penandrum-indrum-webseries-22 -by-narmadha-devi அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின் உழைப்பு, சமவேலைக்கு சமகூலி, உழைப்புச்…
penandrum-indrum-webseries-21 -by-narmadha-devi அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023 ஆம் ஆண்டு மகளிர் தின நிகழ்வு ஒன்றில்…
athiyayam : pen: andrum,indrum - narmatha devi அத்தியாயம் 9 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 9 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

கண்ணியமான வாழ்வு வெறுங்கனவு ஒரு கிராமத்தின் கதை கிராமத்தில் விவசாய வேலையும், கைவினை வேலையும் செய்யும் ஒரு குடும்பம். நான்கு பேர் இருக்கிற குடும்பம் எனக் கொள்வோம். வாரம் முழுவதும் நான்கு பேர் உழைத்து, பாய்கள், செருப்புகள் செய்கிறார்கள். திங்கட்கிழமை அவர்கள்…
அத்தியாயம் 6 : பெண்: அன்றும், இன்றும் -நர்மதா தேவி

அத்தியாயம் 6 : பெண்: அன்றும், இன்றும் -நர்மதா தேவி

  அடிமைகளிலேயே சிறந்த அடிமைகள்   “பெண்ணடிமைத்தனம் என்பது பண்டைய நிலவுடைமைச் சமூகத்தின் மிச்ச சொச்சம். மக்களுடைய வாழ்க்கையில், கலாச்சாரத்தில் முந்தைய நிலவுடைமைச் சமூகத்தின் கட்டமைப்புகளான சாதி, பெண்ணடிமை முறை வேரூன்றியிருக்கிறது. அவை இன்னும் அறுபடவில்லை. அதனாலேயே நவீன முதலாளித்துவ சகாப்தத்திலும்…
அத்தியாயம் 5 : பெண்: அன்றும், இன்றும்… – நர்மதா தேவி

அத்தியாயம் 5 : பெண்: அன்றும், இன்றும்… – நர்மதா தேவி

பெண்: அன்றும், இன்றும்…   அத்தியாயம் 5   ‘இல்லத்தரசி’ எனும் பம்மாத்து   நர்மதா தேவி   அரிசியும், காய்கறிகளும், பருப்பும் எப்படி சாப்பாடாக மாறுகிறது, மூன்று வேளை உணவு தங்கள் தட்டுகளில் எப்படி வருகிறது என்கிற பிரக்ஞையே இல்லாமல்தான்…
Pen andrum indrum 3 webseries by Narmatha devi அத்தியாயம் 4: பெண் அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 4: பெண் – அன்றும், இன்றும் – நர்மதாதேவி

மனைவி எனும் மல்ட்டி பர்ப்பஸ் யூஸ் மெஷின்

“நவீன தனிக்குடும்பம் என்பது வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்ணின் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது” என்கிறார் எங்கெல்ஸ்.

“பையன் வேலைகிடைச்சு அமெரிக்கா போயிட்டானா? சாப்பாட்டுக்கு என்ன பன்றான்?

ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிவச்சி அவங்கூடவே அனுப்பி வச்சிட்டா, அந்தப் பொண்ணு அவனுக்கு சமச்சுப்போட்டு வீட்டப் பாத்துப்பா இல்லையா?

அதுவும், அவனோட துறையிலேயே வேலைபாக்குற மாதிரியான படிச்சப் பொண்ணப் பார்த்துட்டா, இன்னும் உத்தமம்.

அவனால பொண்டாட்டிக்கு சுலபமா அவனோட துறையிலேயே வேலையும் வாங்கிக்கொடுத்துட முடியும்.

அந்தப் பொண்ணு குடும்பத்தையும் பொறுப்பா கவனிச்சுகிட்டு, வேலைக்கும் போயி சமத்தா இருப்பா. குடும்பம் கஷ்டப்படாம சொத்து சுகத்தோட நல்லா வசதியா வாழ முடியுமில்லையா?”

– இதுதான் நமது மத்திய வர்க்க மக்கள் போடும் கணக்கு.

வேலைக்குப் போய் நன்றாகச் சம்பாதிக்கும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் ஆண்மகனால், தனக்கான சாப்பாட்டை தானே சமைத்துக்கொள்ள முடியும். அல்லது, சமையலுக்கு வேலையாள் ஏற்பாடு செய்திட முடியும். அல்லது, ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொள்ள முடியும். ஆனால், இவற்றில் எதையும் ஆண்கள் செய்ய மாட்டார்கள். ‘என்னது ஆம்பிளை சிங்கம் போய் சமைக்கிறதா? சமையலுக்குப் போய் ஆள் போடுறதா? ஹோட்டலில் சாப்பிட்டால் வயிறு கெட்டுவிடாதா!’ இப்படி நிறைய வியாக்கியானங்கள் முன்வைக்கப்படும்.

அதேபோல, துணி துவைப்பதற்கு அவர்களால் வாஷிங் மெஷின் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், அதை ஸ்விட்ச் போட்டு இயக்கும் வேலையைக்கூட அவர்கள் செய்ய முன்வர மாட்டார்கள். வீட்டைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு வீட்டுவேலைப் பணியாளர்களை அவர்கள் தேடலாம். ஆனால், ‘வீட்டுவேலைகளுக்குப் போய் செலவு செய்து காசை வீணடிப்பதா?’ ‘எல்லாவிதமான வீட்டு வேலைகளையும் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதற்கான ‘மல்ட்டி பர்ப்பஸ் யூஸ் மெஷின்’ தானே மனைவி?’ ‘அதனால், ஒட்டு மொத்த வீட்டு வேலைக்காகவும் நாம் செய்துகொள்ள வேண்டிய ஒரே ஏற்பாடு ‘திருமணம்’’. இந்த சிந்தனைதான் நமது சமூகத்தில் இருக்கிறது.

ஆகவே, இங்கே திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்குக் காதல், பகிர்தலுக்கு இணை வேண்டும் என்கிற உணர்வுப்பூர்வமான தேவைகள் இருப்பதில்லை. ‘குடும்ப அமைப்பு’ இயங்குவதற்கான சமூகக் காரணங்கள் வேறாக இருக்கின்றன.

வீட்டு வேலைகள் செய்வதற்கான ஏற்பாட்டைப் பொறுத்தவரை பணமிருக்கும் மத்தியதர வர்க்கத்துக்கே ‘மனைவி என்கிற அடிமை’ வேண்டும் என்கிறபோது, 10-15 மணிநேரம் உழைத்தாலும் மூன்று வேளை உணவுக்குக்கூட வழியில்லை என்று வாழ்கிற அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமை? படுமோசம்.

விலைவாசி விஷம்போல ஏறிக்கொண்டே போகிறது. எவ்வளவு உழைத்தாலும் உயிர்வாழ்வதற்கான அடிப்படை வருமானம்கூட கிடைக்காது. இந்த நிலையில் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது குடும்பங்களில் பராமரிக்கப்பட்டால்தான், அவர்களால் பிழைத்திருக்கவே முடியும் என்கிற நிலை இருக்கிறது. அந்தப் பராமரிப்புப் பணியை அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் செய்கிறார்கள். ஒரு குடும்பத்தில் கணவன் காலை 6 மணி ஷிஃப்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்றால், அவருடைய மனைவி அதிகாலை 4 மணிக்கே எழுந்து, அவருக்கான காலை உணவையும், மதிய உணவையும் தயாரித்துக் கொடுத்தனுப்பி, அவரைப் பராமரிக்கும் பணியைச் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த மனைவியும் ஒரு தொழிலாளி என்றால், தனது கணவருக்கும், வீட்டில் உள்ள பிறருக்கும் தேவையான அனைத்தையும் உறுதிசெய்துவிட்டு, அவரும் வேலைக்குக் கிளம்ப வேண்டும்.

எனவே, நவீன ஒருதாரத் திருமண முறை என்பது பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு நம்முடைய குடும்ப அமைப்புகளே சாட்சிகளாக இருக்கின்றன.

