தங்கள் குவாட்டர்ஸூக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்பஇடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பியமாமிதான் ; நிகழ்வுப் போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்த்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்.வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது. ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான நெருக்கமான பிணைப்பு வலுவாய் சொல்லப்படுகிறது .ரயில்வேயிலும் துறைமுகத்திலும் குவாட்டர்ஸில் தன் வீட்டுக்கு எதிரே தலித்வராமல் தவிர்க்க எப்படி எல்லாம் முயலுவார்கள் என்பதைத் தனி நாவலாகவே சொல்லலாம். அதனையும் மீறி மத, மொழி, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல். அம்பிதான் இதன் கதை சொல்லி. நாவல் முழுவதும்சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலைகுடியிருப்பில் நிகழ்வதாகவே இருக்கிறது.அன்றைய காலகட்டத்தை அசை போடுவோருக்கு பலப்பல உணர்வுகளை உசுப்பிவிடும் நாவல் .பென்சிலய்யா மரணம் அதைத் தொடர்ந்து கரிசனமிக்க அண்டைவீட்டார் அரவணைப்பு; பென்சிலய்யா மனைவி பரிசுத்தம், ரயில்வே தரும் உதவியை ,வேலையைப் பெற அனைவரும் மனப்பூர்வமாய் ஒத்துழைப்பது என அன்றைய காலகட்டத்தின் சமூக நல்லிணக்கம் மிக்க பரிவு நாவல் முழுக்க வியாபித்துள்ளது. இன்றைக்கு சாதியும் மதமும் கூறு போடும் சமூக அவலம் கண்முன் உறுத்துகிறது ; ஆயினும்இதன் விதை அன்றே உள்ளீடாய் இருந்த செய்தியும் நாவலில் போகிற போக்கில் மெலிதாய்க் கோடிடப்படுகிறது .அம்பியின் குடும்பம் வித்தியாசமானது.ஆச்சாரமான அம்மா , ரயில்வே சங்கத்தில் ஈடுபாடுகொண்ட அப்பா , வாசிப்பின் வழி விரிந்த ஞானம் கொண்ட சகோதரி , வேலையில்லாத ஆனால் இடதுசாரி அரசியல் ஈடுபாடுகொண்டு அதே வேலையாய் அலையும் அம்பி. அவரது சகா வைத்தியர் வேலாயுதம் , கட்சியிலும் சங்கத்திலும் ஈடுபாடுகொண்ட தோழர்கள் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்நாவலில் உலவுவர். இதில் அநேகம் பேர் மெய்யாக வாழ்ந்த சிலரின் மாதிரிகள்; அவர்கள் அச்சு அசலாய் நம்முன் வந்து நிற்பதுபோல் சித்தரித்திருப்பது ராமச்சந்திர வைத்தியநாத்தின் வெற்றி என்பேன்.
 
அகில இந்திய ரயில்வே ஸ்டிரைக் உருவாகும் காலம் ; மெல்லக் கொதிப்பேறிய கோபம்; வெடிப்பாய் நிகழ்ந்த ஸ்டிரைக் இவற்றை சொல்லுவதில் கூர்மையாய் இந்நாவலாசிரியர் செயல்பட்டிருக்கிறார். கேட்டகிரி சங்கங்கள் , ஒர்க்கர்ஸ் யூனியன்,யுனைட்டெட், பேரவை, மஸ்தூர்,கார்மிக், எஸ்சி எஸ்டி, சிஐடியு , ஏஐடியுசி ,ஏஐஆர்எம், பெடரேஷன் இப்படி பிரிந்து கிடக்கும் தொழிற்சங்கங்கள் தலைமையில் நிலவியபல்வேறு ஊசலாட்டங்கள் என அனைத்தையும் உள்வாங்கி அதற்குரிய இடமும் நியாயமும் வழங்கி இருக்கிறார் எனில் மிகை அல்ல .மதுரையில் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடுபட்ட ராமசாமி ரயிலேற்றிக் கொல்லப்பட்டது பதிவாகி இருக்கிறது. ஆனால் அது இன்னும் கொஞ்சம் விரிக்கப்பட்டி ருக்கலாமோ ? என்று தோன்றுகிறது.“ ஒரு நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் பெற்றிட்ட அனுபவம் ,ஒரு சகாப்த வாழ்வுக்கு இணையாகவே தோன்றுகிறது .” என நூலாசிரியர் என்னுரையில் சொல்லுவது மெய்யென்பதை இந்நூலும் உறுதி செய்கிறது.பொதுவாக ரயில்வேயில் இறந்துபோனவரின் மனைவிக்கு வேலைதேடி உதவ அலையும் போது ஒரு வித உறவும் முகிழ்த்துவிடுவது, சர்வசாதாரணம்; அதனை கொச்சையாக்காமல் மேம்பட்ட ஆண் பெண் உறவாக அம்பி – பரிசுத்தம் உறவை சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது .
 
