கோபமாகக் கத்திவிட்டு
அடுத்த பொழுதுகளில் ஏது
செய்யப் போகிறோம்
குதர்க்கமாகப் பேசிவிட்டுப் பின்னர்
என்ன செய்வதாக உத்தேசம்
குறைகளைக் கண்டு
முரண்பட்டு என்ன பிரதிபலன்
அருகில் இருப்பவரின் அருமை உணராமல்
ஈகோவில் இறுமாந்து என்னதான் சாதனை நிகழ்த்த
வெட்டிவிட்டுத் தெரியாதது போல் நடிப்பதில்
அப்படியென்ன மகிழ்ச்சி
அழுகையைத்துடைக்காமல்
அப்படியே நகர்ந்து விடுவது
உங்களை உறுத்துவதேயில்லையா
சம்பவங்களாக நீங்கள் கேள்விப்படும் சோகங்கள்
உடைத்துச்
சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டுத்
திரும்பவும் கைகுலுக்க வருவதற்கு உங்களுக்கு
இயலுமானதாக இருக்கலாம்…
குறுகுறுப்பே இல்லாத,
குற்றவுணர்ச்சியே காண்பிக்காத
கைதேர்ந்த கலைஞர்களாக
நீங்கள் இருக்கலாம்…
வர்ண அசுரர்களின் அரிதாரங்களை
விரும்பிப் பூசிக்கொண்டு
புதுப்புது
அவதாரங்களை நீங்கள் எடுத்திருக்கலாம்…
ஆயினும்
சுயம் தொலைத்து வாழ்வதில்
எனக்கு இஷ்டமே இல்லையென்பது
உங்களுக்குத் தெரியாத ஒன்று
அறிந்து கொள்ளுங்கள்…
காலாவதித் தேதியை எப்போதோ கடந்து சென்று விட்ட
கருணையின் எதிரொலிகளை
யாரும் கொண்டாடுவதில்லை!
எழுதியவர்
Dr ஜலீலா முஸம்மில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.