பெண்கள் திருமண பந்தம் என்ற பெயரால் அடிமைகளாக்கப்படும் கொடுமை குறித்து தந்தை பெரியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை. அந்த அடிமைத்தனத்தை மறைத்துப் பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு, அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஓர்அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாகக் கவனித்தால், நமது நாடு மாத்திரமல்லாமல், உலகத்திலேயே அநேகமாய்க் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிகக் கொடுமையாயும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமாயும் நடத்தப் படுகிறார்கள் என்பதையும் நடுநிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால், நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும்விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.” என்கிறார். [பெண் ஏன் அடிமையானாள், 5 வது அத்தியாயம், கல்யாண விடுதலை]

தொழிலாளர்கள் பெறும் கூலி

ஒரு தொழிலாளி ஈட்டும் கூலி என்பது என்ன?

”ஒரு முதலாளி பணம்கொடுத்து ஒரு தொழிலாளரிடம் உழைப்பை வாங்குவதாகவும், பணத்துக்காக தொழிலாளர்கள் தம் உழைப்பை முதலாளிக்கு விற்பதாகவும் (நமக்குத்) தோன்றுகிறது. ஆனால் இது வெறும் பொய்த்தோற்றமே! உண்மையில், தொழிலாளர்கள் பணத்துக்காக முதலாளியிடம் விற்பது அவர்களின் உழைப்புச் சக்தியைத்தான்” என்கிறார் மார்க்ஸ்.

உழைப்புச் சக்தி என்பது உழைப்பைச் செலுத்தும் திறன்.
“உழைப்புச் சக்தி என்பது உயிருள்ள ஒரு தனிமனிதரின் திறனாக அல்லது சக்தியாக இருக்கிறது” என்று மார்க்ஸ் விளக்குகிறார்.

உழைப்புச் சக்தியின் மதிப்பை, அதாவது உழைப்பைச் செலுத்தும் திறனின் மதிப்பை எப்படிக் கணக்கிடுவது?

உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆகும் உற்பத்திச் செலவே உழைப்புச் சக்தியின் மதிப்பு. சுருக்கமாக, ஒரு தொழிலாளியை உருவாக்கி, பயிற்சி அளித்து, பராமரிப்பதற்கு ஆகும் செலவே உழைப்புச் சக்தியின் மதிப்பு எனக் குறிப்பிடலாம்.

அதாவது, ரத்தமும் சதையுமாக இருக்கிற தொழிலாளியை உற்பத்தி செய்வதற்கு, பராமரிப்பதற்கு, பயிற்றுவிப்பதற்கு, மேலும், தொழிலாளி காலப்போக்கில் மூப்படைந்து, வலுவிழந்து உழைக்கமுடியாமல் போவார் என்பதால், அடுத்த தலைமுறை தொழிலாளியை உற்பத்தி செய்து, பராமரிப்பதற்கு ஆகும் செலவுதான், உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு. ஆக, உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு என்பது தொழிலாளியின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திக்கான செலவு என்று கொள்ள வேண்டும்.

”மனிதனின் சதையையும் குருதியையும் தவிர வேறு சேமிப்பிடம் இல்லாத இந்தத் தனித்துவம் கொண்ட பண்டத்தின் (உழைப்புச் சக்தியின்) விலையைக் குறிக்கும் தனிச்சிறப்பான பெயர்தான் கூலி” என்கிறார் மார்க்ஸ். தொழிலாளியின் பராமரிப்புக்குத் தேவையான வாழ்வாதாரத் தேவைகளின் மதிப்பைக் கணக்கில் கொண்டே ஒரு தொழிலாளியின் கூலியும் நிர்ணயிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச வீட்டு வாடகை இவ்வளவு… வேலைக்கு வந்து போவதற்கான போக்குவரத்து செலவுக்கு இவ்வளவு… உணவை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டால் ஆகும் செலவுக்கு இவ்வளவு… ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டால் இவ்வளவு…தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்புச் செலவுக்கு இவ்வளவு- இப்படிக் கூட்டி கழித்து, ஒரு வர்க்கமாகத் தொழிலாளர்கள் பிழைத்திருப்பதற்கு எவ்வளவு குறைவாகக் கூலிகொடுத்தால் போதுமோ, அவ்வளவுதான் தொழிலாளர்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது. இந்தப் புள்ளியில்தான் கணக்கில் கொண்டுவரப்படாத பெண்களின் வீட்டு உழைப்பைப் பற்றி நம்மால் அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள முடியும்.

தொழிலாளர்கள் பராமரிப்பில் பெண்களின் பங்கு

தொழிலாளர்களின் இருத்தலுக்கு அவசியமான தேவைகளாக உணவு, இருப்பிடம் உள்ளிட்ட பராமரிப்புத் தேவைகள் இருக்கின்றன. இவை போக, தொழிலாளர்கள் தொழிலாளர்களாக இருப்பதற்கு கல்வி, தொழிற்பயிற்சி, மருத்துவ சேவை உள்ளிட்ட அம்சங்களும் தேவைப்படுகின்றன.

கல்வி, தொழிற்பயிற்சி, மருத்து வசதி உள்ளிட்ட தேவைகள் வீட்டிற்கு வெளியே, அரசு உள்ளிட்ட அமைப்புகளால் உறுதிசெய்யப்படுகின்றன. (முதலாளித்துவ நாடுகளில் இவை யாவும் காசு கொடுத்துப் பெறும் சரக்குகளே. சேவைகளாக் கிடைக்காது.)

தொழிலாளர்களின் உயிர்வாழ்வுக்கு அவசியமான தேவைகளான உணவு, இருப்பிடம் சார்ந்த தேவைகள் பூர்த்தியாவதற்கு குடும்பத்திற்குள் நடக்கும் உற்பத்தி மிகமிக அவசியமாக இருக்கின்றது. வீட்டிற்குள் நடைபெறுகிற இந்த உற்பத்தி பெண்ணடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாக இருக்கிறது.

தொழிலாளர்களுக்குச் சமைத்துப் போட, அவர்களுடைய உடல்நலம் பேண, வீட்டு வேலைகள் செய்ய, வயதான பெற்றோர்களைக் கவனிக்க, குழந்தைகளைக் கவனிக்க, ‘மனைவி எனும் பெண்’ தொழிலாளர்களின் குடும்பங்களில் இருந்தாக வேண்டியுள்ளது. இல்லை! இல்லை! ‘மனைவி எனும் அடிமை’ தொழிலாளர்களின் குடும்பங்களில் இருந்தாக வேண்டியுள்ளது.

இப்படி, குடும்பம் எனும் அமைப்பில் பெண்களால் தொழிலாளர்கள் பராமரிக்கப்படுவதால் முதலாளித்துவ முறைக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

1) பெண்களின் குடும்ப உழைப்பினால் முதலாளித்துவ அமைப்புக்குத் தடையில்லா உழைப்பு கிடைக்கிறது.

இந்தத் தலைமுறை தொழிலாளியைப் பராமரிப்பதோடு, அடுத்த தலைமுறைத் தொழிலாளியையும் பெற்றெடுத்துப் பராமரிக்கும் பணியையும் பெண்கள் வெகுசிறப்பாகச் செய்து வருகிறார்கள். மேலும், ‘எனது கணவன், எனது பிள்ளைகள், எனது குடும்பம்’ என உணர்வு சம்பந்தப்பட்ட சேவையாகக் கருதி, பெண்கள் இந்தப் பராமரிப்புப் பணிகளைச் செய்வதால் முதலாளித்துவ அமைப்புக்கு மிகப்பெரும் பலன் கிடைக்கிறது. தொழிலாளர்களுக்குக் குறைவான ஊதியத்தை முதலாளித்துவ முறை வழங்கினாலும், தொழிலாளர்களின் உடல்நலமும், மனநலமும் குடும்ப அளவில் பெண்களால் பேணப்படுகின்றன. தொழிலாளர்களின் உள நலம், உடல் நலம் என்பது அவர்கள் செலுத்துகிற உழைப்பின் தரத்தோடு தொடர்புடையது. இந்த அடிப்படையில் பெண்களின் குடும்ப உழைப்பு முதலாளித்துவ அமைப்புக்கு தங்குதடையற்ற சிறந்த உழைப்பை உறுதிசெய்து உதவி செய்கிறது.

2) பெண்களின் குடும்ப உழைப்பு முதலாளித்துவ அமைப்பின் செலவீனங்களைக் குறைக்க உதவுகிறது.

வீட்டளவில் தொழிலாளர் பராமரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற வேலைகளை சமூகம் பெண்கள் தலையில் சுமத்தி இருக்கிறது. இந்த முக்கியமான சமூகப் பணிகள், தனிப்பட்ட குடும்பங்களின் பணிகளாக்கப்பட்டு பெண்களின் தலைகளில் கட்டப்பட்டுவிட்டதால், முதலாளித்துவ அரசுகளும், நிறுவனங்களும் இந்தப் பராமரிப்புப் பணிகளில் பங்கெடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இவை சார்ந்த நலத்திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்யத் தேவையில்லை; அல்லது, போதுமான ஒதுக்கீடுகளை செய்யத் தேவையில்லை. தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களும், தொழிலாளர்களின் குழந்தைகள், வயதான பெற்றோர் பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு சிறப்புப் படிகள் ஏதும் வழங்கத் தேவையில்லை. மொத்தத்தில் பெண்களின் வீட்டு உழைப்பால் முதலாளித்துவ சமூகத்திற்கு எவ்வளவு செலவு மிச்சமாகிறது!

                                                                                             தொடரும்

ஆதாரங்கள்: 1. குடும்பம், தனிச்சொத்து, அரசு-ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
2. மாதர் அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005
3. Capital, A Critique of Political Economy, Volume I
4. Wage Labour and Capital, Karl Marx
4. பெண்ணியமும், வர்க்க உணர்வும், அர்ச்சனா பிரசாத், தமிழ் மார்க்சிஸ்ட் கட்டுரை, ஆகஸ்ட் 2022
5. Patriarchy subsidises Capitalism, Sanjay Roy, People’s Democracy, 23 April 2023
6. பெண் ஏன் அடிமையானாள், தந்தை பெரியார்

Pen andrum indrum 3 webseries by Narmatha devi அத்தியாயம் 3: பெண் அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 3: பெண் அன்றும், இன்றும் – நர்மதா தேவி


சும்மா இருப்பவர்கள்

வர்க்க சமுதாயத்தில் ’வீட்டளவில் பெண் ஆணுக்கு அடிமை’ என்கிற நிலை உருவானதும், அதுவரை பெண்கள் செய்து வந்த வீட்டுவேலைகள் அனைத்தும் அவற்றின் சமூகத் தன்மையை இழக்கின்றன. பெண்கள் செய்யும் வேலைகள் சமூகத்திற்கான வேலைகள் என்கிற மதிப்பை இழந்து வெறும் ’தனிப்பட்ட குடும்ப ஊழியம்’ மட்டுமே என்றானது. அதனால்தான், பெண்கள் இடுப்பொடிய 10 மணி நேரம், 16 மணிநேரம் வீட்டு வேலை செய்தாலும் ’எங்கம்மா வீட்டுல ’சும்மாத்தான்’ இருக்காங்க!’…, ’என் பொண்டாட்டி வீட்டுல ’சும்மாத்தான்’ இருக்கா!’…, என்கிற  ’புருடா’வையெல்லாம் நாம் இன்னமும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

எனவே, வர்க்க சமுதாயத்தில் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்வது என்பது கட்டாய உழைப்பாக்கப்பட்டிருக்கிறது; பெண்கள் குடும்பத்திற்காக எவ்வளவு வேலைகளைக் செய்தாலும் அவற்றிக்கு எந்தவித மதிப்போ, அங்கீகாரமோ கிடையாது-இன்னும் சொல்லப்போனால் பெண்கள் செய்யும் குடும்பவேலைகள் ஒரு வேலையாகவே கருதப்படாது என்கிற நிலை உருவாக்கப்பட்டது. அதனால்தான், ’மாட்டைவிட’ அதிகம் வேலை செய்கிற நமது பெண்களைப் பார்த்து, இதயமே இல்லாமல் ’சும்மா இருப்பவர்கள்’ எனச் சொல்கிறோம். 

எனவே, அநாகரிக சமூகத்தில் ஒரு கட்டத்தில் உருவான வர்க்க சமுதாயத்தின் புதிய ஏற்பாடுகளில் ஒன்றாக, குடும்ப அமைப்பின் மூலமாகப் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் முறை – பெண்ணடிமை முறை உருவானது. இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

வாரிசுரிமையின் தோற்றம்
வர்க்க சமுதாயத்தில் தனிச்சொத்து உருவானதும் ஆண்களுக்கு தங்களுடைய வாரிசுரிமையை நிறுவ வேண்டும் என்கிற தேவையும் பிறக்கிறது. ஒரு பெண்ணோடு தனக்கிருக்கிருக்கும் மண உறவினால் பிறந்த ’என்னுடைய குழந்தைகள்’ என தங்களுடைய வாரிசுகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு ஏற்படுகிறது. எனவே, தன்னுடைய மனைவியாகிய பெண் தனக்கு மட்டுமே ’உடைமையானவள்’, தன்னைத் தவிர வேறு யாருடனும் அவள் உறவுகொள்ளக்கூடாது என்கிற விதி ஆண்களுக்குத் தேவைப்பட்டது. குடும்பத்தில் ‘கற்பு’ ஒழுக்கம் என்பது மனைவிக்கு இருக்க வேண்டிய முக்கிய விதியாக உருவாக்கப்பட்டது. 

ஆனால், தன்னுடைய மனைவியிடம் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்ற அதே கட்டுப்பாடு ஆண்களுக்கு இல்லை. குடும்பத்துக்கு வெளியே ஆண்களின் காம இச்சைக்கு இரையாக ’காமக்கிழத்திகள்’, ’பரத்தையர்கள்’, ’விபச்சாரிகள்’ என்கிற பெண்கள் வகையினர் உருவாக்கப்பட்டார்கள். உலகெங்கிலும் இருந்த வர்க்க சமூகங்களில் இதுதான் நிலை. ’திருமணத்திற்குப் பிறகு கணவன் ’பரத்தையருடன்’ உறவுகொண்டு வீட்டுக்கு வரும்போது, அவனை எதிர்த்துச் சண்டையிடும் உரிமை மனைவிக்கு இருந்தாலும், அவள் அப்படிச் செய்வது முறையல்ல’ – இப்படித்தான் தமிழகர்களின் மிகத் தொன்மையான இலக்கியமான தொல்காப்பியம் கூறுகிறது. (“சொல் லெதிர் சொல்லல் அருமைத் தாகலின் – அல்ல கூற்றுமொழி அவள்வயி னான” -தொல்காப்பியம்-களவு-பாடல் 108). ’கற்புக்கரசி கண்ணகி’ இவ்வழி உருவாக்கப்பட்டவள்தான். 

வர்க்க சமுதாயத்துக்கு முன்பிருந்த சமுதாயங்களில் குழந்தைகள் தாயின் வழியாகவே அடையாளம் காணப்பட்டுவந்தார்கள். எல்லோரும் சேர்ந்து கூட்டாக உழைத்துச் சேர்த்த எளிய சொத்துகள் அனைவருக்குமானது என்கிறபோது, ’உரிமை’ என்கிற வார்த்தைக்கு அங்கு இடமேயில்லை. எனவே, அந்தச் சமூகத்துக்கு ஏற்றவாறு அப்போது நிலவிய திருமண முறைகளும், குடும்ப வடிவங்களும் தாயையே பிரதானமாகக் கொண்டிருந்தன. 

உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப வளர்ச்சியடைந்து வந்த மனிதசமூகத்தின் ஒவ்வொரு சகாப்தமும், அதற்கு முன்பு நிலவிவந்த குடும்ப அமைப்புகளிலும், திருமண முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வந்தன. 

காட்டுமிராண்டி காலம் தொடங்கி, நாகரிக காலம் வரை வரை 1) ரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) 2) புனலுவா குடும்பம் (Punalauan family) 3) இணைக் குடும்பம் அல்லது ஜோடிக் குடும்பம் (Pairing family) 4) இறுதியாக ஒருதாரக் குடும்பம் (Monogamous family) என நான்கு வகையான குடும்பங்கள் இருக்கின்றன என்றும், காட்டுமிராண்டி நிலைக்கு குழு மணம் (Group Marriage), அநாகரிக நிலைக்கு இணை மணம் அல்லது ஜோடி மணம் (Pairing marriage), நாகரிக நிலைக்கு ஒருதார மணம் (Monogamous marriage) என மூன்று வகையான திருமணங்கள் இருக்கின்றன என்றும் எங்கெல்ஸ் ’குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலில் குறிப்பிடுகிறார்.