“உன் அப்பா ஸ்தானத்திலே இருந்து பார்த்தேன்னா எனக்கு சந்தோஷம்தான்;அவனோடு அப்பாவ பார்க்கிறச்சே நிம்மதின்னும் சொல்லலாம். இதுவெல்லாம்கூட நம்ம இஷ்டம்னு பிடிவாதம் பிடிச்சு சின்னஞ் சிறுசுகளை அலைக் கழிக்கணுமான்னு தோணுது .” என அம்பியின் அப்பா மூலம் சொல்லுவது அழுத்தமான பக்குவநிலை.இது எங்கும் வாய்க்கப் பெறின் குடும்ப ஜனநாயகம் மெல்ல தழைக்குமே! ஆணவக் கொலைகளுக்கு இடமில்லாமல் போகுமே !அம்பி இடதுசாரி முழுநேர ஊழியனாக பரிசுத்தம் துணையாவது நல்ல குறியீடு . கணவனை இழந்து ரயில்வே குடும்ப பென்ஷன் பெறும் பெண் . இளவயதாயிருப்பினும், மறுமணம் நியாயமாய் இருப்பினும் சட்டப்பூர்வமாய் செய்தால் பென்ஷனை இழக்க வேண்டிவரும்; ஆகவே லிவிங் டுகெதர் போல் சேர்ந்துவாழுவதே இத்தகையோருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது . அம்பியும் பரிசுத்தமும் அப்படித்தான்.இச்செய்தி போகிற போக்கிலேனும் சொல்லியிருக்கலாமே ! அது ஒன்றும் பிழையும் அல்லவே ! விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையும் ஆயிற்றே !
 
ரயில்வே ஸ்டிரைக்கை மையமாக வைத்து நாவல் எழுதியதற்காக எவ்வளவு பாராட்டினா லும் தகும் ; இதுவரை செய்யாமல்விட்டதை செய்ததற்காக நன்றி கூறுகிறோம் .அன்றைய போராட்டம் ; ரயில்வேயிலுள்ள சூழல் எல்லாம் தெரிந்த ஒருவருக்கு இந்நாவல் மிகமிக நெஞ்சுக்கு நெருக்கம் ஆகும் . ஆனால், புதிய வாசகனுக்கு இதிலுள்ள பல செய்தியை உள்வாங்குவதில் சிரமம் இருக்கத்தானே செய்யும்?முன்னுரை எழுதிய ஆர் .இளங்கோ இலக்கியம் குறித்து ஒரு பார்வை வழங்க முயற்சித்திருக்கிறார். பிழையல்ல ;தேவைதான். ஆனால் இந்த நாவலின் பேசுபொருளான ரயில்வே ஸ்டிரைக் குறித்து ஒரு வரலாற்றுக் குறிப்பை அவர் முன்னுரையாகவோ,பின்னுரையாகவோ எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் . அப்போதுதான் நாவலின் நோக்கம் நிறைவேறும் .எப்படி இருப்பினும் இந்நாவல் வருகை காத்திரமானதும் . வாசிக்க வேண்டிய முக்கிய நாவலும் ஆகும் . போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையாமோ ?
-சு.பொ.அகத்தியலிங்கம்
(நன்றி: தீக்கதிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *