலமைச்சர் யோகிஆதித்யநாத் அந்தக் கருத்தை பலமாக ஆதரித்துப் பேசினார்.
குஜராத்தியர்களைத் திருப்திபடுத்துவதற்காக நரேந்திரமோடி “மேக் இன் இந்தியா” திட்டத்தின் சின்னத்தை கர்ஜிக்கும் சிங்கமாக வடிவமைத்து அதன் உடம்பு முழுவதும் பற்சக்கரங்களும், ஸ்பானர்களும், இன்னும் பல தொழிற்கருவிகளும் பொருத்தி வெளியிட்டார். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தேசிய விலங்கிலிருந்து புலியை மாற்ற முடியவில்லை. ஆனால் இந்துத்துவாவாதிகள் பண்பாட்டு மரபுகளை மாற்றி மத அடையாளங்களை தேசிய சின்னத்தில் நிறுவும் விதமாக பசுவை தேசிய விலங்காக கொண்டுவருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-மாதா
முகவரி
மாதா
மே-பா மா.தங்கராசு
75, கிழக்குத் தெரு, சக்கம்பட்டி
ஆண்டிபட்டி-அஞ்சல்
தேனி- மாவட்டம் 625512
செல் – 9442452505
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.