அமெரிக்கா, ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என உலகின் அனைத்து கண்டங்களிலும் வாழ்ந்த மக்கள் சமூகங்களில், ரத்த உறவுகளை அழைப்பதற்காகப் பயன்படுத்திய உறவுப்பெயர்களை எல்லாம் ஆராய்ந்து, அந்தப் பெயர்களைப் பின்தொடர்ந்து, முந்தைய காலங்களில் அவர்களிடம் இருந்த வழக்கொழிந்துபோன மணமுறைகளையும் விரிவாக ஆய்வு செய்து, இந்நூலில் எங்கெல்ஸ் விவரித்திருக்கிறார். ”தென்னிந்தியாவில் உள்ள தமிழர்களின் ரத்த உறவுகளைக் குறிக்கும் சொற்களும், நியூயார்க் மாகாணத்திலுள்ள செனீகா இரோகுவாய் பூர்வகுடிகளின் ரத்த உறவுகளைக் குறிக்கும் சொற்களும், இருநூறுக்கும் மேற்பட்ட உறவுகள் விஷயத்தில் ஒன்றாகவே இன்றுவரைக்கும்கூட இருந்து வருகின்றன” – இப்படித் தமிழர்களின் உறவுமுறைகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார் எங்கெல்ஸ். ‘1884-ஆம் ஆண்டில் அவரால் எழுதப்பட்ட நூல் இது’ என்பதை நினைக்கும்போது, ’அந்தக்காலத்திலேயே எவ்வளவு செய்நேர்த்தியுடன் தமிழகத்தில் நிலவிய உறவுமுறைகள், திருமணமுறைகளை எல்லாம் ஆராய்ந்திருக்கிறாரே!’ என்கிற வியப்பு மேலிடும். 

சரி, திருமணமுறைகள் குறித்த கதைக்குத் திரும்ப வருவோம். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. ’அய்ய…ச்சீ…ஆய்’ என்கிற ’அருவருப்பான’ மனநிலையைக் கடந்து, ’இதுதான் மனிதசமூகம் கடந்துவந்த பாதை’ என்கிற பக்குவத்தோடு குடும்பமுறையின் வரலாற்றை நாம் படிப்பது அவசியம். அப்போதுதான் மனிதவரலாறு குறித்த உண்மைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். 

இன்னார் இன்னாரோடுதான் பாலுறவு கொள்ளலாம் என்பதை சமூகம் நிர்ணயிப்பதிலிருந்துதான் திருமண முறைகள் உருவாக்கப்படுகின்றன. பாலுறவுகளைப் பொறுத்தவரை பெற்றோர்களும், குழந்தைகளும்கூட இணையர்களாக இருக்கலாம் என்கிற வரைமுறையற்ற நிலை, மிகமிக ஆரம்ப காலத்தில் மட்டுமே இருந்துள்ளது. வெகு சீக்கிரமாகவே மனிதர்கள் இந்த முறைக்கு முடிவு கட்டி அடுத்த நிலைக்குச் சென்றார்கள் என்கிறார் எங்கெல்ஸ். 

காட்டுமிராண்டி சமூகத்தில் இந்தப் பழக்கம் முதலில் ஒழிக்கப்பட்டு ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குள்தான் பாலுறவு இருக்க முடியும்- அதாவது, ஒரு தலைமுறையினர்களுக்குள் மட்டுமே ஒருவருக்கொருவர் கணவன் மனைவிகளாகவும், சகோதர சகோதரிகளாகவும் இருக்க முடியும் என்கிற முதல் வரம்பு கொண்டுவரப்பட்டது. ’ரத்த உறவுக் குடும்பம்’ என்கிற இந்த வகையான குடும்பங்களில், பாட்டன் பாட்டிகள் என்ற முதல்தலைமுறையினர் அனைவரும் தங்களுக்குள் சகோதர சகோதரிகளாகவும், கணவன் மனைவிகளாகவும் இருந்தார்கள்.

அவர்களுக்குப் பிறந்த இரண்டாம் தலைமுறையினர் அனைவரும் தங்களுக்குள் சகோதர சகோதரிகள் & கணவன் மனைவிகள். இவர்களுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறையினர் அனைவரும் தங்களுக்குள் சகோதர சகோதரிகள் & கணவன் மனைவிகள். இந்த முறையில் சகோதர்கள் அனைவரும் ஒரு குழுவிற்குள் ’பொது கணவர்கள்’, சகோதரிகள் அனைவரும் ஒரு குழுவிற்குள் ’பொது மனைவிகள்’ என வாழ்ந்தார்கள். இப்படி ’ஒரு குழுவிற்குள் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் கணவன் – மனைவி’ என்ற அடிப்படையில் இந்தத் திருமணமுறை இருப்பதால், இந்த வகையான திருமணமுறையை ’குழு மணம்’ (Group marriage) என்றழைத்தார்கள் மார்கனும், எங்கெல்ஸும். 

இந்த வகையான குடும்ப முறையில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் வட்டத்திற்குள் உள்ள எல்லாக் கணவர்கள், மனைவிகளுக்கும் இடையே ’பொது உறவு’ இருந்தது. அதனால், இந்த வகையான குடும்பங்களில் குழந்தைகளுக்கு இன்னார்தான் தகப்பன் என உறுதியாகக் கூற முடியாது. எனவே, குழந்தைகள் தாயின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள். 

காட்டுமிராண்டி நிலையில் இருந்து அநாகரிக நிலையின் இடைக்கட்டம் வரைக்குமான காலத்தில் இந்த வகையான ரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) இருந்தது என்கிறார் எங்கெல்ஸ்.

குடும்பம் மற்றும் மண உறவின் வளர்ச்சிக் கட்டத்தில் இரண்டாவது கட்டமாக சகோதர சகோதரிகளுக்குள் பாலுறவு கொள்ளும் முறை தடுக்கப்படுகிறது. முதலில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் உறவுகள் தடுக்கப்பட்டது. பிறகு, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட, மூன்றுவிட்ட என தூர சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவுகளும் தடுக்கப்பட்டன. சகோதர சகோதரிகளுக்குள் உறவுகள் கூடாது என்கிற கட்டுப்பாடுகளால், ஒரு சில தலைமுறைகளிலேயே ஆதிகாலத்திய பெருங்குடும்பத்தைப் பிரித்துப் பல கிளைகளை உருவாக்க வேண்டிய தேவை உருவானது. 

எந்தெந்த கிளைகளுக்குள் திருமணங்கள் நடக்கலாம், நடக்கக்கூடாது என்கிற வரையரைகள் எற்படுத்தப்பட்டன. (நம்மூரில் ’உறவுமுறை’, ’பங்காளிகள்’ என்று சொல்வதை ஒட்டிய அமைப்பாக இவற்றைக் கருதலாம்). இந்த வழக்கம் குலம், கணம் (Clan, Gen) என்கிற ஸ்தாபனங்கள் உருவாவதற்கு வழிவகுத்தன. அநாகரிக சமூகத்தின் முக்கிய அஸ்திவாரங்களாக இந்தக் கணங்களே இருந்தன. ஆனால், இந்தக் காலகட்டத்திலும் குழு மண முறையே நீடித்தது. எந்தெந்த பிரிவுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குழுவாக ஒருவருக்கொருவர் கணவர்களாக, மனைவிகளாக வாழ முடியும் என்கிற விதியில் சகோதர-சகோதரிகள் விலக்கப்பட்டார்களே ஒழிய, குழு மணமுறை தொடர்ந்தது. 

