மாணவர்களை மெல்ல கொல்லும் வீடியோ கேம் கலாச்சாரம்..
எப்போது விழித்துக் கொள்ள போகிறோம்?
– ஆயிஷா இரா.நடராசன்
திறன்பேசி கலாச்சாரம்
ஒருவர் ரீல்ஸ் உலகத்தின் வழியே ஆட்சிக்கு வந்து விட்டார்.. இந்த தேர்தலில் இறுதி யுத்தத்தில் குழந்தைகளையும் உள்ளே இழுத்து விட்டது தான் கொடுமை.. இன்று கைபேசிகளை திறன் பேசிகள் ஆக மாற்றிய பிறகு.. தெரிந்தோ தெரியாமலோ தொடக்கப்பள்ளி குழந்தைக்கு கூட ஆன்லைனில் கல்வி என்கிற பெயரில் ஆதார் கார்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ கையில் திறன்பேசிகள் வைத்திருக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கி விட்டோம்.. திறன்பேசி கலாச்சாரம் என்றே தனியாக குறிப்பிடப்படும் அளவிற்கு இன்று குழந்தைகளை நாம் எத்தகைய கயிறும் இல்லாமல் சங்கிலியும் இல்லாமல் சிறைப்படுத்தி விட்டோம்..
திறன்பேசிகளின் வழியே நடைபெறுகின்ற நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விஷயங்கள் விஷமாகி ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துக்கொண்டிருக்கிறது.. மிக குறிப்பாக வீடியோ கேம்ஸ் என்றழைக்கப்படுகின்ற கொடூரமான வலைப்பின்னலுக்குள் சிக்கி கொள்கின்ற குழந்தைகளை மீட்பதற்கு.. உடனடியாக நாம் ஏதாவது செய்யவில்லை என்றால் ஒரு சந்ததியை மனநோயாளியாக ளாக அதி வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது கல்வியாளர்களின் இன்றைய மிகப்பெரிய கவலையாகும்

வெளியில் தெரியாத கவர்ச்சி உலகம்
எத்தனை நாம் தடைசெய்தாலும் வகுப்பறைக்கு திறன்பேசிகளை எடுத்து வந்து.. சாகசம் என்கிற பெயரில் தேவை இல்லாத காணொளிகளை பதிவுசெய்து இன்ஸ்டாவிலும் முகநூலிலும் வெளியிட்டு தன் திறமையை காட்டிக்கொள்ளும் குழந்தைகள் இன்று அதிகம்.. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பெற்றோர்கள் திறன்பேசிகளை வாங்கி கொடுக்கவில்லை என்றால் வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என்று மிரட்டுகின்ற குழந்தைகள் இன்று சர்வ சாதாரணம்..
ஆனால் வெளியில் தெரியாத ஒரு கொடிய விஷம் குழந்தைகள் நடுவே இன்று பரவிக் கொண்டிருக்கிறது.. அது தான் வீடியோ கேம்ஸ் கலாச்சாரம்.. சைபர் உலகை பொறுத்தவரையில் வீடியோ கேம்ஸ் என்பது இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர்கள் கொட்டுகின்ற பிரம்மாண்ட வர்த்தகம்..2028 ஆம் ஆண்டு இரண்டு பில்லியன் டாலர்களாக இது உயர்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் இலக்கு நிர்ணயித்து திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.. லூடோ கிங், ரோப்லாக்ஸ், ஹாட் வீல்ஸ் என்று அடுத்தடுத்து வீடியோ கேம்கள் சந்தையில் இறக்கப்படுகின்றன.. ஒரு முறை ஆடி பழகிவிட்டால் ஒருபோதும் அந்த குழந்தையால் நிறுத்த முடியாத அளவிற்கு போதை தருகின்ற அம்சங்களை இவை உள்ளடக்கியுள்ளன..
விளையாட்டா வினையா விபரீதமா..
