சூரியாதேவி ஹைகூ கவிதைகள்
1
குழந்தையொடு சேர்ந்து
எட்டுமேல் எட்டு வைத்து நடைபழக
கற்றுக்கொள்கிறது நடைவண்டி….
2
விண்ணில் இடிமுழங்க வந்து இறங்கிய
ஈரமழை அம்புகள் குத்திக் கிழித்த விதையிலிருந்து
புத்துயிர் பிறக்கின்றன பூமியில்.
3
இரவினை உறங்க வைக்க இசையமைத்து
பாடல் பாடுகின்றன
ரீங்காரமிடும் வண்டுகள்..
4
வேர்கள் ஏன் மேலே இருக்கின்றனவென்று
அப்பாவிடம் மகன் கேட்கிறான்
பட்டுப்போன மரத்தினைப் பார்த்து.
5
தொலைந்துபோன டைரி கிடைத்தது
புரட்டிப் பார்க்கின்றேன்
வார்த்தைகள் மட்டுமே வாழ்க்கை எங்கே?
6
நாற்று நடும் வயலில்
வியர்வையில் நனையும் விவசாயி
வீசிடும் தென்றலே ஏசி.
7
அருகருகே இருந்தும் கூட காணமுடியாது
பரிதவித்துப் போய் பார்த்துக் கொள்கின்றன
பாதரசக் கண்ணாடியில் கண்கள்…
8
தலைமேல் கொட்டும்போதெல்லாம்
குதூகலமடைகிறது மனம்
குளிர்ந்த நீரின் வருடல்…
எழுதியவர் :
சூரியாதேவி
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