அமெரிக்காவின் இரோகுவாய் பழங்குடிகளில் ’புனலுவா’ எனப்படும் இந்த வகையான குடும்பமுறை இருந்துள்ளது. சில சகோதரிகள் – அவர்கள் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாகவோ அல்லது ரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்றுக் குழந்தைகளாகவோ இருக்கலாம் – இவர்கள் தமது ’பொதுவான கணவர்’களின் ’பொதுவான மனைவி’களாக இருந்தார்கள். ஆனால், இந்த உறவில் இருந்து அவர்களுடைய சகோதரர்கள் விலக்கப்பட்டார்கள். இதில் கணவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரகள் இல்லை; ‘புனலுவா’ எனப்படும் அந்தரங்கப் பங்காளிகள் என ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டார்கள். இதேபோல், ஒரு தாய் வயிற்று மகன்களோ, அல்லது ரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்று மகன்களோ உள்ள ஒரு குழுவினர், பல பெண்களைப் ’பொது மணம்’ செய்துகொண்டார்கள். இந்த மணமுறையில் இருந்து இந்த ஆண்களின் சகோதரிகள் விலக்கப்பட்டார்கள். இதில் மனைவிகளும் ஒருவருக்கொருவர் புனலுவா எனப்படும் அந்தரங்கப் பங்காளிகள்.

இந்த வகையான குடும்ப முறையிலும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் வட்டத்திற்குள் உள்ள எல்லாக் கணவர்கள், மனைவிகளுக்கும் இடையே ’பொது உறவு’ உண்டு. அதனால், இந்த வகையான குடும்பங்களில் குழந்தைகளுக்கு இன்னார்தான் தகப்பன் என உறுதியாகக் கூற முடியாது. எனவே, குழந்தைகள் தாயின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள். 

ரத்த சொந்தத்துக்குள் திருமணம் நடப்பதை கணங்கள் மேலும் மேலும் குறுக்கிக்கொண்டே வந்தன. பரஸ்பரம் மணம் செய்துகொள்ள முடியாமல்போய்விட்ட சகோதரர்களின் பிரிவுகளும், சகோதரிகளின் பிரிவுகளும் போகப்போக அதிகரித்துக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் இணைக் குடும்பம்/ஜோடிக் குடும்பம் எனும் முறை குழு மணத்திற்குப் பதிலாகத் தோன்றியது. இந்தக் கட்டத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வாழ்வது என்ற நிலை உருவானது. மண உறவுக்கு வெளியிலான உறவுகள் ஆணுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது; பெண்களுக்கு அப்படிப்பட்ட உறவுகள் இருந்தால் தண்டிக்கப்படும் வழக்கம் இருந்தது. திருமண பந்தத்தைத் துண்டிக்கும் உரிமை இருவருக்கும் இருந்தது என்றாலும், விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகள் எப்போதும்போலத் தாயின் உரிமையாகத் தாயுடனே இருந்தார்கள். 

”காட்டுமிராண்டி நிலைக்கும் அநாகரிக நிலைக்கும் இடைப்பட்ட எல்லைக்கோட்டில்தான் இணைக் குடும்பமுறை உருவானது. முக்கியமாக காட்டுமிராண்டி நிலையில் தலைக்கட்டத்திலும், இங்குமங்கும் என அநாகரிக காலத்தின் கடைக்கட்டத்திலும் காணப்பட்டது. அதற்கு முந்தைய காலகட்டத்தில் இம்முறை கிடையாது. காட்டுமிராண்டி சமூகத்தின்  அம்சமாக குழுமணமும், அநாகரிக சமூகத்தின் அம்சமாக இணைக் குடும்பமும், ஒரு தாரமணம் நாகரிக சமூகத்தின் அம்சகமாகவும் பரிணமித்தது” என்கிறார் எங்கெல்ஸ்.

குழுக் குடும்பத்தின் எல்லா வடிவங்களிலும் ஒரு குழந்தையின் தகப்பன் யார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. குழு மணங்களில் தாய் தரப்பில் இருந்து மட்டுமே வம்சாவளியைக் கண்டுகொள்ள முடியும் என்பதால், ’பெண் வழி’ ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே, இம்முறை நிலவிய காட்டுமிராண்டிகள் சமூகத்திலும், அநாகரிக சமூகத்தின் கடைக்கட்டம் மற்றும் இடைக்கட்டதிலும், தலைக்கட்டதின் ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலும், பெண்கள் சுதந்திரமானவர்களாக மட்டும் இல்லை, மதிப்பிற்குரியவர்களாகவும் இருந்தார்கள்.  பெண்கள் – அதாவது ’தாய்மார்கள்’ உயரிய நிலையில் வைக்கப்பட்டார்கள். வீட்டில் பெண்ணின் மேலாதிக்கம் இருந்தது. 

குழு மணத்திற்குப் பிறகு தோன்றிய இணைக் குடும்பமுறையில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஜோடி என்ற நிலை எற்பட்டபோது, குழந்தைகள் இன்னாருக்குப் பிறந்தவர்கள் என தகப்பன்மார்களை அடையாளம் காணும் நிலை வந்தது. நவீன ஒருதாரக் குடும்பத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய ஏற்பாடுகளைக் கொண்டிருந்த முந்தைய அமைப்பு இது. தகப்பன் யார் எனக் கூற முடிந்தாலும், இந்த இணை மணமுறையிலும் குழந்தைகள் தாய்-வம்சாவழி, தாய்-உரிமை என்ற அடிப்படையில் தாய்க்கு உரிமையானவர்களாகவே இருந்தார்கள். 

அமெரிக்காவின் இரோகுவோய் பூர்வகுடிகளில் செனீகா மக்களிடம் இணைக் குடும்பமுறை வழக்கில் இருந்தது. அவர்கள் மத்தியில் பணியாற்றிய அஷர் ரைட் என்கிற பாதிரியார் இந்தக் குடும்பமுறையில் பெண்களின் நிலையை நேரடியாகக் கண்டு பதிவுசெய்திருக்கிறார். ”பல குடும்பங்கள் வசிக்கும் பழைய நீளமான வீடுகளில் (Long houses), பெண்கள் வேறு குலங்களில் இருந்து கணவர்களைப் பெற்றார்கள். பொதுவாகவே குலத்தில் பெண்கள் தரப்பே வீட்டை ஆட்சிசெய்தது.

குடும்பத்தின் சேகரிப்புகள் பொது. ஒரு கணவனுக்கோ ஒரு காதலனுக்கோ உழைத்துத் தனது பங்கை உறுதிசெய்யக்கூடிய திறமை இல்லையென்றால், அவன் என்னதான் அந்தக் குடும்பத்துக்கு அதற்கு முன்னர் செய்திருந்தாலும், எத்தனை குழந்தைகள் அவனுக்கு இருந்தாலும், ’உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு கிளம்பு!’ என்ற கட்டளையை எப்போது வேண்டுமானாலும் அவன் பெற்றுவிடுவான். அப்படியொரு கட்டளை வந்துவிட்டால், அவன் உடனே கிளம்பி தன்னுடைய கணத்துக்குப் போய்விட வேண்டும். அந்தக் கட்டளைகளை மீறி அவனால் அந்த வீட்டில் இருக்கவே முடியாது; வீட்டுச் சூழல் மிகவும் கொதிப்பாக இருக்கும்” என்கிறார். 

இணை மணம்/ஜோடி மணத்தில் குழந்தைகளுக்குத் தகப்பன் இன்னார் என சொல்லக்கூடிய நிலை இருந்தாலும், குழந்தைகள் தாய்க்கு உரிமையானவர்கள், சொத்துகள் பொது என்கிற வழக்கமே இருந்துள்ளது. இதை நேரடியாகப் பாதிரியார் ரைட் கண்ட சாட்சி, ’குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குடும்ப அமைப்புகளில் ஆண்கள்-பெண்கள் இருபாலருக்கும் இடையிலான அதிகார நிலைகளில் உண்டான மாற்றங்கள் ஒரே இரவில் நடந்திடவில்லை.  அவர்கள் வாழ்ந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், நிலவிய பொருளாதார, சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு தாய்–உரிமையில் இருந்து தந்தை-உரிமைக்கு அதிகாரம் படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் மாறியது; மாற்றப்பட்டது. ’தாய் உரிமை’ என்கிற பதத்தை பாகோபன்தான் முதன்முதலில் பயன்படுத்துகிறார். தாய் மூலம் வம்சாவளியை அங்கீகரிப்பதையும், அதிலிருந்து காலப்போக்கில் வெளிவந்த வாரிசு உறவுகளையும் மட்டுமே அவர் ’தாயுரிமை’ என்ற சொல்லால் குறிப்பிட்டார். சுருக்கத்தைக் கருதி தானும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதாகவும்,  மற்றபடி சட்டரீதியான அர்த்தத்தில் ’உரிமை’ என்று குறிப்பிடக்கூடியது எதுவும் இந்த சமுதாயக் கட்டத்தில் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையும் எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார். 