18 மணி நேரம் வீடியோ கேம் விளையாடுவது என்பது இன்றைக்கு பல குடும்பங்களில் பழகிப் போய்விட்ட ஒரு விஷ(ய)மாக மாறிக் கொண்டிருக்கிறது என்பது அச்சம் தரும் சூழல் ஆகும். குறிப்பாக பெற்றோர்கள் இருவருமே பணிக்கு சென்று விடுகின்ற குடும்பங்களில் குழந்தைகள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பள்ளிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி மணிக்கணக்கில் இந்த வீடியோ கேம் கலாச்சாரத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள்.. இவை ஒருவர் ஆடும் விளையாட்டு அல்ல.. உங்களோடு இந்த சைபர் உலகில் வீடியோ கேம் விளையாடுபவர் வேறு ஊரில் இருக்கலாம் வேறு நாட்டில் இருக்கலாம் வேறு கண்டத்திலேயே இருக்கலாம்.. அவரை நீங்கள் பார்க்க வேண்டியதில்லை அவர் சத்தம் போடாமல் உங்களோடு மணிக்கணக்கில் விளையாடி கொண்டே இருப்பார்.. அவர் ஒரு ரோபோட் ஆகவும் இருக்கலாம் செயற்கை நுண்ணறிவு உருவாக்கி கொடுத்த போலி ஐடியாகவும் இருக்கலாம்…
இந்த வீடியோ கேம் ஒவ்வொன்றும் பல வகையான வன்முறைகளை உள்ளடக்கிய கதை போக்குகளை கொண்டுள்ளன.. இந்த கதை போக்குகளில் மலைவாழ் மக்கள் விபரீத வில்லன்களாகவும் அறிவார்த்தமான பெண் குழந்தைகள் சமூகத்திடம் இருந்து விரட்டப்பட வேண்டியவர்களாகவும்.. விதவிதமான துப்பாக்கிகளைக் கையிலேந்தி கொலை செய்வது அன்றாட வாழ்வின் சகஜமான வேலையாகவும் சித்தரிக்கப்படும் வீடியோ கேம்கள் குழந்தைகளால் அதிகம் போற்றப் படுகின்றன என்பதுதான் நம்மை மிகவும் அச்சமூட்டும் புள்ளிவிவரம்.. சமீபத்தில் மதுரையில் தொடர்ந்து 48 மணி நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடியதன் மூலம் சிறுநீர் கழிக்காமல்.. சிறுநீர்ப்பை ஏறக்குறைய வெடிக்கும் நிலையில் ஒரு ஏழாம் வகுப்பு சிறுவன் அவசர அறுவை சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டதை மருத்துவர்கள் பார்த்து துடித்து போன சம்பவம் நடந்து கொண்டிருக்கும் கொடுமையின் ஒரு உதாரணம் ஆகும்.
எப்படி மீட்கப் போகிறோம்
சில ஆண்டுகளுக்கு முன்.. கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதை வெற்றி என்று அறிவித்துக் கொண்ட புளூ வேல் வீடியோ கேம்ஸ் இந்தியாவில் தடை செய்ய பெரிய அளவில் போராடினோம்.. ஆன்லைனில் ரம்மி விளையாட்டை தடை செய்வதா வேண்டாமா என்று மிகப்பெரிய விவாதத்திற்குப் பிறகு சட்டமன்றம் கூடி அதை அதற்கு தடை சட்டம் இயற்றியது.. அதுபோல் இப்போது செயல்பட வேண்டி இருக்கிறது.. வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மிக கொடூரமானவை ஆகும்.. கற்றல் செயல்பாடுகளில் இருந்து இவர்கள் முற்றிலுமாக விலகிக் கொள்கிறார்கள் வீட்டுப் பாடங்கள் எழுதுவதையோ தேர்வுகளையோ அல்லது தான் சம்பந்தப்பட்ட புத்தகங்களையோ இவர்கள் புரட்டுவதே இல்லை..