வர்க்க சமுதாயங்களின் குடும்பங்களின் அடிப்படையான குணாம்சமாக, ஆண்-பெண் சமத்துவமற்ற நிலை இருக்கிறது என்பதே அடிப்படையான உண்மை. ”தாயுரிமை தூக்கியெறியப்பட்டது என்பது பெண்ணினம் உலகவரலற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். வீட்டின் அதிகாரத்தையும் ஆண் கைப்பற்றிக்கொண்டான்; பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள்; பணிமகளாக்கப்பட்டாள்; ஆணின் காம இச்சை தீர்க்கும் அடிமையாக்கப்பட்டாள்; கேவலம் குழந்தைகள் பெறும் இயந்திரமாகவே மாற்றப்பட்டாள்” என எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். பெண் ஏன் அடிமையானாள்? எப்படி அடிமையாக்கப்பட்டாள்? என்பதை சரித்திரப் பூர்வமாக விளக்கும் மிகச் சிறந்த சமூக விஞ்ஞான நூலாக எங்கெல்ஸின் ’குடும்பம், தனிச்சொத்து, அரசு’ ஆகியவற்றின் தோற்றம் நூல் விளங்குகிறது. 

-தொடரும்…

ஆதார நூல்கள்: 1. குடும்பம், தனிச்சொத்து, அரசு-ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்

  1. மாதர் அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005
பெண் – அன்றும், இன்றும்:அத்தியாயம் 2 -நர்மதா தேவி, சிபிஐ(எம்)

பெண் – அன்றும், இன்றும்:அத்தியாயம் 2 -நர்மதா தேவி, சிபிஐ(எம்)



வர்க்கசமூகத்தின் தோற்றமும், பெண்ணடிமைத்தனத்தின் தோற்றமும்
’குடும்பம் என்றாலே அதில் கணவன்தான் தலைவன்.
மனைவி இரண்டாம்பட்சம்தான்.
சொத்து, வாரிசுகள் எல்லாம் தந்தைவழிதான்.
இதுதான் ஆதிமுதலே இருந்து வரும் பழக்கம்’ – இப்படித்தான் சமூகம் வெகுகாலம் கருதிவந்தது. ‘ஆப்ரகாமின் வம்சாவழி வந்த சந்ததிகள்’ என பைபிள் கூறுவதை வைத்து, தந்தைவழிச் சமூகம்தான் காலங்காலமாக இருந்து வரும் முறை என ஐரோப்பிய சமூகம் நினைத்தது. ஆங்காங்கே பழங்குடி மக்கள் மத்தியில் தாய்வழிக் குடும்பமுறை நிலவியதைப் பார்த்திருந்தாலும், அவை எப்படித் தோன்றி, நிலைத்து வந்திருக்கின்றன என்கிற முறையான ஆராய்ச்சிக்குள் யாரும் போகவில்லை; போக விரும்பவில்லை. விவிலிய நற்பண்புகள் அடிப்படையில், ‘அய்ய…ச்சீ…அசிங்கம்’ என்கிற மனநிலை இந்தச் சமூகங்கள் குறித்த முறையான ஆய்வுகளைத் தடுத்திருக்கின்றன.

1850-60 தொடங்கும் காலப்பகுதி வரை குடும்பத்தைப் பற்றிய வரலாறு என சொல்லிக்கொள்வதற்கு உருப்படியான ஆய்வுகள் ஒன்றுமே இருக்கவில்லை. 1861ல் ஜொகன் ஜேக்கப் பாக்கோபனின் ‘தாய் உரிமை’ (Mother Right) என்ற நூல் வெளிவந்தது. இந்த நூல் முதன்முதலாக தாய்வழிமுறைக் குடும்ப அமைப்புகளை ஆராய்ந்தது. ஆரம்பகாலத்தில் மனித குலம் வரைமுறையற்ற பாலுறவுகளில் ஈடுபட்டிருந்த நிலை இருந்தது. இந்த உறவுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய் யார் என்று மட்டுமே உறுதியாக நிறுவ முடியும். இதனால் ‘வம்சாவளி’ என்பது ‘தாய்வழியாக’ ‘தாய்-உரிமை’ என்ற அடிப்படையில் தான் கணக்கிடப்பட்டுவந்தது. இளம் தலைமுறையினரின் பெற்றோர்கள் எனப் பெண்கள் மட்டுமே திட்டவட்டமாக நிச்சயிக்கப்பட வாய்ப்பிருந்ததால் பெண்கள் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார்கள் என்கிற விஷயங்களை இந்த நூல் முதன்முதலாக முன்வைத்திருக்கிறது. குடும்ப அமைப்பின் தோற்றம் குறித்த ஆய்வுகள் பாக்கோபனின் நூலில் இருந்துதான் தொடங்குவதாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு வந்த ஆய்வுகளில் மிக முக்கியமான ஆய்வுகளாக லூயி ஹென்றி மார்கனின் ஆய்வுகளைப் பார்த்தார் எங்கெல்ஸ். 1877ல் வெளிவந்த அவருடைய ’பண்டைக்கால சமுதாயம்’ (Ancient Society) என்கிற ஆய்வுநூலை, மனித சமூகத்தின் வரலாற்றிலேயே மிகமிக முக்கியம் வாய்ந்த ஆய்வாக எங்கெல்ஸ் கருதுகிறார்.

டார்வினுடைய பரிணாம வளர்ச்சித் தத்துவம் எவ்வளவு புகழ்பெற்றது என்பதை நாம் அறிவோம். பெரிதாக அறிவியல் தெரியாத நபர்கள்கூட, ’குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பதே டார்வின் கண்டுபிடிப்பு’ எனத் தெரிந்து வைத்திருப்பதை நாம் பார்க்கிறோம். அந்தளவுக்கு உயிரியலில் பெரிய புரட்சியை விளைவித்த கண்டுபிடிப்பு டார்வினுடையது. அதேபோல, மார்க்ஸின் கண்டுபிடிப்புகளிலேயே மிக முக்கியமானது சமூகத்தில் உபரி மதிப்பு எப்படித் தோன்றுகிறது என்பதுதான். அரசியல் பொருளாதாரத்துறையில் மார்க்ஸ் செய்த இந்தக் கண்டுபிடிப்பு சுரண்டலை ஒழிப்பதற்கு மனித சமூகம் என்ன செய்யவேண்டும் என்கிற அவசியமான புரிதலை உலகுக்கு வழங்குகிறது. உயிரியல் துறையில் டார்வினின் பரிணாம வளர்ச்சி குறித்த கண்டுபிடிப்பு எவ்வளவு முக்கியமானதோ, அரசியல் பொருளாதாரத் துறையில் மார்க்ஸின் கண்டுபிடிப்பு எவ்வளவு முக்கியமானதோ, அந்தளவுக்கு அதிகாலச் சமூக வரலாற்றுத்துறையில் மார்கனின் கண்டுபிடிப்பு முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார் எங்கெல்ஸ்.

“…நாகரிகமடைந்த மக்கள் சமூகங்களின் தந்தை-உரிமைக் கணத்துக்கு முந்தைய கட்டமாக ஆதிகாலத் தாய்-உரிமைக் கணம் இருந்தது என்ற மறுகண்டுபிடிப்பும் ஆதிகாலச் சமுதாய வரலாற்றுத்துறையில் முக்கியத்துவம் கொண்டது. அதைக் கொண்டு குடும்பம் பற்றிய வரலாற்றை முதல் தடவையாக மார்கன் வரைந்து காட்ட முடிந்தது” என்கிறார் எங்கெல்ஸ்.
மார்கனின் ஆராய்ச்சி முடிவுகளின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவுபடுத்தி எழுதும் திட்டம் மார்க்ஸுக்கும் இருந்தது. மார்க்ஸ் மறைந்த பிறகு, அந்த முக்கியமான பணியை எங்கெல்ஸ் செய்துமுடித்தார். அதன் விளைவுதான், 1884 ஆம் ஆண்டில் வெளியான எங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்கிற நூல். குடும்பம், திருமணமுறை குறித்து மார்கன் முன்வைத்த ஆதாரங்களுடன், தன்னிடமிருந்த ஆதரங்களையும் இணைத்து, பொருளாதாரம் குறித்த அடிப்படைகளை விளக்கி இந்த நூலை இயற்றினார் எங்கெல்ஸ்.
பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன காலக் குடும்ப அமைப்பின் தோற்றம் குறித்து இந்நூல் என்ன சொல்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆதிகாலச் சமூகங்கள்

ஜேன் குட்டால் எனும் புகழ்பெற்ற சிம்பான்சி ஆய்வாளர், சிம்பான்சிகளை ஆய்வு செய்து நிறைய கண்டுபிடித்திருக்கிறார். அவர் கண்டுபிடிப்புகளில் ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என புகழப்படுகிறது. எறும்புப்புற்றுக்குள் இருக்கும் எறும்புகளைப் பிடித்துச் சிம்பான்சிகளுக்குச் சாப்பிட வேண்டும். சிம்பான்சிகள் குச்சிகளை ஒடித்து வளைத்து எறும்புப் புற்றுக்குள் விட்டு வெளியில் எடுத்தன. அதில் ஏறிவரும் எறும்புகளைப் பிடித்துத் தின்றன. உணவுக்கான தேவையை ஒட்டி இப்படியான கருவி செய்யும் திறன் மனிதர்களின் மூதாதையர்களான சிம்பான்சிகளிடம் இருக்கிறது என்பதை முதல்முறையாக ஜேன் கண்டறிந்தார்.
குரங்கில் இருந்து பரிணமித்த மனிதர்களுக்கு உயிர்வாழ்வதற்குக் கருவிகள் செய்யும் திறன் மிகமிக அடிப்படையானது. ’மனிதன் கருவிகள் செய்யத் தெரிந்த விலங்கு’ என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். இன்றைக்கு கம்ப்யூட்டர், ஆன்ட்ராய்டு ஃபோன், இணையம் போன்ற கருவிகள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றன. மனிதர்களின் ’அடிப்படைத் தேவையாக’ இணையம் இருக்கிறது என ஐக்கியநாடுகள் சபையே அங்கீகரிக்கிறது. இந்தளவுக்கு இன்றைக்கு உற்பத்தி சாத்தியமாகி இருக்கிறது. தொடக்க காலத்தில் மனித சமுதாயம் அடிப்படையான வாழ்வுக்குத் தேவையான வெகு எளிமையான கருவிகளையே உருவாக்கத் தொடங்கியது.
உயிர் வாழ்வதற்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில், மனித சமூகத்தின் பரிணாமத்தை காட்டுமிராண்டி சமூகம் (Savagery), அநாகரிக சமூகம் (Barbarism), நாகரிக சமூகம் (Civilisation) என மூன்று சகாப்தங்களாக மார்கன் பிரித்திருந்தார்; எங்கெல்ஸும் அதையே பின்பற்றுகிறார். காட்டுமிராண்டி சமூகமூம், அநாகரிக சமூகமும், கடைக்கட்டம் (Lower stage), இடைக்கட்டம் (Middle stage), தலைக்கட்டம் (Upper stage) என அவற்றுக்குள் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. காட்டுமிராண்டி சமூகமூம், அநாகரிக சமூகமும் நாகரிக சமூகத்தின் தோற்றத்துக்கான அடித்தளத்தை இட்டுச்சென்றன.

காட்டுமிராண்டி சமூகம்

முதல் சகாப்தமான ’காட்டுமிராண்டி’ சமூகத்தின் முதல்கட்டம் உபயோகத்திற்குத் தயாராக இருந்த பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதில் இருந்து ஆரம்பமாகிறது. இடைக்கட்டத்தில் நெருப்பை உருவாக்கத் தெரிந்துகொள்கிறார்கள், விலங்குகளை வேட்டையாடுவதற்கு கல்லால் ஆன பட்டைத்தீட்டப்படாத ஈட்டி முதலான எளிய ஆயுதங்களை உருவாக்குகிறார்கள். தலைக்கட்டத்தில் வில், நாண், அம்பு முதலிய ஆயுதங்களை உருவாக்குகிறார்கள். காய்ந்த புற்கள், கொடிகள், நார்களைக் கொண்டு நார் ஆடைகளைக் கைகளால் தறியின்றி பின்னி உடுத்துகிறார்கள். கூடைகளைச் செய்கிறார்கள். மரத்தால் ஆன பாண்டங்களைச் செய்கிறார்கள். கீற்றால், மரப்பலகைகளால் குடிசைகள் கட்டத் தொடங்குகிறார்கள்.
வாழ்விடங்களைப் பொறுத்தவரை இந்த சகாப்தம், காடுகளில் மரங்களில் இருந்து இறங்கிவந்து மனிதர்கள் வாழத்தொடங்கியது முதல் (கடைக்காலம்), கிராமங்களாக குடியமைத்துத் தங்கத்தொடங்கிய நிலை (தலைக்காலம்) வரையிலான காலத்தை உள்ளடக்கியது.

இந்தத் தொடக்ககால மனிதசமூகத்தில் பெரிய அளவில் உற்பத்தி நடக்கவில்லை. காய்கனிகள், கிழங்குகளைச் சேகரித்து, விலங்குகளை வேட்டையாடி, மீன்பிடித்து அடிப்படையான உணவுத்தேவையை உறுதிசெய்து பிழைத்திருப்பது என்றளவில் மட்டுமே அன்றைக்கு மனிதசமூகம் இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் குழு முழுமைக்கும் தேவையான உணவை உறுதிசெய்வது என்பதே பெரும்பாடாக இருந்தது. ‘உபரி உற்பத்தி’ என்பது அறவே இல்லை. வர்க்கங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த இந்த மனிதகுழுக்களில் உடைமைகள் பொதுவாகவே இருந்தன. உடைமைகள் அனைவருக்குமானதாக, பொதுவானதாக இருந்ததாலேயே, இந்தச் சமூகங்கள் ’ஆதிப்பொதுவுடைமைச் சமூகம்/ புராதனப்பொதுவுடைமைச் சமூகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

உடைமைகள் என்றால் பெரிய சொத்துகள் அல்ல. ”வீடு, உடை, சாதாரண அணிகலன்கள், படகுகள், ஆயுதங்கள், எளிமையான வீட்டு உபயோகப் பாத்திரங்கள் போன்ற உணவு உற்பத்தி, சேகரிப்புக்குப் பயன்படும் கருவிகள்” என எளிமையான, தேவைகளுக்கான பொருட்களே இந்தக் குழுக்களின் உடைமைகளாக இருந்தன.
இந்தச் சமூகங்களில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்குத் யார் தாய் என்று மட்டுமே உறுதியாக நிறுவ முடியும், தந்தை யார் என நிறுவ முடியாது. இதனால் ‘வம்சாவளி’ என்பது ‘தாய்வழியாக’, ‘தாய்-உரிமை’ என்ற அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டுவந்தது. இதனால் பெண்கள் மதிப்பு மிக்க நிலையில் இருந்தார்கள்.

அநாகரிக சமூகம்

இந்த இரண்டாம் சகாப்தத்தில், மண்பாண்டங்கள் செய்தல், மிருகங்களை வீட்டுவிலங்குகளாக வளர்க்கும் முறை, இரும்பு சாதனங்கள் செய்யும்முறை எல்லாம் வருகின்றன. ஆடு மாடுகளை வளர்த்தல், விவசாயம் செய்வது, தறி நெசவு செய்வது, உலோகக்கருவிகள், கைவினைப்பொருட்கள் செய்வது என மனிதசமூகத்தின் உற்பத்தி வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது.
மனிதர்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரிக்கவே, அந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மனிதர்கள் செலுத்திய கூட்டு உழைப்பும் அதிகரித்தது. இந்த வளர்ச்சிப்போக்கில் மனிதர்களின் அறிவும் தொடர்ச்சியாக விரிவடைந்துகொண்டே வந்தது. மனிதர்கள் இயற்கை மூலப்பொருட்களின் பண்புகளையும், இயற்கையின் இயக்கத்தையும் மேன்மேலும் ஆராய்ந்து, புதிய புதிய உற்பத்திக்கருவிகளை உருவாக்கி உற்பத்தித்திறனை அதிகரித்துக்கொண்டே சென்றார்கள். சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அன்றாடம் செய்துவந்த வேலையின் அளவும் கூடிக்கொண்டே வந்தது. சமூக அளவிலான வேலைப் பிரிவினை தோன்றியது.
அநாகரிக சமூகத்தில் ஒரு கட்டத்தில் மனிதசமூகம் பிழைத்திருப்பதற்குத் தேவையானதைவிட அதிகமாக உற்பத்தி செய்யும் நிலை உருவாகத்தொடங்கியது. சமூகத்தில் உபரியை உற்பத்தி செய்யும் நிலை உருவானது. மேலும் அதிகமான உழைப்புச் சக்தி தேவைப்பட்டபோது, யுத்தத்தில் பிடிபட்டவர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்.