பள்ளி சூழலில் இருந்து விலகிக் கொள்ளும் இவர்கள் மெல்ல மெல்ல தன் குடும்பம் சமூகம் யாவற்றிலிருந்தும் விலகிக் கொள்கிறார்கள் உறக்கமின்மை என்கிற ஒரு கொடிய நோயில் இவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் வீடியோ கேம் போதை அதிகரிக்கும் பொழுது அன்றாட வாழ்வின் உணவருந்துதல் தண்ணீர் குடித்தல் போன்றவற்றை கூட தவிர்க்கும் மன நிலை ஏற்படுகிறது.. சைபர் புல்லியிங் என்று அழைக்கப்படும்.. இன்னொரு கொடுமை உண்டு.. எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் உங்கள் வீட்டு குழந்தையை வீடியோ கேம்ஸ் மூலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.. இது போன்ற கொடுமை இன்று ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பத்திலும் நிலவுகிறது
பெற்றோர் தலையீடு மிக மிக முக்கியம்.. இது போன்ற நிலைகளில் குழந்தைகள் சிக்கிக் கொண்டு இருக்கிறார்களா என்பதை கண்டறிந்த பிறகு அவர்களுக்கு கண்டிப்பாக மனநல சிகிச்சை தேவைப்படுகிறது வெளியில் சொன்னால் சிக்கல் ஆகிவிடும் என்பதை ஒரு நம்பிக்கையாக கொண்டிருக்கும் பல பெற்றோர்கள் இதற்காக வழங்கப்படுகின்ற உளவியல் சிகிச்சைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை.. நடத்தை மனநல சிகிச்சை, என்பதே உடனடித் தேவையாகும்.. .. இது போன்ற குழந்தைகளிடம் இருந்து உடனடியாக வீடியோ கேம்ஸ்களை முழுமையாக பிடுங்கிக் கொள்வது என்பது அவர்களின் சிக்கல்களை மேலும் அதிகமாக்கி வாழ்வை முடித்துக் கொள்வதை நோக்கி அவர்களை தூண்டுகின்ற சூழல்களை ஏற்படுத்தலாம்.. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் குடிபோதைக்கு அடிமையானவர்கள் மீட்கப்படும் பொழுது நாம் தருகின்ற மனநல திறன் அணுகுமுறை சிகிச்சை …சிக்கல் கவன சிகிச்சை போன்ற சி பி டி வகை சிகிச்சைகள் அவசியம்.. எதுஎப்படியோ பள்ளி கல்லூரிகளில் வீடியோ கேம் கலாச்சாரத்தின் கொடுமைகள் குறித்து உடனடியாக அரசு விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதே உண்மை.
பதவியேற்று இருக்கும் புதிய அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மூலம் போர்க்கால அடிப்படையில் செயல்பட தவறினால்.. ரீல்ஸ் உலக.. வீடியோ கேம்ஸ் உலக.. இருள் சந்ததியாக தமிழ் நாட்டின் வருங்காலம் மாறும் அபாயம் உள்ளது.. ரீல்ஸ் மூலமே ஆட்சிக்கு வந்திருக்கும் இவர்கள் செவியில் எப்படியாவது இதை கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகும்.
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான கட்டுரை. தங்களின்கோரிக்கை நிறைவேறுவது சற்று கடின காலமாக இருக்கிறது. முயற்சி செய்யலாம்….. கேம் விளையாட்டால் சிந்தனை திறன் இழப்பு, உடல் – உளவியல் ரீதியாக பிரச்சனைகள் அதிகம் வரும்….
Wonderful article.. every child rights activist should understand this and should pressurize the government to implement a ban up to age of 16 at least regarding all gadgets video games reals etc., and save our children from the danger.. but unfortunately the ruling party today has come to power through this.. but a timely article sir thank you 👍👍🎉