“ஆகவே, அன்றிருந்த பொதுவான வரலாற்று நிலைமைகளில், முதல் மாபெரும் சமுதாய வேலைப் பிரிவினை என்பது, உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி, அதனால் பொருட்செல்வத்தை அதிகப்படுத்தி, உற்பத்தித் துறைகளையும் விரிவுபடுத்தி, அதன் பின்னே அவசியத் தேவையாக அடிமை முறையையும் இழுத்துக்கொண்டு வந்து சேர்ந்தது. ஆக, முதல் மாபெரும் சமுதாய வேலைப் பிரிவினையிலிருந்து முதன் முதலாகச் சமுதாயத்தின் மாபெரும் வர்க்கப் பிரிவினை தோன்றியது; எஜமானர்கள் -அடிமைகள், சுரண்டுகிறவர்கள் – சுரண்டப்பட்டவர்கள் என்று இரண்டு வர்க்கங்கள் உண்டாயின” என்கிறார் எங்கெல்ஸ்.

தனிச்சொத்தோடு தோன்றிய பெண்ணடிமைமுறை

காட்டுமிராண்டி சகாப்தத்தில் வேட்டையாடி, மீன்பிடித்து வாழும் நிலையைக் கடந்து, அநாகரிக சகாப்தத்தில் மேய்ச்சல் சமூகமாக மாறிய காலத்தில்தான், மனிதர்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான உற்பத்தி என்பதைக் காட்டிலும் உபரியான உற்பத்தியை முதன்முதலாகக் கண்டார்கள். இந்தக் காலகட்டத்தில் மந்தைகள்தான் குழுவின் வாழ்வாதார வளங்கள். முதலில் அவை குழுவின் பொதுச்சொத்தாகவே இருந்தன. என்றாலும், காலப்போக்கில் குழுக்களுக்குப் பாதுகாவலர்களாக இருந்து வழிகாட்டியவர்கள் இந்தப் பொதுச்சொத்துகள் மீது அதிக செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்பட்டது. தனிச்சொத்தின் தோற்றம் உருப்பெறத் தொடங்கியது.
உற்பத்தி முறை என்ற அடிப்படையில், கால்நடைகள் என்கிற புதிய சொத்துகள் – புதிய உற்பத்தி சாதனங்கள், பொதுவுடைமை என்கிற முந்தைய உடைமை நிலையில் இருந்து மாறி தனியுடைமைகளாயின. வர்க்கங்களின் வளர்ச்சியானது பாலினம் தொடர்பான முக்கியமான சமூக மாற்றங்களையும் உள்ளடக்கியே நிகழ்ந்தது.
மேய்ச்சலுக்காக கால்நடைகளைக் கூட்டிச் செல்லும் வேலையை ஆண்கள் செய்துவந்தார்கள். பெண்கள் வீட்டளவில் மண்பாண்டங்கள் செய்வது, நெசவு செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்தார்கள். மந்தைகள் எனும் சொத்துகள் மீது தனிமனிதர்களின் ஆதிக்கம் என்ற நிலை உருவானபோது, ஆண்களின் கட்டுப்பாட்டில் மந்தைகள் இருந்தமையால், அவை ஆண்களின் சொத்துகளாக மாறின. இவை மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பரிவர்த்தனை செய்வதன் வாயிலாக்கக் கிடைத்த பொருட்களும் ஆண்களின் உடைமைகள் என்றாயின. அடிமைச்சமூகம் உருவானபோது அடிமைகளும் பரிவர்த்தனை சொத்துகள் என்கிற வகையில், அடிமைகளும் ஆண்களின் சொத்துகள்தான் என்றானது.

சமூக அளவில் உடைமை முறையில் நிகழ்ந்த இந்த மாற்றம், குடும்ப அமைப்புக்கு வெளியே சமூகத்தில் ’சொத்து படைத்தவர்-சொத்துகள் இல்லாதவர்’ ’அடிமைகள்-எஜமானர்கள்’, ’உழைக்காமல் சாப்பிடுபவர்கள்-உழைத்தும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள்’ என்கிற இரண்டு வர்க்கங்களை ஏற்படுத்தியது. வர்க்கங்கள் வந்துவிட்டாலே சுரண்டல் முறையையும் கூடவே வந்துவிடும் அல்லவா? அதனால் மனிதர்கள் மனிதர்களைச் சுரண்டும் முறையும் உருவானது. தனியுடைமையாகிவிட்ட சொத்துகள் மீதான உரிமை ஆண்களிடம் போய்ச் சேர்ந்ததால், குடும்ப அளவில் ஆண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலம்படைத்தவர்களாக மாறினார்கள். குடும்பத்திற்குள் ஆண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்களை ஒடுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் புதிய நிலை உருவானது.

“கால்நடைகள் ஜீவனத்துக்கான புதிய சாதனம் என்றானது; அவற்றை தொடக்கத்தில் பழக்கிப் பின்பு பராமரிக்கும் வேலையை ஆண்கள் செய்து வந்தார்கள். எனவே, கால்நடைகள் ஆண்களுக்குச் சொந்தமாயின. அவற்றிற்குப் பரிவர்த்தனையாகப் பெற்ற சரக்குகளும், அடிமைகளும் அவர்களுக்கே சொந்தம் என்றானது. உற்பத்தியிலிருந்து இப்போது கிடைத்த மிச்சம் அல்லது உபரி எல்லாம் ஆணுக்குரியதாயிற்று. அதை அனுபவிப்பதில் தான் பெண் பங்கு கொண்டாள்; அதன் உடைமையில் அவளுக்குப் பங்கேதும் இல்லை” – இவ்வாறு குடும்ப அளவில் சொத்துகள் ஆண்கள் கைக்கு மாறின என்பதை எங்கெல்ஸ் விளக்குகிறார்.

மேய்ச்சல் சமூகமாக மனிதசமூகம் பரிணமித்த காலத்தில் பெண்கள் வீடுகளில் அடிமையாக்கப்பட்டதை எங்கெல்ஸ் இப்படி நுணுக்கமாக விவரிக்கிறார்:”’காட்டுமிராண்டித்தனமான’ போர்வீரனும், வேட்டைக்காரனும் வீட்டில் இரண்டாம் ஸ்தானத்தை வகித்துப் பெண்ணுக்கு முதலிடம் தருவதில் திருப்தியடைந்தார்கள். ’மென்மையடைந்த’ இடையனோ, தனது செல்வத்தைக் காட்டி முதலிடத்தை முண்டியடித்துப் பிடித்துக்கொண்டு பெண்ணை இரண்டாம் ஸ்தானத்துக்குத் தள்ளிவிட்டான்” என்கிறார். எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்!வர்க்க சமூகத்தின் வளர்ச்சி குடும்பத்தின் வடிவத்தையே மாற்றிவிட்டது. எப்படியான மாற்றம் ஏற்பட்டது என்பதை அடுத்து பார்ப்போம்.

-தொடரும்…

ஆதார நூல்கள்: 1. குடும்பம், தனிச்சொத்து, அரசு-ஆகியவற்றின் தோற்றம், எங்கெல்ஸ்
2. மாதர் அரங்கில் நமது கடமைகள் – பெண்களது பிரச்சனைகள் மற்றும் கடமைகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கருத்தோட்டம் பற்றிய ஆவணம், 2005